புதன், 26 டிசம்பர், 2018

மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர் - MP/MLA


தேனி மாவட்டத்தில் கூடலூர் மிக உணர்வு மிக்க ஊர், சுமார் 70 சதவீதம் கள்ளர் குடியினர் வசிக்கும் பூமி. இங்கு கள்ளர் குடியில் பிறந்தவர் மொழிப்போரின் நாயகன், அண்ணாவின் போர்வாள் மாவீரர் ஐயா மா. ராஜாங்கம் தேவர். முல்லை பெரியாறு அணை புகழ் அண்ணல் பேயத்தேவரின் பேரனும் ஆவார். (பேயத்தேவர் பேத்தி வழி பேரன் ஆவார்).


25-2-65 ல் தமிழ் நாடெங்கும் உள்ள மாணவர்கள் இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து கண்டண ஊர்வலம் நடத்தத் தொடங்கினர்கள். மதுரையிலும் அந்த ஊர்வல ஏற்பாடு இருந்தது, ஊர்வலம் வடக்குமாசி வீதிக்குள் வந்து கொண்டிருந்தபோது வழியில் இருந்த காங்கிரஸ் காரியாலயத்திற்குள்ளிருந்து சிலர் அரிவாள்களுடனும், கத்திகளுடனும் வெளிக்கிளம்பி மாணவர்களைத் தாக்கியும் வெட்டியும் கல்லெறிந்தும் அராஜகம் விளைவித்தார்கள். மாணவர்கள் காங்கிரஸ் ரவுடிகளால் தாக்கப்பட்டதை திட்டமிட்ட வெறிச் செயல் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகளெல்லாம் எழுதிக்குவித்தன.

இவைகளுக்கு மட்டுமா தீ. தங்களுக்குத்தானே தீ வைத்துக் கொண்டு சிலர் மாண்டு போனார்கள். கோடம்பாக்கத்தில் இருவர், கோவை மாவட்டத்தில் ஒருவர். திருச்சி மாவட்டத்தில் ஒருவர்-அவர் ஒரு தலைமை ஆசிரியர்! இந்தத் தியாகத் தீக்குளிப்புக் கேட்டு பிரதமர் லால்பகதூர் அதிர்ச்சியடைந்து விட்டதாக ரேடியோச் செய்தி அறிவித்தது.

ஒரு வாரம் தமிழகத்து அரசியல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒடியது. ஆனல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள் எல்லாம் மொழிக் கிளர்ச்சியின் காரணமாக நிறுத்தப்பட்டன. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.

தென்வியட்நாம் போராட்டத்தைப்போல், அரங்கநாதன், சிவலிங்கம் தீக்குளித்து விட்டார்கள். இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களைச் சிலர் தீக்குளிக்க வைத்து விட்டார்கள்.

கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. மதுரை மாவட்டம், கூடலூரிலும் நடைபெற்றது.

1965 ல் நடந்த இந்தி போரட்டத்தில் அன்றைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த டி.என்.சேஷன் தனது சுயசரிதையில்,

மா. ராஜாங்கம் தேவர் தலைமையில் போராட்டம் நடந்த போது கலெக்டர் சேஷன் சுட உத்தரவு கொடுத்தார். ஐந்து பேர் இறந்தனர். பத்து பேர் கை,கால்களை இழந்தனர். சுட்டவுடன் கூட்டம் ஓடி விடும் என்று நினைத்த சேஷன் அதிர்ச்சி அடைந்தார். அதற்கு பிறகு தான் போராட்டகாரர்கள் வெறி கொண்டு திருப்பி தாக்கி இரண்டு போலிஸ்காரர்களை கொன்று விட்டனர்.

ஐயா மா. ராஜாங்கம் தேவர் M.L.A. அவர்கள்தான் 13-2-65 கூடலூர் கிளர்ச்சிக்குக்காரணம் என்று போலீசார் கருதினர்கள். காயம்பட்டவர்களுக்கு முதல் உதவி அளித்துக்கொண்டிருந்த ராஜாங்கம் திடீரென்று கைதுசெய்யப் பட்டார். அதோடு மட்டுமல்ல, அவரை ஒரு அறையில் போட்டு முதுகில் மின் இயக்கத்தைச் சாடவைத்து போலீசார் வேதனைப்படுத்தினார்கள். மேலும் பல கொடுமைகள் செய்தனர்.

இதனை பற்றி சிவகங்கை பகுதியின் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் இருந்த எஸ். எஸ். தென்னரசு தன்னுடைய "பெண்ணில்லாத ஊரிலே" என்ற தன் சுயசரிதையில் ஐயா மா. ராஜாங்கம் தேவர் பற்றி

ராஜாங்கம் வெறும் பிரஜைமட்டுமல்ல; ஒரு சட்டமன்ற உறுப்பினர். அவருக்கே இந்தக்கதி என்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்க வேண்டுமா.

ஏண்டா ராஜாங்கம், நூறு வருஷம் போராடினலும் இந்தியை ஒழிக்கமுடியுமா உங்களால் போலீஸ் அதிகாரியின் கேள்வி இது.

ஆயிரம் ஆண்டுகளானலும் இந்தியை எதிர்த்தே சாவோமே தவிர அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' இது ராஜாங்கத்தின் பதில். இப்படியும் வாக்குவாதம் நடந்திருக் கிறது.

இதுபோல் நூற்றுக்கணக்கானவரைபோலிசாரும் இராணு. வத்தினரும் தொல்லைப்படுத்தியிருக்கிருர்கள். ', தி.மு.க. தான் இந்தக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது" என்று சொன்னல் விட்டு விடுவதாகப் போலீசார் அவர்களையெல்லாம் மிரட்டியிருக்கிருர்கள். ராஜாங்கம் என்ன சிறு பிள்ளையா? அடிக்குப் பயந்து புதிதாக எதையாவது சொல்லு வதற்கு?

இராஜாங்கத்தோடு கைதான 200-க்கு மேற்பட்டவர்கள் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்கள். வலை பின்னியதுபோல் முதுகெல்லாம் பிரம்படி. சதை கயிறு கயிருகப் பிய்ந்திருந்தது. ராஜாங்கத்தின் அண்ணன் பாண்டித் தேவரும் கூடலூர் ஊராட்சித் தலைவர் கருப்பணத் தேவரும்கூடத் தாக்கப்பட்டிருந்தார்கள்.


ஊராட்சித்தலைவர் கைகளில் அணிந் திருந்த ஆறு மோதிரங்கள் போலீசாரால் கையாடப்பட்டன. விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று, காது கேட்பதற்காக வைத்துக்கொள்ளும் இயந்திரம் ஒன்று, விலை மதிப்பு ஆறு நூறு ரூபாய் - எல்லாம் உடைத்துத் தவிடாக்கப்பட்டுவிட்டன, எல்லோர்ையும் போலிசார் லாரியில் ஏற்றும்போது "போங்கடா வரும்போது கையோட முட்டைப்பூச்சி மருந்தும் வாங்கிவாங்க, இங்கே வந்ததும் உங்க பெண்சாதி புள்ளைகளைப் பார்த்ததும் நீங்க தற்கொலை பண்ணிக்கவேண்டியதுதான்' என்று போலீசார் கொக்கரித்து அனுப்பியிருக்கிருர்கள். அதை நினைத்து நினைத்து ஒவ்வொருவரும் கண்ணிர் வடித்தார்கள்.

ராஜாங்கத்தை தினசரி பார்ப்பேன். காலை "பெட் காபி' அவருக்கு என் அறையில்தான் தயாராகும். முரசொலி', 'நம்நாடு' இதழ்களும் இங்கிருந்து நான்தான் அனுப்புவேன். அவர் வெளிக் கொட்டடியில் இருந்தார், நான் உள்ளே இருந்தேன்.

