புதன், 29 ஆகஸ்ட், 2018

துக்கு கயிற்றை முத்தம் இட்டு வீர மரணம் அடைந்த மாவீரன் "தூக்குமேடை தியாகி" மதுரை பாலு என்ற பாலுச்சாமி தேவர்






‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி பாலுச்சாமி என்ற பாலுவாக ஆர்யா வரும் காட்சிகளைப் பார்த்து ஐயா நல்லகண்ணு கண் கலங்கிவிட்டார். காரணம், நிஜவாழ்க்கையில் பாலுச்சாமி என்ற மதுரை பாலு என்ற ‘தூக்குமேடை தியாகி’ பாலு சிறையில் அடைக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டபோது, அதே சிறையில் சக கைதியாக இருந்து அந்த கொடிய நிகழ்வின் துயரங்களை அனுபவித்தவர் ஐயா நல்லகண்ணு” என்றார்.


மதுரை மாவட்டம் கருகப் பிள்ளை கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து காவல்துறையில் பணியாற்றியவர் தோழர் பாலு. பின்னர் உழைக்கும் மக்களின் போராட்டத்தை காவல்துறை நசுக்குவதை கண்டு வெகுண்டு தனது வேலையை தூக்கியெறிந்து விட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1948ல் தடை செய்யப்பட்டது. கம்யூனிஸ்டு தலைவர்கள் தலைமறைவானார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுப்பவர்களுக்கும், பிடித்துக் கொடுப்பவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் “சன்மானம்” கொடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட்டார்கள். நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் நரவேட்டையாடப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்டவுடன் கொடுஞ் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அடி, உதை, காலில் லாடம் கட்டுவது, செங்கல்லை கையிடுவலில் வைத்துக் கட்டி தண்ணீர் விடுவார்கள். செங்கல் விரியும்போது உடல் புண்ணாகும். நிர்வாணமாக்கி தண்ணிரில் நாள் முழுவதும் நிற்க வைப்பார்கள். தூக்கமின்றி புலம்ப வேண்டியதிருக்கும். இத்தகைய மிருகத்தனமான கொடுமைகளை அகிம்சை ஆட்சியாளர்களின் ஆசியோடு அதிகாரிகள் நடத்தினார்கள். பல மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகள் மீது சதி வழக்குகள் போடப்பட்டு, மாதக்கணக்கில் தனி நீதிமன்றங்களில் விசாரணைகள் நடந்தன.

மதுரையில் துப்பறியும் காவல்துறை தலைமைக் காவலர் செண்பகம் சேர்வை கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை பாலு உள்ளிட்ட 6 தோழர்கள் சேர்க்கப்பட்டார்கள். தோழர் பாலுவுக்கு தூக்கு தண்டனையும், மற்ற 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனை 1951 பிப்ரவரி 22ஆம் நாளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாளும் குறிக்கப்பட்டது.

இரண்டு நாட்களும் மதுரை சிறை முழுதும் பேச்சரவம் இல்லாத துக்கவீடு போல் காட்சியளித்தது.

பிப்ரவரி 21ஆம் நாள் இரவு 8 மணி வரை நாங்கள் அனைவரும் வரிசையாக நின்று, தனிக் கொட்டறையில் சிங்கம் போல் காட்சியளித்த தோழர் பாலுவுக்கு புரட்சி வணக்கம் செலுத்தினார்கள். பிப்ரவரி 22 காலை 4 மணிக்கு மரண பயம் ஏதுமின்றி, சொல் தடுமாற்றம் ஏதும் இல்லாமல், தெளிந்த உறுதியான குரலில், “புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க!” என்ற சப்தம் கேட்டதும், மறைக்கப்பட்ட பெரிய மதில் சுவரில் எதிரொலி கேட்கும் நேரத்தில், மற்றவர்களும் “தியாகி பாலு நாமம் வாழ்க! புரட்சி ஓங்குக!” என்று முழங்கினார்கள்.

தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டபோதும், படித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தார். பார்க்க வருபவர்களுக்கு ஆறுதல் கூறினாரே தவிர அவரிடம் மரண பயம் இல்லை. மாபெரும் வீரனாகத் தோன்றினார்.

குற்றம் இழைக்காதவர்கள் யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகவே சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். வழக்கறிஞர்களின் விவாதமும் நடைபெறும். அதுவே நீதித் துறையின் பெருமைக்குரிய நியதி ஆகும் என்று காலம்முழுதும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், தோழர் பாலு சம்பந்தப்பட்ட வரையில், நீதித் தராசு ஓரம் சாய்ந்து விட்டது. மன்றோரறம் சொன்ன பாழ்மனை ஆகிவிட்டது. தோழர் பாலு எந்த சம்பவங்களிலும் ஈடுபடவில்லை.

பஞ்சாலைத் தொழிலாளியாக பணியில் இருந்தபோது, வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டார். வேலையிலிருந்து நீக்கப்பட்டதும் காவல் துறையில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. தெலுங்கானா விவசாயிகளை அடக்குவதற்கு அனுப்பப்பட்டார். விவசாயிகளை சுட மறுத்தார். அதிகாரிகளின் வெறிச்செயல்களுக்கு துணைபோக மறுத்தார். கம்யூனிஸ்டாக இருந்தார் என்பதற்காகவே வழக்கில் இணைக்கப்பட்டார். நிரபராதியான பாலு துக்கிலிட்டு கொல்லப்பட்டார் என்பதே அநீதியாகும். இவ்வாறு நல்லக்கண்ணு எழுதியுள்ளார்.

ஐயா ஐ. மாயாண்டிபாரதி எழுதியுள்ள "வீரத்தியாகி தூக்குமேடை பாலு" எனும் நூலிலிருந்து, மாவீரன் பாலுவின் வீரமிகு இறுதி நாள்:

இறுதியாக 1951ஆம் ஆண்டு பிப்ரவரி 20ம்தேதியன்று கவர்னர் பவ நகர் மகாராஜா பாலுவின் கருணை மனுவை நிராகரித்துவிட்டார் என்று சேதி வந்தது. இனி அப்பீல் இல்லை தூக்குதான். அதுவும் இரண்டே நாளில் 1951 பிப்ரவரி 22ல் பாலு தூக்கிலேற்றிக் கொல்லப்பட வேண்டிய நாள் என நாளும் குறிக்கப்பட்டது. அந்த இரண்டு நாட்களும் ஒரு வீரத்தியாகியின் விசுவரூபம் எவ்வாறு இருக்கும் என்று வெளிப்படுத்திய நாட்களாக இருந்தன.

