வியாழன், 21 ஏப்ரல், 2022

அன்பழகன் கோபாலரின் குடும்பத்தினர் தந்த அரசு பள்ளி கட்டிடம் தந்




திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில், பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழர்களான அன்பழகன் கோபாலர்- தனசேகரி ஆகியோரின் மகன்கள் பொறியாளர்கள் இளங்கோவன் கோபாலர்(64), முத்தழகன் கோபாலர்(59), ஆடிட்டர் ராஜகோபால் கோபாலர்(55) ஆகியோர் தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டித் தந்துள்ளனர். இவர்கள் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள். 



தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டம்' என்ற திட்டம் மூலம் தங்கள் பயின்ற  பள்ளிக்கு தங்களது தாயாரின் பெயரில் 1 கோடி மதிப்பில் 3 அடுக்குகள் கொண்ட 9 வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளனர். கடந்த 2018-ல் தங்கள் சொந்த ஊருக்கு வந்தபோது கஜா புயலில் பள்ளி மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததால் அதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மூவரும் இணைந்து பணம் சேர்த்து, இதை செய்திருப்பதாக சகோதரர்கள் தெரிவித்தனர்



பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைபள்ளிக்கு அன்பழகன் கோபாலர் குடும்பத்தினர் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் தனசேகரி அம்மாள் பெயரில் புதிய கட்டிடம் திறப்பு விழா:   தமிழக அரசின் டெல்லி மேலிட பிரதிநிதி மாண்புமிகு ஏகேஎஸ் விஜயன், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர்  திருமதி சாருஸ்ரீ ஐஏஎஸ், கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர்  மணிமேகலை முருகேசன்  ஆகியோர் முன்னிலையில் திரு அன்பழகன் கோபாலர் திறந்து வைத்து ஒப்படைத்தார்.  ஒன்பது வகுப்பறை கொண்ட  கட்டிடத்தை சொந்த செலவில் கட்டி மக்களுக்கு ஒப்படைத்த நிகழ்வை அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.





ஆம்பலாப்பட்டு வரலாறு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு வரலாறு 

ஆம்பலப்பட்டு என்ற ஊர் வடக்கு, தெற்கு என இரண்டு ஊராட்சிகளாகச் செயல்படுகிற பெரிய அளவிலான கிராமம். 

ஆம்பல் வனம்  காலத்தால் மருவி ஆம்பலாபட்டு என அழைக்கப்படுகிறது. ஆம்பல் மலர்கள் கொண்ட நீர்க் குளங்கள் நிறைந்த பகுதியாகையால் இபபெயர்.

 

ஆம்பலாப்பட்டு அரசர் மாதுரார் 


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாப்பாகுடி நாடு என்ற பாப்பா நாட்டில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில் கி.பி.1831 ஆம் ஆண்டு காணியுடைய அரசர்களில்  மாதிரான்(மாதுரார் ) என்ற கள்ளர் மரபை சேர்ந்த காணியுடை அரசர்களில் மாதுரார் நில விற்பனை செய்துள்ளார் . இதற்கு சாட்சியாக சேனாபதி , தொண்டைமான்  பட்டம் கொண்ட கள்ளர்கள் கையெழுத்து இட்டுள்ளனர்.இந்த நில விற்பனை ஓலைச்சுவடி இன்றும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவன ஓலைச்சுவடி நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 




ஆதாரம்:- தமிழகத் தொல்லியல் கழகம் வெளியிட்ட ஆவணம் இதழ் - 28(2017)- புத்தகம் பக்கம் எண் 165,166


கண்ணுடையரே - ரமா சுரேஷ்  D/O மில்டரி P.ரெங்கசாமி

                  குறள்393: கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்துஇரண்டு                                 
                                   புண்உடையர் கல்லா தவர்.
பொருள்: கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர் ஆவர்.

ஆம்பலாப்பட்டு என்பது கம்னியூஸ கொள்கைகளால் வளர்ந்த கிராமம். ஆம்பலாப்பட்டு இன்று வேண்டுமானால் வடக்கு, தெற்கு என்று இருபிரிவுகளாகவும், பல குழுக்கலாகவும் இருக்கலாம். ஆனால், 7௦ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிணைந்த ஆம்பலாப்பட்டில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரே குழுக்களாகவே செயல்பட்டு உள்ளது. அதற்கு முழு முதற் காரணம் கம்யூனிஸ்ட் கட்சி. 

ஆம்பலாப்பட்டின் கிராம வரலாற்றை கிராமம் தோன்றிய இடத்தில் இருந்தே ஆரம்பிக்க எண்ணினேன். ஆனால், என் தேடலில் மிகப்பெரிய அதிர்ச்சி! இதை அதிர்ச்சி என்பதா? அல்லது நம் அறியாமை என்பதா? எப்படி சொல்வது என்று தெரியவில்லை! நம் கிராம குழந்தைகளின் கல்விக்காக நம் முன்னோர்கள் பட்ட பாடு மிகப்பெரிய வரலாறு. ஆனால், இன்று நம் பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாக நிற்கின்றது. இக்கட்டுரையை படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துகளையும், ஆலோசனையையும் வேண்டுகிறேன்.

இந்தியா, நானுறு ஆண்டுகளாக வெள்ளையனிடம் அடிமைப்பட்டு கிடந்த காலக்கட்டத்தில், ஆங்கில அரசு இந்தியாவில் கல்வி திட்டத்தை நிறுவியது. ஆனால், அது கிராமப்புறங்களில் முழுமையாக சென்றடையவில்லை. பல கிராமங்களில் கல்வி அறிவு இல்லாமல் பின்தங்கிய நிலையில் இருந்தனர். கிராம மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை வளர்ப்பதற்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன் முனைப்பால் பல கிராமங்களில் திண்ணைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. கற்றறிந்தவர்கள் தானே முன்வந்து கற்றுத்தந்தார்கள். அக்காலத்தில் தமிழ் மற்றும் கணிதம் மட்டுமே கற்பிக்கப்பட்டது.
ஆங்கில அரசால், நம் கிராமத்தில் நிறுவப்பட்ட முதல் மாவட்ட கழக பள்ளிகள் பரங்கிவெட்டிக்காடு மற்றும் தெய்வராணிகுள மேலக்கரையில், சேனாபதி தெருவில் துவங்கப்பட்டது. ஆனால், அப்பள்ளிகளும் இழுத்து மூடக்காரணம் ஆனார் நாடிமுத்து பிள்ளை. 1946-ம் ஆண்டு நடைபெற்ற ஜில்லாபோர்டு தேர்தலில் காங்கிரசு வேட்பாளர் நாடிமுத்துவை எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் ஆதரவாளர், சீனிவாச முடிபூண்டாரை ஆம்பல் கிராம மக்கள் ஆதரித்தனர். நாடிமுத்து பிள்ளை வெற்றிப்பெற்ற கையோடு தன்னை ஆதரிக்காத ஆம்பலாப்பட்டிற்கு பள்ளிகூடம் கிடையாது. என் உயிர் உள்ள வரை இக்கிராமத்திற்கு பள்ளிக்கூடமும் வரவிடமாட்டேன் என்று சூளுரைத்து பள்ளியை ரத்து செய்ததோடு, பள்ளி இடத்தையும் ஏலம் விட்டார்.

ஆம்பலாப்பட்டு மக்கள் என்றும் நியாயத்திற்காக போராடுபவர்கள். அவர்களின் உரிமையை என்றும் எதற்காகவும் விட்டுக்கொடுத்தவர்கள் அல்லர். அது யாராக இருந்தால் என்ன? அந்த சூளுரையை தவிடுபொடியாகியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய சங்கமும். ஆம்பலாப்பட்டு மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டு வெற்றியும் அடைந்தனர். அப்போராட்டத்தில் அன்றே பெண்களும் சமஉரிமையுடன் கலந்துக்கொண்டனர். வெற்றியுடன் ஓராண்டிற்குள் நமது கிராமத்தில் பள்ளிகள் துவங்கப்பட்டது.

திரு.சீரங்கம் சேனாதிபதி தன் சொந்த செலவிலேயே கட்டிக்கொடுத்த, தெய்வராணிகுள மேலக்கரையில் துவங்கப்பட்ட பள்ளி பெருமழையிலும், புயலிலும் சேதமடைந்தது. அதன் பிறகு திரு.சு.ராமசாமி மற்றும் திரு.து.அடைக்கலம் குடும்ப வகையார் கீழக்கோட்டையில் கொடுத்த நிலத்தில் தற்பொழுது இருக்கும் தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது.

நம் முன்னோர்களை நினைத்துப் பார்கையில் கர்வமாகவே இருக்கின்றது அல்லவா? ஒருவருக்கு ஒருவர் போட்டிப்போட்டு கொண்டு நம் கிராமத்தை வளர்த்து இருக்கிறார்கள்! இன்று ஏனோ இந்த போட்டிகள் பொறாமையாக  வளர்ந்து வருகின்றது.  

பல கிராமங்கள் ஜமீனிடமும், மிராசுகளிடமும் அடிமைதனத்தில் இருந்து மீள்வதற்கு போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், நாம் கல்வி அறிவிற்காக போராட துவங்கிவிட்டோம். அதற்கு காரணம் நம் கிராம மக்களிடம் இயல்பாகவே முற்போக்கு எண்ணமும், தொண்டுமனப்பான்மையும், பொதுவுடமை இலட்சியப் பற்றும், கொடைக் குணமும் மேலோங்கி நின்றது. இல்லை என்றால் அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ள முடியாத கம்யூனிஸ கொள்கைகளை நம் கிராம மக்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். நம் தோழர்கள் கம்யூனிஸம் போதித்த பொதுவுடமை வழியில் தன்னிறைவு, தன்மான பாதையில் நடக்க துவங்கினார்கள்.

பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு ஒவ்வொரு தெருவும், ஓரு கிராமமாகவே காட்சியளித்தது. மிகப்பெரிய 16 தெருக்களை கொண்டது நமது அழகிய கிராமம். ஏறக்குறைய 28km, சுற்று பரப்பளவு உள்ள கிராமத்திற்கு இரண்டே இரண்டு பள்ளிகளா? பிஞ்சு பாதங்கள் எவ்வளவு தொலைவு செல்வது? அன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கு குழந்தைகள் செல்வதே மிக அரிதான ஒன்று. அப்படிப்பட்டவர்களை பல மைல் தூரம் நடந்தே பள்ளி செல்லுங்கள் என்றால்? நம் கிராம பெரியவர்கள் கலந்து ஆலோசித்தனர்.

நம் கிராமத்தில் எந்த ஒரு முடிவு எடுக்கப்பட்டாலும் அது குழுவாகத்தான் செயல்பட்டது. நல்ல தலைவர்கள் ஒரு நாட்டின் கண் போன்றோர்கள். அப்படி நமக்கு கண்ணாக கிடைத்து வழி நடத்திய குழுக்களுக்கும், அந்த குழுவை வழி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நாம் நன்றி என்ற ஒரு வார்த்தையில் நம் பணியை முடித்துவிடமுடியாது. அந்த குழுக்களின் மூலதனம், திரு.வெ.அ.சுப்பையன் தலைமையில், 7.3.1956ஆம் ஆண்டு கண்டியர் தெருவில் உள்ள பள்ளி துவங்கப்பட்டது. அடுத்து 13.8.1960 இல் இலுப்பைத்தோப்பு கிருஷ்ணாலயத்தில் துவங்கப்பட்ட தொடக்கப்பள்ளி பிற்காலத்தில் கட்டிடமாக்கப்பட்டது. அதன் பிறகு சோமன்தெரு மற்றும் தேத்தாடிக்கொல்லையில் தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டன. திரு.S.A.முருகையன் மாதுரார், தலைமையில் கிராம மக்களை கொண்டு ஒரே நாளில் அங்காளம்மன் கோவிலில் கட்டப்பட்ட கொட்டகையில், 1966இல் துவங்கப்பட்ட ஆரம்ப பள்ளி, பிற்பகுதியில் பாலடி அய்யனார் கோவிலுக்கு உரிய ஆறு ஏக்கர் இடத்தில் மக்களின் உதவியுடன் அங்கிருந்த முற்புதர்களை அழித்து, தற்பொழுது இயங்கிக்கொண்டிருக்கும் பள்ளி கட்டப்பட்டது. திருவாளர்கள். S.A.முருகையன், அண்ணாமலை தலைமையில் 199௦ இல் குடிக்காடு மற்றும் கீழக்கோட்டையில் இடைநிலை பள்ளி துவங்கப்பட்டது.

 “ஆரம்ப கல்வி மட்டும் போதுமா?” ஆரம்ப கல்வி என்பது ஒன்றில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை. 195௦இல் குழந்தைகளின் கேள்விக்கு பதில்தெரியாமல் திணறினார்கள் பெரியவர்கள். அச்சமயத்தில் பாப்பநாட்டின் சுற்று வட்டார குழந்தைகளின் கல்வி வாழ்க்கைக்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக்கொடுத்தார் உயர்திரு. இராமசாமி முதலியார். 195இல் பாப்பநாடு தொடக்கப்பள்ளியை, இடைநிலைப்பள்ளியாக மாற்றி அனைத்துக் குழந்தைகளின் கல்வி கண்ணை திறந்துவைத்து, வழிகாட்டினார். கல்வி ஒன்றே ஒரு தனிமனிதனின் சுயமுன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை தீராக்கொள்கையாக கொண்டவர்.

நம் கிராமத்து பிள்ளைகள் பாப்பநாட்டிற்கு சென்றுதான் இடைநிலை படிப்பை படித்தாகவேண்டும். இடைநிலைப்பள்ளி என்பது ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை. தோழர்களே நான் சொல்லுவது 195 இல். உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியாத பாதைகளை கடந்து பாப்பநாட்டிற்கு செல்லவேண்டும். அதுவும் பத்து வயது குழந்தைகள் ஐந்தாறு கிலோமீட்டர் நடக்கவேண்டும் என்றால்! அப்படி கடந்து சென்று 1952-1953ன் கல்வியாண்டில், இடைநிலை இறுதித்தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்களின் உயர்நிலை கல்வி கேள்விக்குறியானது. இந்த வேதனையிலும் நம் மாணவர்கள் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தினர்.

அவ்வாண்டு பாப்பநாடு இடைநிலைபள்ளி இறுதி தேர்வில் எழுதிய இருபத்திரெண்டு மாணவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் பதினொன்று பேர். அனைவரும் ஆம்பலின் மைந்தர்கள்! இந்த வெற்றிதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது.

வெற்றிப்பெற்ற பிள்ளைகளை நினைத்து ஒரு புறம் சந்தோஷம் அடைந்தாலும், உயர்நிலை பள்ளி படிக்க பட்டுக்கோட்டை அனுப்பிவைக்க வேண்டுமே என்ற கவலைதான் மேலோங்கியது. அதவும் அவர்கள் நடந்தே செல்லவேண்டும். பட்டுக்கோட்டை செல்ல வேடும்மென்றால் கீழக்கோட்டை வழியாக, பாலாயிகுடிக்காடு தாண்டி, வெள்ளைப் பொட்டால் கரம்பையை தாண்டி, சூரப்பள்ளத்துக்கு வடக்கே உள்ள (நசுவினி ஆறு) காட்டாற்றுப் பாலத்தின் வழியே பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில் சென்று பட்டுக்கோட்டையை அடைந்தாக வேண்டும். கிட்டத்தட்ட பன்னிரெண்டு கிலோமீட்டார்.  

இன்று எதற்கெடுத்தாலும் பைக்கிலும், காரிலும் சர்ரு, புர்ருன்னு போகும் நம்மால் அவர்களின் துயரத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாததுதான். கரம்பையின் கோடைகால பொறுக்கையும், மழைகால சேறுசகதிகளையும் தாண்டி நரிகளையும், பாம்பு பூச்சிகளையும் நினைத்து பெற்றோர்கள் பயந்து உயர்நிலை படிப்பிற்காக பட்டுக்கோட்டைக்கு அனுப்ப மறுத்தனர்.


இளங்கன்று பயம் அறியாது என்பார்கள். அது உண்மைதான், அந்த கன்றுக்குட்டிகளுக்கும் பயம் தெரியவில்லை. எப்படியாவது கல்வி என்கிற அந்த எட்டா கனியை எட்டிப்பிடித்திட துள்ளி குதித்து ஓடினார்கள். ஆனால், பெற்றோர்கள் கையொப்பம் போட மறுத்துவிட்டனர். பெற்றோர்களின் சம்மதம் என்பது இயலாத காரியம். எனவே, புதிய ஆலோசனையை சொன்னார் திரு.கே.எஸ்.முருகையன் (கண்டியர்தெரு). அன்று மட்டுமல்ல பிற்காலத்தில் நம் கிராமத்தில் பல மாற்றுசிந்தனைகளை ஏற்படுத்தியவர் அவர். அவரின் ஆலோசனைப் படி ஒரு நண்பனின் விண்ணப்பத்தில் மற்ற நண்பன் பெற்றோர் ஆனார்கள்.

ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்! தினமும் பட்டுக்கோட்டைக்கு நடந்தே சென்று படித்து வரவேண்டும்மென்றால்? அதுவும் பெற்றோர்களுக்கு வயல்காட்டில் உதவி செய்து விட்டு, பின் பள்ளிக்கு ஓடவேண்டும்! ஒரு சிலருக்கு நினைவு வரலாம் புலவர். அய்யாவு (கீழக்கோட்டை) அவர்கள், ஆசிரியராக இலுப்பைதோப்பில் பணியாற்றிய காலகட்டத்தில் சொல்லுவார் “நாங்க அந்தகாலத்தில் கரம்ப சேறு சகதியில் வழிக்கி அடிச்சு படிச்சோம். எங்க காலத்தில் பெண்களுக்கு படிப்பு என்பது கிட்டாத ஒன்று. ஆனால், நீங்க அனைவரும் சொகுசா தார் சாலையில், அதுவும் சைக்களில் வந்து செல்கிறீர்கள். பள்ளிக்கூடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது, இத்தனை ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தும் படிக்கமாட்டேங்கிறிங்க? படிப்பு வராத உங்க தலையில் எருக்கை கொண்டு அடிச்சாதான் படிப்பு வரும்” என்று திட்டுவார். அன்று அவரின் வருத்தம் நம்மில் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்திருக்கலாம்!

அப்படிப்பட்ட முள்பாதையில் நம்மை நடக்கவிடாமல், நமக்காக ஒரு தடத்தை ஏற்படுத்திக்கொடுக்க 1956 இல் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று கூடியது. (கே.எஸ்.முருகையன், து. முருகையன், கு. முத்துசாமி, தி. குப்புசாமி, புலவர். அய்யாவு, அ. பழனியப்பன், வி. இராமசாமி, வெங்கடாச்சலம், சாமித்துரை) அக்குழுவின் முயற்சியால் நம் கிராமத்தில் கல்விக்குழு உருவானது. அக்குழுவில் நம் கிராம முன்னோர்களும் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

சிறு பிள்ளைகளின் ஆர்வத்தை கிராமமே ஆதரித்தது. தங்களின் குழந்தைகளுக்கு எப்படியாவது கல்வி கிடைக்கவேண்டும். அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாகவேண்டும் என்று பள்ளிக்கூடம் கட்ட தங்களால் முடிந்த நிதி உதவியை ஆசையுடன் கொட்டி கொடுத்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் அவ்வளவு எளிதில் ஈடேறவில்லை. பல தடங்கல்கள் உருவாக துவங்கியது. ஒரு சாரார் பாதை பிரச்சனையைத் தீர்த்தால்தான் வசூல் என்று தடுத்து விட்டனர். ஒரு சாரார் பள்ளி கட்ட இருக்கும் இடம் கோவில் சொத்து என்று கோர்டில் ஸ்டே ஆடர் வாங்கிவிட்டனர். கல்வி பொதுக்குழு உறுப்பினர்கள் செய்வதறியாது தவித்தார்கள் ஒழிய தளர்ந்துவிட வில்லை. ஒரு சிலரின் சலசலப்பிற்கெல்லாம் ஆம்பலாப்பட்டு மக்கள் பயந்து விடுவார்களா என்ன? தொடர்ந்து போரடி வழக்கில் வெற்றியும் பெற்றனர். பல எதிர்ப்புகளை தாண்டி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான இடமும், நிதியுதவியும் கிராம மக்களிடம் திரட்டப்பட்டது. இதெல்லாம் ஓர் ஆண்டிற்குள் நடந்து முடிந்துவிடவில்லை. ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் ஆனது.