கலைஞர் அவர்களுக்கு சிறையில் இடம் இல்லாததால், ராஜாங்கம் இருந்த இடத்தில் அடைக்க முடிவுசெய்து, சூப்ரெண்ட் உடனே ராஜாங்கம் இருந்த கொட்டடிக்குப் போய், என்ன மிஸ்டர் ராஜாங்கம் உங்களுக்கு தலைவலி என்றீர்களே. வேண்டு மானால் இன்று ஆஸ்பத்திரி வார்டில் படுத்துக்கொள்ளுங்கள்' என்று அன்பாகப் பேசுவதுபோல் அவரிடம் பேசி கோட்டைச் சுவர் ஒரமாக இருட்டில் ராஜாங்கத்தைச் ஒரு சந்து வழியாக பாதுகாப்புட்ன் ரகசியமாக சிறை மருத்துவ மனைக்கு அனுப்பிவிட்டு அந்த அறைக்கு கலைஞரை இன்னொரு முக்கிய வழியாக அழைத்துப் போனார்கள்.

காலை 7 மணிக்கு ராஜாங்கம் அவரது அறைக்கு வந்த பிறகுதான்-கலைஞர்அவர்கள் நேற்று இரவு மதுரை வந்தது, தனது அறையில்தங்கியது, அதற்காகத்தான் தன்னை மருத்துவ மனைக்கு வஞ்சகமாக அழைத்துப் போனது - எல்லாமே அவருக்குத் தெரிய வந்திருக்கின்றன.

புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். அவர்கள் நிறையப் பழங்கள் வாங்கி வந்தார். ராஜாங்கத்திற்குத் தைரியம் சொல்லுங்கள் என்றேன்".

- "ராஜாங்கத்திற்கு இது ஒரு நல்லகாலம். நல்லவர்களுக்கு வரும் துன்பம் அவர்களது வளர்ச்சிக்கு ஒரு முன்னறிவிப்பு. எனக்குக் கால் முறிந்த கட்டத்திற்குப் பிறகுதான் நல்லகாலம் தொடங்கியது. எப்போதுமே நியாயமும் உண்மையும் உள்ள வர்களுக்கு இப்படி ஒரு கட்டம் வந்தே தீரும். வந்தால்தான் அவர்களது வாழ்வு சிறக்கும்" என்ருர்,



மதுரை முத்து, இலட்சிய நடிகர் திரு. எஸ். எஸ். ஆர்., ராஜாங்கத்தை பலமுறை பார்த்து சென்றனர். இலட்சிய நடிகர் திரு. எஸ். எஸ். ஆர். அவர்களிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. நண்பர் ராஜாங்கத்திற்கு அடிக்கடி தைரியம் கூறும்படி எழுதியிருந்தார்.


ராஜாங்கத்திற்கு தைரியம் கூறவேண்டும்? அவர் கலங்கா உள்ளத்தினர். எந்தத் துயரத்தையும் சிரித்துக்கொண்டே கழித்துப் பழக்கப்பட்ட்வர். எப்போதுமே அவர் குமிழ்ச் சிரிப் புடன்தான் காணப்படுவார். தி. மு. க. ஒரு தற்காப்புமிகுந்த இயக்கம். விரும்புவோரை அது அணைக்கும்; ஒதுங்குவோரைக் கண்டால் ஒதுக்கும். ஆனல் யாராவது அதை அழித்துவிட நினைத்தால் அவர்களை அது ஒழிக்காமல் விடாது.” என்று ராஜாங்கம் அடிக்கடி சொல்லுவார். ஆளுல் ராஜாங்கத்தை நான் எப்போதாவதுதான் மருத்துவ மனைக்கு வரும்போது சந்திப்பேன்.


MLA  வாக இருந்த இவர், பிறகு திண்டுக்கல் 1971-1973 MP...யாக இருக்கும் போது தான் இறந்தார். அப்போது அந்த இடை தேர்தலில் தான் மாயத்தேவர் (கள்ளர்) போட்டியிட்டு வென்று அதிமுக...விற்கு இரட்டை இலை சின்னம் வாங்கி கொடுத்தார். DMK மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.




இதில் இடது புறம் ராஜாங்கம் சமாதி. வலது புறம் அவரது அம்மா அங்கம்மாள் சமாதி (அங்கம்மா பேயத்தேவர் பேத்தி ஆவார்)




அங்கம்மா பேயத்தேவர் பேத்தி ஆவார். இது ராஜாங்கம் அம்மா கல்லறை கல்வெட்டு. பேயத்தேவர் மகன் வள்ளநாட்டுதேவர். வள்ளநாட்டுதேவர் மகள் அங்கம்மாள். அங்கம்மாள் என்பவரை மாயாண்டிதேவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். மாயாண்டி தேவர், அங்கம்மாள் மகன் தான் மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர்.









மாவீரர் மா. ராஜாங்கம் தேவர் நினைவாக சிலை மற்றும் இராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் பள்ளி அமைத்தார்கள். வைகோ இந்த ஊருக்கு வந்தால் இவரது கல்லறை சென்று வணக்கி விட்டு தான் செல்வார்.



ராஜாங்கம் எம்பிக்கு வாரிசு இல்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாங்கம் மனைவி மிகவும் கஷ்டத்தில் இருந்தார். அதனால் அவர் தனது வீட்டை விற்று வாழ்க்கை நடத்தினார்.



1 ஏக்கர் நிலம் கொண்டது ராஜாங்கம் சமாதி நிலம். ராஜாங்கம் மனைவி கடைசி  கால காலத்தில் சமாதியில் 10 செண்ட் போக, மீதி 90 சென்ட் நிலத்தை தலித் கிருஸ்வர் சுடுகாட்டுகாக விற்றார், பின் சில மாதங்களில் இறந்து விட்டார்.



போராளிகள் இறந்த இடத்தில் அண்ணா பஸ் நிலையம், 


இரண்டு காவலர் இறந்த நினைவாக காவல்நிலையத்தில் அமைக்கப்பட்ட நினைவு சின்னம் இன்றும் உள்ளது.



ஆய்வு : திரு. செந்தில் - கூடலூர் தேனி

திங்கள், 24 டிசம்பர், 2018

அண்ணல் பேயத்தேவர்






கர்னல் பென்னிகுக் தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அதில் மறைந்திருக்கும் இரத்த சரித்தித்தை பற்றி யாருக்கும் தெரியாது.


முல்லை ஆறு என்பது தமிழ்நாட்டில் உற்பத்தியாவது. பெரியாறு என்பது கேரளா மாநிலத் தில் சிவகிரி மலையின் சிகரத்தில் உற்பத்தியாவது. இந்த இரண்டு ஆறுகளும் இணைக்கப்பட்டதால், இது முல்லைபெரியாறு என்றழைக்கப்பட்டது. தேனிமாவட்டத்தை மாவட்டச் சேர்ந்த மக்கள் விவசாயம் செய்வதற்கு நீர் இல்லாமல் போனதால் பலர் பசி, பட்டியால் இறந்து போனார்கள். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பஞ்சம் பிழைப்பதற்காக வேறு மாவட்டங்களுக்குச் சென்றார்கள். இந்த மக்களின் துயரத் தைப் போக்குவதற்கு 244 கீலோமீட்டர் தூரம் சமவெளியில் ஓடி வீணாகக் கடலி ல் கலக்கும் பெரியாறின் குறுக்கே இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிட்டார். இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இரவில் அரிக்கன் லைட்டுகளை வைத்துக் கொண்டு தொடர்ந்து அணையைக் கட்டினார். பெரியாறு ஒரு காட்டு ஆறு. ஒரு முரட்டு ஆறு. அதனால் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட அணை அவ்வப்போது உடைத்துக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது.

