சனி, 25 ஏப்ரல், 2020

மாமனிதர். M.R. சுவாமிநாத மழவராயர்



புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டம், முதுகுளத்தில் பூத்து அரியாணிப்பட்டியில் அனைத்து மக்களையும் அரவணைத்து அறம் செய்து வாழ்ந்த மாமனிதர். M.R. சுவாமிநாத மழவராயர்.



கந்தர்வகோட்டையை கட்டமைத்த சிற்பி. கந்தர்வகோட்டையை தாலுகா, மற்றும் ஒன்றியம் என தரம் உயர்த்தப்படக் காரணமானவர்களில் ஒருவர். கந்தர்வகோட்டையின் "Godfather" என்று சொல்லத்தகும் மாமனிதர்.

புதுக்கோட்டை மாவட்ட MGR கால அரசியலில் தவிர்க்க முடியாத மக்கள் சக்தி ஒன்றியப் பெருந்தலைவர் தெய்வத்திரு. M.R. சுவாமிநாத மழவராயர் அவர்களின் 24 ஆம் ஆண்டு (11.05.2020) நினைவஞ்சலி தினத்தில் அவர்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்கி புகழஞ்சலி செலுத்துவோம்.



2020 ஆம் ஆண்டு கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு தலைவராக அதிமுக வேட்பாளர் ரெத்தினவேல் என்ற M.R.S. கார்த்திக் மழவராயர் வெற்றி பெற்றுள்ளார். 






மலையக மக்களுக்காக போராடிய ப.ரெங்கராஜ் மழவராயர்



மலையகத்தின் மூத்ததொழிற்சங்கவாதி காலஞ்சென்ற கே.பி. ரெங்கராஜ், புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளனூர் கிராமத்தில் 1930ம் ஆண்டு பழனியாண்டி மழவராயர் அவர்களுக்கு மகனாகப் பிறந்த ரெங்கராஜ் தனது ஐந்து வயதில் பெற்றோருடன் இலங்கை வந்து பதுளை தெமோதரையில் குடியேறினார்.

பாடசாலைப் படிப்பை நிறுத்தி விட்டு, தனது பதினாறாவது வயதிலே இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தன் தோழர்களான இரா. இளஞ்செழியன் போன்றோருடன் மேற்படி கழகத்தின் நேரிய கொள்கைகளை மலையகமெங்கும் எடுத்துச் சென்று செயற்படுத்த ரெங்கராஜ் மழவராயர் முனைந்தார்.

இவரின் புரட்சிக் கருத்துகளாலும் போராட்ட முனைப்பினாலும், இளைஞர் மத்தியில் பெருஞ் செல்வாக்குப் பெற்றார்.

பெரியாரின் கருத்துகளைப் பின்பற்றி சமூக சீர்த்திருத்தம் பேசிய இவர்களால் சமூகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்புகள் இலங்கை அரசைத் திரும்பிப் பார்க்கச் செய்து விட்டன. இலங்கை அரசினாலும், இடது சாரிகளாலும், இவர்களின் இயக்கம் தடை செய்யப்பட்டதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 1946 இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்ட ரெங்கராஜ் அவர்கள், சாதாரண தோட்டக் கமிட்டித் தலைவராகத் தெரிவாகி பதுளை மாவட்டத் தலைவராகவும், தொடர்ந்து உதவிப் பொதுச் செயலாளராகவும் சேவையாற்றினார். இவர் இ.தொ.காவில் உதவிப் பொதுச் செயலாளராக சேவையாற்றியுள்ளார்.

1972 இல் இலங்கை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு ஊடாகத் தோட்டங்களைத் தனியாருக்குப் பிரித்தளிக்கும் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பல போராட்டங்கள் கண்டி மாவட்டத்தில் வெடித்தன. அத்தகைய போராட்டங்களில் ஒன்றே 'டெவன் போராட்டம்'. 

தாங்கள் பிறந்த மண்ணைக் காக்கப் போராடிய தோட்ட மக்களை முன்னின்று வழிநடத்தியவர்களுள் ரெங்கராஜ் மழவராயரை மலையக சமூகம் இலகுவில் மறந்து விட முடியாது. 

டெவன் போராட்டத்தில் தன் மண்ணைக் காப்பதற்குப் போராடியபடி, பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சிவனு லட்சுமணன் மற்றும் ரெங்கராஜ் ஆகிய இருவரும் மலையக மக்களுக்காக வாழ்ந்தவர்களாவர்.

இதேபோல் ஊவா மாகாணத்தில் எழுந்த கீனகலை போராட்டம், கலுகலைப் போராட்டம், ரோபேரிப் போராட்டம் போன்றனவும் குறிப்பிடத்தக்கனவாகும். வெள்ளையர்களையும், முதலாளி வர்க்கத்தினரையும் எதிர்த்துப் போராடி, மலையக மக்களின் உரிமைகளைத் தட்டிக்கேட்டுப் புரட்சிகள் புரிந்த ரெங்கராஜ் மழவராயர் இச்சமூகம் மறந்து விட முடியாது.

பல நாட்களாக மேற்படி போராட்டங்கள் சம்பளமற்ற போராட்டங்களாகவும், உணவுத் தியாகப் போராட்டமாகவும் தொடர்ந்தன. இத்தகைய பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வழிநடத்திய காலஞ்சென்ற ரெங்கராஜ் மழவராயர் ஆவார்.

