வியாழன், 26 செப்டம்பர், 2019

மூவரையர் / மூவரையன்




மூவரையர் ஆட்சிப்பணியில் அருந்தொண்டு செய்த துடன் மூன்று அரசாகவும் விளங்கியதினலே இவர்கள் ' மூவரையர் '' என்றும் அழைக்கப் பெற்றனர். சேனைப் பெருமாளான குலோத்துங்க சோழ மூவரையர் என்பவர் குறிக்கப்படுகிறார். சோழராட்சியில் சிறந்த படைத்தலைவராக இருந்தவ ரென்பதை அவருக்குரிய சிறப்புப் பெயரால் நன்கறியலாம். இன்றும் மூவரையர் மரபினர் கள்ளர் குடியில் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் வைணவ மரபை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

சோழமண்டல பகுதிகளில் தஞ்சை ஒரத்தூர், திருக்காட்டுப்பள்ளி, அணைக்காடு, சித்தாயல், அம்மாபேட்டை, பட்டுக்கோட்டை பகுதியில் மூவரையர் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர்.

ஒரத்தூர் மூவரையர் வாழும் பகுதியில் மூவரைய வயக்கல் என்று தனியாக உள்ளது. மூவரையர் கோட்டை என்ற பகுதியே என்று மூவர் கோட்டை என்று தஞ்சையில் அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் மூவர் கோட்டை பகுதியில் முதலியார் பட்டம் உடைய கள்ளர்கள் தான் முதன்மையாக உள்ளனர்.

கள்ளர் மரபில் பிறந்த வேதரண்ய உப்பு சத்தியாகிரக நாயகன் நடராஜன் மூவரையர்.


சோழவளநாடு தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, திருநியமம் மற்றும் இராசகிரி என்று வழக்கில் கூறப்படும் இளங்காடு சோழர்களுக்கு மிகவும் பிடித்தமான ஊர். இளங்காட்டில் இராஜ இராஜ சோழனின் காந்தளூர்சாலை கலமறுத்த முதற்போரின் வெற்றிக்கு அடையாளமாக அவன்கட்டிய விஜய விடங்கேஸ்வரர் கோவில் இன்றளவும் உள்ளது.

இக்கோவிலில் சேதிராயர், மேற்கொண்டார், மூவரையர், வில்வராயர், கொல்லத்திரையர், நாட்டார்,பாப்புரெட்டியார் பட்டந்தாங்கிய கள்ளர் இனக்குழுக்களுக்கு மட்டுமே இன்றளவும் முதல் மரியாதை செய்யப்படுகிறது.

முத்தரையர், முனையதரையர்,செழியதரையர், பல்லவதரையர் என்றார் போலப் பல பட்டப்பெயர்கள் தரையர் என்னம் பெயருடன் சேர்ந்து கள்ளர்களுக்கு வழங்குகினறனவென்றும், ‘இரவலவா……திருவேங்கட நாதா’ ‘தேன்பிறந்த…….பிறந்தான் முன்’ என்னும் பட்டுக்களாற் குறிக்கப்படும் திருவேங்கடநாதர் என்னும் வள்ளல் கள்ளர் குலத்தில் செழியதரையர் என்னும் பட்டமுடையவரென்றும், பாண்டி நாடு பஞ்சமுற்ற பொழுது சங்கப்புலவர்களை வரவழைத்து ஆதரித்தவனும், சோழ நாட்டவனும் ஆகிய ஆலஞ்சேரி மயிந்தன் என்னும் உபகாரியும் இக்குலத்தவனே யென்றும், இக் குலத்தவைரைக் குறித்து மூவரையர் வண்ணம் என்பதொரு பிரபந்தம் உண்டென்றும், இக்குலத்தவரில் பல சிறந்த தமிழ்ப்புலவர்களுண்டென மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அடிக்கடி பாராட்டிக் கூறுவதுண் டென்றும் மகாமகோபாத்தியர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் இளங்காடு நற்றமிழ்ச்சங்கத்தின் ஓர் ஆண்டு விழாவில் தலைமை வகித்த பொழுது கூறியுள்ளார்கள் என்று ஐயா வேங்கடசாமி நாட்டார் எழுதிய 'கள்ளர் சரித்திரம்' நூலில் குறிப்பிடுகிறார்.

பாளையவனம் நாட்டின் கள்ளர் குல சிற்றசர்கள் "வணங்காமுடி பண்டாரத்தார்கள்" ஆதரித்த  மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் இயற்றிய மூவரையன் விறலி விடு தூது, கள்ளர் குல சிற்றசர் வள்ளல் திருவேங்கடநாதன் மூவரையன் புகழை பாடுகிறது.






அமரர் திரு. M.M. சந்திரகாசன் காங்கேயர் . இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்) தனது சமுதாயச் சிந்தனைகளை வளர்ச்சியடைய வைத்தவர்களில் ஒருவராக திரு கோதண்டபாணி மூவரையர் அவர்களை தனது மலரும் நினைவுகள் நூலில் குறிப்பிடுகிறார்.




டாக்டர் வரதராஜா மூவரையர்

டாக்டர் வரதராஜா மூவரையர் அவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு முக்குலத்தோர் சங்கத்தின் (KVMA) கொடியை தென்கிழக்காசியாவிலேயே மிக உயரமான சபா, கினபாலு சிகரத்தில் வெற்றிகரமாக நாட்டியுள்ளார்.

ஒரத்தூர் தேசிகன் மூவரையர்
















இளங்காடு பகுதியில் வாழும் மூவரையர்கள்


அணைக்காடுபகுதியில் வாழும் மூவரையர்கள்

அணைக்காடு கள்ளர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பும் தங்கள் குல பட்டங்களை தாங்கியே நிற்கிறார்கள்.


திருக்காட்டுப்பள்ளி சகோதரர்  பெரியண்ணன் மூவரையர்
(மாவட்ட செயலாளர் மூ.மூ.க தஞ்சை)

புலியை கொன்று மக்களை காத்த திருமலை மூவரைய தேவன்

திருமலை நாயக்கர் 1654 ல் ஸ்ரீவில்லிபுத்தூருக்­கு செல்லும் வழியில் வெள்ளிக்குறிச்சி எனுமிடத்தில் ஒரு பெண் தன் குழந்தையுடன், ஓலமிட்டு வந்தாள். அவளது கணவனை புலி ஒன்று கொன்று விட்டதாக நாயக்கரிடம் கூறினாள். இதையடுத்து அப்பகுதியை ஆண்ட பாளையகாரனான சீரங்கநாயக்கனுக்கு புலியை கொன்று மக்களை காக்க ஆணையிட்டான்.சீரங்க நாயக்கன், " வெற்றிலை பாக்கு வாங்கி புலியை கொல்ல தயாரானவர்கள் அணுகலாம் என அறிவிப்பு செய்தார்.

சிவகங்கை கள்ளர் நாட்டு வீரனான மூவரையத்தேவன் தன் உறவினர் ஆறு பேரின் துணையுடன் புலியை அடக்க முன்வந்தான். போராடி புலியை கொன்று மக்களின் நிம்மதியை மீட்டுத் தந்தார்.

திருமலை மன்னரால் மூவராயதேவருக்கு " திருமலை மூவராயதேவன் என பட்டம் கட்டப்பட்டது!

இவரது உறவினர் ஆறு பேருக்கு " சின்னத்தேவர்" எனும் பட்டமும் கட்டப்பட்டன.

வத்திராயிருப்பை ஒட்டிய கிராமத்தை மூவரையத்தேவனுக்கு பரிசாக அளித்து நாட்டாண்மை பட்டம் கட்டி செப்பு பட்டயம் அளித்தார்..

( இலந்தைக்குளம் செப்பேடு - திருமலை நாயக்கரால், வழங்கப்பட்ட இந்த செப்பேடு, விருதுநகரில் தற்போது வசிக்கும் திரு அண்ணாமலைத்தேவர் என்பவரிடம் இருந்து பெறப்பட்டு படியெடுக்கப்பட்டது.)


பெண்சாதி பிள்ளைகளும் தலைவிரிகோலமாக அளுது அபையம் போட்டுப் போரது ராசா காதிலே அபையக்குரல் கேட்டு திடுக்க முளித்து நாமும் வந்திருக்க இந்த அநியாய்யம் வேறேயின்னம் உண்டோவென்று கோவாக்கினி தலை மண்டை கொண்டு வெள்ளிக்குறிச்சி சீமை கற்த்தராகிய சீரங்கனாக்கரை வரவழைத்து அளுகுரதென்ன வென்று கேள்க்கும் படிக்கு உத்தறவு அவற் பதறி அளுகையமத்தி றாசா உத்தாரமாகுது என்று கேள்க்க..

சீரங்கநாயக்கன் ஆணையின் பேரில் எழுந்தருளினாற் ரதகெசதுரக பதாதி சேனையும் குவலையப்பாரை பருவதத்தை துப்பாக்கி மனைமளைமாரி பொளிந்து வரும்போது...