சேதுபதி மன்னர் களுக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் பெரியாறின் குறுக்கே அணைக் கட்டும் பணி 1867-இல் தொடங்கியது.






பேயத்தேவர் பேரன் ராஜேந்திர தேவருடன் பென்னிகுயிக் பேரம் டாம்குயிக்





முல்லை பெரியார் அணை கட்டும் போது அதன் உடனிருந்து அனை கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் மற்ற சமூகத்தவரை காட்டிலும் 4000 கும் மேற்பட்ட கள்ளர்கள் அணை கட்டும் பணியில் ஈடுப்பட்டனர். அந்த காலகட்டத்தில் வனவிலங்கு மற்றும் மலேரியா காய்ச்சலுக்கும் பலியானோர் எண்ணிக்கை கணக்கில்லா. இதில் அதிகம் உயிர் தியாகம் செய்தவர்கள் கள்ளர்களே, மேலும் கர்னல் பென்னி குக் துணையாகவும், பாதுகாப்பகவும் இருந்தவர்கள் கள்ளர்களே. அதில் முதன்மையனவர் அண்ணல் பேயத்தேவர்.






பேயத்தேவர் பிராமணர்களுக்கு வழங்கிய இடம்







உசிலம்பட்டி வட்டாரம் அம்மன் முத்தன்பட்டி என்ற கிராமத்தில் 178 ஆண்டுகளுக்கு முன் 1840 இல் மொக்கையதேவருக்கு ஒரே மகனாக பிறந்தார் அண்ணல் பேயத்தேவர். அவரது தாயார் இவரை பெற்று எடுத்து கொடுத்த பெருமையோடு உடல்நல குறைவால் இறைவனடி சேர்த்துவிடுகிறார். மனைவி இறந்த துயரத்துடன் கை குழந்தை பேயாதேவனாகிய தனது வாரிசை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அதுசமயம் அப்பகுதியில் இருந்த உற்றார் உறவினர் கை குழந்தையை வளர்க்க உதிவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்திக்கின்றனர். மொக்கயத்தேவர் சற்று வித்தியசமானவர். தனது மகன் மாற்றந் தாய் மடியில் வளர்வதை விரும்பவில்லை. ஊர் மக்களையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை.



கை குழந்தை பேயத்தேவனை தோளில் போட்டுக் கொண்டு ஊர் எல்லையை கடந்து கம்பம் பள்ளத்தாக்கு வந்தார். இப்பகுதி இவரை கவர்ந்துவிட, இப்பகுதில் தங்கினார். இவரது மகன் பேயத்தேவன் வளர்ந்து வாலிப வயதை அடைந்ததும், மகன் வெளியில் ஆங்காங்கே போய் வர குதிரை ஒன்று வாங்கி தருகிறார். இவர்கள் விவசாயம் செய்ய பூமி தேடுகிறார்கள். கூடலூர் பக்கத்தில் உள்ள குள்ளப்பகவுண்டன் பாட்டியை தேர்வு செய்து, காடுகளாக இருந்த இந்த பூமியை, தங்களது உழைப்பாலும், புத்தி சாதுர்யத்தாலும் வளமான விளை நிலங்களாக மாற்றினார்கள். பேயத்தேவர் ஒருமுறை மழை வேண்டி கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாளை வழிபட கூடலூர் வந்தவர், நிர்வாகம் மற்றும் போக்குவரத்துக்கு வசதிக்காக இவ்வூரையே தனது வசிப்பிடமாக மாற்றிக்கொண்டார்.




அந்திமகாலம் வரை தனது மனைவி பார்வதியம்மாள் மற்றும் வாரிசுகளுடன் இங்கு வாழ்ந்து வந்தார். இங்கு வந்தடைந்தபின் இப்பகுதிலும் விளைநிலங்களில் நல்ல மகசூல் கண்டார்.


முல்லை பெரியாரின் நீரை தேக்க பெரியார் அணையை கட்டிய பென்னிகுக்கோடு நட்பை ஏற்படுத்தி கொண்டார். அவருக்கு தனது சொந்த பொறுப்பில் காடு வெட்டி கருத்த கண்ண தேவர், ஆனை விரட்டி ஆங்கத் தேவர் என்று இரு நபர்களை அனுப்பி வைத்தார். இவர்கள் இருவரும் பென்னி குக்கின் மெய்க்காப்பாளர்களாக நாட்டு துப்பாக்கியுடன் வலம் வருவார்கள். பலமுறை பென்னிகுக்கை காட்டு விலங்குகளிடம் இருந்து காத்தனர். பென்னிகுக் குதிரையில் இவர்கள் துணையுடனே ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இவ்விபரம் பென்னிகுக் நாட்குறிப்பில் உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த போது, பேயத்தேவர் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். பேயத்தேவர் மேற்பார்வையில் குறுவனத்தில் உள்ள சரலை கல்லை சுண்ணாம்பாக்கி அரைத்து அதன் கலவையை விஞ்ச் மூலம் குமுளிக்கு அனுப்பி பின் படகு மூலம் அணைக்கு கொண்டு செல்வார்களாம்.





அவரது நட்பின் பலனாக இன்றும் கீழகூடலூரில் பெரியாற்றின் குறுக்கே பேயத்தேவர் கட்டிய அணையும் பேயத்தேவர் வாய்காலும் பெயர் சொல்லி விளங்கி வருகிறது.

இவ்வாறு உதவி புரிந்த பேயத்தேவர் பெயரில், ஒரு கால்வாய் அமைக்கவும், இக்கால்வாயில் எப்போதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் வகையில், கால்வாய் தலை மதகை மூடக்கூடாது, எனவும் பென்னிகுவிக் அறிவித்திருந்தார். இதன் காரணமாக இதுவரை, கூடலூர் காஞ்சிமரத்துறையில் உள்ள பேயத்தேவன் கால்வாயை இதுவரை மூடவில்லை. பேயத்தேவன் கால்வாயால் ஆயிரம் ஏக்கரில் இருபோக நெல் விவசாயம் நடந்து வருகிறது. இக்கால்வாயின் தலைமதகை எப்போதும் மூடக்கூடாது என்ற அரசு ஆணை உள்ளது. கர்னல் பென்னிகுக் பேயத்தேவனிடம் நன்றி மறவாமல் இருந்தார்.








கூடலுாரில் பழமையான கூடலழகிய பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது, மாலையில் கோட்டை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைக்கின்றனர். உற்சவர் சுந்தர்ராஜ் பெருமாள் தாயார் சம்மேதமாய் திருக்கோயிலில் இருந்து, அண்ணல் பேயத்தேவர் நினைவாக மண்டகப்படி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அண்ணல் பேயத்தேவரின் ஆண் வாரிசுகள் பால்குடம், தயிர்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். உற்சவருக்கு பால், தயிர் மூலம் அபிேஷகம் நடத்தப்படுகிறது.

கூடலூர் நகராட்சி இடம் பேயத்தேவர் தானமாக கொடுத்தது. (கூடலூர்) கூடல் அழகிய பெருமாள் கோயிலுக்கு 20 ஏக்கருக்கு மேல் தானம் வழங்கி உள்ளார். கூடலூர் அழகர் கோயிலில் இவரது குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை தரப்படுகிறது. அன்னசத்திரம் கட்டி உள்ளார். பிராமணர்களுக்கு பிரமோதயம் வழங்கி உள்ளார். தலித்களுக்கு நிலம் மற்றும் கோயில் இடம் வழங்கி உள்ளார்





மானூத்து கிராமத்தில் வாழ்ந்து வந்த எட்டுப்பட்டான் பங்காளிகள் மானூத்தில் கோயிலடியில் கூட்டம் போட்டு பேயத்தேவர் அவர்களிடம் ஓர் வேண்டுகோள் வைக்கின்றனர். குலதெய்வம் அருள்மிகு பெத்தனசுவாமி திருக்கோயில் கட்டி குடுக்க வேண்டுகின்றனர். இந்த வேண்டுகோளை ஏற்று தனது முழு செலவில் கட்டி கொடுத்தார். இந்த கோவில் 2014 ஆம் ஆண்டு வரை இருந்தது. தற்போது உள்ள கோவில் புதிதாக உருவாக்கப்பட்டது. கோவில் மூலஸ்தான நுழைவாயில் உள்ள கல்நிலை. தேக்குமர கதவு 126 ஆண்டுகளுக்கு முன் அண்ணல் பேயத்தேவர் நிறுவியது.