திரு.சு.துரைமாணிக்க மாதுரார் தன் அனுபவத்தில் இருந்த நிலத்தை லைப்ரவரிக்காக (பழைய நூலகம், இலுப்பைதோப்பு அரசு மேல்நிலை பள்ளியின் வளாகத்திற்குள் புதிய நூலகத்திற்கு நேர் எதிரே இருந்தது) விட்டுக்கொடுத்ததுடன், அவரின் தூண்டுதலில் 1962 – 1963 இல், வாத்தியார் திரு.கா.மாரியப்பன் தலைமையில் பள்ளி துணை ஆய்வர் திரு.சண்முகநாதன் அவர்களிடம் ஆம்பலாப்பட்டு உயர்நிலை பள்ளி கட்டுவதற்கான இடம் காண்பிக்கப்படுகிறது.

பறந்துவிரிந்த ஐந்து ஏக்கர் நிலபரப்பையும், அமைதியான, அழகான சுற்று சூழலையும் பார்த்து வியந்த பள்ளி துணைஆய்வர் திரு.சண்முகநாதன் “இங்கு பள்ளி மட்டும்மல்ல கல்லூரியே கட்டலாம் தயங்காமல் ஏற்பாடு செய்யுங்கள். ஆம்பலாப்பட்டு வடக்கு (கண்டியர்தெருவில்) என்கிற பெயரில் ஏற்கனவே ஒரு ஆரம்ப பள்ளி இருப்பதால் ஆம்பலாப்பட்டு என்ற பெயரில் தர வாய்ப்பில்லை. இந்த இடம் எழில் கொஞ்சும் இலுப்பை மரங்கள் நிறைந்திருப்பதால் இலுப்பைத் தோப்பு என்ற பெயரில் ஆரம்பப்பள்ளிக்கு அனுமதி பெற்றுத் தருகிறேன்” என்று இலுப்பைத்தோப்பு தொடக்கப்பள்ளியை உண்டு பண்ணிக் கொடுத்தார்.   
ஆனால், அவ்விடத்தை நமக்கு உண்டு பண்ணிக்கொடுத்தவர் உயர்திரு.பொதியன் அவர்கள். இந்த இடத்தில் நாம் பொதியன் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அரசமரம், ஆலமரம், வேப்பமரம், இலுப்பைமரம் என்று நிறைந்து வழியும் இலுப்பைத்தோப்பை உருவாக்கிய பெருமைக்குரியவர். தமிழகத்தில் நாம் எங்கு சென்று தேடினாலும் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் உள்ள ஒரு கிராமத்தை  நம்மால் காணமுடியாது.

 திரு.சண்முகநாதன் அவர்களின் ஆலோசனைப்படி தோழர்கள், வெ.அ.சுப்பையன், துரைமாணிக்க குருசார், ஒரத்தநாடு நகராட்சிமன்ற தலைவர் கோவிந்தராசு,  ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத் தலைவர் நாகலிங்கம், தி. குப்புசாமி ஆகிய ஐவரும் திருமிகு. தண்டாயுதபாணி எம்.எல்.ஏ அவர்களின் ஒத்துழைப்புடன் சென்னையில் பத்மஸ்ரீ முனைவர். நெ.து.சுந்தரவடிவேலு அவர்களை சந்தித்தனர். அய்யா அவர்கள் தமிழ்நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குனராகவும் பணியாற்றியவர். தமிழகத்தின் கல்விக்கண்ணை அய்யா.காமராசர் அவர்கள், இவர் மூலமாகத்தான் திறந்து வைத்தார். தமிழகத்தில் கல்வியில் பல புரட்சிகளை சத்தமில்லாமல் செய்த கல்வியாளர். பொதுவுடமை கட்சியின் மீதும், சோவியத் யூனியன் மீதும் அளவில்லா பற்றுக் கொண்டவர். 

இன்று கல்வி காசாக பார்க்கப்படுகிறது. ஆனால், அன்று கல்வி ஒரு சமுகத்தின் முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. அய்யா காமராசர் நினைத்திருந்தால் தமிழக மக்களின் கல்வி கண்ணை திறாக்காமல் குருடர்களாகவே வளர்த்திருக்க முடியும். அவரின் ஆட்சி காலத்தில் 27000 பள்ளிகள் திறக்கப்பட்டதோடு மதிய உணவும் வழங்கப்பட்டது. அய்யா காமராசரின் 'அனைவருக்கும் கல்வி' என்ற கனவை, நினைவாக்கி கொடுத்த பெருமை நெ.து.சுந்தரவடிவேலு அவர்களையே சாரும்.

அன்றைய காலக்கட்டத்தில் உயர்பதவியில் இருப்பவர்கள் மிக எளிமையாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்கைப்போலவே அவர்களையும் நாம் எளிதில் சந்தித்து, நம் கோரிக்கைகளை சொல்ல முடியும். நம் கிராமத்து தோழர்கள், அன்றைய முதல்வர் உயர்திரு.காமராசர் அய்யா அவர்களை சந்தித்தனர். "என் மீது கல் வீசிய கிராம மக்களா" என்று சிரித்தவர் பழைய நிகழ்வுகளை நினைவுப்படுத்தியதோடு, தண்டாயுதபாணியும் உடன் வந்திருக்கிறார் பார்க்கலாம் வாருங்கள் என்று அனுப்பிவைத்தார். ஆனால், மறுகணமே உத்தரவை D.P.I, N.D.S (Director of Public Instructions Mr.N.D.Sundaravadivelu) அவர்களுக்கு இட்டுவித்தார்,
வெளியில் வந்த நம் கிராமத்து தோழர்கள், நெ.து.சுந்தரவடிவேலு அய்யா அவர்களிடம் மிகப்பெரிய 16 தெருக்களை கொண்ட நம் கிராமத்தின் சுற்றுப்பரப்பளவு, மக்கள்த்தொகையை எடுத்து சொல்லி நம் கிராமத்திற்கு எப்படியாவது உயர்நிலை பள்ளி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஐந்து கல் தொலைவில் இரண்டு பள்ளிகள் இருக்கும் போது... என்று நெ.து.சுந்தரவடிவேலு அய்யா யோசிக்கவே, குழந்தைகள், ஐந்து கல் தொலைவை கடந்து செல்லும் பாதை, அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து சொல்லி, எங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு கல்வி கண்ணை திறந்து வைத்து அவர்களின் வாழ்கையில் ஒளியேற்றி வைக்கவும் என்று நம் முன்னோர்கள் கூறவே, சிந்தனை கலையாமல் சிரித்த முகத்துடன் மாலை 4 மணிக்கு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். காலம் தாமதிக்காமல் மாலை 4 மணிக்கு நெ.து.சுந்தரவடிவேலு அய்யா அவர்களை சந்தித்த நம் தோழர்களிடம் நம் பள்ளிக்கான உத்தரவை கையில் கொடுத்தவர்,


“ஒரு கிராமத்திற்கு நல்லது நடக்க வேண்டுமானால் வரம்புகளை தாண்டுவதில் தவறில்லை” என்று அய்யா காமராசர் அவர்கள் சிரித்துக் கொண்டுடே கையெழுத்திட்டார். இந்தாருங்கள் உத்தரவு என்று அன்புடன் வழங்கினார்காமராசரின் ஒன்பது ஆண்டு ஆட்சி காலங்களில் 27௦௦௦ ஆரம்பபள்ளி, இடைநிலைபள்ளி, உயர்நிலைபள்ளி, மேல்நிலை பள்ளிகள், தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது என்றால் அது எப்படி சாத்தியமாகிறுக்கும் என்பதற்கு நம் பள்ளி ஒரு முன் உதாரணம்.

நாம் பள்ளி உத்தரவிற்காகத்தான் காத்திருந்தோம். ஏற்கனவே, நாம் பள்ளி கட்டும் பணியை துவங்கிவிட்டோம். பள்ளி கட்டிடம் கட்டும் பொறுப்பை திரு.சதாசிவம் கணக்கப்பிள்ளை (கண்டியர்தெரு) அவர்கள் தலைமையில் ஒரு குழு செயல்ப்பட்டது. நேர்மையின் மறுப்பெயர் சதாசிவம் கணக்கப்பிள்ளை என்று சொல்லுவது மிகையல்ல. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை தன் எளிமையாலும், நேர்மையாலும் செய்துமுடித்தார். அவருக்கு பக்கபலமாக வெ.ராமசாமி (கீழக்கோட்டை) அவர்கள் பொருளாளர் பதவியில் இருந்து உதவினார். கிராம மக்கள் தங்களால் முடிந்தளவு பொன்னையும், நெல்லையும், பொருளையும் வாரிவழங்கினார்கள். அதோடு மட்டும்மல்லாமல் தங்களின் உடல் உழைப்பையும் கொட்டி நம் பள்ளியை கட்டிவைத்தனர்.