45 வருடங்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுக்கும், காங்கிரஸிற்கும் தன் இறுதிக் காலம் வரை விசுவாசியாகவே இருந்தவர் ரெங்கராஜ் மழவராயர். எத்தகைய சூழலிலும் தன் கொள்கை மாறாதவராக செயலாற்றியவர் ரெங்கராஜ் மழவராயர். 

அவரது இறுதி ஊர்வலத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டவர் அவர்.

அமரர் ரெங்கராஜ் கட்சி பேதமின்றி அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவர். தனது கொள்கைக்கேற்ப சீர்த்திருத்தத் திருமணம் செய்து வாழ்ந்த இவர், தன் தோழர்கள் பலருக்கும் சீர்த்திருத்த மணம் செய்வித்ததுடன், மூவின மக்களுடனும் சுமுகமான உறவுப்பாலம் அமைத்து வாழ்ந்தார். இவருடைய நாமம் மலையக வரலாற்றில் இருந்து அழிக்க முடியாதது.

30.12. 2019 ஆண்டு 28 வது நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டது.

நன்றி : பதுளை. எம். செல்வராஜ்

நடிகர் வினுச்சக்கரவர்த்தி தேவர்




வினு சக்ரவர்த்தி (டிசம்பர் 15, 1945 - ஏப்ரல் 27, 2017) மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்தார்.

இவர் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மேல்புதூரில் ஆதிமூல தேவருக்கும் மஞ்சுவாணி அம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு பிரேமகாந்தன் என்ற இளைய சகோதரரும், குண்டலகேசி என்ற இளைய சகோதரியும் உள்ளனர். இவரின் மனைவி கர்ண பூ ஆவார். இவரின் மகள் சண்முக பிரியா பேராசிரியையாக அமெரிக்காவில் உள்ளார். மகன் சரவண பிரியன் இலண்டனில் மருத்துவராக உள்ளார். இவர் இராயப்பேட்டை வெஸ்லே பள்ளியிலும் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலும் படிப்பை மேற்கொண்டார். வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி நடித்து, இயக்கி உள்ளார்.



இவர் தமிழ் நடிகரும், எழுத்தாளரும் ஆவார்.தமிழ், மலையாளம், தெலுங்குமொழி படங்களில் 1000–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வில்லன், நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். கோபுரங்கள் சாய்வதில்லை, ராஜாத்தி ராஜா, குரு சிஷ்யன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். இறுதியாக 2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் நடித்து இருந்தார். பள்ளி, கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி, இயக்கி நடித்துள்ளார். பின்னர் ரெயில்வேயில் துணை ஆய்வாளராக 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

இவர் கன்னட இயக்குனர் புட்டண்ணாகனகலிடம் கதையாசிரியராக சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் கதை எழுதிய பரசக்கே கண்டதின்மா என்ற படம் ரோசாப்பு ரவிக்கைகாரி என்று தமிழில் எடுக்கப்பட்டது. . பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர,  எதிர்நாயகன் வேடங்களிலுமே நடித்துள்ளார். இவர் தமிழிலேயே மிகப்பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.

இவர் இருப்பு துணை ஆய்வாளராக 6 மாதம் ஐஸ் அவுஸ் பகுதியில் பணியாற்றிவிட்டு தென்னக இருப்புப்பாதையில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் கதையாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய பரசக்கே கண்ட தின்மா என்ற படம் வெற்றிபெற்றதையடுத்து அதை திருப்பூர் மணி தமிழில் தயாரிக்கத் திட்டமிட்டார். அதன் பொருட்டு இவர் தமிழ் திரையுலகுக்கு வந்தார். பரசக்கே கண்ட தின்மா என்ற படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று தமிழில் சிவகுமாரை கொண்டு எடுக்கப்பட்டது.

குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை நடிகர்... என எல்லா கேரக்டர்களிலும் ஜொலித்தவர். வினுசக்கரவர்த்தியின் நடிப்புக்கு நிகராக இவரது குரலும் மிகப் பிரபலம். யாராவது ஒரு மிமிக்ரி கலைஞர் இடுப்பில் கையை ஊன்றிக்கொண்டு அல்லது விசிறிக்கொண்டு, `ஆங்...’ என கட்டைக் குரல் எடுத்து உறுமலாக ஒரு வசனத்தைப் பேச ஆரம்பித்தால், நிச்சயம் அவர் வினுசக்கரவர்த்தி வாய்ஸைப் பேசப் போகிறார் என்று சத்தியம் செய்துவிடலாம். அவ்வளவு புகழ்பெற்றது அவரது குரல் கீர்த்தி.

வெள்ளி விழா கண்ட `ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம். இந்தப் படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைக்கு வந்தவர் வினுசக்கரவர்த்தி. அதற்குப் பிறகு ஆயிரம் படங்கள் தாண்டி திரைத்துறையில் நின்றார். அவரது 1000-வது படம் `முனி’.

`வண்டிச்சக்கரம்’ படத்தின் மூலம் விஜயலட்சுமி என்கிற பெண்ணை சில்க் ஸ்மிதாவாக அறிமுகப்படுத்தியவர் வினுசக்கரவர்த்திதான்.

இயல்பிலே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் வினுசக்கரவர்த்தி என்பதை அவரது டிவி பேட்டிகளில் காண முடியும்.

ஒரு பேட்டியில், `தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலோடு வினுசக்கரவர்த்தி நடிக்கும்போது, அவரது தொந்தியைக் குறைப்பதற்கு கமல் ஒரு வைத்தியம் சொல்லியிருக்கிறார். 