முல்லை பெரியாற்றின் முதல் வாய்க்காலே பேயத்தேவர் வாய்க்கால் தான். இது தான் பேயத்தேவர் வாய்க்கால் பிரியும் இடம்.


இதன் கரையோரத்தில் இசைஜானி இளையராஜா பங்களா உள்ளது.


பேயத்தேவரின் பேரன் கோட்டை சாமி தேவர். இவரது தோட்டத்தில் இளையராஜாவின் அம்மா மற்றும் குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்தார்கள். வாழ்வில் உயர்ந்த பின் இளையராஜா அம்மா அவர் வேலை பார்த்த தோட்டத்தை வாங்கி அதில் ஒரு பங்களா கட்டி அவர் இறந்த பின் அங்கு புதைக்குமாறு வேண்டினார்.பின் கோட்டைசாமி மகன் சரவணனிடம் அந்த இடத்தில் ஒரு ஏக்கர் விலைக்கு வாங்கி அங்கு வீடு கட்டி பின் அவரது அம்மா இறந்த பின் அவரை புதைத்து அங்கு கோயில் கட்டினார். இளையராஜா மனைவியும் இங்கு தான் புதைக்கப்பட்டார்.


தேனி மாவட்டத்தில் வசிக்கும் கள்ளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டால் எதிர் தரப்பை "இவரு பெரிய பேயத்தேவர் பேரன்" என்று இவரை உதாரணம் கூறும் அளவிற்கு இவரது புகழ் உள்ளது.


இவரது கொள்ளு பேத்தியை, திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.பிரகாசம் திருமணம் செய்து உள்ளார். பட்டாம்பூச்சி, தலைபிரசவம், எச்சில் இரவுகள், சாதனை போன்ற படங்கள் இயக்கியவர். கமலை முதன் முதலாக பட்டாம் பூச்சியில் ஹீரோவாக போட்டார். அதுவரை கமல் இரண்டாம் கட்ட நடிகராக தான் இருந்தார்.






பேயத்தேவர் வாரிசுகள் அழகர் கோயிலில் வழிபாடு





பேயத்தேவர் வீட்டில் உள்ள தூண்



புதன், 19 டிசம்பர், 2018

பொ. ஆ 1674–1710 இல் கள்ளர் நாடு ஆறாவயல் - மாவீரர் செம்பொன்மாரி ஆறாலதேவன்


ஒவ்வொரு ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கும். கள்ளர் நாடு ஆறாவயலுக்கும் இருக்கிறது.


ஆற்றங் கரையில் 
உள்ள கருப்பர்
ஆற்றங்கரைக் கருப்பர்!
ஆலமரத்தடியில்
உள்ள கருப்பர்
ஆலடிக் கருப்பர்!

ஆற்றங் கரையில்
ஆலமரத்தடியில்
உள்ள கருப்பர்
ஆறாலங் கருப்பர்!


தேனாற்றங் கரையில் ஆலடியில் இருந்த ஆறாலங் கருப்பர் கோயில் இப்போது மராபதிக் கண்மாய்க் கரையில் உள்ளது.

ஆறாலங் கருப்பரை குலதெய்வமாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர் செம்பொன்மாரி ஆறால தேவன்!

மன்னர் கிழவன் சேதுபதியின் தளபதிகளில் ஒருவரான ஆறாலதேவன் திருமயம், கீழாநிலை சோனார் கோட்டைகளின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.

ஆறால தேவனின் வீரமரணத்திற்குப் பிறகு உருவாக்கப் பட்டதே ஆறாவயல் கிராமம். ஆறாவயலை ஆராவயல் என்று எழுதுவது தவறு.

தமிழத்தில் மற்ற கிராமங்களில் கேள்விப்பட்டிராத வீட்டுப் பொங்கல் மரபு, நான் பிறந்த ஆறாவயலில், மேலவீட்டாரிடம் உண்டு. இது பதினோரு தலைமுறைகளாகத் தொடரரும் மரபு.

ஆறாவயலில் மேல வீடுகள் (மேற்கு)
கீழவீடுகள் (கிழக்கு)
வைரம் வீடுகள், மற்றும்
கோனார் வீடுகள் (பூசாரிகள்)
என நான்கு கரைகள் உண்டு.


பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தளபதி ஆறால தேவனுக்கு (குலதெய்வம் :ஆற்று +ஆலங்+கருப்பர்), மூன்று மனைவியர்.

முதல் மனைவி செல்லாயி வயிற்றுச் சந்ததிகளே மேல வீட்டார். மேல விடுகளில் இப்போது நாற்பத்தி ஏழு புள்ளிகள்.

மற்ற கிராமங்களில் தை முதல் நாள் காலையில் சூரியனுக்கே வீட்டுப் பொங்கல் வைக்கிறார்கள்.

ஆறாவயலில் மேலவீட்டார் தை முதல்நாள் முன்னிரவில் செல்லாயி அம்மனுக்கு வீட்டுப் பொங்கல் வைக்கிறார்கள்.

நாற்பத்தி ஆறு புள்ளிகளிடம் பெற்ற அரிசியை கோயில்வீட்டு வாசல் அடுப்பில் ஏற்றிய ஒரே பானையில் போட்டு நாற்பத்தி ஆறு புள்ளிகளிடம் பெற்ற வரியில் வாங்கிய ஏலம் சுக்கு வெல்லம் இதர பொருட்களைப் பயன்படுத்தி பொங்கல் வைத்து இறக்கி செல்லாயிக்குப் படைத்து அத்தனை குடும்பத்தினரும் அங்கேயே சாப்பிட்டு, பாத்திரத்திலும் வீட்டுக்கு கொண்டு செல்வர்.

செல்லாயி கோயில் திருநீறும் குங்குமமும் பிரசாதங்களும் மேல வீட்டாருக்கு மட்டுமே. மணமான பிறந்த மக்கள் ஆயுள் முழுக்க கணவருடன் வந்து செல்லாயி பிரசாதம் பெறஉரிமை உடையோர்.


மேல வீடுகளில் யார் வீட்டிலாவது மரணம் ஏற்பட்டால் அந்த உயிர் கைலாயமோ, வைகுண்டமோ இந்திரலோகமோ செல்வதில்லை. அந்த உயிர் அப்பத்தாள் செல்லாயியுடன் சங்கமிக்கிறது.

ஆறாவயல் மேல வீட்டார் வீட்டுப் பொங்கலை தங்கள் மூதாதையருக்கே வைக்கின்றனர். அதனால் தான் செல்லாயி கோயில் வீட்டில் சிலையேதும் வைக்கவில்லை. தீப சோதியே செல்லாயி.

நிலம் நீர் தீ வளி விசும்பிற்கு நன்றி பாராட்டும் பொருட்டும், கால்நடைகளுக்கு ஊட்டும் பொருட்டும் வேளாண் கருவிகளுக்கு படைக்கும் பொருட்டும் மற்ற கிராமங்களைப் போன்றே ஆறாவயலிலும் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம்.

