திங்கள், 12 மார்ச், 2018

வடுவூர் தன்னரசு கள்ளர் நாடு - தமிழகத்தின் பெருமை


எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர் தன்னரசு கள்ளர் நாடு.






ஊரின் முதல் நாட்டாமை கள்ளர்களின் தேவர் பட்டம்,  இரண்டாம் நாட்டாமை கண்டியர் பட்டம்.





வடுவூர் புதுக்கோட்டை பகுதியில் நல்லிபிரியர் பட்டம் உடையவர் நாட்டாமையாக உள்ளார்.

தேவர், கண்டியர், வன்னியர், சேண்டாப்பிரியர், ஆர்சுத்தியார் , வடிவிரையர், குமரர், இராசாளியார், வாண்டையார், ஓந்திரியர், புள்ளவராயர், மண்ணையார், கிளாவர், காளிங்கராயர், நந்தியர், இருங்களர், அதியமார், நாட்டார், வள்ளாலதேவர், வாயாடியார், தொண்டைமார், ஈழங்கொண்டார், சோமாசியார், கண்டபிள்ளை, தென்கொண்டார் ப
ட்டம் உடைய கள்ளர்கள் வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டில் வாழ்கின்றனர்.


கள்ளர்களின் கண்டியர் தெரு, வன்னியர் தெரு, மண்ணையர் தெரு என்று கள்ளர்கள் பட்டங்களில் தெருக்கள் உள்ளன.


வடுவூர் நாட்டில் கள்ளர்களின் வன்னியர் பட்டம் கொண்டவர்கள் அதிகம் வன்னியர் தெரு, காகா வன்னியர் தெரு, செருக்க வன்னியர் தெரு, குஞ்சான் வன்னியர் தெரு, எழுவநாச்சி வன்னியர் தெரு என்று உள்ளன.

 

திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள். முதலிரண்டு விஷயங்களும் பெருமபாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். வடுவூர் சிலை அழகு ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத்தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா, பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.

 

வடுவூரைச் சுற்றி இருக்கும் புதுக்கோட்டை, தென்பாதி போன்ற ஊர்களின் பெயருக்கு முன்னால் வடுவூர் சேர்த்துச் சொல்வதுதான் வழக்கம். வடுவூர் இரண்டு மூன்று விஷயங்களுக்குப் பிரபலம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூரின் ஏரி, வடுவூரில் உள்ள ராமர் சிலை அப்புறம் கபடி விளையாட்டு.



அந்த ஊரில் ஆகச் சிறந்த வசதிகள் இல்லை; மிகப் பெரிய மைதானம் இல்லை; கற்றுத்தரப் பயிற்சியாளரும் இல்லை. ஆனால், நம்புங்கள் அந்தக் கிராமத்தில் இருந்துதான் இந்தியக் கபடி அணியின் கேப்டன் வந்தார். அந்தக் கிராமத்தில் இருந்து சென்ற கால்கள் ஒலிம்பிக் வரை தடம் பதித்தன. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் தேசிய சாம்பியன்கள். அந்தக் கிராமத்தில் கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒருவர் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் அரசு வேலை பெற்றிருக்கிறார்கள். விளையாட்டை மூலதனமாகவைத்து மொத்தக் கிராமத்தையும் முன்னேற்றத் திசையில் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருக்கும் அந்த ஊர்... வடுவூர்!



இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை ‘ஏகாதசி கிராமம்’ எனவும் அழைப்பர். 

வடுவூர்... தமிழகத்தின் பெருமை!

தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் வடுவூர், விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரி. ரயில்வே முதல் ராணுவம் வரை கோலோச்சும் வடுவூர்க்காரர்களின் வீடுகள்தோறும் பதக்கங்கள் பளிச்சிடுகின்றன.


வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டை  சேர்ந்த ராஜசேகரன், கடுமையான ஓட்ட வீரர். விளையாட்டின் மீது தீராத் தாகம்கொண்ட அவர் கரடுமுரடான வயல்காட்டில் ஓடிப் பயிற்சிபெற்று, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10.௫ விநாடிகளில் ஓடிச் சாதனை படைத்தார். 1952-ல் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பெற்றார். உச்சகட்டமாக 1964-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரை சென்று 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தடம்பதித்து ஒலிம்பியனாக ஜொலித்தார். பிறகு, இந்தியத் தடகள அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர்தான் ஊர் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அதில் தொடங்கிய பயணம், அதன் பிறகு வரிசையாக ஆயிரக்கணக்கான வீரர்களும், வீராங்கனைகளும் வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டில் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

கபடி, வாலிபால், தடகளம், நீச்சல், கராத்தே, சிலம்பாட்டம், ஸ்குவாஷ் என அனைத்து விளையாட்டுகளுமே வடுவூர்க்காரர்களுக்கு அத்துப்படி. அரசுப் பணிக்குப் போவதற்காக இவர்கள் விளையாடவில்லை. விளையாட்டு இவர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கிறது. ஊருக்குள் நுழைந்து ஒரு சுற்றுவந்தால் விதவிதமான விளையாட்டுகளில் பயிற்சியெடுக்கும் ஆண்களையும் பெண்களையும் காணலாம். இரவு 8 மணி வரையிலும் பயிற்சிகள் தொடர்கின்றன. புகழ்பெற்ற வடுவூர் ஏரி கோடைக் காலத்தில் வற்றும்போது, ஆடுகளமாக மாறிவிடுகிறது.