அது இதுதான்... ```காலையில் படுக்கையைவிட்டு எந்திரிக்கிறதுக்கு முன்னாடி உங்க கைகள் ரெண்டையும் படுக்கையில் ஊனி, கால்களையும் உடலையும் தலையையும் தரையில் படாமல் எழும்பி பத்து நொடிக்கு நில்லுங்க. அப்படிச் செஞ்சிவந்தீங்கன்னா கொஞ்ச காலத்துக்குள் உங்கள் தொந்தி குறைஞ்சு நீங்க ஸ்லிம் ஆகிடுவீங்க. இந்த யோகாசனத்துக்குப் பெயர் மயிலாசனம்’ என்று கமல் சொன்னார். அவ்வளவு கவனமா கேட்டுக்கிட்டேன். ஆனா, ஒருநாள்கூட அதைச் செய்யவே இல்லை’’ எனச் சொல்லிவிட்டு கட்டைக்குரலில் வெடித்துச் சிரித்திருக்கிறார். 

``அதே நேரத்தில் கொஞ்சம் முரட்டுத்தனம் கொண்டவர்தான். `நல்லா இருக்கீங்களாணே?’ன்னு கேட்டா, `ஏன் நல்லா இல்லைன்னா நீ நல்லா வைக்கப்போறீயா?’னு கேட்பார். ஆனா, அவரோடு பழகிய என்னைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். அவர் எத்தனை கனிவானவர் என்று’’ என்கிறார் நடிகர் ராதாரவி.

``நான் அப்போ அதிமுக பேச்சாளர். கிருஷ்ணகிரியில் ஒரு கூட்டத்தில் பேசுறதுக்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தேன். பக்கத்துல வினுசக்கரவர்த்தி தங்கியிருந்திருக்கார். அது எனக்குத் தெரியாது. அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தேன். ஒரே கூட்டம். சண்டைச் சச்சரவு. இடையில் நின்னுகிட்டு வினுசக்கரவர்த்தி அண்ணன் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தார். அப்புறம் விசாரிச்சப்போதான் தெரிஞ்சது. அவரோடு பேசவந்தவங்கிட்ட ஏதோ தவறா வார்த்தையை விட்டுட்டார். அப்புறம் நான் புகுந்து பேச சண்டை சமாதானம் ஆச்சு’’ என்கிற ராதாரவி, வினுசக்கரவர்த்தியும் தானும் ரஜினியின் சிவா படத்தில் நடித்தபோது நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

``வினுசக்கரவர்த்தி அண்ணன் எப்போதும் நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணுவார். வீட்டிலிருந்து வெள்ளைப் பேன்ட், வெள்ளை சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு இன் பண்ணி, கூலிங் க்ளாஸ் மாட்டிக்கிட்டு வந்தார். பம்பாய்ல் ஃபைட் சீன் ஷூட்டிங். `ஏன்ணே இப்படி வேஷம் கட்டி வந்திருக்கீங்க? அங்க ஃபைட் சீன்ல வில்லனான உங்களை ஹீரோ கீழே போட்டு புரட்டி எடுக்கப்போறார். அதுக்கா இப்படி?’னு கேட்டேன். `இல்லை ரவி, ஷூட்டிங் முடிஞ்சதும், குளிச்சிட்டு ஃபிளைட்ல ஏறி உக்கார்ந்தா ச்சும்மா ஜம்முன்னு தூங்கிட்டு வீட்டுக்கு போகணும். அதுக்குத்தான் இப்படி’ன்னு சொன்னார். ஆனா, சண்டைக் காட்சி முடிய நேரமாகி அப்படியே அழுக்குத்துணியோடு ஃபிளைட் பிடிக்க ஓடினார் வினுசக்கரவர்த்தி அண்ணன். இதை எல்லாம் பார்த்த ரஜினி அன்னிக்கு விழுந்து விழுந்து சிரிச்சார். இதுதான் வினுசக்கரவர்த்தி அண்ணன். இன்னொரு சம்பவம் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் ஒரு படம் எடுக்க ஆரம்பித்து ஒரே நாள் ஷூட்டிங்கோடு நிறுத்திக்கொண்டார். `ஏன்ணே?’னு கேட்டேன். `இல்லை... இந்தப் படம் சரியா வந்தாலும், போட்ட காசுகூட கைக்கு வராதுன்னு தோணுது. அதான் நிறுத்திக்கிடேன்’னு சொன்னார். அந்தப் படத்துல நடிக்க நடிகர் நடிகையருக்கு அட்வான்ஸாகக் கொடுத்திருந்த பணத்தைக்கூட அவர் திரும்பக் கேட்கவில்லை’’ என்கிறார்.

வினுசக்கரவர்த்தி வாழ்வின் இன்னொரு கோணத்தைச் சொல்கிறார், அவரோடு மிகவும் நெருங்கிப் பழகிய நடிகர் சிவகுமார்...