கிழக்கு நோக்கிய செல்லாயி கோயில்வீட்டு வாசலில் தெற்கு வடக்காக சிறிய வாய்க்காலென, நாற்பதடி நீளத்தில் வெட்டிய அடுப்பில் வெண் பொங்கலுக்கு ஒன்று சர்க்கரைப் பொங்கலுக்கு ஒன்றென வீட்டுக்கு இரண்டு கோலப் பானைகளை ஏற்றுவர். பால் பொங்கியதும் சங்கின் ஓலி முழங்கும். பொங்கல் அமைந்ததும் இறக்கிமூன்றடுக்குத் திட்டிச் சதுக்கத்தில் வைப்பர்.

முனியய்யா கோயில்

மாவிலையால் தெளிக்கும் மந்திரநீர் மரக்காலோடும், திட்டிப் பாடலோடும், உரத்த குரலோன் முன்நடக்க, தீச் சட்டியோடும் மணியோசையோடும் வழியோர் ஒட்டி நடக்க பூண்பூட்டிய தலைக்கோல்களை உயர்த்தியபடி ஆண்கள் பெண்கள் சிறார்கள் பின்தொடர திட்டியுலாத் தொடங்கும்.


உயர்திரு. ஆறாவயல் பெரியய்யா ( Aaravayal Periyaiah )

சனி, 15 டிசம்பர், 2018

தமிழின் முதல் மருத்துவ அகராதியை தந்த மேதை "டி.வி.சாம்பசிவம் மண்ணையார்"




சித்தமருத்துவப் பேரறிஞரான டி.வி. சாம்பவசிவம் பிள்ளை என்று அழைக்கப்பட்ட தஞ்சாவூர் வில்வையா மண்ணையார் சாம்பசிவம் பிள்ளை அவர்கள் சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். தமிழிசைக்கு ஆப்ரகாம் பண்டிதர் வாய்த்ததுபோல, தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்துக்கு வாராது வந்த மாமணி டி.வி. சாம்பவசிவம் மண்ணையார்.

மருத்துவ அகராதி என்ற கலைக்களஞ்சியத்தைத் தனியொருவராக உருவாக்கிக் காட்டிய டி.வி. சாம்பசிவம் மண்ணையார் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறியக்கூடவில்லை. இன்று கிடைக்கப்பெறும் குறைந்த அளவு தகவல்களுக்கும் நாம் அவருடைய தம்பி மகனாகிய திரு அ. ராஜபூஷணம் மண்ணையார் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்.

இவர் கள்ளர் குடியில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடியை சேர்ந்த வில்வையா மண்ணையார், மனோன்மணி அம்மாளுக்கும் பெங்களூரில் 1880 இல் பிறந்தார். இவர் படித்ததும் பெங்களூரில். பள்ளி இறுதிக்கு மேல் இவர் படிப்புச் செல்லவில்லை. 1899இல் பெங்களூரில் ஏற்பட்ட பிளேக் கொள்ளை நோயால் வெளியேறித் தஞ்சைக்கே (அம்மாப்பேட்டை) இவருடைய குடும்பம் குடியேறியது. சென்னை நகரக் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்கமர்ந்த சாம்பசிவம் மன்னையார், 1907இல் துணை ஆய்வாளராக்கப்பட்டார். 1903இல் துரைக்கண்ணு அம்மையாரை மணம் செய்து கொண்டார்.

துரைக்கண்ணு அம்மையாரின் தாய்மாமன் சென்னை நகரப் போலீஸ் துணை ஆணையாளராக விளங்கிய முதல் இந்தியரும் தமிழ் அறிஞருமான ச. பவானந்தம் பிள்ளை ஆவார். (பாரதியின் 'இந்தியா' பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் விசாரணையையும் நடத்தியவர் இவர்.) 1914இல் முதல் மனைவி இறந்த பிறகு, 1916இல் அம்மணி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். அவரும் தலைப்பிரசவத்தில் அடுத்த ஆண்டே காலமானார். இதன் பிறகு டி.வி. சாம்பசிவம் மன்னையார் மணம் செய்துகொள்ளவில்லை. நேர் வாரிசும் இல்லை. இது மருத்துவ அகராதியின் பதிப்பு வரலாற்றையும் பாதித்தது. 1935இல் இவர் காவல் துறை ஆய்வாளராகப் பணி ஓய்வு பெற்றார்.

இவர் எழுதிய Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences: Based on Indian Medical Science என்னும் பெருநூல் சித்தமருத்துவத் துறைக்குக் கிடைத்த கலைக்களஞ்சியமாகும். ஐந்து தொகுதிகளையும், 6537 பக்கங்களையும் கொண்ட இந்நூலே தமிழ் மருத்துவத்தை உலகறிய செய்தது. 1916ஆம் ஆண்டு நூலின் முதல் தொகுதி வெளிவந்தது. அதன்பின் இரண்டாம் தொகுதி வெளிவந்தது. இவ்விரண்டு தொகுதிகள் வெளிவந்தவுடன் இவைகளின் காப்புரிமைக்காக பிரிட்டிசு கவுன்சிலும் செர்மன் தூதரகமும் போட்டியிட்டன. பெருந்தொகையைக் கொடுக்க முன்வந்தும் சாம்பசிவம் மன்னையார் அயல்நாட்டினருக்குக் காப்புரிமையைத் தரமறுத்துவிட்டார்.

4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச்சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு கருவி நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி. தமிழ் அகராதியியலில் பெருஞ் சாதனையாகத் திகழும் இந்த அகராதி உருவான (1912 - 1936) அதே காலகட்டத்தில் மற்றொரு சிறந்த அகராதியும் உருவாகியிருக்கிறது. பல்கலைக்கழக அகராதி ஒரு பெரும் கல்வி நிறுவனத்தால், பல லட்சம் பணச் செலவில், ச. வையாபுரிப் பிள்ளை என்ற பேரறிஞரின் தலைமையில், மு. ராகவையங்கார், ஜி.யு. போப், அனவரத விநாயகம் பிள்ளை, பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி முதலான பல அறிஞர்களின் பங்களிப்போடு தயாரானதென்றால், இந்த அகராதி ஒரு தனிமனிதரின் முயற்சியில், அவர் ஒருவரின் பொருட்செலவில் மட்டுமே உருவானது.

பெப்ரிசியஸ், வின்சுலோ போன்ற முன்னோடிகள் சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்குக் கைகாட்டியாக விளங்கினரென்றால் ஒரு சிறப்பகராதி என்ற முறையில் இவ்வகராதிக்கு முன்னோடியே இல்லை. தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கிய மருத்துவ அகராதியான A Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences என்ற அரிய சாதனையே இங்குச் சுட்டப்படுகிறது.

ஐந்து பெருந்தொகுதிகளும் 4,000 பக்கங்களும் 80,000 தலைச்சொற்களும் கொண்ட இவ்வகராதி இன்றைக்கும் மலைப்பை ஏற்படுத்துவது. தமிழ்ச் சித்த மருத்துவத் துறையில் இன்றும் நினைவில் கொள்ளப்படுவதோடு நடைமுறைப் பயனும் கொண்டதாக இந்த அகராதி இருக்கிறது. பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் சாம்பசிவம் மன்னையாரின் அகராதியிலிருந்து 'சா. அக.' என்ற குறுக்கத்தோடு எடுத்தாளப்பட்ட ஏராளமான தலைச்சொற்களுக்கான சொற்பிறப்பும், விளக்கமும், ஆங்கில இனச் சொல்லும் அமைந்திருப்பதைப் பரக்கக் காணலாம். சொல்லப் போனால் 'சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்கு அடுத்தபடியாகப் பயன்படுவது, சாம்பசிவம் மன்னையாரின் தமிழ் - ஆங்கில அகரமுதலியாகும். மருத்துவத் துறையில் அது நல்கும் அறிவு மதிப்பிடுந் தரமன்று' என்றே பாவாணரின் அகரமுதலி முன்னுரை சுட்டுகின்றது.