12.06.196அன்று ( 27.05.1964 நேரு இறந்த பிறகு தமிழகத்தில் திறக்கப்பட்ட முதல் பள்ளி) கல்வி கடவுள் காமராசர் அவர்களின் உத்தரவின் படி, முனைவர்.நெ.து.சுந்தரவடிவேலு திருக்கரங்களால் நம் “அரசு உயர்நிலை பள்ளி, இலுப்பைத்தோப்பு “ திறக்கப்பட்டது.  இப்பள்ளி நேரு இறந்தபிறகு திறக்கப்படுவதால் நான் இப்பள்ளிக்கு ஜவஹர்லால் நேரு கழக உயர்நிலைப் பள்ளி என்றே பெயரிடுகிறேன் என்றார் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்.

21.6.1980இல் மேல்நிலை பள்ளிக்கான அரசு ஆணையைப் திரு.எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் அமைச்சராக பதவி ஏற்றவுடன் பெற்றுத்தந்தார். திரு.எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் நம் கிராமத்தின் மீது அதீத பாசம் உடையவர். அதற்கு காரணம் நம் கிராம தோழர்கள், அதிலும் குறிப்பாக பரங்கிவெட்டிக்காடு சேரித் தோழர்கள்  செய்த உதவி. இதை பற்றி பிற்பகுதியில் பார்க்கலாம். அவ்வுதவி திரு.எஸ்.டி.எஸ். அவர்களுக்கும் நம் கிராமத்திற்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. அவரும் கட்சி பாகுப்பாடின்றி நம் கிராமத்திற்காக கேட்டும், கேட்காமலும் பல பணிகளை செய்துக்கொடுத்தவர்.


அன்று கேட்டவுடன் எதுவும் நமக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. நம் கிராம பெரியவர்கள் எது செய்தாலும் இது எங்கள் கிராமம், எங்க கிராம மக்களுக்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம் என்ற உணர்வோடு செய்துக்கொடுத்தார்கள். கம்யூனிஸ கொள்கைகள் நிறைந்து வழிந்த நம் கிராமத்தில் குழந்தைகளின் அறிவு கண்ணை திறந்து வைப்பதற்கா பல பள்ளிகளை கட்டிக்கொடுத்தனர். அதில் பல பள்ளிகள் இன்று மூடும் நிலையில் உள்ளது. இந்நிலை தமிழகம் முழுவதும் பரவலாக நடந்தாலும் எதிலும் முன்மாதிரியாக இருந்த நம் கிராமத்திலும் நடப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
ஐந்து கல் தொலைவில் பல பள்ளிகள் இருந்தும் இலுப்பைதோப்பு பள்ளி சிறந்து விளங்கியது. சுற்றுவட்டார கிராமங்களில் மேல்நிலைப் பள்ளிகள் இருந்தும் மற்ற கிராம பிள்ளைகள் நம் பள்ளியை தேடி வந்தனர். அப்பெருமை அனைத்தும் திரு.சாரங்கன் அவர்களையே சாரும். இலுப்பைதோப்பு அரசு மேல்நிலை பள்ளி என்றால் கட்டுப்பாடு, உயர்தரமான கல்வி, ஆரோக்கியமான விளையாட்டு பயிற்சிகள் என்று சிறந்து விழங்கிய பள்ளியை நாம் எப்படி தொலைத்தோம்? ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த நம் பள்ளியில் இன்று முழுதாக 200 மாணவர்கள் கூட கிடையாது!
நம் கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு மேல்நிலை பள்ளியை நாம் கண்டுக்கொள்ளவில்லை என்றால் நாம் மேல்நிலையை அடைந்ததற்கான அர்த்தம் வீனாகிவிடும். அன்று நம் கிராம தோழர்கள் அரசாங்க உத்தரவிற்காக மட்டுமே காத்திருந்தனர். நிதிக்காக ஒரு போதும் கலங்கவில்லை. இன்று நாம் அனைவரும் ஓரளவு வசதியுடன் வாழ்கிறோம். நம் கிராம வளர்சிக்காகவும், நம் கல்வி முன்னேற்றத்திற்காகவும் நம் முன்னோர்கள் அள்ளி கொடுத்தனர். நம் கிள்ளியாவது கொடுக்கவேண்டாமா? இன்று நம் குழந்தைகளில் பலர் வெளிநாடுகளில் படிக்க காரணமானவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாம், நம் கடமையை செய்தால் அதுவே போதும்.

இந்த உலகில் தமிழன் இல்லாத இடம் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு ஆம்பல் கிராம வாசிகளும் இருப்பார்கள் என்று சொன்னால் மிகையாகாது. அதற்கு காரணம் நமக்கு கிடைத்த கல்வி. இன்று நம் கிராமத்தில் விவசாயிகள், IAS, நீதிபதி, காவலர்கள், ஆராய்சியாளர்கள், ஆய்வாளர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் என்று அனைத்து துறையிலும் சிறந்து நிற்க காரணம் நமக்கு கிடைத்த கல்வி.
193முதல் பட்டுக்கோட்டை தாலுக்காவிலையே (பட்டுக்கோட்டை தாலுக்கா என்பது அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு) அனைத்து கிராமங்களுக்கும் நம் கிராமம்தான் முன்மாதிரி. அது போராடும் குணத்திலும் சரி, முற்போக்கு சிந்தனையிலும் சரி எந்த ஒரு நல் மாற்றம் நிகழ்ந்தாலும் அது ஆம்பலாப்பட்டில் இருந்தே துவங்கப்பட்டது என்பதே உண்மை. அதே போன்று நாம் ஏன் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க கூடாது?     

நம்மை ஈன்ற கிராமத்திற்காக நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்களே, நாம் மீண்டும் குழுக்களாக செயல்பட நாம் ஒன்றுப் பட வேண்டும். நம்மால் முடிந்தளவு நம் பள்ளியை நவினமாக்குவோம். கற்றறிந்தவர்கள், தனார்வம் உள்ளவர்களை கொண்டு நம் குழந்தைகளை கற்றறிந்த சான்றோர்களாக உருவாக்குவோம். மீண்டும் நமது பள்ளியின் தரத்தை உயர்த்திக்காட்டுவோம்.
அதற்கான ஆலோசனையை உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். உங்களின் கருத்துகளை இங்கு பதிவிடும்போது நம் கிராமத்திம் வளர்ச்சியை மனதில் கொண்டு கருத்துகளை பதிவிடுங்கள். யார் மனமும் புண்படும்படி எழுதவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.





அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)

அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)

க‌ங்க‌ளார் கோயில் (க‌ண்டிய‌ர் தெரு)

முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

முத்துமாரிய‌ம்ம‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)

சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)

சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)

சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)

வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)

வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை 

சுந்தரபாண்டிய மன்னன் போரில் வெற்றி பெற்ற தன் அடையாளமாக இக்கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில் உள்ளே கல் தூணில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 

வான் பொய்பினும் தான் பொய்யா வற்றாத ஜீவநதியாம் காவிரி வடகாடு சங்கம கிளையின் தென்கரையோரம் கோவில் அமைந்துள்ளது. ஊருக்குள் நுழைந்தவுடனே வானை தொட்டுவிடும் விதத்தில் பிரம்மாண்டமாக 126 அடி உயரத்தில் 7 நிலை மாடங்களுடன் 500 க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் கூடிய ராஜகோபுரம் நமது கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கிறது. உள்ளே அர்த்த மண்டபம், மகாமண்டபம் உள்ளன. கொடிமரம் முன்பு வீற்றிருக்கும் நந்தீஸ்வரரிடம் அனுமதி பெற்று சிவ தரிசனம் செய்ய செல்ல வேண்டும். கருவறையில் மூல லிங்கமாகிய அருள்மிகு அண்ணாமலையார் எழுந்தருளியுள்ளார். வாயிலில் துவார பாலகர்கள் உள்ளனர். அருள்மிகு அண்ணாமலையார் லிங்க வடிவில் சதுரபீடத்தில் சுயம்புலிங்கமாக விளங்குகிறார். இவரது சன்னதியின் வடபுறத்தில் அருள்மிகு உண்ணாமுலையம்மன் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திகழ்வதைக் காணலாம்.

இந்த உலக நன்மைக்காக பக்தர்களை காத்து அருள்புரிய அவனியில் பூத்தவள். பூத்தவண்ணம் காத்து அருளாசி புரிந்து வருகிறாள். கோபுரவாசலில் சிம்ம பலிபீடம் உள்ளது. அம்பிகை கோயிலின் எதிரில் 54 அடி உயரத்தில் கோபுரம் அழகுற கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மகாதேவ்சன்னதி அம்மன் சன்னதி சந்திப்பில் மேற்கூரையில் பாண்டிய மன்னனின் சின்னமான மீன் வேப்பம்பூ சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். மேலும் இக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் கோயிலுக்கும் பாண்டிய மன்னருக்கும் இருந்த தொடர்புகள் தெரியவருகிறது.

கோவிலில் பிரகாரத்தை வலம் வரும் போது விநாயகர், தட்சணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத முருகன், துர்க்கை, சொர்ணபைரவர், நவகிரகங்கள், சன்னதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை அமர்ந்து இருக்கும் வரை மகா மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

கல்வெட்டு கூறும் செயதி

திருவண்ணாமலையில் இரண்டாம பிரகாரத்திலும் தஞ்சை பெரிய கோயிலின் உள் பிரகாரத்திலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் மண்டபத்திலும் ஆம்பல் வனத்தில் அண்ணாமலையாரின் மகிமையும் பாண்டியனின் பெருமையும் பாண்டியன் ஆற்றிய சைவத்தொண்டும் கல்வெட்டு கூறும் செய்தியாக அறியலாம்.

தன்னிகரில்லா தரும பூமியாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது இத்திருத்தலமாகும். திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருச்செங்கோடு, வேதாரணியம் ஆகிய ஊர்களின் நடுவில் இக்கோவில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அழகுற அமைக்கப்பட்ட அம்மன் சன்னதி, மடப்பள்ளி, சனீஸ்வரர், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் கோவிலில் தனிச்சிறப்பாக கல்விக்கு அதிபதியாக விளங்குகிற ஞான சண்டிகேஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது.  மேலும் செல்வ வளத்தை வாரி வழங்கக்கூடிய தேவியுடன் கூடிய சொர்ண ஆதர்ஷண பைரவர் சன்னதியும் தனியாக உள்ளது

திருவண்ணாமலையில் மேற்குத்திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்று உண்டு. அதன்கண் விரும்பி மூழ்கினால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செயயும் என்று சாஸ்திரம நூல்கள் கூறுகின்றன.