``அந்தக் காலத்தில் இருந்துவந்த நீள நீள வசன பாணியை `வண்டிச்சக்கரம்’, `ரோசாப்பூ ரவிக்கைக்காரி...’ போன்ற படங்களில் உடைத்திருப்பார் வினுசக்கரவர்த்தி. எனக்குத் தெரிந்தவரை சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்து நடத்திக்கொண்டு போனவர்களில் வினுசக்கரவர்த்தி முக்கியமானவர். கரடுமுரடானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் அவரைப் பற்றிச் சொல்வார்கள். இவையெல்லாம் ஒழுக்கமாக இருக்க அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்களாகத்தான் இருக்கும். அதனால்தான் அவரது பிள்ளைகளை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்கினார். ஒரு மகன்; ஒரு மகள். மகன் சரவணபிரியன் லண்டனில் மருத்துவர். மகள் சண்முகபிரியா அமெரிக்காவில் பேராசிரியர். பரபரப்பான சினிமா வாழ்வையும் அமைதியான குடும்ப வாழ்க்கையும் பெற்ற, எனது நண்பர் வினுசக்கரவர்த்தி ஆன்மா சாந்தியடைய வேண்டும்’’ என்றார் சிவகுமார்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் ஏப்ரல் 27, 2017 அன்று மாலை 7 மணியளவில் விண்ணுலகை அடைந்தார்.













நன்றி : 
கள்ளர் முரசு மாத இதழ் நிறுவனர் ,ஆசிரியர் ந.சுரேஷ்குமார்

ஜெயங்கொண்ட சோழீஸ்வரம் எனும் ஜெயங்கொண்ட நாதர் ஆலயம், மன்னார்குடி




இராஜாதி ராஜ சதுர்வேதிமங்கலம்:

மன்னை என்ற இவ்வூர் பற்றி அறிய சோழமன்னர்களுது கல்வெட்டுச்சாசனங்களை தவிற பிற தொன்மையான சான்றுகளான சங்க இலக்கியங்களோ, பிற்கால இலக்கியங்களோ துணைபுரியவில்லை. சோழநாட்டு வரலாற்றை பல்வேறு கோணங்களில், நிலவியல் துணைகொண்டு ஆராயும்போது சோழராட்சியின் மத்திய காலம்வரை மன்னார்குடிக்குத் தெற்கே காட்டுப்பகுதிகளாக (முல்லைநிலம்) இருந்துள்ளதை அறிகிறோம். பஞ்ச ஆரண்யதலங்கள் இவ்வூருக்கு மிக அருகாமையில் இருப்பது, திருமறைக்காடு (வேதாரண்யம்) அணித்தே உள்ளது போன்ற காரணங்களும் இதனை வலியுறுத்திகின்றன.

காடு நீக்கி நாடு கொள்ளும் முயற்சியில் சோழ மன்னர்கள் முயற்சித்தபோது உருவான திருவூரே மன்னை நகரமாகும். இவ்வூரின் பழம்பெயர் இராஜாதி ராஜ சதுர்வேதிமங்கலம் என்பதனை 
(கிபி.1070-1125) வரை ஆட்சிசெய்த முதல் குலோத்துங்கசோழனின் மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயில் கல்வெட்டே உறுதிசெய்கிறது. "சுத்தவல்லி வளநாட்டு பிரமதேயம் தனியூர் ஶ்ரீ ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் என்ற இக்குறிப்பே மன்னார்குடி நகரம் பற்றிய தொன்மைக்குறிப்பாகும்.

இராஜாதிராஜன் என்ற சோழ மன்னன் ஒருவன் பெயரால் பிரமதேய ஊராகவும் (அந்தணர்களுக்காக அளிக்கப்பெறும் ஊர்) நான்கு வேதங்கள் படித்த அந்தணர்கள் வாழ்ந்ததால் சதுர்வேதிமங்கலம் என்ற மங்கலம் எனும் பகுப்புடைய ஊராகவும், தனியூர் என்ற சிறப்பு உரிமைகள் பெற்ற ஊராகவும் திகழ்ந்தது என்பதை இக்கல்வெட்டு வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஶ்ரீ இராஜாதிராஜ தேவர் சோழனால்
(கிபி.1018-1054) காலத்தில் உருவாக்கப்பட்ட மன்னார்குடி:-

ஒவ்வொரு சோழமன்னனும் தங்களது ஆட்சிக்காலத்தில் தன்பெயரில் பல சதுர்வேதிமங்கலங்கள் உருவாக்குவதை மரபாக கொண்டு திகழ்ந்தனர். கிபி 1118ல் வெட்டப்பட்ட மன்னார்குடி கல்வெட்டு இராஜாதிராஜன் எனும் சோழன் பெயரில் இவ்வூர் இருந்தது என்று சொல்வதாலும்,
கிபி - 1118க்கு முன்பு இப்பெயரில் வாழ்ந்த சோழ மன்னர் முதலாம் இராஜாதிராஜன் என்ற ஒருவனே எனபதாலும், கங்கை கொண்ட சோழன் எனும் முதலாம் இராஜேந்திர சோழனின் மகனான இராஜாதிராஜ சோழனால் தான் இவ்வூர் தோன்றியது என்பதை தெள்ளத்தெளிவாக அறியமுடிகிறது.

தஞ்சை பெரியகோவிலை தோற்றுவித்த முதலாம் இராஜராஜனின் பெயரனும், கங்கை, கடாரம் போன்ற நாடுகளை வென்று கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கியவனுமான முதலாம் இராஜேந்திர சோழனின் முதல் மகனுமான இராஜாதிராஜன் பெயரால் இவ்வூர் அவனாலேயே தோற்றுவிக்கப்பெற்றது என்பதுதான் இவ்வூரின் தலையாயப் பெருமையாகும்.

இவ்வூரைத்தோற்றுவித்த அந்தப்பேரரசனின் வரலாற்றுப்பெருமைகளை ஓரளவு அறிந்தால்தான் மன்னார்குடி நகரின் பெயர்ப் பெருமையை நாம் அறிந்தவர்களாவோம். சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் திருவிடந்தை என்னும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பூவராகஸ்வாமி திருக்கோவில் உள்ளது. அத்திருக்கோயிலில் ஒவ்வோர் மாதமும் பூரநாளில் இராஜாதிராஜ சோழனின் பிறந்தநாள் சிறப்புவழிபாடு முட்டாமல் இன்றளவும் நடைபெற்று வருகின்றது.