பாலுவை பேட்டி கண்டு பேச, அந்த 2 நாட்களிலும் அலை யலையாகக் கூட்டம் வந்தது.

சிறைத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள் வந்தனர்.பேட்டி காணவரும் கூட்டத்தை டெபுடி ஜெயிலர் கூட்டி வருகிறார். பேட்டி முடிந்ததும் அவர்களை வெளியில் அனுப்பி விட்டு வேறு கூட்டத்தை அழைத்து வருகிறார்.

இவ்வாறே 2 நாட்களும் கூண்டிலடைப்பட்ட சிங்கம்போல் பாலு குதித்து எழுகிறார். பாலு ஆஜானுபாகு, உடல் சிகப்பு, உருண்டை முகம், ஒளிவீசும் கண்கள், கோதிவிட்ட சுருள் கிராப்பு வயது 30 இருக்கும்.காணவரும் ஒவ்வொருவரையும் கரம்குவித்து வரவேற்றார். மதுரை வீரன் சாமிபோல் மண்டியிட்டு பேசலுற்றார். அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் தத்துவச் சுடராகவே இருந்தது.

முக்கியமான தோழர்கள் பலருக்கு பேட்டியின்போது அருகிருக்க அனுமதி கிடைத்தது. நெல்லை மாவட்ட கம்யூ சதி வழக்கில் ஒரு கைதியாக இருந்த ஐ.மா.பா.வுக்கு பேச்சு அருகில் இருக்கவும், பேட்டியின் பேச்சுக்களை குறிப்பு எடுக்கவும் அனுமதி கிடைத்தது. அப்போது எத்திராஜ் நாயுடு ஜெயிலர், குறிப்பு எடுக்க நோட்டுப் புத்தகமும் தந்தார்.

நான் என் சக கான்ஸ்டபிள்களின் குறைகளைப் போக்குவதற் காகப்பாடுபட்டேன். அவர்களை அதிகாரிகள் மனிதர்களாக நடத்த வேண்டுமென்பதற்காகப் போராடினேன். ஒரு கான்ஸ்டபிளை பூட்ஸ் காலால் உதைத்த வெள்ளை சார்ஜண்டையும் அதேபோல் அவமதித்த இன்னொரு தமிழ் சார்ஜெண்டையும் அடித்து அடக்கினேன்.

அதற்காக என்னைப் பழிவாங்குகிறார்கள். கொலைக்கேஸில் சம்பந்தப்படுத்தி தூக்கில் ஏற்றப் போகிறார்கள். இது பால்ச்சாமிக்கும் கவர்னர் பவநகர் ராஜாவுக்கும் உள்ள பிரச்சனை அல்ல. இது ஒரு வர்க்கப் போர். இதில் வெல்லப்போவது தொழிலாளி வர்க்கம்தான்.முதலாளி வர்க்கத்திற்கு என்ன கதி ஏற்பட்டு வருகிறது என்பதை வரலாறே சொல்லுகிறது. “என்னை ஆயிரம் தடவை தூக்கிலிட்டாலும் நான் மார்க்சிஸ்ட் கொள்கைக்காக நமது வர்க்கத்துக்காகப் பாடுபடுவேன்“ என்று கர்சித்தார்.

மனைவி வீரம்மாள், ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம்குழந்தை சரோஜினியை இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பிவேலி முன்னால் கணவனைக் கண்கொண்டு பார்க்கவும் சக்தியற்று, முகத்தை மூடிக்கொண்டு தேம்பி அழுதார். மனைவியையும் குழந்தைகளையும் சிறிதுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு “ஏன் அழுகிறாய்? அழாதே.

ஒரு பெரிய லட்சியத்துக்காக உன் புருஷன் உயிர்கொடுக்கிறான் என்பதற்காகப் பெருமைப்படு. பிள்ளையைக் கவனித்து வளர். கட்சி உன்னை விட்டுவிடாது” என்று கூறிவிட்டு குழந்தையை உற்றுப் பரிவுடன் நோக்கினார்.


பாலுவுக்குத் தூக்கு என்று தாயாரிடம் சொல்லியிருந்தால், அங்கேயே விழுந்து செத்துப்போகும் என்பதால், யாரும் சொல்லவில்லை. தாயார் வந்து பார்த்தபொழுது பாலு,“என்னாத்தா, எங்கே வந்தே? நேரடியாக ஊருக்குப் போறது தானே. எப்படியும் நான் வந்து சேர்ந்திடுவேன். நீ பயப்படாதே” என்றார்.தாயோ, “அப்பவெல்லாம் ஜெயில் வாசலிலே சின்னக்கம்பி முன்னாலே வந்து பேசவே, இப்போ பெரிய கம்பி, அறைக்குள் இருந்து பேசுறியே, இதைப் பார்க்கிறப்போ நீ சுலபமாகவா வருவே” என்று அழுதார்.

தூக்கு விஷயத்தை தாயிடம் சொல்ல முடியாமல் தத்தளித்தார் பாலு. தூக்கு என்று சொன்னால் அங்கேயே விழுந்து செத்துப் போகும் கண்ணீரைக் கொட்டினர் தோழர்கள்.

இன்னொரு முக்கிய நிகழ்ச்சியையும் பாலு நினைவூட்டினார். அதாவது கட்சி தடை செய்யப்பட்டு, தலைவர்கள் தலைமறைவாக இருந்தபோது, ஒருநாள் இரவில் வைகையாற்று மைய மண்டபத்தில் நகர்கமிட்டி உறுப்பினர்கள் மணவாளனும், வி.கருப்பையாவும் மே. முனியாண்டியும் இருந்தார்கள். அவர்களை பாலு சந்தித்து ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார்.“என் உயிர்மூச்சு உள்ளவரை கம்யூனிஸ்ட் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார். உயிர் கொடுக்கவும் தயார்” என்பதே அந்த வீரசபதம்.