அதே போன்று தென் திருவண்ணாமலையில் மேற்கில் வருண தீர்த்தம உண்டு.திருவண்ணாமலையில் நான்கு குன்றுகள் உள்ளன. அதே போன்று தென் திருவண்ணாமலையிலும்  நான்கு கமலாலயங்கள் உண்டு. ஆகையால் இதை தென் திருவண்ணாமலை என்று கூறுகின்றனர் ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள்.

வரலாற்று சிற்பபுமிக்க இராஜ கோபுரம் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மூன்று மாவட்டத்தில் இல்லாத பெருமையாக, அதி அற்புதமான திருப்பணி 126அடி உயரம் கொண்ட 7 நிலை இராஜகோபுரம் அமைக்கக்பப்டடு வருகிறது. இதில் இன்னொரு சிறப்பாக எங்குமே கண்டிராத ஒரு அற்புத காட்சியாக நீருக்கடியில் நவநாயகர்கள் (நவகிரகங்கள்) மற்றும் கைலாயம் அமைப்புகள் ஆகிய ஆகம விதிமீறாமல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

கோவில் தல வரலாறு 

சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன்பாண்டியனால் கட்டப்பட்டது என்று கூறுகிறது. இங்குள்ள இறைவன் திருநாமம் அண்ணாமலையார். இறைவியின் பெயர் உண்ணாமுலையம்மன். பஞ்சபூத தலங்களில் ஒன்றான (நெருப்பு) திருவண்ணாமலைக்கு தென் திசையில் இந்தக் கோவில் அமைந்துள்ளதால் இது ‘தென் திருவண்ணாமலை’ என போற்றப்படுகிறது. அண்ணாமலையார் கோவில் மிகச்சிறந்த காலசர்பபதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.

தொன்மையான வரலாறு கொண்ட திருத்தலம்  மதுரையை ஆண்டு வந்த கூன்பாண்டியன் சமணத்தைப் பேணிவந்தான் தம் மக்கள்        யாவரையும் சைவத்திலிருந்து சமணர்களாக மாறுமபடி சமணர்கள் பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்தனர். மன்னனும் இதை கண்டும் காணாது இருந்து வந்தான்.

இந்நிலையில் தெய்வத்திருவுருவம் ஞானசம்பநதருக்கு இசசெய்தியை சொல்லி அனுப்பினார். மதுரை அரசி மங்கையற்கரசி, சைவத்திதல் நம்பிக்கை கொண்டவர் ஆதலால் ஞானசம்பந்தர் ஒருவரால் தான் இந்த இக்கட்டான  சூழ்நிலையிலருந்து சைவத்தைக் காக்க முடியும் என எண்ணினார்.

அரசியின் வேண்டுகொளை ஏற்ற ஞானசம்பந்தர் மதுரையை வந்தடைந்தார். இதை அறிந்த சமணர்கள் சிலர் ஞானசம்பந்தர் தங்கியிருந்த கொட்டகைககு இரவில் தீவைத்து விடடனர்.  இறையருளாள் ஒரு துன்பமுமின்றி உயிர்தப்பிய திருஞானசம்பந்தர் சற்று கோபம் கொண்டு, என் இருப்பிடத்தை

எரிய செய்ததுபோல் இந்நாட்டு மன்னனின் மேனியும் வெப்பசூலை நோய் தாக்கிக எரியட்டும் என சாபமிட்டார்.

கண்களில் கருணையும், இதயத்தில் ஈரமும் கொண்டவர்கள் மகான்க்ள அனைவருமே  என்றாலும, முற்றும் துற்நத முனிவரென்றாலும் முள் எடுத்துக்குத்தினால்…..வலிக்கத் தானே செய்யும், வினைக்கு எதிர்வினை வந்து தானே தீரும.மன்னன் கூன் பாண்டியன் கடுமையான வெப்ப சூலை நோயால் சொல்லொண்ணா துயரடைந்தான்.

மன்னனுக்கு அரண்மனை வைத்தியர்கள் ம்டடுமல்லாது யார்யாரோ வந்தார்கள்,வைத்தியங்கள் பலவிதங்களில் நடந்தன ஆனால் பயன் தான் ஒன்றுமில்லை நாளுக்கு ;நாள் நோயின் கடுமை கூடியதே தவிர குறைநதபாடில்லை.

தன் அருட்சக்ததியால் மன்னனின் நோயை தீர்ப்பதாகக்கூறி சமணர்கள் முய்னறார்க்ள இதிலும் பய்ன ஒன்றுமில்லை.  இந்நிலையில்; அரசி மங்கையர் கரசியார் மன்னனிடம் ஞானசம்பந்தரின் அருட்திறத்தை எடுத்துக்கூறி அவரை அழைத்து வந்தால் நோய் நொடிப் பொழுதில் காணாமல் போகும் என்று கூறினார்.

ஒருவாறு இதையேற்ற பாண்டியன் திருஞானசம்பந்தரை பணிந்து நின்றான். சிவனடியார்களுககு அடியேன் என்ற பணிவுடன் கனிவும் கருணையும் கொண்ட ஞானசம்பந்தர் எல்லாம் வல்ல இறைவனான சிவனை மனதில் நிறுத்திதசிறிது திருநீற்றை கூன்பாண்டியன் உடலில் பூச  உடலில் உள்ள வெப்ப நோயும் உள்ளத்தில் இருந்த அறியாமையும் ஒருசேர நீங்கப்பெற்றான்.

மன்னனுக்கு நோய் தீர்ந்தது என்றாலும் பூரண குணம் ஏற்பட வேண்டமானால் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனை தரிசனம் பெற்று வா என்று நல்லாசி வழங்கினார்.

குரு வாக்கை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்ட மன்னன், சைவனாக மாறி சமணர்களின் தொடர்பை துண்டித்துக் கொண்டு படை சூழ திருவண்ணாமலை புறப்பட்டார். புறப்பட்ட இடத்திலிருந்து 241 கல் ;தொலைவு கடந்தவுடன் எழில் கொஞ்சும் ஓர் இடத்ததைக் கண்டான்

அவ்விடத்தை அடைந்தவுடன் இறைநினைவும் அமைதியும் அவன் மனதில் குடிகொண்டது.  இயற்கை அன்னை அவ்விடத்தை தன் அழகிய கைகளால் எழில் மிக்க ஒரு சிற்பம் போல செதுக்கியிருந்தாள். பச்சைபசேலென வயல வெளிகள, கனிவகை தரும் நெடு மரங்கள் வற்றாத நீர் பெருக்கும் குளங்கள், வற்றாத வாய்க்கால்கள் ஆநிரை மேயும் வயல், புல், வெளிகள் எவ்விதையையும் ஏற்றுக் கொண்டு உயிர்கொடுக்கும் வளமான மண், என நஞ்சை , புஞ்சை, நெல், கரும்பு, சோளம், கம்பு என எல்லா பயிர்களும் விளையும் அற்புதமான பூமியாக அது இருந்தது.

இயற்கை வளமும், எழிலும் கொண்ட அவ்விடத்தின் பெயர் என்ன? எனவினவினான் மன்னன் ஆம்பல் வனம் என்றனர் அவ்வூர்வாசிகள்.(இ;னறு இது காலத்தால் மருவி ஆம்பலாபட்டு என அழைக்கப்படுகிறது)

அந்த இடத்தின் மகிமையை ஆம்பல் மலர்கள் கொண்ட நீர்க் குளங்கள் நிறைந்த பகுதியாகையால் இபபெயர் பெற்றதையும அறிந்து மகிழ்ந்தான். உண்ணாமுலையன்னையின் திருமுகத்தையும் அண்ணாமலையாரின் எல்லையில்லா கருணையையும் மென்மையும் நினைவுபடுத்தும் இவ்வாம்பல் வனத்தில் அண்ணாமலையாருக்கு ஓர் ஆலயம் அமைத்தால் என்ன என்று எண்ணினான் மன்னன். அதற்கு செயல் வடிவம் கொடுத்தான் இறைவன். அன்று இரவே கனவில் எல்லையில்லா கருணை கொண்டு அத்தெய்வம் எழுந்தருளி, ஆலயம் அமைக்க அருள்பளிக்க ஆணையிட்டது.

ஆண்டவனின் கருணையையே பெற்றுவிட்ட மன்னன்  தன் எண்ணப்படி அருமையானதொரு  ஆலயத்தை அமைத்தான் திருவண்ணாமலைக்கு ஈடாக கூறப்படும் இவ்விடத்தை ஆம்பல் வனத்தில் தென் திருவண்ணாமலையாக அமைத்தான் சமதளத்தில் இயற்கை சூழ்ந்த பரப்பில் இத்திருக்கோயில் திருவண்ணாமலையோ கடல் மட்டத்திலிருந்து 167.44மீ உயரத்தில் அமைந்துள்ளது.

ஆம்பலாபட்டு இலுப்பை மரங்கள் - கு.ராமகிருஷ்ணன்

'பச்சை இலுப்பை வெட்டி

பவளக்கால் தொட்டி கட்டி

பவளக்கால் தொட்டிலிலே

பாலகனே நீயுறங்கு..’


-இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை.

இறுதிச் சடங்கின்போது, இறந்து போனவரின் தலையில் உறவினர்களெல்லாம் இலுப்பைப் பிண்ணாக்கு பொடித்து தயாரிக்கப்பட்ட அரப்பு வைத்து விடுவது இன்றளவும் தொடரும் ஒரு சடங்கு.