வடுவூரில் பயிற்சி பெற்று வளர்ந்த பாஸ்கரன் இந்தியக் கபடி அணியின் கேப்டனாக இருந்தபோதுதான், கபடியில் ஆசிய அளவில் இருமுறை தங்கப் பதக்கம் வென்றது இந்தியா. செல்வராணி, கவிதா, இந்திரா, வளர்மதி, ஜெயந்தி, சாந்தி, லட்சுமி, நிலவு, சுதா போன்ற வீராங்கனைகள் கபடியிலும் வாலிபாலிலும் சாதனை பதித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.


தங்கள் ஊரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பதக்கம் வென்று ஊர் திரும்பும் ஒவ்வொரு முறையும், ஊரே கூடி ஆரத்தி எடுத்து வரவேற்கிறது. விளையாட்டின் மூலம் வேலை பெற்றவர்கள் பணி நிமித்தம்

உலக சாதனை படைத்த வடுவூர் நாயகி செல்வி.நிவேதா வீரையன் கண்டியர்.



வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டாலும், அடுத்த தலைமுறையும் சாதனை படைப்பதற்காகப் பணத்தை வாரி வழங்குகிறார்கள். ''எங்கள் ஊருக்கு என்று ஒரு மைதானம்கூட இல்லை. இப்போது ஆசியாவிலேயே முதல்முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப் பிரமாண்டமான கிராமப்புற உள் விளையாட்டு அரங்கம் வடுவூரில் வரப்போகிறது. இதன் திட்ட மதிப்பீடு ஆறு கோடி ரூபாய். இதற்காக 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தன் மூன்றரை ஏக்கர் நிலத்தைத் தானமாகத் தந்திருக்கிறார் வி.என்.ராமசாமி என்பவர். எங்கள் ஊர் சார்பாக 50 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளோம். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஐந்து கோடி ரூபாய் நிதி தருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியால் இது நடக்கிறது. முன்னோடி விளையாட்டுக் கிராமத் திட்டத்தின்படி இந்தியா விலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே கிராமம் வடுவூர்தான்.


தஞ்சை மாவட்டத்திலேயே 316-15 ஏக்கர் பரப்புள்ள மிகப்பெரிய ஏரியான ஸ்ரீகோதண்டராமர் ஏரி இவ்வூரில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு பராமரிக்க முடியாமல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.


வடுவூரில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஊரில் வெளிநாட்டு பறவைகளை கவரும் விதமாக மிகப்பெரிய ஏரி அமைந்திருக்கிறது. ஏரி நடுவே காணப்படும் மரங்கள், ஏரி கரையோரம் அமைந்த வயல்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வட்டமடிக்கின்றன. சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், புள்ளி மூக்கு வாத்து, ஊசிவால் வாத்து, பனங்கொண்டை சிறவி, கலியன் வாத்து, சென்னி நாரை, கூழகடா, உள்ளான் உள்ளிட்ட அரிய வகை பறவைகளை வடுவூரில் அதிகமாக காணலாம்.










அழகிய ஊர் , இளமையான ஊர் எனும் பொருளில் வடுவூர் எனப்படும் இத்தலத்திற்கு வகுளாரண்யம் (மகிழங்காடு), பாஸ்கர க்ஷேத்திரம், தக்ஷண அயோத்தி எனும் திருப்பெயர்களும் உண்டு. பல்லக்கு, திருச்சிவிகை, 3 திருநாமங்களுடன் சூரியப்பிரபை, சேக்ஷவாகனம், கருடவாகனம், ஹனுமன்வாகனம், யானை வாகனம், ஹம்சவாகனம், குதிரை வாகனம். ஸ்ரீராமாயணக்காட்சிகளை சித்தரிக்கும் பழைய திருத்தேர் ஒன்று உண்டு. கண்வமகரிஷி, குலசேகரப்பெருமாள் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபேற்றோர் ஆவர்.

இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார்.














ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலைஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார்.

சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார்.

இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற்சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.


மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.

இந்த ஆலயத்தின் உள்ளே கல்விக் கடவுளான ஹயக்கிரீவர் கோயில், 500 ஆண்டுகள் பழமையான தேசிகர் சிலை உள்ளது. ஹயக்கிரிவரை வணங்கி சென்ற எந்த மாணவரும் தேர்வில் பின்தங்கியதில்லை என்பது நம்பிக்கை. கோயில் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ராமாயண காட்சிகளை விளக்கும் திருத்தேர், அந்த தேரடியில் ஸ்ரீ ராமர் பாதம் நோக்கி வீற்றிருக்கும் ஸ்ரீ ஹனுமன், கோயிலுக்கு அருகில் உள்ள வடுவூர் வடபாதி கிராமத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சிறப்பு பெற்ற கைலாச நாதர் கோயில் ஆகியவை உள்ளன. கிழக்கே 12 கி.மீ தொலைவில் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில், மேற்கே 24 கி.மீ தொலைவில் உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர்), 40 கி.மீ தொலைவில் கோவில் நகரமாம் கும்பகோணம் ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

 






























வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்