தூக்குமேடையை நோக்கி, வீரசிங்கம் போல் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து பாலு நடக்கிறார். வழியெல்லாம் புரட்சி ஓங்குக, கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க! என்ற உக்கிர ஒலிகளை வானதிர ஒலித்தவாறே பாலு முன் செல்கிறார். வழியிலே இராமநாதபுரம் சதிவழக்கில் ஏ வகுப்புக் கைதிகளாக இருந்த பேராசிரியர்கள் சங்கரநாராயணனும், எம்.எஸ்.நாடாரும் தமது அறையின் வாசல் முன் வந்து நின்று “பாலு வாழ்க” என்றனர். அதற்கு பாலு, “கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க, செங்கொடி வாழ்க” என்று சொல்லுங்கள் என்றார்.

எமங்கிரர்கள் சுற்றிச்சூழ, பாலு தூக்கு மேடையிலே நிறுத்தப்பட்டார்.


இரவு முழுவதும், செங்கொடிப் பாட்டுகளைப் பாடிய பாலுவின்... “சுட்டுப் பொசுக்கினாலும் - தோழர்களைத் தூக்கினிலேற்றினாலும், விட்டுப் பிரியாது செங்கொடி வீரம் குறையாது” என்று பாடிச் சிறகடித்த செங்குயில் பாலுவின் பொன்னுயிர் பறிக்கப்பட்டுவிட்டது.

காலமெல்லாம் புரட்சி ஓங்குக.

பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் ஒழிக என்று முழங்கிய சுதந்திரப் போராட்ட தியாகி - சுதந்திரம் அடைந்த பிறகும் மக்களின் வாழ்வுரிமைக்காக போராடிய மக்கள் தலைவன் - பாலுவின் மூச்சை முடித்துவிட்டார்கள். ஆத்திரமும் துயரமும் கொந்தளிக்க, சிறைத் தோழர்கள் “காம்ரேட் பாலு ஜிந்தாபாத்” என்ற இடியோசைகளை மேலும் மேலும் உக்ரமாக எழுப்பினர்.




பாலுவின் சடலத்தைக் கேட்டு, பாலுவின் குடும்பத்தினரும் உறவினரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் சிறை வாசலை மொய்க்கின்றனர். சடலத்தைக் கொடுத்தால், ஊர்வலம் நடத்தி ஊரையே அதிர வைத்து விடுவார்கள் என பயந்து போன அதிகாரிகள். சிறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டதாகப் பொய் சொல்லி கூட்டத்தினரை போலீஸ் படையைவிட்டுத் தாக்கி விரட்டிவிட்டு சடலத்தை வேனில் எடுத்துக் கொண்டு அருப்புக்கோட்டை ரோட்டில் மெய்வழிச்சாலையடுத்துள்ள தரிசுக்காட்டில் (இப்பொழுது விமான தளம் உள்ள இடத்தில்) சடலத்தை இறக்கி, பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டனர்.பிறகு எலும்புகளைச் சேகரித்து திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அடுத்துள்ள பாறைப் பகுதியில் கொண்டு போய் சிதறினார்கள்.

சனி, 25 ஆகஸ்ட், 2018

இளமக்கள்


சங்க இலக்கியங்களில் இளையர் என்ற சொல்லாடல், அதிகம் பயணிப்பதை, ஆய்வாளர்களால் புறக்கணிக்க முடியாத ஒரு விடையமாகும். அப்படிப்பட்ட இளையர், இளமகன், இளமக்கள் என அறியப்பெரும் இம்மக்களைப் பற்றிய வரலாற்று ஆவணங்களுடன் செல்வோம்.

இளையர்.:-

சங்க காலத்தின் ஆரம்ப பகுதிகளில் கள்ளர் என்ற களவர் குடியின் கிளைக்குடிகளாக மழவர், இளையர் காணப்பெற்றனர். இளையர் என்பதற்கு உடற்கூறுயில் அடிப்படையில் இளமை, இளம் பருவத்தை குறிக்கும் சொல்லாக அமையப் பெருகிறது. மேலும் சங்ககால பாடல்களில் அகத்திணை, புறத்திணையில் தலைவனையும், வாள் வீரர்களையும், பசுக்களை கவர்ந்து செல்லும் கள்ளராகவும் குறிக்கப் பெறுகிறார்கள்.

பெரும்பாலும் போர், படைவீரர்களை குறிக்கப் பெற்று, பின்னாளில் தனிக்குடியாக பரிணாமம் அடையப் பெறுகிறது.

இளையர் என்னும் சொல் புறவாழ்வில் வயதில் இளையவரையும், உடல் இளமைத் தன்மை உடைய படைவீரர்களையும், அகவாழ்வில் தலைவனுக்குத் துணையாக உடன் செல்பவர்களையும் குறிக்கும்.

பெருமாள்மலை தமிழி:
மதுரை மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது கள்ளர் மரபினர் வாழும் முத்துப்பட்டி. இங்குள்ள மலை பெருமாள்மலை, கரடிப்ட்டிமலை என அழைக்கப்படுகிறது!  1910 ம் ஆண்டு இங்கு மூன்று கல்வெட்டுகள் அறியப்பட்டன,எனினும் இரண்டே படிக்கும் நிலையில் உள்ளது. குகையின் முகப்பில் இரு தீர்த்தங்கரர் சிலை புடைப்புச்சிற்பமாய் உள்ளது. படுக்கையில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது.

முதல் கல்வெட்டு:

நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்

விளக்கம்:

முசிறியிலிருந்து இளமகனான கோடன் என்பவரின் கொடை என பொருள்கொள்ளலாம். கேரளத்தின் பட்டணம் எனும் ஊர் முசிறி என கருதப்படுகிறது. சேர நாட்டு தலைநகர் கரூர் ஆகும். திருச்சி பகுதி காவிரிக்கரை கள்ளர் மரபினரின் நாட்டாள்வார் பட்டமுடையவர் அதிகாரம் செலுத்தும் முசிறிக்குச் சேரநாட்டுத் துறைமுகம் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வரும் எளமகன் எனும் சொல் இளமகன் அல்லது இளையர் என பொருள் கொள்ளலாம். இளையர் என்பதற்கு போர்வீரன், எனப்பொருள் இச்சொல் பல்லவர் நடுகற்களில் பயின்று வருகிறது. நாகபேரூர் அருகேயுள்ள நாகமலைபுதுக்கோட்டையை குறிப்பதாய் இருக்கலாம். இப்பெயர் வேள்விக்குடி செப்பேடிலும் வருகிறது குறிப்பிடத்தக்கது.