இக்கோயில்கல்வெட்டில் அப்பேரரசன் தான் பிறந்த நட்சத்திர நாளில் மாதந்தோறும் சிறப்பு வழிபாடு நடத்த நிலக்கொடை அளித்துச்சென்றுள்ளதை கூறுகின்றது. அப்பெருமன்னனின் பக்திக்கு இக்கல்வெட்டும் இன்றளவும் தொடரும் வழிபாடும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

யானைமேல் துஞ்சியதேவர் எனும் இராஜாதிராஜ தேவரின் சிறப்புகள்:-

போர்க்களத்திற்கு அஞ்சாத தேவர்! பாண்டியர், சேரர், சிங்களர், மேலைச்சாளுக்கியர் போன்ற பலமன்னர்களை வென்று புகழ்பெற்றவன்.
" ஜெயங்கொண்ட சோழன் " என்பது இவனது விருதுப்பெயராகும்.

"ஜெயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்க் கோவி ராஜகேசரி வர்மரான ஶ்ரீராஜாதி ராஜதேவர்" - என்று கல்வெட்டுக்கள் இவனது புகழை குறிக்கின்றன. 

மாமன்னன் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகிய இருவரும் சோழசிம்மாசனத்தில் அமர்ந்து அரசாளும் போது பல போர்க்களங்களில் வெற்றி வாகை சூடியவன். இவனது வெற்றியின் புகழைப்பாடும் மிக அழகிய துவாரபாலகர் சிற்பம் ஒன்று இன்றும் தஞ்சையில் உள்ளதை நாம் காணலாம். பழையாறையில் இருந்த இச்சிலை தற்பொழுது தஞ்சைக்கலைக்கூடத்தில் உள்ளது.

(மேலைச்சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தை - தற்போது மராட்டிய மாநிலம் முப்பைக்கு அருகிலுள்ள கல்யாண் எனும் நகரம்) வென்று அங்கிருந்து இந்த துவாரபாலகர் சிற்பத்தை வெற்றிச்சின்னமாக எடுத்துவந்து சோழநாட்டில் காட்சியாக வைத்தான். அதன் பீடத்தில் கல்யாணபுரத்தை வென்று தான் எடுத்தவந்த துவாரபாலகர் என்று தமிழில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான்.

ஜெயங்கொண்ட சோழன் எனும் யானைமேல் துஞ்சிய தேவர்:-

கிபி.1054 ல் தம் தம்பியுடன் மேலைச்சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்தான்.கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள கொப்பம் என்னும் இடத்தில் நடந்த கடும்போரில் யானைமீது அமர்ந்து போர்புரிந்து கொண்டிருக்கையில் பகைவர்களது அம்பு மார்பில் பாய்ந்து வீர மரணம் அடைந்தான்.இதில் ஆச்சர்யம் என்னவெனில் தான் இறந்தாலும் , அவனது தம்பியின் ஆற்றலால் அப்பெரும்போரில் சோழர்படையே வெற்றிவாகை சூடியது.தம்பிவுடையான் படைக்கு அஞ்சான்.

இம்மாவீரன் தன்பெயரால் இராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் ( மன்னார்குடியை) உருவாக்கியுள்ளான் என்பது எத்துனை பெருமிதம். (தமிழனின் வீரத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவன் இப்பேரரசன். போர்க்களத்திலேயே உயிர்துறந்து வீரசமர்புரிந்துள்ளான், வாழ்ந்தான் என்பது சரித்திர உண்மை).

இராஜாதி ராஜ சோழர்காலத்திற்குபின்பும் இக்கற்றளி போசளர் மற்றும் பிற்காலப்பாண்டியர் காலங்களில் புதுப்பிக்கப்பட்டபொழுது சோழர்கால கல்வெட்டுக்கள் மீண்டும் இடம்பெறாமல் போனதால் பழைய சாசனங்களை பற்றி அறியமுடியவில்லை.

சோழர்களுக்கு பிறகு ஆட்சிப்பொறுப்பேற்ற வீரராமநாதன் எனும் போசள அரசன் கிபி 1258- ல் இக்கோயிலுக்கென நில வருவாயினை அமைத்துத்தந்தான் சோழமண்டலத்தில் போசளரின் ஆதிக்கத்தை பாண்டியர்கள் முறியடித்தனர்.

இப்பணியைச்சிறப்புற செய்தவர்கள் இரண்டாம் மாறவர்மன் விக்கிரபாண்டியனும் (1250-1276) மற்றும் அவனது தம்பி முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனும் (1250-1263) ஆவர். கிபி 1303ல் முடிசூடிய நான்காம் சுந்தரபாண்டியனின் ஆடசிக்காலத்தில் சாரிகைக்கோட்டையின் வணிகர்கள் வரியின் ஒருபகுதியை செயங்கொண்ட நாதர் ஆலயத்திற்கு அளிக்க உத்தரவிட்டான்.
சோழனால் உருவாக்கப்பட்ட கற்றளியை பிற்காலப்பாண்டியர்களும் போற்றி வளரத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கிபி 15-16 )ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களின் ஆக்கத்தாலும் செயங்கொண்ட சோழீச்சரம் சிறப்புடன் திகழ்ந்துள்ளது.