திருமலை நாயக்கர் செப்பேடுகள்- தமிழக தொல்லியல் துறை)


ஐயா திரு. செயராம் ராசகண்டியர் தன் ஆய்வில் மூவரையன், மூரியன், மூங்கிலியன், மும்முடியான். மூவச்சோழன் மூவரையன் கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியகக் கொண்டவன். சேரர், பாண்டியர்களோடு பெரும்போர் செய்து அவர்களுடைய முடிகளை பறித்து தன்முடிமேல் ஒன்றின் மேலொன்றாகச் சூட்டிக்கொண்டு அவர்கள் தலையில் விளக்குகள் வைத்தவன்.இவன் பெயர் மூவரையன் மும்முடியன் எனவும் வழங்கும். மூவலூர் என்னும் தேவாரம் பாடப்பெற்ற சிவ தலத்தையும், மூவனூர் என்ற ஊரையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபினர் மூவரையன், மூரியன், மூங்கிலியன், மும்முடியான் என்ற பட்டங்களை கொண்டனர் என்கிறார்.

ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்


செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர்



முத்துப்பேட்டை பாலாவாய் கிராமத்தில் பிறந்தவர் சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர். இவர் சுதந்திர  போராட்ட அணிவகுப்பின் போது கையில் இந்திய தேசியக் கொடியினை ஏந்தி பல  போராட்டத்தில் கலந்துகொண்டார். சென்னையில் காந்தியை சந்தித்ததை இன்றும் பெருமையாக நினைக்கிறார்.  முத்துப்பேட்டையில் நடந்த சுதந்திர  போராட்ட அணிவகுப்பின் போது கைது செய்யப்பட்டு, ஒரத்தநாடு சிறையில் வைத்து இரண்டு வாரங்களுக்கு மேல் சித்திரவதை செய்யப்பட்டார். அன்று பல துன்பங்கள் அனுபவித்திருந்தால், இன்று அதனை பெருமையாக உணர்வதாக கூறுகிறார். தற்போது 90 வயதாகும் சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர் அவர்களின் மனைவியின் பெயர் வேதாம்பாள் அம்மையார். இவருக்கு மூன்று மகன்களுக்கும் மூன்று மகள்களும் உள்ளனர்.




திங்கள், 23 செப்டம்பர், 2019

மாமனிதர் முத்துத் தேவர்



கைரேகைச்சட்டம் சட்டத்திற்கு எதிராக பெருங்காம நல்லூர் கலவரம் நடந்தபோது பக்கத்து கிராமமான போத்தம்பட்டியில் வசித்தவர் என் தந்தையார் பி. முத்துதேவர். அப்போது அவர் எட்டுவயது சிறுவனாக இருந்தார். கலவரம் பற்றி செய்தி பக்கத்து கிராமங்களில் பரவியது. கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கலவர பூமியைப் பார்த்து கதறி அழுதனர். அந்த சம்பவம் முத்துதேவர் மனதில் ஆழமாக பதிந்தது. இறந்தவர்கள் அனைவரும் பக்கத்து கிராம மக்கனின் உற்றாரும் உறவினர்களும் ஆவர்.

இந்நிலையில் முத்துதேவர் அவர்கள் உசிலம்பட்டி அரசுப் பள்ளியில் பயின்றபின்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜம்புநாத ஐயரின் பரிந்துரையால் சென்னை ஒய் எம். சி.ஏ வில் உடற்கல்வி பயிற்சி பெற்றார் ஒய் எம். சி.ஏ வின் முதல்வர் மிஸ்டர் பக் அவர்களும் அவரது துணைவியாரும் முத்து தேவரின் குற்ற பரம்பரைப் பின்னணி அறிந்து அவர்பால் அன்பை சொரிந்தனர். 

ஜமிந்தார்கள் மற்றும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் முத்து தேவருக்கு அரசின் சிறப்பு அனுமதி பெற்று உபகாரச் சம்பளம் பெற்று தந்தனர். பின்னர் 1930 - 40 களில் ராஜபாளையத்தில் சேவுக பாண்டியர் உயர் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பன்னிரண்டு ஆண்டுகள்பணி ஆற்றினார்.

அப்பொழுது சேத்தூர் ஜமீன் மற்றும் இராமநாதபுரம் ராஜா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மூலம் கரந்தை தமிழ்ச்சங்க முதல்வர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர் எழுதிய கள்ளர் சரித்திரம் என்ற நூலை படித்தார். வேங்ககசாமி நாட்டாருடன் பேசிய முத்து தேவர் கள்ளர்களை பற்றி மட்டும் எழுதிய நீங்கள் மறவர் அகமுடையார் அனைவரின் சரித்திரத்தையும் சேர்த்து எழுதலாமே என்று கேட்டார். அதற்கு நாட்டார் அவர்கள் அப்பணியை நீங்களே செய்யாலாம் எனக் கூறியுள்ளார். அது தனக்கு விடுக்கப்பட்ட கட்டளையாகக் கருதி முக்குலத்தோர் சரித்திரம் எழுதவேண்டும் என்ற கரு முத்துத்தேவர் மனதில் உருவானது.


சேத்தூர் ஜாமீன்,ராமநாதபுரம் ராஜா ஆகியோர் தம்மிடம் இருந்த தகவல்களைக் கொடுத்து உதவினர். மேலும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் ஆவணங்கள் கொடுத்து முத்து தேவருக்கு உதவுமாறு நோட்டிஸ் அடித்து வெளியிட்டனர். மேலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பத்தில் அரசு ஆவனான்களைப் படிக்கவும் குறிபெடுக்கவும் அனுமதி பெற்றுத் தந்தனர். 1940 களில் அரசு ஆவணக் காப்பகத்தில் நுழைய முடியாது. மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் அனுமதி பெற வேண்டும்.

ஆவணக் காப்பகத்தில் அரிய நூல்களும் அரசு ஆவணங்களும் படித்து வேண்டிய குறிப்புகள சேகரித்தார். அதில் குறிப்பாக பிரமலை கள்ளர் பற்றியும், குற்றபரம்பரை சட்டம், லவ்லக் அறிக்கை, பிரமலை கள்ளர்கமீது ரேகைச்சட்ட அமல், பெருங்காம நல்லூர் கலவரம், துப்பாகிச்சூட்டில் பலியானவர்கள் விவரம் ஆகியவைகளுடன், மதுரைக் கள்ளர் நாடுகள், தமிழ்நாட்டில் முஸ்லிம் படை எடுப்பு,நாயக்கர் ஆட்சி,சேதுபதிகள்,பூலித்தேவர், மற்றும் மருது சகோதரர்கள் எழுச்சி, வெள்ளையருடன் தன்னரசு நாட்டுக் கள்ளர்களின் மோதல், பாளையப்பட்டு யுத்தம், வெள்ளையத்தேவனது வீரப்போர் மற்றும் ஏராளமான தகவல்களுடன் சுமார் நாற்பது ஆண்டுகளாக தகவல்களை முத்துதேவர் சேகரித்து வைத்திருந்தார்.

ராஜபாளையத்தில் பணியில் இருந்தபோது 1940 களில் வேட்டைக்கு வந்த மதுரை வெள்ளைக்கார கலெக்டர் முத்துதேவரை சந்தித்து ஆசிரியர் பணியில் இருந்து விலகி தன்னுடன் வருமாறு அழைத்தார். முத்துதேவரும் அவ்வாறே செய்தார். Rural Recreation Officer என்ற பதவியை ஏற்படுத்தி கள்ளர் குல மக்கள் வாழும் பகுதியில் சீர்திருத்தங்களை மதுரை கலெக்டர் அமல் படுத்தினார். மதுரை தவிர தஞ்சை, திருச்சி ராமநாதபுரம் கலெக்டர்களும் தேவமார் வசிக்கும் பகுதியில் முத்து தேவரின் சேவையை பயன்படுத்திக் கொண்டனர். இரண்டாம் உலக போர் நடக்கும் காலத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் தேவர் சமூக இளைஞர் களை சேர்ப்பதற்கு வசதியாக recruting officer ஆக பணியாற்றினார். அதற்கென சன்னத் எனப்படும் பட்டயத்தை ஆங்கில அரசு வழங்கியது.


1947 சுதந்திரம் பெற்ற பின்னர் வெள்ளையர் வெளியேறினர். அவர்களின் சேவை பிரிவுகள் கலைக்கப் பட்டன. முத்துதேவர் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் பயிற்சி பெற்று கூட்டுறவுத்துறையில் அலுவராகப் பணிபுரிந்து 1967 ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மதுரை அருகே கருமாத்தூர் என்னும் கிராமத்தில் தங்கி இருந்தார்.