எண்ணெய், மருத்துவ உபயோகம், தின்பண்டம் என பல வழிகளில் பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரே மரம்... இலுப்பைதான். நிழல், காற்று, பூ, பழம், விதை என இன்னும் பல அற்புதங்களை அள்ளித் தந்து, அவர்களை நோய் நொடி இல்லாமல் வளமாக வாழ வைத்துக் கொண்டிருந்த பெருமைமிக்க இலுப்பை மரங்கள், இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம். ஊர் ஊருக்கு இலுப்பைத் தோப்புகள் இருந்த காலம் போய், பல கிராமங்களில் ஒரேயரு இலுப்பை மரத்தைக் கூட பார்ப்பது அரிதாக இருக்கிறது. 'இலுப்பை மரமா... அது எப்படி இருக்கும்?' என்று இன்றைய தலைமுறை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி அழிவின் விளிம்பில் உள்ள இலுப்பை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, விஜயன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பெரியவர்கள் சிலர்.

இந்த ஊரிலுள்ள சிவன் கோயில், மாரியம்மன் கோயில், அய்யனார் கோயில்... ஆகியவற்றுக்குச் சொந்தமான இடத்தில் இலுப்பை மரங்களைப் பாதுகாத்து வருகிறார்கள். புதிதாக நடவு செய்தும் வருகிறார்கள். அதனால் இந்த கிராமம் 'இலுப்பைத் தோப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான இலுப்பை மரங்கள் ஏறத்தாழ 150 ஆண்டுகளைக் கடந்தவை என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. காலத்தை வென்று கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 அடி உயரத்தில் 12 அடி சுற்றளவு வரையுள்ளவையாக இருக்கின்றன.

இவ்வூரைச் சேர்ந்த 95 வயதைக் கடந்த முதியவர் ரெங்கசாமி சேனாதிபதி, இலுப்பையுடன் கலந்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

''சின்னப் புள்ளையா இருந்தப்ப இங்க நூத்துக்கணக்கான இலுப்பை மரங்கள் இருக்கும். பூவெடுக்குற சமயத்துல ஊரே இலுப்பைப் பூ வாசனையில் கமகமக்கும். சாயங்கால நேரத்துல ஏகாந்தமா இருக்கும். அந்தக் காத்தை சுவாசிச்சாலே நோய், நொடி அண்டாது.

வெளவால் தின்னு போடுற இலுப்பைக் கொட்டைகளை நாங்க பொறுக்கிட்டுப் போய் வெயில்ல காயவெச்சு உடைச்சு பருப்பெடுப்போம். அதை செக்குல கொடுத்து ஆட்டி எண்ணெய் எடுத்து கோயில், வீடுனு விளக்கேத்துறதுக்கு பயன்படுத்துவோம். இந்த எண்ணெயில வர்ற புகையை சுவாசிச்சா... உடம்புக்கு நல்லது.

ஒரு மரத்துல வருஷத்துக்கு 50 கிலோவுக்கு மேல பருப்பு கிடைக்கும். ஒரு கிலோ பருப்பை செக்குல கொடுத்து ஆட்டுனா... 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். இலுப்பைப் புண்ணாக்கு, இலை ரெண்டுமே நிலத்துக்கு உரமாவும் பயன்படும். சுமார் 30 வருஷத்துக்கு முன்ன வரை, இதையெல்லாம் பயன்படுத்திதான் மண்ணை வளமாக்கி, செழிப்பா விவசாயம் செய்தோம்'' என்று நினைவலைகளில் நீந்தினார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த மூலிகை மருத்துவர் கதிரேசன், ''இலுப்பை ஒரு மூலிகை மரம். அதுல நிறைய நோய்களுக்கான மருந்து இருக்கு. முன்ன இலுப்பை எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. அதுல செய்யுற பலகாரங்களும்., சாப்பாடும் அவ்வளவு ருசியா இருக்கும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலி, வாயுக் கோளாறு... மாதிரியான எல்லா பிரச்னைகளுக்கும் இலுப்பை எண்ணெய்தான் மருந்து. புண்ணைக்கூட இந்த எண்ணெய் ஆத்திடும். ஆடு, மாடுகளுக்குக்கூட புண் வந்தா, இதைத்தான் தடவுவாங்க.

வெளிர் மஞ்சள் நிறத்துல இருக்குற இலுப்பைப் பூ கூட அற்புதமான மருந்து. இதை மூணு நாள் காய வெச்சு, நரம்பை நீக்கி, மண் சட்டியில வறுத்து சாப்பிட்டா... தோல் சம்பந்தபட்ட வியாதி, விரைவாத நோய் எல்லாம் குணமாயிடும். இலுப்பைப் பூ, கருப்பட்டி, சீரகம், மிளகையெல்லாம் போட்டு இடிச்சு, உருண்டையாக்கி, குழந்தைகளுக்கு கொடுத்தா... கணை நோய் நீங்கிடும். இதய நோய், பாம்புக்கடி, அசதி, ஆண்மைக் குறைவு, வாந்தி, பித்தம், காய்ச்சல்னு பல நோய்களுக்கு இலுப்பைப் பூவுல மருந்து தயாரிக்கறாங்க.

இலுப்பை இலை, பட்டையை வெந்நீரில் போட்டு குளிச்சாலும், தோல் நோய்கள் ஓடிடும். இலுப்பைப் பிண்ணாக்கைத் தலையில தேய்ச்சுக் குளிச்சா பேன், பொடுகெல்லாம் காணாம போயிடும். முடி கொட்டுறது நின்னுடும். இதை, சர்வரோக நிவாரணினே சொல்லலாம்'' என்று இலுப்பை புகழ் பாடினார்.

மர மீட்புக்குழுவைச் சேர்ந்த அண்ணாமலை, ''முன்ன கோயில் நிலங்கள்லதான் இலுப்பை மரங்கள் அதிகமா இருக்கும். அதனால அதை வெட்டுனா... தெய்வக் குத்தமாயிடும்னு பயம் இருந்துச்சு. அதனால, மரங்கள் பாதுகாப்பா இருந்துச்சு. காலப்போக்குல கோயில் நிலத்தையெல்லாம் ஆளாளுக்கு ஆக்கிரமிச்சுட்டாங்க. அதோட, அரசாங்கமும் பலவிதமான பயன்பாட்டுக்கு கோயில் நிலத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டதால, அதுல இருந்த மரங்களையெல்லாம் வெட்டுனதுல இலுப்பை அழிஞ்சு போச்சு. மிச்சமிருக்குற மரங்களையாவது பாதுகாக்கணும்றதுக்காக 'இலுப்பை மரங்களை வெட்டக் கூடாது’னு ஊர்ல முடிவெடுத்திருக்கோம்.

வெளவால் மாதிரியான ஜீவன்கள் சாப்பிட்டு போடற கொட்டைகள் மூலமாவும் மரங்கள் முளைக்கத் தொடங்கியிருக்கு. ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கத்தோட முயற்சியால கோயில், பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம்னு பல இடங்கள்ல இலுப்பைக் கன்னுங்கள நடவு பண்ணி, வளர்த்துக்கிட்டு இருக்கோம். ஆர்வத்தோடு வர்றவங்களுக்கு விதைகளை இலவசமா கொடுக்க தயாரா இருக்கோம்'' என்றார் ஆவல் பொங்க.

சிவனும் இலுப்பையும் !

'சித்திரையில் மழை பெய்தால்... சிவனுக்கு ஆகாது!’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது, 'இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால்தான் சிவபெருமானுக்கு மனம் குளிரும்’ என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில்தான் இலுப்பை மரத்தில் பூக்கள் பூக்கும். அந்த சமயத்தில் மழை பெய்தால், பூக்கள் உதிர்ந்து விதைகள் உருவாகாமல் போய் விடும். சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுவதற்கான இலுப்பை எண்ணெய்க்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்பதால்தான் இப்படியரு பழமொழி.

இன்றும் ஆம்பலாபட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இலுப்பை எண்ணெயில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. அதைப் பற்றி பேசிய கோயில் பூசாரி முருகையன், 'இந்த எண்ணெயில தீபம் ஏத்தினா, ரொம்ப நேரத்துக்கு நின்னு விளக்கு எரியும். இப்போ ஒரு லிட்டர் இலுப்பை எண்ணெய் 180 ரூபாய் வரை விலை போகுது'' என்றார்.

கோயிலுக்கும் இலுப்பைக்கும் உள்ள தொடர்பு எண்ணெயோடு நின்று விடவில்லை.... கோயிலின் கதவுகள், தூண்கள், உத்தரம், தேர் என்று பல்வேறு உபயோகங்களுக்கும் இலுப்பைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி தேர்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவநேசன் கூறும்பொழுது, ''தேக்கு போலவே இதுவும் வலிமையான மரம். பால்சத்து நிறைந்த இந்த மரத்தை கரையான் அரிக்காது. அப்படியே அரித்தாலும், கடைசியில் மண்ணாக மிஞ்சும் துகள்கள் மீது தண்ணீர் தெளித்தால், அதில்கூட பால் சத்து தங்கியிருக்கும். இதுதான் இலுப்பையின் அதிசய குணம்.

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட தேர்கள்கூட, இன்றளவும் தமிழகக் கோயில்களில் திடமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சோழமண்டலத்தில் இருக்கும் கோயில்களுக்கு இந்த மரத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதியில இலுப்பை மரங்கள் நிறைய இருந்ததுதான் காரணம்.

தேரில் உள்ள சிம்மாசனம், தேவாசனம், நடவாசனம், உருதலம், பூதப்பார் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்களை இன்றைக்கும் இலுப்பையில்தான் செய்கிறோம். சுமார் 60 வருடங்களை கடந்த மரங்களைத்தான் இதற்குப் பயன்படுத்துகிறோம். அதுபோன்ற மரங்களில்தான் முழுமையாக வைரம் பாய்ந்திருக்கும். ஒரு கன அடி இலுப்பை மரம் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. படகு செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். உப்புத் தண்ணீரிலும் இது தாக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்'' என்று இலுப்பை பற்றி புகழ்ந்தார்.