கள்ளர்குல பாப்பாநாடு, சிங்கவனம் சமீன்களால் போற்றப்பட்ட செயங்கொண்ட நாதர் ஆலயம்:-

(கி.பி.1757) இராசராசவளநாடு ராஜேந்திர சோழவளநாடு பொய்யூர்கூற்றத்துப் பாப்பாகுடி, சிறுநெல்லிக்கோட்டை,நெமேலி இருக்கும் நல்லவன் விசையாத்தேவர் மகன் இராமலிங்க விசையாத்தேவர் தம் காளியாக இருக்கும் மன்னார்குடி ஜெயங்கொண்ட நாதர் கோவிலுக்கு 46 இராஜ கோபால பொன் சக்கரங்களை அளித்துள்ளார்.

இதுபோக பாப்பாநாடு மேல்கரை, கீழ்கரையைச்சேர்ந்த 16 கரை கள்ளர் பெருமக்களும் 45 இராஜ கோபால சக்கரங்களை அளித்துள்ளனர்.

சிங்கவனம் ஜமீன்தார் ஶ்ரீ செவ்வாயி விசைய ரகுநாத வாளோசி மெய்க்கன் கோபாலர் 1758-ல் 91 இராஜகோபால பொன் சக்கரங்களை வாரி வழங்கியுள்ளார்.

இதன் பின்பு1934 ம் ஆண்டு கோயில் நிதிகொண்டும் பாப்பாநாட்டு ஜமீன்தார் அளித்த பெருந்தொகை கொண்டும் இடிபாடுற்று கிடந்தகோவிலை முற்றிலுமாக புதுப்பித்தனர்.

பின்னர் 1940ல் திரு.சோமசுந்தர சக்கரநாட்டார் அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக கோயில் நிதியிலிருந்தும் முன்மண்டபம் திருப்பணி செய்யப்பெற்றது.

கிபி 2002-ல் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் திரு. திவாகரன் சாளுவர் எடுத்த முயற்சியின் காரணமாக புதுப்பொலிவு பெற்று அப்போது திருப்பணி கமிட்டி தலைவராக திகழ்ந்தவர் தெய்வத்திரு.V. G.ராமமூர்த்தி கிளாக்குடையார் அவர்கள்.

மேலும் 2004 ஏப்ரல் 7 ஆம் நாள் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று கடவுள் மங்கலம் பெற்றது.

இவ்வாறு 11 ஆம் நூற்றாண்டு முதல் சோழர், பாண்டிய பேரரசர்களாலும், ஜமீன்களாலும், ஆன்மீகச்செம்மல்களாலும், பேருள்ளம் கொண்ட நிலக்கிழார்களாலும் காலந்தோறும் திருப்பணி செய்யப்பெற்று எழில்கொஞ்சும் திருக்கோவிலாக தனது கடந்த கால நினைவுகளை அசைபோட்டுக்
கொண்டிருக்கிறது ஜெயங்கொண்ட சோழனாம் ஶ்ரீ ராஜாதிராஜ தேவரால் உருவாக்கப்பட்ட செயங்கொண்ட சோழீச்சரம்.































நன்றி : 
உயர்திரு.Dr.குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்,
செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை, மன்னார்குடி.
தல வரலாறு ,செயங்கொண்ட நாதர் ஆலயம்.

கட்டுரை : திரு. பரத் கூழாக்கியார்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பூலித்தேவரும் கள்ளர் மரபினரும்



ஆர்காடு நவாபான முகமது அலி, தனது உரிமையை மீட்க வெள்ளையர்களின் உதவியை நாடினான். வெள்ளையர்கள் 1751ல் ஆர்காடு நவாபாக பொறுப்பேற்ற முகமது அலிக்கு ஆதரவாக கர்னல் ஹரான் தலைமையில் படையனுப்பி உதவினர். இவரது படையில் முகமது அலியின் அண்ணன் மாபூஸ் கான், கான்சாகிப் ஆகியோர் இருந்தனர். 

பெரும்படையுடன் வந்த கர்னல் ஹரான், சந்தா சாகிப் வசமிருந்த மதுரையை கைப்பற்றினான். பிறகு தென்திசை பாளையக்காரர்களை நோக்கி வரி கேட்டு படையெடுத்தான். திருநெல்வேலி சீமையில் இருந்த கீழ்திசை பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான பொல்லாப்பாண்டிய நாயக்கர்( வீரப்பாண்டிய கட்டபொம்மு நாயக்கரின் பாட்டனார்). மேற்கு திசை பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர் பூலித்தேவர். இவர் வாழ்ந்த ஊர் நெற்கட்டுஞ் செவ்வல் என அழைக்கப்பட்டது. தற்போது இவ்வூர் ஆவுடையாபுரம் என அழைக்கப்படுகிறது. 
(Political History of tinnevelly : caldwell 1891 pg 96)

மறவர் குலத்தில் உதித்தவர் பூலித்தேவர். பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இலக்கியமான திங்களூர் நொண்டி நாடகம் , பூலித்தேவர் பற்றியும் கள்ளர்- மறவர் உறவு பற்றியும் கூறுகிறது.