புதுக்கோட்டை சித்தன்னவாசல் கல்வெட்டு

எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த கவுடிஇ
தென்கு சிறுபொசில் இள
யர் செய்த அதிட்அனம்


பொருள்: எருமை நாசு குமுழூரில் பிறந்த கவுதி(க்கு) (காவிதி). தென்கு சிறுபொசில் இளையர் செய்த இருக்கை (அதிட்டானம்).




இளையர் குடி:-

இளையர் என்பவர் சங்க காலக் குடிகளில் ஒருவர். ஆதன், அழிசி மற்றும் சேந்தன் ஆகியோர் இளையர் குடியில் தோன்றியவர்கள். சேந்தனின் தந்தை அழிசியும், அழிசியின் தந்தை ஆதனும் ஆவர். இந்த இளையர் குடியினர் வெல்போர் சோழர் என்ற சோழரின் கிளைக் குடியினர் ஆவர்.

இளையர் என்போர் தனிக்குடியாக, சங்க இலக்கியங்களிலே வருவதை,

1) கல்லா இளையர் பெருமகன் புல்லி - அகம் 83ல்.

இளையர் குடியின் தலைவனாக கள்வர் கோமான் புல்லி குறிக்கப் பெறுகிறார். இதன் மூலமாக கள்ளர் இனத்தின் கிளைக்குடியாக அறியப் பெறலாம்.

2) இளையர் பெருமகன் தொகுப்போர்ச்சோழன்- அகம்338ல்

ஶ்ரீகள்ளச் சோழன் என்றும், கள்வர் கூட்டத்தின் தலைவன் சோழன் என இளையோரை குறிக்கின்றனர்.

3) வல்வில் இளையர் பெருமகன் நள்ளி - அகம் 152

வில் வித்தையில் மிகச்சிறந்த இளையர்களின் தலைவனாக சங்க கால கடையெழு வள்ளல்களில் ஒருவரான நள்ளி குறிக்கப் பெறுகிறார்.

இப்பாடலுக்கு ஏற்றால் போல் வில்வித்தையில் ஆகச் சிறந்த வீரர்களாகவும், சுந்தரபாண்டித் தேவரின் படைத் தளபதிகளாகவும் கள்ள வில்லவர் விரன், நலன் ஆகிய இரு தளபதிகள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகிறார்கள். தமிழக கல்வெட்டுகளில் நேரிடையாக வில்லவர்களாக கள்ளர்கள் மட்டும் குறிக்கப் பெற்றதை நாம் இங்கு அறியலாம்.



சிவகங்கை மாவட்டம் கோமாளிப்படியில் வில்லவர் சின்னத்துடன் வில்லி, இளைமர் என்ற சொல்லாடலுடன் கூடிய கல்வெட்டு கிடைத்திருப்பது இங்கு கூடுதல் சிறப்பாக அறியப்படுகிறது.

4) இளையர் பெருமகன் அழிசி - குறு258ல்

காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு நாட்டை ஆண்ட அரசன் அழிசி. அவன் மகன் சேந்தன். இருவரும் அரசர்கள். இவன் சோழரோடு அனுக்கத்தொடர்பு உடையவன். இவனை இளையப் பெருமகன் என பரணர் குறிப்பதன் மூலம் வாளேந்திய வீரர் படைக்கு இவன் தலைவன் என அறியலாம்.


ஆதன், அழிசி மற்றும் சேந்தன், இவர்கள் ஆர்க்காடு என்னும் நாட்டை ஆண்டுவந்தனர். இந்த ஆர்க்காட்டை இளையர் குடியில் தோன்றிய அழிசி ஆண்டதால் இக்காட்டை அழிசியம் பெருங்காடு என்றும் அழைப்பர். தஞ்சை மாவட்டத்தின் ஆர்க்காட்டுக் கூற்றமே.





இன்றும் ஆற்காட்டில் கள்ளர் மரபினரின் கூழாக்கியார்கள் பெரும்பான்மையாகவும், அம்பலக்காரர்களாகவும், ஊரின் நாட்டாண்மைக்காரர்களாகவும் உள்ளனர். இதைத்தவிர கள்ளர் மரபினரின் அங்குரார், மழவராயர், காங்கேயர் பட்டந்தாங்கிய கள்ளர் பெருங்குடிகளும் உள்ளனர்.

ஆற்காடு கூழாக்கியார் அம்பலக்காரர்களுக்கு பாத்தியப்பட்ட பிலியடி கருப்பனுக்கு ஆடி 28 யை முன்னிட்டு கிடாவெட்டு திருவிழா.


சோழர்கொடி பறந்த, சங்க இலக்கியங்களிலே புகழப்பட்டுள்ள தஞ்சை சீமையில் உள்ள ஆற்காடு.



இந்த இளையர் குடியில் ஒருவனான அழிசி தேரில் ஏறி வந்தது கண்கொள்ளாக் காட்சி ஆகும். இவர்கள் யானை வேட்டையிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் சிறந்தவர். யானை வெட்டையாடி அதனின் கோட்டை (தந்தம்) தனதாக்கிக் கொள்வர். அதை போல் கள்வர் கோமான் புல்லி, புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் யானையை அடக்கி பழக்கமுடையோர்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி இருந்தான். கள்வர் கோமான் புல்லி பாண்டியருக்கு யானையை பரிசாக தருவதும், புதுக்கோட்டை கள்ளர் மரபினரின் பல்லவராயர், தொண்டைமான்கள் பாண்டியருக்கும் துணை நின்றதையும் குறிப்பிடத்தக்கது.

ஆற்காடு கூற்றம் ஆழிசிகுடி, கச்சமங்கலம் என்ற ஊர்களும் கள்ளர்கள் முதன்மையாக வாழ்கின்றனர்.

கச்சமங்கலம் கள்ளர் மரபினரின் வன்னியமுன்டார் பட்டமுடையவர்களே அதிகமாக உள்ளனர். ஆழிசிகுடி ஊரில் கள்ளர் மரபினரின் சோழகர் முதன்மையானவர்கள் மேலும் நாட்டார், காங்கேயர் உள்ளனர்.

மேலே காட்டப்படுள்ள மேற்கோள் சான்றுகள் அனைத்தும் இளையர் என்போரை வாட்போர் வீரர் எனவே காட்டுகின்றன.

↑ 1.0 1.1 குறுந்தொகை - 258:6

திதலை எஃகின் சேந்தன் தந்தை, தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,-(நற்றிணை 190)

↑ காவிரிப், பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த, ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை, நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு (குறுந்தொகை 258)

இந்த இளையர் குடியில் வந்த அழிசி மன்னர் மரபில் உருவான சேந்தன் மரபினர், பிற்கால சோழர்களின் படைத் தளபதிகளாக கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றனர்.