தஞ்சை பெரியக் கோயிலில் அமைந்திருக்கும் அம்மன் சந்நிதியின் வாயிற் கதவுகள், இலுப்பை மரத்தால் செய்யப்பட்டவை... இன்றைக்கும்  பொலிவோடு திகழ்கின்றன. இவை உருவாக்கப்பட்டு சுமார் 400  வருடங்கள் இருக்கலாம் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்




















குறிச்சி ஏரி


இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு விவசாயம்தான் முதுகெலும்பு. ஆற்றுத் தண்ணீர் பல ஆண்டுகளாக வராததால் ஆழ்குழாய் நீரைப் பயன்படுத்தியே விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதை நினைத்து கவலை கொண்ட அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரைச் சேமிக்கின்ற வகையிலான முயற்சியில் இறங்கினர்.

குறிப்பாக உலகின் பல நாடுகளில் பணிபுரியும் ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து ஊரில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரி காக்க வேண்டும் என நினைத்தனர். இதற்காக அவர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். ஊர் மக்களும் இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். அதேபோல் சுற்றுச் சூழல் மீது ஆர்வம் கொண்டவர்களும் இளைஞர்களின் இந்தச் செயலுக்கு உறுதுணையாக இருந்து பெரும் உதவிகளைச் செய்தனர். இதையடுத்து ரூ.18 லட்சம் செலவில் அந்த ஊரின் பெரிய ஏரியான குறிச்சி ஏரியைத் தூர்வாரினர்.



ஆண்டாள், குறிச்சி, குறும்பை என மூன்று பெரிய ஏரிகள் உள்ளன. அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பணிபுரியும் ஆம்பலாபட்டு ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் நிதி திரட்டிக் கொடுத்தனர்.

மேலும் அங்கிருந்தபடியே ஏரி தூர்வாரும் பணியை முறைப்படுத்திச் சரியான திட்டமிடலுடன் செய்வதற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கினர். அதன்படி 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறிச்சி ஏரியைத் தூர்வாரும் பணி தொடங்கியது. முதற்கட்டமாகக் குளத்தின் கரைகளில் மண்டிக் கிடந்த புதர் செடிகளை ஊர் மக்களைக் கொண்டு அகற்றினோம். பின்னர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குளத்தின் கரைகளைப் பலப்படுத்தியதுடன் 8 அடி ஆழத்துக்கு ஏரி தூர்வாரப்பட்டது.

மேலும் இந்த இடம் பறவைகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும். ஏரியில் இருக்கின்ற நீர் ஆவியாவதைத் தடுக்க வேண்டும். நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காக ஏரியில் 25,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். ஏரியின் நடுவில் மூன்று இடங்களில் 50 அடி அகலத்தில் வட்ட வடிவில் மேடான திட்டு அமைத்து அதன் மேல்பகுதியிலும், ஏரியின் கரைப்பகுதியிலும் அரசம், மகிழம், இலுப்பை உள்ளிட்ட மரக்கன்றுகளை ஊன்றினோம். அத்துடன் பனை விதைகளும் விதைத்தோம். எங்கள் கண்களாக இவற்றைப் பராமரித்து வருகிறோம்.



ஏரி தூர்வாரி முடித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. எல்லோரும் இந்த ஏரியில் நீர் நிரம்ப வேண்டும் என ஏக்கத்துடன் காத்துக்கிடந்தனர். அவர்களின் ஏக்கத்தைப் போக்குகின்ற வகையில் ஒரு மாதத்துக்கும் மேலாக அடிக்கடி நல்ல மழை பொழிந்தது. இதன் மூலம் காட்டாறுகளில் வந்த தண்ணீர் எங்கள் ஊர் ஏரியை நிரப்பியது. இதன் மூலம் ஏரி முழுக்கத் தண்ணீர் நிரம்பி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

இதைக் கண்ட ஊர் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. எல்லோரும் ஏரிக்குத் திரண்டு வந்து செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பெரியவர்கள் இயற்கையை வணங்கிக் கையெடுத்துக் கும்பிட்டனர். வெளிநாட்டில் இருக்கும் இளைஞர்கள் அடைந்த பேரானந்தத்திற்கு அளவே இல்லை. . ஏரி நிரம்பியதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வரும் கோடையில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது. மரக்கன்றுகளும் செழிப்பாக வளரத் தொடங்கிவிட்டன. பறவைகள் ஏரியை வட்டமடித்து வசிக்கத் தொடங்கிவிட்டன. கண்ணுக்கு எட்டிய தூரம் தண்ணீரால் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. 



``35 வருடங்களுக்குப் பிறகு எங்க ஊர் ஏரியில் முழுமையாக நீர் நிரம்பியிருக்கிறது. இதனால் எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சொந்த முயற்சியில் ஏரியைத் தூர் வாரினோம். அதில் இயற்கை தண்ணீரை நிரப்பி எங்களைத் தட்டி கொடுத்திருக்கிறது. ஏரி மட்டுமல்ல, இப்பதான் எங்க மனசும் நிறைஞ்சு இருக்கு'' என ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.



ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மாதுரார்



தியாகி ஆம்ப‌ல் ஆறுமுக‌ம் என்ற ஆம்பலாபட்டு ஆறுமுக‌ம் மாதுரார்  நினைவு தூண் (குடிக்காடு)


1943ல் ஆம்பலாப்பட்டில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது. புண்ணியம் கதிரேசன் (மாதுரார்)  தலைமையில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞரான ஆறுமுகம் (மாதுரார்) தன்னையும் இணைத்துக்கொண்டு செயல்ப்பட்டார். ஆம்பலாப்பட்டு மதுக்கூர் ஜமீனுக்கு உட்பட்ட கிராமமாகும். 

ஆம்பலாப்பட்டு முதல் வெண்குழி வரையிலான மதுக்கூர் ஜமீன்தாருக்கு சொந்தமான 12 கிராமங்களில் நிலவிய நிலவுடைமைக் கொடுமைகளை எதிர்த்து ஆறுமுகம் போராடினார். விவசாயி களை மிரட்ட பயன்படுத்தப்பட்ட ஜமீனின் பிரம்சேரி நோட்டுகளை தீவைத்துக் கொளுத்தும் போராட்டத்தில் முன்னணியாக இருந்தவர் ஆறுமுகம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி, பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார். அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது .அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்ட சேர்ந்த வெ.அ.சுப்பையன், எஸ்.ஏ.முருகையன், டி.காசிநாதன், வாட்டாகுடி இரணியன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர். தேடுதல் வேட்டையில் இரணியனும், ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள். 05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள். ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள். உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள். காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்

நெஞ்சை துலைத்தன. திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை

வடசேரி கிராம சவுக்குத் தோப்பில் இரணியனும், ஆறுமுகமும் சந்தித்து விவாதித்தபோது துரோகியால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஆறுமுகமும், இரணியனும் போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட சிவராமன், இரணியன், ஆறுமுகம் ஆகியோரின் உடல் களை அவர்களது உறவினர்களிடம் ஒப்ப டைக்க மறுத்து 1950ம் ஆண்டு மே 5ம் தேதி பட்டுக்கோட்டை ரயில்வே கேட் அருகிலுள்ள மைதானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். அந்த தியாகிகள் விதைக்கப் பட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால்அவர்களது தியாகம் இன்றும் ஜொலிக்கிறது. செங்கொடி இயக்கத்தின் மகத்தான தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.


தியாக சீலர் தோழர் எஸ்.ஏ.முருகையன் மாதுரார்  



(கே ஜீவபாரதி அவர்களின்  நேர்காணல் கட்டுரை)

ஒட்ட வெட்டிய தலைமுடி... உருவத் தோற்றத்திற்குக் கம்பீரத்தைக் கூட்டும் சிவப்புத் துண்டு... ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருக்கான தோற்றம்... இதுதான் தோழர் எஸ்.ஏ.முருகையன். எண்பது வயதானவர் என்று எண்ண முடியாத அளவுக்குப் பேச்சும் செயலும். இதோ! ஆம்பலாப்பட்டில் பிறந்த அக்கினிக் குஞ்சுகளில் ஒருவரான தோழர் எஸ்.ஏ. முருகையன் என் வினாக்களை நேர் கொண்டு விடை தருகிறார்.


நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்த பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

இந்த ஊரில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த மு.அ.குழந் தையன் சேனாதிபதியும், அய்யாவுத் தேவரும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த புண்ணிய கதிரேசன் மாதுராரும் 1937 ஆம் ஆண்டில் இந்த ஆம்பலாப்பட்டுக்கு வந்தனர்.

மு.அ.குழந்தையன் சேனாதிபதியும், அய்யாவுத் தேவரும் சிங்கப்பூரில் வாழ்ந்தபோதே பகுத்தறிவுச் சிந்தனை யாளர்களாகவும், தந்தை பெரியார்மீது பற்றுக் கொண்டவர்களாகவும் இருந் திருக்கின்றனர். அதே பற்றுடன் அவர் கள் இருவரும் ஆம்பலாப்பட்டுக்கு வந்தனர்.

இலங்கையிலிருந்து இந்த ஊருக்கு வந்த புண்ணிய கதிரேசன் மாதுரார் ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை மிக்கவராகவும், அறிவாற்றல் மிக்க வராகவும் திகழ்ந்தார்.

1938  - ல் புண்ணிய கதிரேசன் மாதுரா ருக்கும் தைலம்மைக்கும் பகுத்தறிவு முறைப்படி திருமணம் நடந்தது. தாலி கட்டாமல் மணமக்கள் மாலை மட்டும் மாற்றிக் கொண்டனர். ஆம்பலாப்பட்டு கிராமத்தில் நடந்த முதல் பகுத்தறிவுத் திருமணம் இதுதான். அப்போது எனக்கு வயது 12. இந்தச் சம்பவம் என் சிறு வயதிலேயே ஆழமாகப் பதிந்து விட்டது.