"வல்லாள கண்ட னென் தகப்பன்- அர்க்கும் வலுத்த 
அவன் கள்ள மறவர் குலத்தில் உதித்தோன் மாயப் பூனைப்
புலித்தேவன் தம்பி - சின்னான மறவன் வளவில் நாங்கள் உறவு கொண்டாடிக் காயக்கமும் கற்ற சின்னாத்தேவன் - தந்த கண்ணியை கல்யாணம் பண்ணியே கொடுத்தார்"

பகலெத்தி எனும் கள்ளர் குல வீரன், பூலித்தேவன் தம்பியான சின்னாத்தேவர் எனும் மறவரை தனது உறவு என்றும், அவரது வீட்டில் மகளை திருமணம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பூலித்தேவருக்கு வலது கரமாக விலங்கிய செம்புலி சின்னனஞ்சான்தேவரே இங்கு சின்னாத்தேவன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

" நாட்டிலுள்ள கவுண்டர்கள் நாட்டிமை செய்வோரும் 
தண்மையாய்த் தியாகமது தந்து - நல்ல
தாரமும் பண்ணிக்கோவென்றுத் தாரமுஞ் சொன்னாரே
வன்மையுள்ள புலித்தேவன் தம்பி- சின்னா
மறவன் வளவில்நாங்கள் விவாகமது செய்ய
உறவு கொண்டாடியே வந்து" 

புலித்தேவரை மறவர் என்றும், அவரது தம்பியான சின்னனஞ்சான்தேவர் வீட்டில் கள்ளமறவர் குலத்தில் உதித்த பகலெத்தி என்பவர் திருமண உறவு கொண்டதை இப்பாடலும் தெரிவிக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கள்ளர் மறவர் இடையே நிலவிய உறவினை மேல குறிப்பிடப்பபட்ட பாடல்கள் குறிப்பிடுகிறது.

1755,May 5: கர்னல் ஹரானுக்கு திருச்சிக்கு விரைந்து வர, தலைமையிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் திருச்சி நோக்கி திரும்பும்போது, மாபூஸ்கானின் வேண்டுதலை ஏற்று, படையை நெற்கட்டுச்செவ்வல் நோக்கி திருப்பினார். பிரிட்டீஷ் படை பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டது. தனது ஒற்றர் படையின் மூலம், ஆங்கிலேயரிடம் போதுமான பீரங்கிகள் இல்லை என்பதை உணர்ந்த பூலித்தேவர் அதற்கேற்ப வியூகங்களை அமைத்து போரிட தயார் என அறிவித்தார். கர்னல் ஹரான் ஒரு இருபதாயிரம் ரூபாயாவது தரச் சொன்னான். பூலித்தேவரோ ஒரு ரூபாய் கூட கட்டமுடியாது என கூறிவிட்டார். ஆனாலும் போதிய படைபலம் மற்றும் உணவுப்பொருட்கள் இல்லாத காரணத்தால் ஹரான் படை வெறுங்கையுடன் திருச்சி நோக்கி செல்ல ஆரம்பித்தனர். (Yusuf khan : the rebel commendant 1914/ pg 39)


1755, நவம்பர் மாதம் களக்காடு கோட்டையை இழந்த மாபூஸ்கான், பூலித்தேவரை வீழ்த்த நெற்கட்டுஞ்செவ்வலை தாக்கினான். ஆனால் பூலித்தேவரின் மறவர் படை தாக்குதலை சமாளிக்க இயலாத மாபூஸ்கான் தோல்வியோடு திரும்பினான்.

மாபூஸ்கானை வீழ்த்தியபின் கிடைத்த உத்வேகத்தை சரியான திசையில் பூலித்தேவர் பயன்படுத்தினார். வடகரை முதலிய மேற்படாகைப் பாளையங்களையும், சந்தா சாகிப்பின் பிரநிதியான மூடேமியாவையும் தனது கூட்டணியில் இணைத்தார். கீழ்திசை பாளையக்காரர்களுக்கு தலைவரான பொல்லாப்பாண்டியன் கட்டபொம்மு இந்த கூட்டணியில் சேர மறுத்துவிட்டார். தனது பிணையாட்கள் வெள்ளையர் வசம் இருப்பதால் கூட்டணியில் சேர முடியாது என கூறிவிட்டார். மதுரைப் பகுதியில் இருந்த சில பாளையக்கார்களும் பூலித்தேவர் அணியில் இணைந்தனர். தங்களுக்கு எதிராக பூலித்தேவர் உருவாக்கும் கூட்டணி பற்றிய தகவல் ஆர்காடு நவாப் மற்றும் கும்பினியாரை சென்றடைந்தது. 
மாபூஸ்கானின் மேல் நம்பிக்கையை இழந்த கும்பினியார், கான்சாகிப் தலைமையில் ஒரு பெரும்படையை திரட்டி அனுப்பினர்.

கான்சாகிப் படைதிரட்டி வந்துகொண்டிருக்கும் போதே, பூலித்தேவர் நவாப் வசமிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையை தாக்கினார். கோட்டையை பாதுகாத்து வந்த நவாபின் உடன்பிறந்த அப்துல் ரஹீம் மற்றும் அப்துல் மசூலி, மாபூஸ்கானுடன் சேர்ந்து பூலித்தேவரை எதிர்த்தனர். ஆனால் பூலித்தேவர் தலைமையிலான படையின் தாக்குதலை சமாளிக்க இயலாத நவாபின் படையினர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையை இழந்தனர். பூலித்தேவர் பெற்ற இந்த வெற்றி பாளையக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இந்த சமயத்தில் பூலித்தேவர் வசம் ஆயிரம் பேர்க்கொண்ட குதிரைப்படையும், இருபத்து ஐயாயிரம் பேர் கொண்ட காலாட்படையும் இருந்தது. 