அதன்பின் நாற்பது ஆண்டுகாலமாக சேகரித்து வைத்து இருந்த தகவல்களை தொகுத்து மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு எந்த தமது ஆராய்ச்சி நூலை வெளியிடும் பணியை துவங்கினார். நூலை வெளியிட நாட்டமங்கலம் மொக்க மாயத்தேவர், கூடலூர் சிவன்காளைதேவர் மற்றும் கள்ளர் பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்கள் உதவியினை. பெற்று நூலின் முதல் பதிப்பை 1976ம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கத்தில் வைத்து திரு.மூக்கையாத்தேவர் முன்னிலையில் நடிகர் சிவாஜி கணேசன் வெளியிட்டார். இதன் மூலம் குற்ற பரம்பரையினர் பற்றியும், ஆங்கில அரசின் அடக்கு முறையும், பெருங்காம நல்லூர் கலவரம் பற்றியும் வெளிஉலகத்தின் பார்வைக்கு முதன் முதலாக வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டது. புத்தகம் வெளியிட்டாலும் அது தேவமார் சமூகத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

அச்சிடப்பட்ட பிரதிகள் நன்கொடையாளர்களுக்கும், கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழப்பட்டு விட்டன. விளைவு கடலில் கரைத்த பெருங்காயம் போலாகி விட்டது. மக்களிடம் போதுமான புத்தக வாசிப்பு இல்லாதிருந்தது.1980 ம் ஆண்டு எனக்கு சென்னையில் அரசுப் பணி கிடைத்தது. நானும் தந்தை முத்து தேவரும் சென்னைக்கு வந்துவிட்டோம். 

இடைக்காலத்தில் சேகரித்த தகவல்களை மூல நூலுடன் இணைத்து இரண்டாம் பதிப்பு வெளியிட முடிவு செய்தார் முத்து தேவர் . சென்னையில் வசிப்பதால் நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் இயக்குனர் பாரதி ராஜா ஆகியோரை சந்தித்து நிதி உதவி கோரினார். அவர்களும் மனம் உவந்து ஒப்புக் கொண்டனர். ஆனால் அவர்கள் இல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் அந்த தள்ளாத வயதில் நடந்து நடந்து முத்துதேவர் மனம் நொந்துபோய்விட்டார்.

இறுதியில் கோவை முக்குலத்தோர் சங்கத்தலைவர் பொன். அருணாச்சல நாட்டார் அவர்கள் பொருள் உதவி செய்தார். மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு இரண்டாம் பதிப்பு 520 பக்கங்களுடன்1982 ல் வெளியிடப்பட்டது.

அதன்பின் பசும்பொன் பைன் ஆர்ட்ஸ். ராஜராஜன் அறக்கட்டளை ஆகியவை முத்துதேவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினர். புத்தகங்களை ஒரு சிலரே விலை கொடுத்து வாங்கினர். பெறும்பாலான புத்தகங்களை இலவசமாகவே மக்கள் பெற்றுச் சென்றனர்.

முத்துதேவர் தனது இறுதிக்காலத்தில் கருமாத்தூர் ஸ்தல வரலாறு என்ற கோவில்கள் பல கொண்ட தனது பூர்வீக கிராமத்தைப் பற்றி எழுதி புத்தகமாக வெளியிட விரும்பினார். அதற்கான தகவல்களும் சேகரித்து வைத்திருந்தார் . ஆனால் அதை வெளியிடுவதற்கு முன் 1993 ம் ஆண்டு தனது 82 ஆவது வயதில் கருமாத்துரில் காலமானார்.

இணையத்தில் இந்நூலினைப் படிக்க இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு - முத்துத்தேவர்

மு. நமசிவாயம் தேவர்


ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

உறந்தைவளர் நாட்டுவளப்பம்


உறந்தைவளர் நாட்டுவளப்பம் என்பது முத்தையன் சேதிராயர் எழுதிய நூல். இவர் கல்லாதவர் எனவும் இவர் பாடிய பாடல்களை இவர் தம்பி குறித்து வைத்துக் கொண்டு, ஏட்டில் எழுதியதாகவும், பின்னர் அதைத் தாம் பிழைத் திருத்தி நூலாக வெளியிட்டதாகவும் நக்கீரர் கூறுகிறார். ஒரத்தநாடு வட்டத்தின் உள்ளூர் மக்களின் வாழ்வியல். வழிபாட்டு முறைகள், பண்பாடு, சாதிப் பிரிவுகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். முத்தையன் பாடிய சந்தம் கொண்ட பாடல்களுக்கு உரைநடையிலும் விளக்கியுள்ளார் நக்கீரர். சில தகவல்களுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். பிற நூலாசிரியர்களின் சான்றுகள் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த சுற்றுப்புறத்து ஊர்களின் சென்ற நூற்றாண்டின் வாழ்வியலை அறிய முடிகிறது.


இறைவணக்கம்

இசை:

தானன தானன தானன தானன
தானன தானன தானன தானன
பாடல்:

சீர்பெருகு நாடுசி றந்தாள்உ றந்தையில்
பேர்பெருகு முன்தழுக்கைப் பிள்ளையாரே முன்னடவீர்!
முன்னடவீர் தென்னுறந்தை முருகா உனைப்பாடச்
சன்னதிப் புன்னைப் போல் தழைக்கும்உ றந்தையில்
மிக்க துவரைவி ளங்கனியாம் சர்க்கரை
சர்க்கரை பாலுடன்த ழைக்கும்உ றந்தையில்
முக்கனி சர்க்கரை முழங்கும்உ றந்தையில்
முக்கனி கொண்டவர் மெய்க்குவி நாயகர்
மெய்க்குவி நாயகரை வேண்டிஅ னுதினம்
தக்கோர் வளத்தைப்பாடச் சரஸ்வதியே முன்னடவீர்!
தஞ்சமென்றேன் உன்பாதம் சரசுபதித் தாயே
பூஞ்சோலை என்றுபொ ருப்பாள் பெரியவள்
கற்றோர் பெரியவர் கவிவாண ருக்கெல்லாம்
பற்புலவர் நற்புலவர் பாதம்ப ணிந்துநான்
முத்தையன் சொன்னதமிழ் எத்தேச காலமும்
வித்தை வளரருள்செய் மெய்க்குவி நாயகர்
உறந்தை வளநாடு சிறந்துப ணிகின்றோம்
குரும்பீசர் பாதத்தை விரும்புவோம் எந்நாளும்
பெருத்தச டையும்பி றையும்த ரித்தவர்
திருக்காக் குரும்பரைநான் துதிப்பேன் பலநாளும்


உறந்தைவளர் நாட்டுவளப்பம்/சிவன் வடிவழகும் திருவிளையாடலும்

திங்கள் சிரத்தவர் திரிநூ லணிந்தவர்
மங்கை பெரியவள் பங்கார் குரும்பீசர்
மானும் மழுவும்ம தியும்த ரித்தவர்
ஞானம் மிகுந்தவர் நல்லகு ரும்பீசர்
கரியை உரித்தவர் காளைமேல் கொண்டவர் (25)
நரியைப் பரியாக நடத்தும் குரும்பீசர்
ஆலவிடம் உண்டவர் அமிர்தங் கடைந்தவர்
காலனை உதையக்கணை கண்டார் குரும்பீசர்
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்பால் அடிபட்டார்
கட்டிப் பிடித்தமார்க் கண்டர் பயந்தீர்த்தார் (30)
திரிநூ லணிந்தவர் செந்தா மரைப்பாதம்
பரவைக்குத் தூதுசென்று வந்தார் குரும்பீசர்
கனக சபையில்நிதம் நடனம் புரிந்தவர்
மதனை எரித்துஇங்கே வந்தார் குரும்பீசர்
பொக்கணம் எடுத்தவர் புலித்தோ லணிந்தவர் (35)
முக்கண் தரித்தவர் முதலே குரும்பீசர்
சோளிகை எடுத்தவர் சூரர்களை வென்றவர்
காளியுடன் வாதுசென்று கண்டார் குரும்பீசர்
எரியை மதனைக்காத்த ஏழைபங் காளராம்
பெரியவள் பாதாரம் மதிசூடும் நாதராம் (40)
திருக்காக் குரும்பர்பாதம் சுமந்தேன் தலைமேலே


உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஊர்த்தெய்வ வணக்கம்


உரத்தநாட் டையன்பாதம் உரைப்பேன் பலநாளும்
பொங்குச டையும்பு கழுந் தரித்தவர்
எங்கள் புதுவூர்த் தெய்வங்கள் பெருமாளும்
ஏறும் பரிகள்வந்து சூழும் பனிநீரை
காரி அழகரைநான் பாதன் பணிந்தேனே
பொய்சொல்லா மெய்யன்புது மேஸ்திரி யாவரும்
மெய்சொல்லி அய்யன்பாதன் வேண்டிப் பணிகின்றோம்
பாலும் பழமும்ப சியாவ ரந்தரும்
பாலையடி அய்யனுடைப் பாதம் பணிந்துநான்
ஓங்கார முள்ளஉ றந்தை வளநாட்டில்
வேம்பய்யன் பாதத்தை விரும்பிப் பணிகின்றோம்
கலங்காதே யென்றுப லங்கள் தருகின்ற
இளங்கோவில் ஐயன்பாதம் விளங்குவோம் எந்நாளும்
வாழ்வும்பெ ருகும்வ ளரும்உ றந்தையில்
சேவுக ரையன்பாதம் சீர்பாதம் போற்றுவோம்
சரசகு ணமுந்த யவும்பெ ருகியே
பெரியமு தலியையன் துதிசெய்வோம் எந்நாளும்
ஐவர் பையில் அடைக்கலம் காத்தவர்
வைபோகம் எங்கும்புகழ் தெய்வங்கள் விநாயகர்
அசாரக் காரரவர் அபிமானங் காத்தவர்
ராஜாவூர் ஐயன்பாதம் நேசம் மறவேனே
உத்தமி எங்கள்உ றந்தை வலநாட்டில்
முத்துமகா மாரிபாதம் நித்தம் துதிசெய்வோம்
அலைகடலில் பள்ளிகொள்ளும் ஆயன்ச கோதரி (65)
மலையாள் பரங்கிமுத்து மாரி பெரியவள்
மலையாள் பரங்கிஉல காத்தாள்வில் லாத்தாளாம்
குலதெய்வம் என்றுநாங்கள் நிதமும் துதிசெய்வோம்
பூத தயவுகளும் பெருமைகளும் உண்டாக
மாதா பெரியவள் பாதம்ப ணிகுவோம் (70)

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/நாட்டார் பெருமைகள்

வீர மணவாளர் விருதுகளைக் கூறுவோம்
காறாளர் வீரர்க ணக்குக் கதிகாரி
தோறாத கோவிலூர் துலங்கும்வெள் ளார்கள்
தன்னர சுள்ளவர் தலைமை யவர்களாம்
முன்னர சுள்ளவர் பல்லவ ராயர்கள் (75)
கனவென்று சொன்னவரைக் காதை அறுமென்றார்
நெடுவாண்டா ராயரவர் படைகொண்ட மன்னவர்
அண்டின பேருக்கோ ராலவி ருட்சம்போல்
கண்டியர் தேவர்படை கண்டால் விடுவாரோ?
தீரங்கொண் டாயரென்று சொல்வார்உ றந்தையில் (80)
வீரங்கொண் டாயர்கள் வென்றுவ ருவார்கள்
சொல்லாளர் என்றுது லங்கும்உ றந்தையில்
வல்லாளர் தேவர்படை வெல்வார் நிசங்காணும்
சுண்டுவில் கொண்டுபோரில் துரத்தி வருவார்கள்
கண்டியர் தேவசாரம் கொண்டா ரிருபேரும் (85)
ஆலிங்க நெஞ்சுஅ ருமைதெ ரிந்தவர்
காலிங்க ராயர்போரில் கலங்காத வீரியர்
மாசுத்த வீரர்வ ளரும்உ றந்தையில்
பூபோதித்திச் சேதிராயர் ஆபத்துக் காத்தவர்
மானைக் கண்டுநடக்கும் மரியாதை ராமன்போல் (90)
சேனைக்கொண் டாயர்கள் செயங்கொண்ட மன்னவர்
சொல்லிக்கொண் டாடுவோம் சோலை வளநாட்டில்
மல்லிக்கொண் டாயர்கள் வில்லில்வி சையர்கள்
சிறந்த மணவாளர் செல்வார் உறந்தையில்
உறந்தை ராயரவர் உச்சித வீரர்கள்
வீராதி வீரர்வி சையர்இ வர்களாம்
போருக்கு வீரர் துரை சேதிரா யர்களாம்
சேதிரா யர்வளத்தா தேவர்வாண் டையாரும்
சேகர மாகச்சி றந்துவ ருவார்கள்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஆட்சிச் சிறப்பு

சொல்லுக்குத் தருமராம் மல்லுக்கு வீமராம்
வில்லுக் கருச்சுனர் வீர மணவாளர்
ஆர்த்தி தெரிந்தவர் அருளில் மிகுந்தவர்
கீர்த்தி யுரைக்குந்தமிழ் கேட்குஞ் செவிகொண்டு
உரையா லறிந்தவர் உறந்தை வளநாட்டில்
அரவும் எலியும்அ டைத்தா ரொருகூட்டில்
தளிகையும் கோவ்லும் தண்ணீர்த் தடாகமும்
புலியும் பசுவும்தண்ணீர் புசிக்கும் வளநாடு
தானம் பரிக்குலம் தழைக்கும்உ றந்தையில்
மானும் புலியும் வளர்த்தா ரொருகூட்டில்
வேதிய ருக்குக்கலி யாணஞ்சி றந்ததும்
சாதிக்குள் ளேபரிசம் வாரிச்சொ ரிந்ததும்
தானதரு மங்களுடன் நீதிதெ ரிந்தவர்
ஞானம் தெரிந்துஅபி மானம்து றந்தவர்
சலிக்காத் தமிழ்க்குச்செம்பொன் அளித்திட வல்லவர்
கெலிக்கும் சிங்கமுறந்தை புலிக்கொடி உள்ளவர்
வரராச கோபாலர் மனமகிழ்ந்த நன்னாடு
திருராசர் காவல்கொளும் தென்னுறந்தை நன்னாடு
ஆனைவ ளையுங்காணி அரசு பதினாறு
சேகர் மாகஒரு தாவளத்தில் வந்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வீரக்குடி நாட்டுடன் ஒரு போர்

தாவளத்தில் வந்துகுரும் பீசரைப்ப ணிந்ததும்
வாளெடுக்கும் முன்னேதிரு நீறெடுத்த ணிந்ததும்
நீறணிந்த கையால்சமு தாடெடுத்துச் சேர்ந்ததும்
வீரமண வாளர்பதி னாறணியில் வந்ததும்
ஈட்டிகட் டாரிஇ டிகொம்பு சக்கரம்
பூட்டிய வில்லுமெங்கள் நாட்டுத் துரைகளும்
துப்பாக்கி சஞ்சாலி தொடர்ந்த சரம்போகி
கைக்கஞ்சு வாணங்கள் கவண்டி வளைதடி
ஓடிய காலுக்கொரு ஒண்டி மிதியடி
நாடிய சூரர்களைத் தேடிவந் தார்களாம்
வாடிக்குந் தெற்கேவ ளர்ந்தவீ ரக்குடி
வீரக் குடிநாடு சோக் கலியாட்டம்
சூரர் தனைவெட்டிச் செயங்கொண்டு வந்தார்கள்
வெட்டாத பேரைவெட்டி விருதும் பறித்தார்கள்
துட்டர் குணமடக்கிச் செயங்கொண்டு வந்தார்கள்
பெரிய நகராவுடன் பேரிகை பூரிகை
சரிகைமுண் டாசியுடன் தான்பறித்து வந்தார்கள்
நித்தச் சங்கீர்தம் நிஅரிந்த வளநாடு
வெற்றிச் சங்குபிடிக்கும் வீர மணவாளர்
வலியன் இடமாகத் தளிகை வலமாகப்
பெரியவள் பாதந்தேடித் துதிசெய்ய வந்தார்கள்
சிங்காரத் தோப்பிலும் தேரோடும் வீதியும்
வந்தார்கள் தென்னுறந்தை ரெங்கர் சபைபோல

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/பெரியநாயகி சூடிய மலர்கள்

நந்த வனமுஞ்சோலை நல்ல திருமதிள்
செந்தா மரைப் பொய்கை சிறந்தத ளிகையும்
மந்தாரை முல்லைஇரு வாட்சிம லர்களும்
செண்பகம் வேர்க்கொழுந்து செவ்வந்தி வில்வமும்
கொடிமல்லி கொன்றைதும்பை மலர்மல்லி கைகளும்
கொடிமல்லி புன்னைபிச்சி கொய்யாம லர்களும்
அடுக்கரளி செவ்வரளி ஆனதொரு மந்தாரை
குலத்தா லொருமலரைத் தரித்தாள் பெரியவள்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஏழு கன்னியர் வருகை

உறந்தை வளநாட்டில் குரும்பீசர் தோட்டத்தில்
வருந்தூது வண்டுகள் அரும்பும லர்ந்திட
நல்ல மலர்களுண்டு தென்னுறந்தை நன்னாட்டில்
உன்னத மாகவேழு கன்னியர்கள் வந்ததும்
மலரெல்லாம் கொய்துதிரு முடிமே லணிந்ததும் (155)
நலியாமல் கன்னியர்கள் தளிகைநீ ராடியே
ஆடிப் புடைவைதுகி லாடை யணிந்ததும்
ஓடிநூ லேணிவழி யாகநடந்ததும்
சப்தகன் னிகள்வந்து நித்தமலர் கொய்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/பறவைகள் பாடுதல்