இருப்பினும் இந்த அகரமுதலி பற்றியும் இதனை உருவாக்கிய மேதையினையும் தமிழுலகம் போதுமான அளவு அறியவோ, போற்றவோ இல்லை. பெருமுயற்சியால் திருவினையாக்கிய டி.வி. சாம்பசிவம் மன்னையார் தம் வாழ்நாளில் இந்த அகராதியை அச்சு வடிவில் முழுமையாகக் காணவும் கொடுத்துவைக்கவில்லை. பண்டை நூல்களை மட்டுமே 'நுண்பல் சிதலைகள்' தாக்கி அழிக்கும் என்ற நினைப்புக்கு மாறாக, இருபதாம் நூற்றாண்டிலும் கரையான்களும் ஈசல்களும் சிலந்திகளும் தமிழோடு விளையாடி இருக்கின்றன. இந்தத் துன்பியல் நாடகத்தை மீட்டுமொரு முறை உரைக்க இக்கட்டுரை தலைப்படுகிறது.

சாம்பசிவம் மன்னையார் அகராதியின் சிறப்புகளை அத்துறை வல்லாரே முழுவதுமாக மதிப்பிட முடியும். உடற்கூறு, நோய்கள், மருந்துகள், மருத்துவ முறைகள், மூலிகைகள், தாவரங்கள், ரசாயனங்கள், ரசவாதம், கானியம், யோகம், மந்திரம், தந்திரம், தத்துவம் முதலான பலவற்றையும் உள்ளடக்கியதாக இந்த அகராதி விளங்குகிறது. இது அடிப்படையில் மருத்துவ அகராதியே ஆயினும் தமிழின் வளத்தையும் செழுமையினையும் காட்டக்கூடிய ஒரு கருவி நூலாகும். அகராதி அமைப்பைக் கொண்டதாயினும், பொருள் விளக்கங்கள் முதலானவை கலைக்களஞ்சியம் எனத்தக்க அளவில் விரிவாக அமைந்துள்ளன (எ-டு: 'அவுரி'; 'காடி'). 'ஔஷத வகுப்பு' போன்ற தலைச்சொற்களுக்கான விளக்கம் ஒரு தனிக் கட்டுரையாகவே சாம்பசிவம் மன்னையார் எழுதியுள்ளார். பல தலைச்சொற்களுக்கு விரிவான அடிக்குறிப்புகளும் எழுதியுள்ளார். மூலிகைகளுக்கான விளக்கங்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்று சொல்லுமளவுக்கு, Materia Medica போல் மிக விரிவாக அமைந்துள்ளன.

சாம்பசிவம் மன்னையார் வகை தொகையாக ஏராளமான தலைச்சொற்களை வழங்கியுள்ளார். 'அத்தி'க்கு 14 வகை, 'சங்கு'க்கு 23 வகை என ஏராளமான செய்திகள் உள்ளன. 'பேய்' என்ற முன்னொட்டோடு அமைந்துள்ள பதின் கணக்கான தலைச்சொற்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன. இதேபோல் தீவிர நாடி, துள்ளு நாடி, வன்னாடி, அபல நாடி, நெருங்கிய நாடி, நிறை நாடி, கதி நாடி, தடங்கு நாடி, இடை விடு நாடி, தளம்பு நாடி, ஒழுங்கு நாடி, சுடர் நாடி, மென்னாடி, நுன்னாடி, கம்பி நாடி, மரண நாடி, விகற்ப நாடி, சன்னி நாடி, பூத்த மங்கை நாடி, ஒடுங்கு நாடி, துடி நாடி, உதர நாடி, இரட்டை நாடி, குதிரையோட்ட நாடி, தெறிக்கு நாடி எனப் பட்டியலிட்டிருப்பது தமிழ் மருத்துவத்தின் நோயறி திறனை வியப்புறக் காட்டுகிறது. இதேபோல் தாவர வகைகளையும் மூலிகை வகைகளையும் இவ்வகராதி அடக்கியுள்ளது.

விரிவாக அமைந்த தமிழ் விளக்கங்களோடு ஆங்கிலத்திலும் விளக்கங்கள் உள்ளன. மிகச் செறிவானதும் துல்லியமானதுமான ஆங்கிலத்தில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 'திகைப்பூண்டு மிதித்தால்' ஏற்படும் மருட்சியைச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி 'bewilderment' என்னும். சாம்பசிவம் மன்னையார 'stupefaction' என்பார். சாம்பசிவனாரின் பொருட்சுட்டலே நுட்பமும் பொருத்தமும் உடையது. 'மயிர் நீப்பின் உயிர்வாழாக்' கவரிமான் என்ற விலங்கினை Tibetian yak என்று இவர் மா. கிருஷ்ணனுக்கு முன்பே இனங் கண்டுள்ளார். தாவர, மூலிகைப் பெயர்களுக்கு அவர் கூடுமானவரை இலத்தீனில் அமைந்த அறிவியல் பெயர்களையும் வழங்கியுள்ளார். தாம் அறியாதவற்றை 'unknown', 'unidentified' என்று அவர் குறித்திருக்கும் அறிவு நேர்மை இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஒரு பாடமாகும்.

இத்துணை வளமும் செழுமையும் கொண்ட கலைக் களஞ்சியத்தை டி.வி. சாம்பசிவம் மன்னையார் உருவாக்கி, பாதி வெளியிட்டு, அவர் காலமான பின் நிறைவு பெற்றதை இனிக் காண்போம்.

ஒரு பெரும் மருத்துவக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கக்கூடிய திறனையும் ஆற்றலையும் உழைப்பையும் வெளிக்காட்டாத சராசரியான வாழ்க்கையினையே டி.வி. சாம்பசிவம் பி மன்னையார் வரலாறு காட்டுகிறது. தமது பாட்டனார் எழுதிவைத்திருந்த சில பழம் மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்ததென, 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் மன்னையார் குறித்துள்ளார். தமது குடும்பத்தில் எவருக்கும் முறையான வைத்தியப் பயிற்சி இருந்ததாகத் தெரியவில்லை என்று அ. ராஜபூஷணம் மன்னையார் குறிப்பிடுகிறார். இந்நிலையில் தம்முடைய விரிவான மருத்துவப் பயிற்சியைச் சாம்பசிவம் மன்னையார் எங்கு பெற்றார் என்பதே புலப்படவில்லை. பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவரின் ஆங்கில மொழி ஆற்றலும் வியப்பைத் தருகிறது.

கிடைக்கின்ற குறைவான வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களிலிருந்து சாம்பசிவம் மன்னையாரின் கருத்தியல் பின்புலமும் தெளிவாக வெளிப்படவில்லை. 1931இல் இவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையில் எழுதிய சுருங்கிய முன்னுரையும் (1931), முதல் தொகுதிக்கு (உயிரெழுத்துகள்) எழுதிய மிக விரிவான முன்னுரையும் - இரண்டுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை - சில போக்குகளை உணர்த்துகின்றன. (மொத்தத் தொகுதிகளும் வெளிவந்த பிறகே முன்னுரை எழுத எண்ணியிருந்ததாகவும் அகராதியைச் சரியாகப் பயன்கொள்ளும் வகையைத் தெளிவுபடுத்த வேண்டியே முதல் தொகுதியிலே முன்னுரை எழுத வேண்டியதானதென்றும் கூறியுள்ளார். அவர் மறைந்த கால் நூற்றாண்டுக்குப் பிறகே நூல் முழுவதும் அச்சாயிற்று என்னும்போது இதை நல்லூழ் என்றே மகிழ வேண்டும்).

நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட சாம்பசிவம் மன்னையாரின் முன்னுரை தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனையின் தாக்கத்தைக் காட்டுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சங்க நூல்களும் அதன்வழிக் கட்டமைக்கப்பட்ட தமிழின் மேன்மை, தனித்தியங்கும் ஆற்றல், வளம் ஆகிய கருத்துகளும் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கமும் அவருடைய கருத்துலகை வடிவமைத்துள்ளமை தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே சித்த மருத்துவத்தைத் தமிழ் மரபின் சிறப்பான ஒரு பகுதியாக அவர் காண்கிறார். நாகரிகத்தின் கொடுமுடியைத் தமிழர்கள் தொட்டதன் ஓர் அடையாளமாகத் தமிழ் மருத்துவத்தை அவர் பார்த்திருக்கிறார். நவீன மேலை மருத்துவத்தோடு ஒப்பிடவும் இது முழுமையுடையதாக அவர் கருதியிருக்கிறார். சித்தர்கள் தம் மருத்துவச் சாதனைகளை நிகழ்த்திய காலத்து ஐரோப்பா அறியாமையிலும் காட்டு மிராண்டித்தனத்திலும் மூழ்கியிருந்ததாக அவர் சொல்கிறார். நவீனக் காலத்திற்கேற்ப சித்த மருத்துவத்தை மீட்டுப் புத்துயிரளிக்காவிட்டால் அது அழிந்தும் மறந்தும் போகும் எனவும் அவர் அஞ்சியிருக்கிறார். அகராதி இந்த அச்சத்தின் வெளிப்பாடாகும்.

இந்தக் கருத்தியல் ஓர்மையே சாம்பசிவம் மன்னையார் பெருமுயற்சியின் பின்னணியில் தொழிற்பட்டிருக்கின்றது. தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களில் ஆளப்பட்டிருக்கும் ஏராளமான கலைச்சொற்களும் குழுக்குறிகளும் அவற்றின் உண்மையான பொருளை அறியத் தடையாக இருப்பதை உணர்ந்த சாம்பசிவம் மன்னையார் இதனைச் சீர்செய்ய முயன்றார். இந்தப் பணியினை அவர் எப்பொழுது தொடங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1938 கடைசியில் எழுதிய முன்னுரையில் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட உழைப்பு எனக் குறித்துள்ளதிலிருந்து, 1910களின் தொடக்கத்தில், அவரது 30ஆம் அகவையை ஒட்டி, தம் ஆய்வுகளை அவர் தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்க முடியும்.

தக்க துணை நூல்கள் இல்லாமல் சாம்பசிவம் மன்னையார் தத்தளித்திருக்கிறார். கடுமையான காவல்துறைப் பணிச் சுமைகளுக்கிடையே அவர் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. இதில் அவருக்கு யாரேனும் துணை நின்றார்களா என்பதும் தெரியவில்லை. கலந்து பேசுவதற்கேனும் எவரேனும் இருந்தனரா எனவும் தெரியவில்லை. அவரைப் பற்றிய இரங்கலுரைகளோ நினைவுக் குறிப்புகளோ கிடைக்காதிருப்பதிலிருந்து அவர் பலரோடும் கலந்துகொள்ளாதவராக, தனித்தே செயல்படக்கூடியவராக இருந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.

இவ்வாறு டி.வி. சாம்பசிவம் மன்னையார் அரிதின் முயன்று தொகுத்த அகராதியை முதலில் ஒரு சிறு சஞ்சிகையாக, 40 பக்க அளவில் வெள்ளோட்டம் விட்டிருக்கிறார். இது 1931இல் வெளிவந்திருக்கலாம். 'அ' முதல் 'அக்கினினிர்ம மந்தினி' வரை அமைந்த இந்தச் சஞ்சிகையில் 4 பக்க ஆங்கிலப் பொருளடைவும் உண்டு. இதனையே பல அறிஞர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலில் அவர் அனுப்பியிருக்கிறார் எனத் தெரிகிறது. பொருள் ஆதரவு வேண்டி இதனைச் செய்தாரா, கருத்தறிவதற்காக அனுப்பினாரா, விளம்பரத்திற்காக அனுப்பினாரா என்று தெரியவில்லை. இச்சஞ்சிகையைப் படித்து ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார், உ.வே. சாமிநாதையர், வையாபுரிப் பிள்ளை, கா.சு. பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை, டி.எஸ். திருமூர்த்தி முதலானோர் அளித்த கருத்துரைகளை ஆங்கிலத்தில் 'Opinions' என்ற தலைப்பில் அச்சிட்டு அதனையும் 8 பக்க அளவில் இணைத்துள்ளார்.

இதன் பிறகு 1931இல் 'அ' முதல் 'அமுத' வரைத் தலைச்சொற்கள் கொண்ட 200 பக்க சஞ்சிகையை சாம்பசிவம் மன்னையார் வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் The Research Institute of Siddhar's Science, Madras என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இது சாம்பசிவம் மன்னையார் ஏற்படுத்திக்கொண்ட பெயரளவிலான நிறுவனம் என்பதில் ஐயமில்லை.

இதன் முன்னுரையில் இது ஒரு மாதிரி (Specimen) என்றே அவர் குறித்திருக்கிறார். மொத்தம் நான்கு தொகுதிகளாக, ஒவ்வொன்றும் 500 பக்க அளவில் அமையும் என்றும் அவர் எழுதியுள்ளார். ஆனால் அவர் காலமான பின்பே முழுமை பெற்ற இந்த அகராதி 4000 பக்கத்தை எட்டிவிட்டது.

கடைசியில் இந்த அகராதியின் முதல் தொகுதி 1938இல்தான் வந்தது. (ஆனால் பலர் தவறாக 1931 என்றே குறிப்பிடுகின்றனர். இதற்கான காரணம் இந்த அகராதியின் பதிப்பு வரலாற்றில் ஏற்பட்ட குழப்பங்களே ஆகும். அவற்றைப் பின்னர் காண்போம்.)

சாம்பசிவம் மன்னையார் இவ்வகராதி வெளியீட்டுக்காகத் தம் பூர்வீகச் சொத்தான இரண்டு வேலி நிலத்தை விற்றதோடு, ஓய்வூதியத்தையும் முன்னரே பெற்று 12,000 ரூபாவுக்கு மேல் செலவு செய்திருக்கிறார். (வ. சுப்பையா பிள்ளை, அ. ராஜபூஷணம் மன்னையார் ஆகியோர் தரும் தகவல் இது.) முதல் இரண்டு தொகுதிகள் அடுத்தடுத்து 1938ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகத் தெரிகிறது.

1949இல் சென்னை மாநில அரசு அவருக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்ததோடு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நாயக்கர் தெருவில் ஒரு வீட்டையும் கொடுத்திருக்கிறது. இதுவும் அ. ராஜ பூஷணம் மன்னையார் தரும் தகவல். இந்த உதவியளித்தலுக்குப் பின்னே இருந்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு உதவியே அகராதிக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது.

மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில், 1953இல் டி.வி. சாம்பசிவம் மன்னையார் காலமானார். வாரிசில்லாத நிலையில், சென்னை தாசில்தார் அவர் இருந்த வீட்டைப் பூட்டிவிட்டதோடு, வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்துச்சென்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர்களில் ஒருவரும் மறைமலையடிகள் நூல்நிலையத்தைத் தோற்றுவித்தவருமான வ. சுப்பையா பிள்ளை (1966இல்) முயற்சி எடுத்து, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தேடியிருக்கிறார். அங்கு ஒரு கள்ளிப்பெட்டி நிறைய மருத்துவ நூல்களும் நிகண்டுகளும் செல்லரிப்புண்ட நிலையில் இருந்திருக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு அடுக்கிலே அகராதியின் கையெழுத்துப் படிகளும் அச்சிட்ட படிவங்களும் இருந்திருக்கின்றன. மூன்றாம் பாகத்தின் 2174 பக்க எண்ணோடு முடியும் படிவத்தையும் அவர் கண்ணுற்றிருக்கிறார். (அங்கே இருந்த ஒரு பள்ளியிறுதிச் சான்றி தழிலிருந்து சாம்பசிவம் மன்னையார் தம்பி டி.வி. அண்ணாமலைப் பிள்ளையின் முகவரியைப் பெற்று, அவர் வழியாகச் சாம்பசிவம் மன்னையார் பணி அடையாள அட்டையிலிருந்த படத்தை வ. சுப்பையா பிள்ளை பெற்றிருக்கிறார். இன்று கிடைக்கப்பெறும் சாம்பசிவம் மன்னையாரின் ஒரே படம் இதுவேயாகும்.)