இளையர் சேந்தன்:-

கல்வெட்டு எண் : 50
இடம் : வல்ல நாடு புதுக்கோட்டை
காலம். : 915
அரசர். : பராந்தக சோழர்
செய்தி. : கானவன் சேந்தன் கள்ளன் கொடை அளித்தது.






கல்வெட்டு எண். : 118
இடம். : வல்ல நாடு புதுக்கோட்டை
காலம். : 1078
அரசர். : குலோத்துங்க சோழர்
செய்தி. : கள்ளன் அரையரான சேந்தன் இராஜேந்திர சோழ நாடாள்வான் கொடை அளித்த செய்தி.





கல்வெட்டு எண் : 119
இடம். : வல்ல நாடு புதுக்கோட்டை
காலம். : 1078
அரசர். : குலோத்துங்க சோழர்
செய்தி. : கள்ளன் அரையரான சேந்தன் இராஜேந்திர சோழ நாடாள்வான கொடை அளித்த செய்தி



கல்வெட்டு எண் : 232
இடம். : வல்ல நாடு புதுக்கோட்டை
காலம். : 1110
அரசர். : குலோத்துங்க சோழர்
செய்தி. : கள்ளன் பாப்பன் சேந்தன்சேந்தன் குலோத்துங்க சோழ நாடாள்வான் கொடை அளித்த செய்தி



இப்படியாக அழிசி மரபினரான சோழரின் கிளைக்குடியினர் சேந்தன் அவர்கள் நேரடியாக கள்ளராகவும், இராஜேந்திர சோழ நாடாள்வானகவும், குலோத்துங்க சோழ நாடாள்வானகவும் குறிக்கப் பெறுகிறார்.

இதேபோல புதுக்கோட்டை குளத்தூர் தாலுகாவில்

இளமக்கள் படைப்பற்று இருந்துள்ளதை கல்வெட்டு எண்: 234லும், புதுக்கோட்டை பொன்னமராவதியில் கல்வெட்டு 514ல் இளமக்களில் பரிமேழகனின் கொடை பற்றிய செய்தியையும் காணப் பெறலாம்.

தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட ஆவணம் 2001 கல்வெட்டில்:-

13ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டித் தேவர் ஆட்சி ஆண்டில் இளமக்கள் என்போர் இராஜேந்திர சோழ நாடாள்வனாகவும், குலோத்துங்க சோழ நாடாள்வனாகவும் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர்.

இராஜேந்திர, குலோத்துங்க சோழ நாடாள்வார்கள் கல்வெட்டு எண்: 50,118,119,232 நேரடியாக கள்ளர் என்பதை உறுதி செய்கிறது.

இளையர் குடியின் பட்டங்களை இன்றும் தங்களுடைய வாழ்வியலில் இன்றும் இளையோர்களாக காணப் பெறும் பட்டங்கள் பின்வருமாறு:-

இளமுண்டார்
சேந்தர்
சேந்தமுடையார்
வில்லவர்
வில்லவராயர்




கல்வெட்டுகளில் அதிகமாக வரும் இளையர் சேந்தன் கள்ளன்

சோழர்களை பற்றிய கல்வெட்டுகளில் அதிகமாக இடம்பெற்ற பெயர்களில் முதலாவதாக நக்கன் என்ற பெயரை தொடர்ந்து அடுத்தடுத்து வருவது சேந்தன் என்ற பெயர்.

கள்ளன் சேந்தன்
கானவன் கள்ளன் சேந்தன்
அரையன் கள்ளன் சேந்தன்
பாப்பன் கள்ளன் சேந்தன்

என சோழர் கால கல்வெட்டுகளில் சேந்தன் கள்ளர் இனத்தை சார்ந்தவராகவே வருகிறார், அதுவும் சோழர் காலத்து கள்ளப்பால் (கள்ளர் நாடு) கவிர் நாட்டு கள்ளர் அரையராகவே (சிற்றரசராகவே) வருகிறார்.

மதுரை சேந்தமங்கலம் கள்ளர்கள் வாழும் ஊர் மேலும் புல்லி கூட்டமும் உள்ளனர். மதுரை வெள்ளலூர் நாட்டு கள்ளர்களின் நக்கன் கூட்டம், கூத்தன் அம்பலம், தஞ்சையின் கள்ளர் ஜமீன்களில் ஒன்றான சேந்தன்குடி ஜமீன்.

சேந்தன் என்று வழங்கும் கள்ளர் பட்டங்கள்

சேந்தமுடையார்
சேந்தமுடையர்
சேந்தமடையார்
சேந்தராயர்
சேந்தர்
சேந்தூரியர்
சேத்தூரியர்
சேய்ஞலரையர்
சேய்ஞலாண்டார்

கள்ளர் பெயரே கொற்றவர், அவர்களின் தெய்வமான கொற்றவை, விழுப்புரம் மாவட்டம் எசாலம் கிராமத்தில், கல்வெட்டு பாடத்துடன் கூடிய அரிய கொற்றவை புடைச்சிற்பம், கேசங்கள் தூக்கி அள்ளி முடிந்த நிலையில் காது, கழுத்தில் ஆபரணங்கள், மார்பில் கச்சை, இடையில் அரையாடை, புஜங்களில் வாகுவளையங்கள், மணிக்கட்டில் வளையல்கள், கால்களில் சிலம்புகளுடனும் சிற்பம் அமைந்துள்ளது. இது பல்லவர்கால சிற்பக்கலைத் திறனை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன. இச் சிற்பத்தொகுதியில் இடப்பக்கம் சிறிய அளவில் மான் உருவமும், வலது பக்கம் வீரன் உருவமும் உள்ளது.


கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக
கல்வெட்டு செய்தி: அக்காலத்தில் சமூகத்தில் பெருமக்கள், இளமக்கள் என்கிற இரு பிரிவினர்கள் வாழ்ந்துள்ளனர். கி.பி. 6-ம் நூற்றாண்டில் இளமக்கள் பிரிவை சார்ந்தவர்கள் எசாலத்தில், மக்கள் ஆன்மிகத்தில் சிறக்கவே கொற்றவை சிற்பத்தை நிறுத்தியதையே இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

நன்றி
Epigraph indica
ஆவணம் தமிழக தொல்லியல் துறை
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
தினதந்தி நாளிதழ்
அகநானூறு
மற்றும் உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

புதன், 15 ஆகஸ்ட், 2018

கள்ளர்களின் சீனத்தரையன் பட்டமும் தஞ்சையில் சாமந்தனாராயண் தொண்டைமானார் வைத்த அகரமும். (பொ.ஆ 1308 - 1344)





சீனத்தரையன்

குறுநில வேந்தர்கள், சிறந்த அரசு அதிகாரிகள், சிறந்த உள்ளூர்த் தலைவர்கள் அரையன் பட்டம் கொடுத்துச் சிறப்பிக்கப்பெற்றுள்ளனர். அரையன் பட்டம் பெற்றோர் கல்வெட்டுகளில் பெரும்பாலும் ஆவணக் கையெத்ழுதிட்டோராக இருப்பதை அறியமுடிகிறது.



அரையன் என்பதற்கு அரசமரபில் தோன்றியவனாகவோ அல்லது அரசியல் பெருதலைவனாகவோ அகரமுதலி (1987: 5) விளக்கம் தருகிறது.



சீனத்தரையரென்ற பட்டம் வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கோ, அல்லது அந்த பகுதி வெற்றியோடோ தொடர்புடையதாக இருக்கலாம். இன்றும் கள்ளர்களில் மட்டும் இந்த பட்டம் தங்கியவர்கள் உள்ளனர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையில் வாழுகின்றனர்.



சீனத்தரையன் என்ற சொல் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. 




மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில்


சோழ பாண்டியன் என்ற பட்டப்பெயர் சூட்டிக் கொண்டு வீராபிடேகம் செய்து கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மதுரை பேரையூர் மேலத்திருமாணிக்கம் சிவன் கோயில் அரசு அலுவலர்கள் பட்டங்களாக குறிக்கப்பட்டுள்ள பல பட்டப்பெயர்கள்



விழுப்பாதராயர், 

தமிழுதரையர், 

புள்ளவராயர் (புலவராயர்), 

வயிராயர் (வயிராத ராயன்), 

பாண்டிராயர், 

சங்கரதேவர், 

வாணரையர் (வாணவதரையர்)



போன்ற பட்ட பெயர்களும்,

சீனத்தரையன் பட்டமும்

கள்ளர்களில் இன்றும் காணப்படுகிறது. மதுரை, மேலத்திருமாணிக்கம் பகுதியில் இன்றும் கள்ளர்கள் வாழ்கின்றனர். இங்கு அரசு கள்ளர் பள்ளியும் உள்ளது.


மூன்றாம் இராசராசன் சோழன் காலத்தில்

மூன்றாம் குலோத்துங்கன் இறந்ததும், அவன் மகன் மூன்றாம் இராசராசன் சோழ நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்துவந்தான். பழிவாங்கும் நோக்குடன் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று சோழ நாட்டைக் கைப்பற்றி, சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான்.

கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைத்துள்ளான், அங்குள்ள மணி மண்டபங்களையும், மாட மாளிகைகளையும் இடித்துத் தரை மட்டமாக்கினான். சோழர்களின் இரண்டாம் தலைநகராகிய பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் வீராபிடேகம் செய்து கொண்டான். சோழனைப் பழையாறைக்கே அழைத்துவரச் செய்து அவனுக்குச் சோழ நாட்டைத் திரும்ப அளித்து அவனைத் தனக்குத் திறை செலுத்தி ஆட்சி செய்து வருமாறு பணித்தான்.


சோழ நாட்டின் மீது படையெடுத்த கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான், இதனை 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. அதில் "கோப்பெருஞ்சிங்கன் இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன் இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு" சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


பாண்டிய மன்னன் வல்லபன் காலத்தில்

மூன்றாம் இராசராசன் அவன் மகன் மூன்றாம் இராஜேந்திர சோழன் தோல்வியால் பல வருடங்களாக பாழ்பட்டுக் கிடந்த தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னன் வல்லபன் (1308-1344) என்ற மன்னனுக்கு சேனாதிபதியாய் இருந்த "சாமந்தன்" என்பவன்.




தஞ்சை பெரிய கோயிலில் தென் புற நுழைவு வாயிலுக்கு கீழ்புறம் ஜகதி படையில், ஸ்ரீ வல்லபதேவ பாண்டிய மன்னனின் 35 ஆம் ஆண்டு கல்வெட்டு உள்ளது.


பாண்டியன் கல்வெட்டு...... அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் பற்றிய சாசனம்....

அதிலுள்ள செய்தி பற்றி

கல்வெட்டு ஆய்வாளர் உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் அவர்கள் ஆய்வில் கூறுவது:

சாமந்தனாராயண் தொண்டைமானார் தம் பெயரால், தஞ்சாவூரில் கிராமம் (அகரம் - இறையிலி ஊர் ) ஒன்றை அமைத்து, அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடுகிறார்.

அங்கே சாமந்தனாராயன விண்ணகரம் என்ற விஷ்ணு கோயிலையும் எழுப்புகிறார். 106 பாட்டர்களை குடியமர்த்துகிறார். 95 வேலி (ஒரு வேலி 20 ஏக்கர் ஆகலாம்) நிலத்தை இரு நிலக்கிழார்களிடம் இருந்து வாங்கி நிவந்தமாக அளிக்கிறார்.

நிலம் விற்ற ஒருவர் தென்னகங்கதேவன், இன்னொருவர் பெயர் சீனத்தரையர். இன்னும் நிலம் பங்கீடு, பயிர்கள், போன்ற தகவல்கள் இதில் நிறைய இருக்கின்றன.

தஞ்சவ்வூரில் இருந்து பூதலுருக்கு ஒரு சாலை கள்ளபெரம்பூர் வழியாக போகிறது. தஞ்சையில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில், களி மேடு தாண்டி உள்ள ஊர். சக்கர சாமந்தம். இதுதான் தஞ்சையில் தொண்டைமானார் வைத்த அகரம். எப்படி? அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம், கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி அகர சாமந்தம் ஆகி, இன்னும் கொஞ்சம் மாறி, சகர சாமந்தம் ஆகி, இப்பொழுது சக்கர சாமந்தம் ஆயிற்று.