பித்தர் குரும்பரங்கே லட்சத்தோப்பில் வந்ததும்
கரும்பு கதலிதென்னை கமுக இளந்தோப்பில்
வருந்தாது வண்டுகள் மலர்கள் மலர்ந்திட
வருந்தூது கோவில்எங்கள் உறந்தை வளநாட்டில்
கோகிலமும் அன்னமும் குயிலும்பு றாக்களும்
வாகனத்து மேலேமுத்து மாரிவரப் பாடுது
தோரணசிங் காதனங்கள் சோதிக்கப் பாடுது
மாதவனைப் போலுறந்தை வாழ்ந்திருக்கப் பாடுது
என்னென்ன சொல்லுது ஏலங் கருங்குயில்
வர்ணங்கள் சிந்துவகை வகையாகப் பாடுது
விர்த்தங் கலித்துறை வெண்பாக்கள் சொல்லுது
சிந்துகள் கேட்கவென்று வந்தார்உ றந்தையில்
இந்தா வரங்களென்று தந்தாள்பெ ரியவள்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/கனிச்சாறு பெருக்கெடுத்து ஓடல்

சீரிய தென்றல்வந்து சோலையில் கோதியே
ஏறிய வானரங்கள் பீறிக் கனியெல்லாம்
சோலை மிகுந்துரசம் சாலைநீ றோடியே
வாரி சொரிந்துநெட்டை ஏரிபெருகவும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தாராவின் முறையீடு

ஆராய்ந்து கொள்வது, நாரைஅ டைவதும்
தாராவின் முட்டைரசம் நீர்மேல் மிதப்பதும்
தாரா முறையிடுவ தேதென்றார் நாட்டார்கள்
வாரி யெழுந்திருந்து ஏரியில் வந்தார்கள்
தாராவின் முட்டையிலே சேதங்கள் போகாமல்
காராள ரையழைத்துக் கலிங்குதி றவென்றார்
கலிங்குதி றக்கவென்றால் குரும்பர் வரவேணும்
காணிக் குரும்பருந்தே ராணிக்கக் காரராம்
வந்துக தவும்ம தகும்தி றந்தார்கள்
சென்றோடிக் கெங்கைசி றந்தத ளிகையும்
குண்டுக ளந்தண்கு ளங்கள்குட் டையெல்லாம்
கண்டு விட்டராசன் கடலோடிப் பாய்ந்ததும்
கடலில் இருந்தசிப்பி எதிராக வந்ததும்
நிலைபார்ப்போம் என்றுவீர மணவாளர் சொன்னதும்
வலைகாரர் என்றுசொல்லி வாளைகு திப்பதும்
சிலைராமர் வாராரென்று சேல்கள்ப ரந்ததும்
பதறாதே யென்றுவீர மணவாளர் சொன்னதும்
சேலும்க யலும்சி றந்தவ ளநாடு

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/முத்து பிறக்கும் இடங்கள்

மால்தந்த யானைவ ளரும்உ றந்தையில்
சிப்பி கதலிசி றந்தக முகுகள்
முத்துநல் லாயியிடம் விஸ்தார மானதும்
சிறந்தது நல்லமுத்துப் பிறந்தவி தங்களும்
பிறந்தது முத்துஎங்கள் உறந்தை வளநாட்டில்
சிறந்த வயல்கள்கு ளங்கள்குட் டையெல்லாம்
நிரந்தர மாகமுத்துப் பிறந்துவி ளைந்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/மன்னன் வருகை

துரந்தரனைத் தஞ்சைவளர் சோழ முசுகுந்தன்
புரந்தரனைக் காண்பதற்கு உறந்தையில் கந்ததும்
வந்தார்கள் தென்னுறந்தை வாழுமே ழுநாட்டார்
உம்பஅ அம்பலம் ஊர்மானி யங்களும்
வந்தகா ரியமாகச் சந்தோஷ மாய்ச்சென்று
தென்புறத் திலேலிருந்து சோறுண்டு வாருங்கள்
நீதிமந் திரியுடன் யூகமந் திரியும்
யூகிமந் திரியுடன் வாசல்மந் திரியும்

வாசல்மந் திரிநாட்டுச் சேதிஉ ரைத்ததும்
வீர மணவாளரைச் சோழ ரழைத்ததும்
வா ருமிரும் என்றூப சாரங்கள் சொன்னதும்
அந்திக் கொலுவிலும் ஆசார வாசலும்
சந்திப் பூக்கொண்டு தயிரிப்பூப் பெற்றார்கள்

பயிர்வேதி மெய்யுடனே கதிர்சாவி பேர்களும்
மன்னன் மலையரசன் வாழுமே ழுநாட்டார்
செந்நெல்லும் முத்தும்சி றந்துவி ளைந்ததும்
கார்நெல்லும் நெல்லும் கலந்துவி ளைந்ததும்
நெல்லுட னேபுஞ்சை நிறைந்துவி ளைந்ததும்
விளைந்தது செந்நெல்முத்து அளந்துத ருகின்றோம்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வீரமணவாளர் பெற்ற சிறப்புகள்

வளந்தேறி வாழுமெங்கள் உறந்தை வளநாட்டில்
அறிவில் மிகுந்தவர் வீர மணவாளர்
பெறுவார் பெறுவாரென்று சிவந்திரங்க ளுரைத்ததும்
உம்பளம் அம்பலம் ஊர்மானியங்களும்
கோவில்மா னியமும்கு ருக்கள்மா னியமும்
காளிமானி யமும்முத்து மாரிமா னியமும்
பிள்ளையார் மானியம்பெ ருமாள்மா னியமும்
அய்ய னார்மானியம் அரசுகு றுணியும்
கோவில்கு றுணியும்கு ருக்கள்கு றுணியும்
பிள்ளை யார்களுக்கு முன்னேகு றுணியும்
பெருமாள் குறுணியுடன் ருசுவாகச் சொல்கிறேன்
மூலைக் கதிருண்டு முடுக்குக் கதிருண்டு
வெள்ளைக் கதிருடனே பிள்ளை யரியுண்டு
கட்டுக் களங்கள் களவடி செவ்வடி
பொட்டிக் கதிரும்பண்ணைக் கட்டுக் கலமுண்டு
அட்ட வணைக்கணக்கைக் கிட்டே அழைத்ததும்
விட்டுவிடு கிறோமென்று கட்டளை விட்டதும்
ஆறில் ஒருவாரம் ஏழு குறுணியும்
பூரணி வாங்கிவந்தார் வீர மணவாளர்
சாலுவை சாலுவை சரிகைமுண் டாசியும்
போருவை துப்பட்டா பெரிய பீதாம்பரம்
நாலு வகையும்வெகு மானங்கள் செய்ததும்
வீரமண வாளரே ஊரேபோய் வாருங்கள்
நாடுசி றந்ததுடன் நல்லச பைகளும்
ஊரு சிறந்ததுடன் உயர்ந்தமா நியமும்
அரைக்காரச் செம்புருதி அட்டவளை அய்யரைக்
கூட்டுக் கொண்டு உறந்தை நாட்டார் வரச்சொன்னார்
அந்தக் கணமேநாலு தண்டக்கா ரோடியே
அந்தக் கணமேகூட்டம் அழைத்துவந் தார்களாம்
வந்தகா கிதவோலை வாசகம் செய்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/பெண்கள் முத்துக் கொழித்தல்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/திருவிழாக் கொண்டாடுதல்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/கோயில் பணியாளர்கள்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/முத்துமாரி உலா வரல்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வாணவேடிக்கை
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தேரோட்டம்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/மக்கள் நேர்த்திக் கடன்

தேர்நிலை கொண்டதும் சிறந்தமங் கையர்கள்
மாவிளக்கு ஏந்திவ ருந்திவ ருவார்கள்
நெய்விளக்கு ஏந்தியவர் நேர்ந்துகொள் வார்களாம்
கைவிளக் கேந்தியவர் காணிக்கை செய்வார்கள்
அங்கப் பிரதிஷ்டங்கள் எங்கும் வருவார்கள் (385)
இருப்புச் சலாகைஇ சைவாய் நிறுத்தொன்றார்
ஆரியத் தொம்பைகள் சாதக வித்தையும்
நேர்மே லிருந்துமுத்து மாரியம்மன் பார்த்ததும்
எள்ளுக்குள் எண்ணெய்போ லெங்குத் துலங்கவே

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தண்ணீர்ப் பந்தல்

தண்ணீர்ப் பந்தலிலே தாசிகே ளிக்கையும் (390)
கேளிக்கை களும்வாண வேடிக்கைகளுடன்
ஆணிக் கனகமுத்து காணிக்கை செய்ததும்
சீரும் பெருமைகளும் வாழ்வும்மி குந்திட
மாரியம் மனுந்திருக் கோவிலில் வந்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வாழ்த்து

திருக்காக் குரும்பருடன் தேவிபெரியவள்
தழுக்கை விநாயகரும் சரஸ்வதியும் வாழியே!
இந்திரர் கோத்திரங்கள் எந்நாளும் வாழியே!
மலையாள் பரங்கிமுத்து மாரிமிக வாழியே!
சிலைராம ருந்தனுசு சீதைமிக வாழியே
மாதம் மும்மாரிம ழைகள் பொழிந்திட
வீரமண வாளர்கள் மேன்மேலும் வாழியே!
அளவிலாச் செம்பொன் அளகா புரிதனில்
துளசி மகாராசர் ஆல்போல் தழைத்திட
துலங்கும் புகழுறந்தை சுந்தரம் வாழியே!
இலங்குமார்க் கண்டர்போல் இலங்காவி வாழியே!
சிங்கார மாயர்கள் செட்டிபல வட்டரைகள்
எல்லாச்சி வாலயங்கள் எந்நாளும் வாழியே!
துன்னிய கீதம்து லங்கும்உ றந்தையில்
பண்ணும் தமிழும் பணிக்கலங்கள் வாழியே!