குழந்தையன் சேனாதிபதி, புண்ணிய கதிரேசன் மாதுரார், பூவணம் என்ற கிராமத்தில் பிறந்து ஆம்பலாப்பட்டில் இருந்த தன்னுடைய அக்காள் வீட்டில் தங்கியிருந்த முத்துக்காமாட்சி, அய்யாவுத் தேவர் ஆகியோர் 1939 - ல் ஆம்ப லாப்பட்டில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர். அப்போது 16 பேர் காங் கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். அதில் நானும் ஒருவன். இப்படித்தான் என்னு டைய பொதுவாழ்க்கை தொடங்கியது.

பட்டுக்கோட்டை ஜமீன் ஒழிப்பு மாநாடு பற்றி...

1943 - ல் ஒரே சமயத்தில் இந்த ஊரில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையும், விவ சாய சங்கமும் அமைக்கப்பட்டது. இரண்டிற்கும் புண்ணிய கதிரேசன் மாதுரார் செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். செயலாளர் பொறுப்பேற்ற தும் 'புண்ணிய' என்ற அடைமொழியும், 'மாதுரார்' என்ற சாதிப் பெயரும் நீக்கப் பட்டு 'தோழர் சி.கதிரேசன்' என்று அழைக்கப்பட்டார்.

1946 - ல் பட்டுக்கோட்டையில் ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பாப்பாநாடு ஜமீன் தார், மதுக்கூர் ஜமீன்தார், அத்திவெட்டி ஜமீன்தார், சேத்தன்குடி ஜமீன்தார், பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை ஆகியோருடன் காங்கிரஸ்காரர்களும், நில உரிமையாளர்களும் இணைந்து பட்டுக்கோட்டை ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாட்டைத் தடுக்கப் பெரும் முயற்சி எடுத்தனர். இதை அறிந்த நாங்கள் ஆம்பலாப்பட்டு மக்களைத் திரட்டிக் கொண்டு, கரம்பயம் மக்களையும் இணைத்துக் கொண்டு மாநாட்டிற்குச் சென்றோம்.

பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்வத் துடன் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பெண்களும் எழுச்சி யுடன் கலந்துகொண்டது எதிரிகளை குலை நடுங்கச் செய்தது. எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து மிகச் சிறப்பாக பட்டுக்கோட்டை ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாடு நடந்து முடிந் தது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானம் 'வெள்ளையனே வெளியேறு' என்பதாகும். இந்த மாநாட்டின்போது ஆம்பலாப்பட்டு, கரம்பயம் மக்களால் பட்டுக்கோட்டை நகரம் முழு வதுமாக முற்றுகையிடப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

சாதியக் கொடுமைகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?

சாணிப்பால், சவுக்கடி கொடுமைகள் ஆம்பலாப்பட்டில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. ஆனால் தீண்டாமை போன்ற இழிநிலைகள் இங்கும் இருந் தன. மணநாளன்று மணமகன் குதிரை யில் வலம் வருவது இந்த ஊர் வழக் கம். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்த ஊரில் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து நம் கட்சியும், விவசாய சங்க மும் போராடி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மணமகனும் குதிரையில் மண நாளன்று ஊர்வலம் வர அனுமதி வாங்கித்தந்தது.

பட்டுக்கோட்டை தாலுகா தாழ்த்தப்பட்டோர் லீகின் செயலாளராக 1947 ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்த ஆம்பலாப் பட்டு தோழர் பி. கோவிந்தசாமியைக் கொண்டு, அந்த அமைப்பின் மாநாட்டை ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் நடத்த முடிவு செய்தது. இந்த மாநாட்டில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆறுமுகம், சி.கதிரேசன், ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். இதை விரும்பாதவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை வெறுப்பவர் களும், சாதிப்பித்துக் கொண்டவர் களும் ஒன்றிணைந்து தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்ட எங்களை ஊர்க் கட்டுப்பாடு என்ற போர்வையில் ஒதுக்கி வைக்க முயன் றனர். நம் கட்சிக்கும், விவசாய சங்கத் திற்கும் அன்று இருந்த செல்வாக்கால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையின்போது பிற சாதியினர் வீடுகளில் அடுப்பு தயார் செய்து கொடுத்தல், குப்பை கூளங் களைச் சுத்தம் செய்தல் போன்ற பணி களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஈடுபடுத் தப்பட்டனர். அத்தகைய பணிகளைச் செய்த அவர்களுக்குச் சோறு மட்டும் தான் கூலியாகக் கொடுக்கப்பட்டது. டீ கடைகளில் தனி டம்ளர் முறை இருந் தது. கோயில்களுக்குள் அரிஜன மக்கள் நுழைவதற்குத் தடையும் இருந் தது. இவை அனைத்தையும் நம் கட்சி யும் விவசாய சங்கமும் எதிர்த்துப் போராடி தலித் மக்களுக்குச் சம உரிமையை வாங்கித் தந்தது.

அடக்குமுறை காலத்தில் நீங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தி யாவில் தடை செய்யப்பட்டதும், தலை வர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். ஆம்பலாப்பட்டிற்கு அருகில் இருக்கும் செம்பாளூர்க் காடு களில் கட்சி ஊழியர்களுக்கு அரசியல் வகுப்பும், போராட்டப் பயிற்சியும் தலை வர்களால் கொடுக்கப்பட்டது.

இதை அறிந்த செம்பாளூர் நிலச்சு வான்தாரும், காங்கிரஸ் கட்சிக்காரரு மான சாம்பசிவ ஐயர் கம்யூனிஸ்டு களைக் காட்டிக் கொடுக்க முயன்றார். தோழர்கள் இரணியன், ஆறுமுகம், ரகுநாத வன்னியர் ஆகியோருடன் இணைந்து சாம்பசிவ ஐயரின் முயற் சியை முறியடிக்க நினைத்தோம். இந்தக் காலகட்டத்தில் தோழர்கள் ஏ.கே.கோபாலன், அனந்த நம்பியார், பி.இராமமூர்த்தி, எம்.வி.சுந்தரம், மணலி கந்தசாமி, பி.சீனிவாசராவ், எம்.காத்தமுத்து, எம்.மாசிலாமணி ஏ.வி.ராமசாமி, கே.பி.நடராசன், ஏ.எம்.

கோபு போன்ற மத்திய, மாநில, மாவட்ட கட்சித் தலைவர்கள் எங்களுக்கு வழி காட்டினர்.

போலீசுக்கு கம்யூனிஸ்டுகளைக் காட்டிக் கொடுக்க முயன்ற சாம்பசிவ ஐயரின் வீடு தாக்கப்பட்டது. இதைக் காரணமாகக் கொண்டு தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும், வீட்டுப் பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகவும், அரசுக்கு எதி ராகச் செயல்படத் திட்டமிடுவதாகவும் ஆம்பலாப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 68 பேர்மீது சாம்பசிவ ஐயர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு அரசு வழக் காக மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர் களைக் கைது செய்வதற்காக சிறப்புக் காவல்படை ஆம்பலாப்பட்டை முற்று கையிட்டது. போலீசார் ஊருக்குள்  புகுந்து மிருகத்தனமாக அடக்குமுறை களைச் செய்தனர்.

தோழர்கள் இரணியன், ஆறுமுகம், வெ.அ.சுப்பையன், டி.காசிநாதன் ஆகியோருடன் நானும் தலைமறைவானேன். இராணியன், ஆறுமுகம், மணலி கந்தசாமி ஆகியோருடன் நானும் ஆம்பலாப்பட்டில்தான் தலை மறைவாக இருப்பதாக நினைத்து எங்களை உயிருடனோ பிணமாகவோ பிடிக்கப் போலீசார் முயன்றனர். இதைச் செய்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசளிப்பதாகவும் அறிவித்தனர். தோழர்கள் வெ.அ.சுப்பையன் டி. காசி நாதன் ஆகியோர் வீட்டையும், என் வீட்டையும் போலீசார் தாக்கி இடித்துத் தள்ளினர்.

கரம்பயம், கீழக்கோட்டை ஆகிய பகுதி களில் தலைமறைவாக இருந்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் சிங்கார வேலரின் 'மார்க்சிய மெஞ்ஞானம்' என்ற நூலைப் படித்துத் தெளிவு பெற் றேன். தலைமறைவாக இருந்த என்னை என் தந்தை வந்து சந்தித்து என்னை மனமாற்றம் செய்ய முயன் றார். "எனக்குச் சேரவேண்டிய சொத்து களை தங்கைக்குக் கொடுத்து விடுங் கள். நான் உயிரோடு மீண்டு வந்தால் உங்களைச் சந்திக்கிறேன்" என்று சொல்லி என் தந்தையை அனுப்பி வைத்தேன். ஆம்பலாப்பட்டுப் பகுதி

யிலிருந்து தலைமறைவாக சென்னைக்குச் சென்றேன். இங்கு தான் தோழர்கள் வெங்கடேச சோழகர், மதனகோபால், மங்களசாமி பி.சீனி வாசராவ் ஆகியோர் தொடர்பு எனக்கு ஏற்பட்டது.

மூன்றரை ஆண்டு தலைமறைவு வாழ்க்கை முடிந்து 1953 பிப்ரவரி 23 அன்று தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரா னேன். ஒருவாரம் விசாரணை நடந் தது. நான் ஆளான மூன்றாம் நாள் என் தந்தை இறந்தார். 37 - வது நாள் சென்னை உயர்நீதிமன்றம் எனக்கு ஜாமீன்  வழங்கியது.








ஆம்பலாப்பட்டு அரவிந்த் அன்புக்குமார் சேனாதிபதி

இந்திய அளவில் நடைபெற்ற "Mr.India" போட்டியில் 70 கிலோ பிரிவில் தஞ்சை மாவட்ட ஆம்பலாப்பட்டு கிராமத்தை  சேர்ந்த அரவிந்த் அன்புக்குமார் சேனாதிபதி  7ஆம் இடம் பெற்றார்.




வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்