இன்னும் கூட கொச்சை வழக்காக சக்கர சாமம் என்கிறனர். இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, தஞ்சை என்றால் தஞ்சை கோட்டை பகுதி மட்டும் அல்ல. அதற்குரிய நிலங்களையும் சேர்ந்தது தான் தஞ்சை. எனவே அந்நாளில் இந்த அகரம் உள்ள பகுதியும் தஞ்சைதான்.

சக்கர சாமந்தம் ஊருக்கு மேற்கில் தென்னகங்கதேவன் வாழ்ந்திருக்கிறார். அந்த ஊரும் அவர் பெயராலேயே தென்ன கங்க தேவன் குடி எனப்பட்டது. இந்த ஊர் இன்று தென்னங்குடி எனப்படுகிறது. மேலும் இந்த ஊரில் கள்ளர்களின் சோழங்க தேவர் (சோழ கங்க தேவர்) என்ற பட்ட பெயருடையவர்கள் பூர்வீக குடிகளாக இருக்கிறார்கள்.

அடுத்து,நிலம் வழங்கிய சீனத்தரையன் ஊர். தென்னன்குடியை அடுத்து சீராளூர் இருக்கிறது. இதுவும் நிலம் வழங்கியவர் பெயராலேயே சீனத்தரையனூர் என அழைக்கப்பட்டு, சீனானூர் ஆகி, இன்று சீராளூர் ஆயிற்று. இந்த ஊரிலும் கள்ளர்களின் சீனத்தரையர் என்ற பட்டப்பெயர் உள்ளவர்களும் இவ்வூரின் பூர்வீகக்குடிகளாக உள்ளார்கள்.

அகரம் சாமந்த நாராயண விண்ணகர் பெருமாள் கோயில் இன்று தஞ்சை கொண்டிராஜா பாளையத்தில் (மேல நரசிங்க பெருமாள்) உள்ளது. தஞ்சை மன்னர் சரபோஜி காலத்தில் இங்கு கொண்டு வந்து புது ஆலயத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. (சாமந்தான் குளம் பற்றி இன்னொரு பதிவு வரும்) சரபோஜி கல்வெட்டு உள்ளது.

சக்கர சாமந்தத்தில் செவ்வப்ப நாயக்கர் நலன் வேண்டி அவரது மகன் அச்சுதப்ப நயாக்கர் நிலதானம் வழங்கிய சூலக்கல், கல்வெட்டுடன் இருந்தது. அது இப்பொழுது தஞ்சையில் உள்ளது.



கல்வெட்டு ஆய்வாளர் உயர்திரு ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர் அவர்கள் ஆய்வில் கூறுவது:

மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வென்று தஞ்சையையும், உறையூரையும் முற்றிலுமாகத் தீயிட்டு அழித்தான். அழிந்த தஞ்சைப் பகுதியில் மீண்டும் பாண்டியனின் தளபதி தொண்டைமான் என்பவரால் புதிய குடியிருப்புகளும், நரசிம்மர் கோயிலொன்றும் அமைக்கப்பெற்றன. சாமந்த நாராயணச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரையும் ( இன்றைய கொண்டிராஜ பாளையம்), சாமந்த நாராயண விண்ணகரம் என்ற யோக நரசிம்மப் பெருமாள் கோயிலையும், சாமந்த நாராயணன் குளம் (சாமந்தாங்குளம்) என்ற குளத்தையும் வெட்டி தஞ்சாவூரை மறுபடியும் ஏற்படுத்தினான்.

அப்பகுதிக்கு சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும் பெயரிட்டான். அது தொடர்ந்து புதிய தஞ்சை நகரம் மீண்டும் பொலிவு பெறலாயிற்று. சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலத்தின் தோற்றம் பற்றி விவரிக்கும் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள பாண்டியனின் கல்வெட்டில் அதற்கென அளிக்கப்பெற்ற நிலங்கள் பற்றி கூறும்போது கோடிவனமுடையாள் எனும் தேவியின் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. வரலாற்றுச் சிறப்புடைய கோடியம்மன் கோயிலும், அதில் இடம்பெற்றுள்ள இரண்டு யோகினிகளின் திருமேனிகளும் தஞ்சை நகரத்தின் புறநகராக விளங்கும் கருந்திட்டைக்குடிக்கும், வெண்ணாற்றுக்கும் இடையில் கோடியம்மன் கோயில் எனற பெயரில் இக்காளி கோயில் உள்ளது.

.


கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது


ஆய்வாளர்கள் உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் மற்றும் உயர்திரு ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர் இருவரின் ஆய்வில் தஞ்சையில் உள்ள இடங்கள் மாறுபட்டாலும் சீனத்தரையர் , சோழ கங்க தேவர் என்ற பட்டம் உடைய கள்ளர்குடியினர் இன்றும் தஞ்சை மண்ணில் செல்வசெழிப்போடும் , அதிகாரத்தோடும் வாழ்கின்றனர் சாட்சியாக.

நன்றி:

உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார்

உயர்திரு ஐயா. பாலசுப்ரமணியன் சோழகர்

உயர்திரு. பார்த்தி கத்திக்காரர்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

இலங்கையின் கண்டி மாநகரின் வள்ளல் துரைராசா இராசகண்டியர்


இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் திருக்கண்டியூர் இளவரசன் இராசகண்டியன்.

இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும்.

உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.

இத்தகைய பெருமை வாய்ந்த இராசகண்டியன் குடும்பத்தில் இலங்கையின் கண்டி மாநகரின் வள்ளலும், முதன் முதலில் அயல் நாடுகளில் கள்ளர் மகாசபையை உருவாக்கிய துரைராசா இராசகண்டியர் பிறந்தார்.


தஞ்சை மாநில சிராங்குடி சிதம்பரம் இராசகண்டியர், அஞ்சலை அம்மாள் தம்பதியினருக்கு 5 செப்டெம்பர் 1905 இல் துரைராசர் பிறந்தார். இக் குடும்பம் மிகுந்த செல்வாக்குடன் அன்நாள் ஒருங்கினைந்த மலாயா,பர்மா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் பல தோட்டங்களையும், பண்ணைகளையும் கொண்ட குடும்பமாகும். திரு துரைராசர் இளமையில் தனது கல்வியை இலங்கையிலும், சட்ட மேற்படிப்பினை இங்கிலாந்து நாட்டிலும் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

சிதம்பரம் இராசகண்டியர் துரைராசா அவர்களின் மூதாதரையர்கள்.