கண்ணந்தங்குடி அக்கினி வீரனார்



தஞ்சாவூர் கள்ளர் நாட்டில் ஒன்றான கண்ணந்தங்குடி பகுதியில் அமைந்த கோவில் அக்கினி வீரனார்

திருச்சிக்கு அருகில், திருப்பராய்த்துறையிலுள்ள கோயிலின் தல விருட்சம் பராய் மரம். அதனாலேயே அத்தலத்தை ‘திருப்பராய்த்துறை’ என்று அழைத்தனர். அத்தகைய அரிதான புராணங்கள் புகழும் தேவதாரு எனும் தெய்வீக மரத்தோடும், சிவனின் அம்சமான அக்கினி வீரனாரோடு கீழையூர் கண்ணந்தங்குடி எனும் இத்தலம் திகழ்கிறது.

நாற்பத்தெட்டாயிரம் முனிவர்களும் ஒரே நேரத்தில் பிரம்மனை குறித்து தவமியற்றினர். பிரம்மா திகைத்துப்போனார். ‘இத்தனை எண்ணிக்கையில் இவ்வளவு நீண்டகால தவமா’ என்று மிரண்டார். அவர்கள் முன்பு தோன்றி, ‘‘ஏன் இத்தனை பேர் தவமியற்றுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

‘‘உலகம் உய்யும் பொருட்டும், வேள்விகள் சிறக்கும் பொருட்டுமே செய்கிறோம். ஆனால், எங்களுக்குத் தேவை அமைதியான ஒரு தலம். மிருகங்களாலோ, மனிதர்களாலோ, இயற்கை சீற்றமான இடி, மின்னல்களாலோ எந்த பாதிப்பும் ஏற்படாத ஒரு தவச்சாலை வேண்டும்’’ என்றனர்.ஈசனின் பூரண சக்தி நிறைவாக உள்ள ஒரு தலத்தை பிரம்மன் கண்டார்.



அங்கு ஓங்கி வளர்ந்திருந்த பராய் மரங்களுக்குள் பரமன் அருவமாக கிடப்பதைப் பார்த்தார். தர்ப்பைப் புல்லை வளைத்து ஓர் இடம் நோக்கி வீச, அது தாருகாவனத்தில் சென்று வீழ்ந்தது. முனிவர்கள் மகிழ்ந்தனர். அவர்கள் மனமும் தியானத்தில் கவிழ்ந்தது. முனிவர்கள் பராய் தருக்களின் கீழ் பேரானந்தத்தை எய்தினர். அந்தப் புனித மரங்கள் இருந்த வனத்தை ‘தாருகாவனம்’ என்றழைத்தனர்.

அந்தப் புராணச் சுவடுகளின் சான்றாக இன்றும் இந்தப் பராய் மரத்தை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது, கீழையூர் கண்ணந்தங்குடி. இந்தக் கிராம மக்கள் இந்த மரம் அறுநூறு வருடங்களாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மரத்திற்கடியிலேதான் இந்த ஊரைக் காக்கும் அக்கினி வீரனார் அருட்கோலம் பூண்டருளுகிறார். அக்கினி வீரனாரின் உருவத்தையும், வந்த விதத்தையும் திகைப்பு அகலாமல் விவரிக்கின்றனர்.

‘‘நாங்க சிறு வயசா இருந்தபோதும் சரி, விவரம் தெரிஞ்சு வாலிபமா வளர்ந்தபோதும் சரி அக்கினி வீரனாரை நிறைய தடவை பார்த்திருக்கோம். திடீர்னு சாயங்கால நேரத்துல செம்மண் புழுதி கிளம்பும். இந்தத் தெருவுல சுத்திகிட்டேயிருக்கும். குதிரை வர சத்தம் கேட்கும். சட்டுனு வெள்ளைக் குதிரையில வீரனார் போவாரு. ஒரு சொடுக்கு நேரத்துல வாளை வீசிக்கிட்டு வீரனாட்டம் பாய்ஞ்சு மறஞ்சுடுவாரு.

முதல்ல நாங்க யாரோ போகறாங்கன்னு நினைச்சு பெரியவங்ககிட்ட சொன்னபோது ‘வீரனாருடா அது, ஜாக்கிரதை’ன்னாங்க. சாதாரணமா யார் கண்ணுலயும் படமாட்டாரு அவரு. ஏதோ உங்க புண்ணியம் உங்களுக்கு தெரியறாருன்னாங்க. எங்களுக்கு ஒரு கஷ்டம்னா முதல்ல நிக்கறவரே அக்கினி வீரனாருதான். அவரை கனவுல கண்டவங்க உடனே பொங்க வச்சு, ஆட்டை பலி கொடுத்து நேத்திக்கடன் செய்வாங்க. இப்பவும் இந்த ஊர்ல இருந்து போனவங்க பல பேரை அவங்க கனவிலே தோன்றி, சொல்லி, இங்க அழைச்சிக்கிட்டு வந்துருக்காரு இந்த அக்கினி வீரனாரு’’ என்று அந்த கிராமத்தைக் காக்கும் வீரனாரைப் பற்றி தொடர்ந்து சிலிர்ப்போடு பேசுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது குரல் நெகிழ்ந்து அருமையான ஒரு நாட்டுப்புறப் பாடலை பாடுகிறார்கள். அப்பாடல் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் நீள்கிறது; அவ்வூரின் புகழ் பாடுகிறது; அக்கினி வீரனாரின் வீரத்தைப் பேசுகிறது; அவரின் பக்தர்களாக விளங்கிய சமூகத்தவரின் பிரிவுகளை வகைப்படுத்துகிறது. அழகான அர்த்தங்களோடும், அவர்களுக்கென்று அமைந்த உன்னத நாகரிகம் அப்பாடலில் தொனிக் கிறது. வாழ்க்கையை சீரமைக்கும் ஒழுக்கத்தை எளிமையான வரிகள் விவரிக்கின்றன. கேட்கக் கேட்கக் களிப்பூறும் தேனிசை பாயும் நாட்டுப்புறப் பாடல் அது.

சட்டென்று, அந்த பராய் மரத்தைப் பார்க்கும்போது ஒற்றைக்காலை மடித்து தவம் புரியும் யோகி போன்றிருக்கிறது. யோகியின் மேனி முழுதும் புரளும் செஞ்சடைகள் போல மரத்தின் அடிப்பாகம் முறுக்கிப் பின்னியிருக்கிறது.

மரமருகே நிற்கும்போது, ஒரு ஞானியின் சந்நதியில் கரைந்து போகும் மனம்போல திகைப்புணர்வு விஞ்சி நிற்கிறது. மரத்தை அண்ணாந்து பார்க்க பத்து விரல்களும் யோக முத்திரையை காட்டிக் கொண்டிருப்பது போன்றிருக்கிறது. ஒரு நாகம் தன் குடையை கவிழ்த்தாற் போன்று கிளைகள் நாற்புறமும் விரிந்து வளைந்திருக்கின்றன. பராய் இலைகளின் வாசம் நாசியை நெருடும்போது உள்ளம் சிறகாகிறது.

வில்வத்திற்கு இணையான தெய்வீக சக்தி உடையதாகத் திகழ்கிறது. அதுதவிர ஈசனின் அருட்சாரல் வீசும் பராய் மரத்தின் கீழ் பேச்சியம்மன் மற்றும் இதர தேவதைகளை நடுக்கற்கள் விக்ரகங்களாகப் பாவித்து ஆராதிக்கின்றனர். அக்கினி வீரனாருக்கு பராய் மரத்தடியிலேயே கோயில் அமைத்திருக்கின்றனர். இந்த அக்கினி வீரனாரின் சிலையைப் போன்றே திருச்செந்தூர் சந்நதியருகே ஒரு சிலை காணப்படுவதை இவ்வூரார் மெய்சிலிர்க்கச் சொல்கிறார்கள்.