வ. சுப்பையா பிள்ளையின் இடையீட்டுக்குப் பிறகு, அகராதியின் கையெழுத்துப்படிகளும் அரைகுறையாக இருந்த அச்சுப்படிகளும் சென்னை அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதென அவர் 1972இல் குறித்துள்ளார்.

அங்கு அரசின் மானிய உதவியுடன் மூன்றாம் பகுதியின் பிற்பகுதி அச்சிடப் பெற்று பழைய படிவங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டு, வெளியிடப்பெற்றிருக்கிறது. இதில் அதன் இயக்குநர் டாக்டர் பு.மு. வேணு கோபால் முன்னின்றதாகத் தெரிகிறது. இவ்வெளியீடு 1972-1977க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். இப்பொழுது பார்க்கக் கிடைக்கும் முதல் மூன்று தொகுதிகளின் முதற்பதிப்புகளும் இச்சமயத்தில் கட்டப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வேளையில் கோவையின் விந்தை மனிதர் ஜி.டி. நாயுடுவை இந்த மருத்துவ அகராதி கவர்ந்திருக்கிறது. அவருடைய முயற்சியில் அடுத்த இரண்டு பாகங்கள் அச்சிடப்படலாயின. ஆனால் அவை வெளிவரும் முன் அவரும்஢ காலமாகிவிட்டார். கடைசியில் 1977இலும் 1978இலுமாக சாம்பசிவம் மன்னையார் பேரகராதியின் நான்காம் ஐந்தாம் தொகுதிகள் வெளியாயின. 1931இல் தொடங்கிய மருத்துவ அகராதியின் அச்சுவாகனப் பயணம் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவு பெற்றது.

இவ்வாறு கடைசி மூன்று தொகுதிகளும் அச்சிட்டு, கட்டப்பட்டு முற்றுப்பெற்றபோது சில பதிப்புக் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நான் பார்த்த பிரதிகளெல்லாம் பழைய படிவங்களோடு புதிதாக அச்சிட்ட படிவங்களும் சேர்த்துக் கட்டடம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. தலைப்புப் பக்கமும் புதிதாக அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது தெரிகிறது. (சாம்பசிவம் மன்னையார் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டு, கட்டப்பட்ட பிரதிகளை நான் கண்ணுற இயலவில்லை.) இந்தப் பிரதிகளில், வெள்ளோட்டமாக அச்சிடப்பட்ட சஞ்சிகையின் முகப்பை மாதிரியாகக் கொண்டு, 1931 எனப் பதிப்பு ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. இது பிழை. 1938இல்தான் முதல் இரு தொகுதிகள் அணியமாயின என்பதை முன்னரே கண்டோ ம். மேலும் நான் பார்வையிட்ட ஓர் இரண்டாம் தொகுதியில் 930 முதல் 1488 பக்கம் வரை சாம்பசிவம் மன்னையார் காலத்து அச்சுப்படிவங்களும் 1489 முதல் 1752 பக்கம் வரை (ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால்) நான்காம், ஐந்தாம் தொகுதிகள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் அதே தாளில் அச்சிடப்பட்டுள்ளது தெரிகிறது. இதிலிருந்து, சாம்பசிவம் மன்னையார் மறைந்தபொழுது பல அச்சுப் படிவங்கள் கட்டப்படாமல் இருந்திருக்கும் என எண்ண இடமுண்டு.

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் அரிய பதிப்புகளெல்லாம் பெரும் அலைக்கழிப்புகளுக்குப் பின்னரே வெளிவந்திருக்கின்றன. தீயூழாக, இந்த முயற்சிகள் பற்றிய போதுமான பதிவுகள்கூட இல்லை. இவ்வளவு அரிய அகராதியைப் பற்றி 'சொல்பொருள்' என்ற 900 பக்க அளவில் அமைந்த சிறப்பான தமிழ் அகராதி வரலாறுகூட இரண்டு இடங்களில் பெயரளவில் மட்டுமே சுட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி அகராதி தயாரிக்கப்பட்ட அனுபவத்தை விளக்கும் சிறு நூலை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தமிழ்ப் பதிப்பகம் வெளியிடும் (Emile Littre, How I Made My Dictionary, Cre-A, 1992) சூழ்நிலையில் டி.வி. சாம்பசிவம் மன்னையார் போன்ற அறிஞர்கள் போற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

பின்குறிப்பு

பல்லாண்டுகளாகக் கிடைக்கப்பெறாமல் இருந்த இந்த அகராதியைத் தமிழக அரசு 1990களில் மறுபதிப்பிட்டுள்ளது. எப்படி நூல் வெளியிடக் கூடாது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். முதல் பதிப்பின் ஐந்து தொகுதிகளும் ஒரே சீராக ராயல் அளவில் தொடர் பக்க எண்களோடு நேர்த்தியாக அச்சிடப்பட்டவையாகும். புதிய 'பதிப்'போ ஆறு பகுதிகளாக வெவ்வேறு அளவில் அச்சிடப்பட்டுள்ளது. முதல் தொகுதி டெம்மிக்கும் குறைந்த அளவில் 1742 பக்கங்களில் புதிதாகப் பல பிழைகளோடு அச்சுக் கோக்கப்பட்டு ஒரே நூலாகச் செங்கல்போல் அமைந்துள்ளது. இரண்டாம் தொகுதி 'ஆப்செட்' முறையில் பழைய பதிப்பு அப்படியே படம்பிடித்து வெளியிடப்பட்டுள்ளது - நல்லவேளையாக! ஆனால் இது 929ஆம் பக்கத்தில் தொடங்கி 1752ஆம் பக்கத்தில் முடிகிறது! மூன்றாம் தொகுதியும் இதே 'ஆப்செட்' முறையில் 1753ஆம் பக்கம் தொடங்கி 2224ஆம் பக்கத்தில் முடிகிறது.

நான்காம் தொகுதி இரண்டு பாகங்களாகப் புதிதாக அச்சுக் கோத்து அச்சிடப்பட்டுள்ளது. காரணம் விளக்கப்படவில்லை. இதன் முதல் பாகம் 1ஆம் பக்க மெனப் புதிதாக இலக்கமிடப்பட்டு 1020ஆம் பக்கம்வரை உள்ளது. இரண்டாம் பாகம் இதன் தொடர்ச்சியாக 2000 பக்கம்வரை உள்ளது. ஐந்தாம் தொகுதி மட்டும் ராயல் அளவில் புதிதாக அச்சுக்கோத்து, 1 முதல் 1291 பக்கம் வரை எண்ணிடப்பட்டுள்ளது. அச்சுப் பிழைகள், வடிவமைப்பு, நேர்த்தி முதலானவை பற்றிச் சொல்லாமலிருத்தல் நலம். சாம்பசிவம் அகராதி தொடர்ந்து அச்சில் உள்ளது என்பதைத் தவிர இதில் மகிழ்வதற்கு ஏதுமில்லை.



ஆய்வு : ஆ. இரா. வேங்கடாசலபதி - காலச்சுவடு

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்