01. சுடலைமலை இராசகண்டியர்(1650) - பேச்சியம்மாள் வன்னியர்

02. அப்பாவு இராசகண்டியர் (1665) - அழகாயீ அங்குராயர்

03. பெத்தாண்டி இராசகண்டியர் (1682) - செவந்தி சாளுவர்

04. மலையாண்டி இராசகண்டியர் (1701) - கருப்பாயம்மாள் கிழாமுடையார்

05. முத்தாண்டி இராசகண்டியர் (1721) - அகிலாயீ காடுவெட்டியார்

06. சின்னத்தம்பி இராசகண்டியர் (1743) - வள்ளி சாளுவர்

07. அய்யாக்கன்னு இராசகண்டியர் ( 1760)- முத்தாயம்மாள் வாண்டையார்

08. மருதாண்டி இராசகண்டியர் (1780) - அழகியம்மாள் அங்குராயர்

09. சந்தனம் இராசகண்டியர் 1803) - வெள்ளையம்மாள் காலிங்கராயர்

10. பெத்தையா இராசகண்டியர்(1820) - மீனாச்சி விஜயதேவர்

11. தொப்பையா இராசகண்டியர் (1841) - இருளாயீ ராசபிரியர்

12. வடமலை இராசகண்டியர் (1857) - காமாச்சி தெங்கொண்டார்

13. சிதம்பரம் இராசகண்டியர் (1875) - அஞ்சலையம்மாள் தஞ்சிராயர்

14. துரைராஜா இராசகண்டியர் (5/09/1905)- சம்பூரனத்தம்மாள் கருப்பூண்டார்

முதன் முதலில் அயல் நாடுகளில் கள்ளர் மகாசபையை உருவாக்கியவரும் இவரே. 1942ல் கள்ளர் மகா சபையை உருவாக்கி இறப்பு வரை நிர்வகித்த பெருமை இவரை சாரும். கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 1958ல் கள்ளர் மகாசபை 903 தஞ்சை கள்ளர்களை அங்கத்தினர்களாக கொண்டு செயல்பட்டதாக இலங்கையில் கண்டி மாநகர அரசுப் பதிவகத்தில் பதிவாகியுள்ளது. 1967ம் ஆண்டு அறிக்கையின் படி கள்ளர் மகாசபை 1643 அங்கத்தினர்களை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றது.

மேலும் 1942 முதல் 1967 வரை தொடர்ந்து 26 ஆண்டுகள்

திரு துரைராச கண்டியர் (கண்டி) தலைவராகவும்,

திரு சுப்பையா விஜயதேவர் (வத்துகாமம்) தொடர்ந்து 23ஆண்டுகள் செயளாளராகவும்,

கோவிந்தசாமி கங்கைநாட்டார் (கெங்காலை) 19 ஆண்டுகள் பொருளாளராகவும் செயல்புரிந்தமையும்,

திரு கோபால் ராஜாளியார்(அம்பிட்டி),

திரு வேதமுத்து தெங்கொண்டார் (கலகா),

திரு சௌமியமூர்த்தி தொண்டைமான்(ரம்பொடை),

ரத்தினம் கிளாமுடையார்(கொழும்பு),

ராஜமுத்தையா காலிங்கராயர்(மடுல்களை),

வேலு சாளுவர்(ப்ண்டாரவளை),

நாரயணசாமி தஞ்சைராயர்(உடுவரை)

போண்றோர் ஆயுல் கால செயல் உருப்பினர்களாக இருந்தமையயும் அரசுப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.

திரு துரைராச கண்டியர் முற்போக்கு சிந்தனையாளராகவும் பல்வேறு உதவிகளையும் பல்வேறு மக்களுக்கு செய்தமையால் 1955ல் இலங்கை அர்சு இவருக்கு சமாதான நீதிமான் (ஜெ.பி.யு.எம்) என்ற கௌரவ பட்டத்தினை வழங்கியுள்ளது. இப்பட்டத்தினை பெற்ற முதல் தமிழர் இவராவார்.

இவர் இலங்கையில் இருப்பிடமாக கொண்ட மல்பானை என்னுமிடத்தில் முதல் கூட்டுரவு பண்டகசாலை மையத்தை 1956ல் உருவாக்கி பெருமை படைத்துள்ளார்.

கிருத்துவ மிஷனரி மூலம் தமில் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக ராஜவலை மெதடிஸ்ட் மிஷன் என்ற பெயரில் பள்ளி ஒன்றினையும் 1952ல் ஆரம்பித்து தந்து தனது சார்பாக 10 ஏக்கர் நிலத்தையும் பள்ளிக்கு வழங்கியுள்ளார்.

இப் பள்ளி தற்போது அரசுடமையாக்கப்பட்டு 1200 தமிழ் மாணவர்கள் பயிலும் கல்விக்கூடமாக இருந்துவருகிறது. 1969ம் வருடம் வரையிலும் கண்டியரே பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராகவும் இப் பள்ளியில் செயல் பட்டுள்ளார்.

மல்பானை புத்த விகாரையில் தமிழ் தெய்வங்களுக்கு முருகன் மற்றும் அம்மன் கோவில்களையும் கட்டியுள்ளார்.

கிராம மக்கள் பயன்பாட்டிற்காக 14 கிணறுகளையும் அமைத்து குடிநீர் தேவைகளையும் பூர்த்திசெய்துள்ளார். மேலும் 1951 முதல் தனது இறப்பு வரை கதிர்காமத்தில் தெய்வாணை அம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில்,சந்தனமலை கோவில், கதிரைமலை கோவில், செல்வக்கதிர்காமக் கோவில் அனைத்திற்க்கும் அறங்காவலராகவும்,கண்டி பிள்ளையார் கோவில் அறங்காவலராகவும் பணியாற்றியுள்ளார்.

கதிர்காமத்தில் பக்தர்கள் தங்கும் வசதிக்காக 30 அறைகள், நூலகம், உணவு அளிக்கும் அண்ணதானகூடம் உற்பட்ட தெய்வானை அம்மன் மடத்தையும் கட்டி நிர்வகித்த பெருமையும் கொண்டார். இவரை கதிர்காமக் கண்டியர் என்றே பலரும் அழைப்பர்.

இலங்கையில் பெரும்பாலன கள்ளர் குல திருமணங்கள் இவர் தலைமையிலேயே நடந்துள்ளன. இவர் 24 டிசம்பர் மாதம் 1970ல் இயற்கை எய்தினார்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்