இந்த அக்கினி வீரனார், பாதை மாறிப்போன பலரை நல்வழிக்குத் திருப்பி அவர்களின் வாழ்வைக் காத்திருக்கிறார். பூஜை நேரங்களில் அந்தச் சிறிய கோயிலின் சூழலே மாறிவிடுகிறது. எல்லோரையும் ஒரு சக்தி ஆக்ரமித்திருப்பதை எளிதாக உணர முடிகிறது.

எத்தனையோ பெரியவர்கள், பல்வேறு அனுபவங்கள், பல நூறு பக்தர்கள் என்று இத்தலம் பற்றிய அற்புதங்கள் நீள்கிறது. நூற்றாண்டுகள் கடந்தாலும் அருட் கோலோச்சிக் கிடக்கும் கிராம தேவதைகள் மையம் கொள்ளும் அற்புதமான பூமி அது.தஞ்சாவூருக்கு அருகேயுள்ள ஒரத்தநாடு எனும் ஊரை அடைந்து அங்கிருந்து 4 கி.மீ. தூரம் பயணிக்க கீழையூர் கண்ணந்தங்குடியை அடையலாம்.

மொழிப்போரின் தளகர்த்தர் எல். கணேசன் கண்டபிள்ளை


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தவர் எல்.ஜி. என அழைக்கப்படும் எல். கணேசன் கண்டபிள்ளை.

கண்டபிள்ளை என்ற பட்டம் உடைய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தார். கண்டபிள்ளை என்பவர்கள் சோழர்கள் கல்வெட்டுகளில்  கையொப்பம் இடுபவர்களாக இருந்துள்ளனர்.

82 வயதை எட்டியுள்ள இவர், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முழுவீச்சில் பங்கேற்றவர். 1967, 1971, 1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தவிர, 1982- 86-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

1986-ல் சட்ட மேலவைத் தேர்தலில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டதாரி தொகுதியிலும், 2004 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியிலும் போட்டியிட்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.

வைகோவை அண்ணாவிடம் முதலில் அழைத்துச் சென்றவர் சட்டக் கல்லூரியின் தமிழ் இயக்கப் பேரவையின் தலைவர் எல். கணேசன் கண்டபிள்ளை

கடந்த 1989-ல் முதல்வரின் பேரவைச் செயலராக இருந்த அவர், தற்போது திமுக தேர்தல் பணிக் குழுத் தலைவராக உள்ளார். அந்தக் காலத் தேர்தல் குறித்து அவர் தெரிவித்ததாவது:

1967 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அண்ணா நம்பவில்லை. நம்பியிருந்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டிருப்பார். ஆனால், மாறாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால், கருணாநிதி மட்டும் திமுக ஆட்சியமைக்கும் என நம்பினார். அவருடைய நம்பிக்கைதான் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் என்னைப் போட்டியிடுமாறு ஊக்கப்படுத்தியவர் கருணாநிதிதான்.


அந்தத் தேர்தலில் ரூ. 10 லட்சம் நிதி திரட்ட வேண்டும் என திமுக முடிவு செய்தது. அப்போது, திமுக பொருளாளராக இருந்த கருணாநிதி ரூ. 11 லட்சம் நிதி திரட்டி அண்ணாவிடம் கொடுத்தார். அந்தச் சங்கடமான சூழ்நிலையிலும் கருணாநிதி காகிதப்பூ என்ற நாடகத்தை நடத்தி, ரூ. 10,000 நிதி திரட்டி எனக்கு வழங்கினார்.


1967 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஒரத்தநாட்டைச் சுற்றிலும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தோற்றது. நடுவில் நான் போட்டியிட்ட ஒரத்தநாட்டில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. இது, மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்ற பட்டியலில் மூன்றாவது இடமாகும்.

அந்தத் தேர்தலில் நான் போட்ட சட்டை, கட்டிய வேட்டியுடன்தான் களத்தில் இறங்கினேன்.

கருணாநிதி திரட்டித் தந்த ரூ. 10,000, கட்சி கொடுத்த ரூ. 4,500, அன்றாடம் வாக்காளர்களைச் சந்திக்கிற போது அவர்கள் தந்த சிறு, சிறு நிதியும்தான் நான் தேர்தலில் செலவிட்ட பணம். கொடியோ, பதாகையோ கொடுத்ததில்லை. ஒரு தோரணம்கூட வாங்கிக் கொடுத்ததில்லை. அனைத்தையும் அந்தந்த ஊர் கட்சிக்காரர்களே செய்தனர். எனக்கு வாக்கும் அளித்து, வாக்கு சேகரிக்க அழைத்து நிதியும் கொடுத்தனர்.

நான் இதுவரை 10 தேர்தல்களில் நின்றுள்ளேன். ஆனால், எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு நான் பணம் கொடுத்ததில்லை.

விதிவிலக்காக ஏழைத் தொண்டர்கள் தாங்கள் செய்யும் வேலையை விட்டுவிட்டு தேர்தல் பணியாற்றுகிறபோது, அவர்களின் உணவுக்காகப் பணம் கொடுப்பதுண்டு.

1967-ல் நான் போட்டியிட்ட போது தலித்துகளுக்கும், பரம ஏழைகளுக்கும் காங்கிரஸ்காரர்கள் பணம் கொடுத்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதே தவிர, வெற்றி கிடைக்கவில்லை.

வாக்குக்காக மக்கள் பணம் வாங்கினாலும், அவர்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை. தாங்கள் விரும்புகிற வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கின்றனர்.

பணம்தான் தேர்தலை நிர்ணயிக்கிறது என்றால், காமராஜரோ, அண்ணாவோ முதல்வராகி இருக்க முடியாது.

1967 தேர்தலில் வாக்குக்குப் பணம் வாங்கியவர்கள் தங்கள் விருப்பப்படியே வாக்களித்தனர். அவர்களிடம் பெற்ற பணத்தில் ஒரு பகுதியை எனக்கு நிதியாகவும் தந்தனர்.

அப்போது ஒரு வாக்குக்கு ரூ. 2 கொடுத்தனர். அது, அடுத்தடுத்த தேர்தல்களில் ரூ. 5, ரூ. 10 என ஆனது. இப்போது, ரூ. 100, ரூ.200, ரூ. 500 எனப் பல மடங்கு பெருகிவிட்டது. அப்போது, ஒரு பகுதியில் தலித்துகள் 400 பேர் இருக்கின்றனர் என்றால், அந்தச் சமுதாயத் தலைவரிடம் 400 ரூபாயை கட்சிக்காரர்கள் கொடுப்பர். அதை மக்களிடம் சமுதாயத் தலைவர் பிரித்துக் கொடுப்பார். இப்போது, வாக்காளர் கையில் நேரடியாகக் கொடுக்க ஒவ்வொரு கட்சியும் ஏற்பாடு செய்கிறது.

என்னைப் பொருத்தவரை, தேர்தலில் ஈடுபடுகிற கட்சிகள் அத்தியாவசியச் செலவுக்குச் செலவிட வேண்டிய தொகையே அதிகமாக இருக்கிறது. இந்த வேறுபாட்டை என்னால் உணர முடிகிறது. முன்பைவிட தற்போது தேர்தல் செலவு அதிகமாகிவிட்டது.

தோரணம் கட்டுவதற்கான கூலி அப்போது ரூ. 5, 10 என இருந்து, இப்போது ரூ. 500 ஆகிவிட்டது. ஒரு தொண்டருக்கு அப்போது ரூ. 10 கொடுத்தால், அப்போது அது பெரிய தொகை. இப்போது, ரூ. 100 கொடுத்தால்கூட போதுமானதாக இல்லை.

சுவர் விளம்பரம், கொடி போன்ற வெளிப்படையான செலவினத்தைத் தடுக்கிறது. இதனால், இப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதா எனச் சந்தேகமே வருகிறது. ஆனால், தேர்தலை நடத்துகிற மாநில அரசு நிர்வாக இயந்திரம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இயங்குவதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும் என்றார் அவர்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

காசி சுவாமிகள் என்ற நிஜானந்த சுவாமிகள்






சேந்தமங்கலத்தில் நிஜானந்த சரஸ்வதி’ என்னும் துறவியார் இருந்தார். அவர் காசியில் வாழ்ந்துகொண் டிருந்தவர். பூரீமத் சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் பூப் பிரதட்சிணம் செய்து வந்த போது காசிக்கும் சென்றார்கள். அப்போது அவரைத் தரிசித்து உபதேசம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நிஜானந்தருக்குக் கிடைத்தது.

தம் குருநாதர் சஞ்சரித்துக்கொண்டிருந்த சேந்த மங்கலத்திற்கே அவரும் வந்துவிட்டார். அவரை எல்லோரும் காசி சுவாமிகள் என்றே அழைப்பார்கள்: அம்பிகையை உபாசனை செய்து சுவாமிகளின் திருவருளைப் பெற்றவர்.


சிவ விஷ்ணு, பிரம்ம சொருபியாகிய தத்தாத்ரேயர் அவதுரத பரம்பரைக்கே ஆதி குரு. தத்தாத்ரேயருக்கு - இவருடைய குருநாதர் சேந்தமங்கலத்தில் தாம் தங்கி யிருந்த சிறு குன்றில் கோவில் எடுத்தார். அதுமுதல் தான் அந்தக் குன்றுக்கு தத்தகிரி என்று பெயர் வந்தது.


அந்தத் தத்தாத்ரேயர் கோவில் திருப்பணிக்குக் காசி சுவாமிகள் பல இடங்களுக்கும் சென்று உபந்நியாசம் செய்து பொருள் தொகுத்துக் கொடுத்தார். பாஷ்யங்கள் எல்லாம் படித்தவர், வடமொழியிலே மட்டுமின்றித் தமிழிலும் சிறந்த பயிற்சி உள்ளவர் அருமையாகச் செய்யுள் இயற்றுபவர்; அவதூத வெண்பா மாலை: என்னும் பிரபந்தம் ஒன்றை அவரே தம் குருநாதரைப் பற்றி இயற்றியுள்ளார்.


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், என்னுடன் காசி சுவாமிகள் என்ற நிஜானந்த பிரம்மேந்தி சரஸ்வதி சுவாமி அளவளாவி உரையாடிக் கொண்டிருந்தார். அவர் பிறப்பால் கள்ளர் என்றும் , வடமொழியில் புலமை பெற்றவர், உயர்ந்த பண்பாளர்  என்றும் கூறிகிறார்.

மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் காசி சுவாமிகள் பற்றி கூறுவது : 

நான் தமிழ்நூல்கள் பலவற்றைக் கற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் பாடமாக இருந்த சில கம்பராமாயணச் செய்யுட்களையும் பிறவற் றையும் கூர்ந்து படித்திருந்தேன். அவற்றைப் பற்றிப் பேசுவேன். தமிழார்வம் மிகுதியாக இருந்தது. நான் அப்போது வெண்பா முதலிய செய்யுட்களை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தேன். என்னிடம் காசி சுவாமிகள் மிக்க அன்பு கொண்டிருந்தார். அவருக்கு ஆசிரியப் பெருமானே நன்ருகத் தெரியும். தம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பிள்ளை சிதம்பரம் சென்று ஆசிரியரிடம் பாடம் கேட்டு முன்னுக்கு வந்த செய்தியைச் சொன்னர். நீங்களும் அவரிடம் சென்ருல் அவர்கள் உங்களை அன்புடன் ஏற்றுக் கொள்வார்கள். உங்களுடைய தமிழ் அறிவும் பெருகும்' என்று என்னிடம் சொன்னர். அவர் சொன்ன கருத்து என் உள்ளத்தில் ஊன்றி முளைத்து வளர்ந்தது. முருகப்பெருமான் திருவருள் இருந்தால் ஆசிரியப் பெருமானிடம் செல்லலாம் என்ற அவா எனக்கு உண்டாயிற்று.

சேந்தமங்கலம் மிட்டாதார் ஐராவத உடையார் என்பால் மிகவும் அன்பு உடையவர். அவர் பெரும்பாலும் என்னுடன் இருந்து என்னுடைய நன்மையைக் குறித்தே பேசுவார். நான் நன்முகச் சொற்பொழிவு ஆற்றுவதையும், செய்யுள் இயற்றுவதையும் கண்டு மிகவும் வியப்பு அடைவார். நான் மேலும் பல தமிழ் நூல்களைக் கற்றுப் பெரும் புலவராக வரவேண்டுமென்ற ஆசை அவருக்கு உண்டாயிற்று. என்பால் தாயன்பு உடையவராகிய அவர், காசி சுவாமிகள் நான் ஆசிரியர் அவர்களிடம் போகலாம் என்று சொன்னவுடன் அப்படியே செய்வதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்.


மதுரை - ராஜபாளையம் சாலையில் 40.கீ,மீ தூரத்தில் இருக்கும் டி,கல்லுப்பட்டியில் இறங்கி பேரையூரை அடைந்தால் அங்கு இவரது ஜீவசமாதி உள்ளது.

வியாழன், 19 செப்டம்பர், 2019

கண்ணக்காரர்கள் எனும் கள்ளர்கள் வணங்கும் கீழாத்தூர் நாடியம்மன்



"மகராஜன் கண்ணக்காரன் மதுக்கிளப்ப தாமுசங்க” என்ற கும்மி பாடல் கண்ணக்காரர்கள் எனும் கள்ளர்கள் பெருமையை உணர்த்தும்.




















நாடியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. அந்தக் காலத்தில் ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய் அன்று காப்புக்கட்டுதல் நடைபெறும். அடுத்த செவ்வாய் பாலி எடுப்பு விழா நடைபெறும் அதற்கு அடுத்து வரும் திங்கள் கிழமை காலையில் பத்து மணிக்கு மழையூரிலிருந்து சின்னக்கருப்பர், பெரியகருப்பர், மின்னோடியப்பர், அரசமகன், சன்னாசி மற்றும் ஐயனார் குதிரை போன்ற சாமிகளின் உருவாரங்கள் செய்து எடுத்து வருவார்கள். இந்த உருவாரங்களை செய்ய காப்புக் கட்டியவுடன் பிடிமண் கொடுத்து செய்யச்சொல்லி விடுவார்கள்.

இதில் ஐயனாரும் குதிரையும் திங்கள் அன்றே நாடியம்மன் கோவில் கீழ்புறம் உள்ள ஐயனார் கோவிலில் வைத்து இரவு சாமி கும்பிடுவார்கள். பாக்கி உள்ள சாமி உருவாரங்கள் கோவிலின் கீழ்புறம் காட்டுக்குள் இருக்கும். இவை செவ்வாய் இரவு பத்து மணியைப் போல் எடுத்து வந்து கோவிலில் வைக்கப்படும். இந்த உருவாரங்களுக்கு கண் திறப்பதற்கு அந்த சிலை செய்த வேளாரே வருவார். அவருக்குத் தங்கத்தால் ஊசி, கோழி, பூஜைக்கான பொருட்கள் கொடுக்க வேண்டும். தங்க ஊசியால் கண்களில் கீறி சாமிக்கு உயிர் கொடுப்பார். பிறகு பூஜை முடித்து கோழி, பொருட்கள், ஊசி இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்வார். தங்க ஊசி செய்வது சிரமமென்றால் வெத்திலை காம்பு கொண்டும் சாமிக்கு கண் திறப்பார்கள். இவ்வாறு செவ்வாய் இரவு சாமி கும்பிட்டு மறுநாள் புதன் மது எடுப்பு உற்சவம் நடைபெறும்.

பூ எடுத்தல் விழாவோ மண்டகப்படி விழாக்களோ அந்த காலத்தில் இல்லை. சரி, இந்த பூ எடுப்பு விழாவும் மற்ற விழாக்களும் எப்படி வந்தது என்று பார்ப்போம்....

பூ எடுத்தல் பல வருடங்களுக்கு முன்பு கோவிலின் எதிரே உள்ள சாலையில் ரெத்தினம்பிள்ளை என்பவர் பேருந்து டிரைவராக வேலைபார்த்தார். ஒரு நாள் பேருந்தில் ஏதோ கோளாறுகாரணமாக விபத்து ஏற்பட நேரிட்டது. அப்பொழுது ‘ அம்மா நாடியம்மா நீ தான் காப்பத்தணும்” .. என வேண்டினார். அந்த நேரத்தில் பேருந்து ஒரு மரத்தின் ஒரமாக லேசாக மோதி நின்றுவிட்டது. விபத்திலிருந்து நாடியம்பாள் காப்பாற்றியதாக நினைத்து அந்த டிரைவர் வடகாட்டிலிருந்து பூ எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்தார். பின் மூன்று வருடம் கழித்து கோவில்பட்டியிலிருந்து பூ எடுத்து வருடா வருடம் விழா செய்தார். அதன் பிறகு தான் கீழாத்தூர், கட்ராம்பட்டி, மேலாத்தூர், சிக்கப்பட்டி, ஊத்தப்பட்டி, கல்லம்பட்டி, சமத்துவபுரம் என மற்ற கிராமத்தினரும் பூ எடுப்பு விழாவை உற்சாகமாகக் கொண்டாட ஆரம்பித்தனர். இவர் முதன்முதலில் வடகாட்டிலிருந்து பூ எடுத்து வந்து விழா செய்ததால், அப்பகுதிமக்களும் அவரது தொடர்ச்சியாக அங்கிருந்து பூ எடுத்து வருகின்றனர்.

இந்த பூ எடுப்பு விழாவின்போது ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளில் (ரதம்) பல வகையான பூக்களை எடுத்து வருவார்கள். இப்படி எடுத்துவரும்போது கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற ஆட்டம் பாட்டத்தோடு கோவிலுக்கு வந்து சேர்வார்கள். பிறகு கொண்டுவரப்பட்ட பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக்குவார்கள்.


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்