மார்ச் 21,1756 அன்று கட்டபொம்மன்- மாபூஸ்கான் கூட்டணியினரை பூலித்தேவர் மீண்டும் தாக்கினார். போரின் முடிவு பூலித்தேவருக்கு பாதகமாக அமைந்தது. மூடேமியா போரில் கொல்லப்பட்டான். தாக்குதல் தோல்வியில் முடிந்ததால் பூலித்தேவர் தனது கோட்டைக்கு பின்வாங்கினார்.  

திருவிதாங்கூர் மன்னர், சந்தா சாகிப்பின் பிரதிநிதிகள், மாபூஸ்கான், மற்ற பாளையக்காரர்கள் பூலித்தேவர் தலைமையில் ஒன்றிணைந்தனர். 

பூலித்தேவர் தலைமையிலான பதினாராயிரம் பேர் கொண்ட படை திரண்டு கும்பினியாரிடம் இருந்து திருநெல்வேலியை மீட்டனர். ஆனாலும் கங்கைகொண்டான் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் கான்சாகிப் தலைமையிலான கும்பினியார் படை வெற்றி பெற்றது. 


தங்களிடம் போதிய படை பலம் இல்லாததை உணர்ந்த பூலித்தேவர் திண்டுக்கல்லில் ஆட்சி புரிந்து வந்த ஐதர் அலியுடன் கூட்டணி வைத்தார். தனக்கு உதவினால் ஐந்து லட்ச ரூபாயை தருவதாக பூலித்தேவர் கூறினார். சோழவந்தான் பகுதியை ஐதருக்கு அளிக்கவும் உடன்பாடு ஏற்பட்டது. ஆயினும் கேப்டன் காலியாட் தலைமையிலான ஆங்கிலேய படை, நெல்லையில் முகாமிட்டு இந்த திட்டத்தை முறியடித்தனர்.

1759 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நெல்லை நோக்கி படையெடுத்தார் கான்சாகிப். நெல்லையில் பூலித்தேவர் வசமிருந்த கொல்லங்கொண்டான் கான்சாகிப்பால் கைப்பற்றப்பட்டது. மூன்று நாட்களில் கோலார்ப்பட்டி கைப்பற்றப்பட்டது. கீழ்திசை பாளையங்கள் யாவும் கான்சாகிபிடம் சரணடைந்தன. பூலித்தேவர் பக்கம் இருந்த மாபூஸ் கான் , தன்னை கான் சாகிப் அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு தூது விட்டு துரோகியானான். தந்திரமாக திருவிதாங்கூரையும் பூலித்தேவர் கூட்டணியில் இருந்து பிரித்து தங்களது கூட்டணியில் இணைத்தான் கான் சாகிப்.

வடகரை பாளையக்காரர் கள்ளர்களைக் கொண்டு திருவிதாங்கூர் மீது தாக்குதல்களை நடத்தினார். இதனால் திருவிதாவகூரார் கான்சாகிப்பிடம் உதவியை வேண்டினார்.(Yusuf khan the rebel commendant SC hill pg pg 100) 

கான்சாகிப் பக்கம் சாய்ந்த திருவிதாங்கூர் அரசர்,1759, செப்டம்பர் மாதம், வடகரைப் பாளையத்தின் மேல் படையெடுத்தார். செங்கோட்டையருகே கூடுதலாக கும்பினியாரின் படையும் சேர்ந்து மொத்தம் பத்தாயிரம் பேர்க் கொண்ட மிகப்பெரிய படை வடகரை பாளையத்தை தாக்கியது. போரின் விளைவு மோசமடைந்ததால் வடகரையார் கோட்டையிலிருந்து வெளியேறி பூலித்தேவரிடம் சரணடைந்தார். திருவிதாங்கூர் அரசருக்கு களக்காட்டை யூசுப் கான் அளித்தார். 

(History of Millitary transactions of the british nation in hindustan 1861: Robert orme pg 565)


தென்திசையில் ஆங்கிலேயர் கை ஒங்கியதை கண்ட ப்ரெஞ்சு காரர்கள் பூலித்தேவரை தங்களுடன் சேருமாறு தூது அனுப்பினர். இந்த அழைப்பை ஏற்ற பூலித்தேவர், ப்ரஞ்சு காரர்கள் எழுதிய கடிதத்தை திருவிதாங்கூருக்கு அனுப்பி தங்களுடன் இணையுமாறு வலியுறுத்தினார். எனினும் திருவாங்கூரார் தொடர்ந்து கான் சாகிப் பக்கமே இருந்தார்.

பூலித்தேவரின் கோட்டைகளில் ஒன்றான வாசுதேவநல்லூர் கோட்டையை கான்சாகிப் முற்றுகையிட்டான். வாசுதேவநல்லூரைக் காக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் திரண்டாலும் அவர்களில் வலுவான 800-900 பேரே கோட்டையைக் காக்க நியமிக்கப்பட்டனர்.மற்றவர்கள் காட்டுக்குள்ளேயே தங்கி இரவில் தீடீர் தாக்குதல்களை நடத்தினர். 


Yusuf Khan: The Rebel Commandant - Book by Samuel Charles Hill 1914
History of Millitary transactions vol 2 : Page : 567 Robert orme

கான்சாகிப்பின் பீரங்கிகளின் தாக்குதல்களை வீரமறவர்கள் பலமாக எதிர்த்து போரிட்டனர். பூலித்தேவர் நெற்கட்டுஞ் செவ்வலில் இருந்து வந்து 3000 கள்ளர்களின் உதவியுடன் இரவு நேர தாக்குதல்களை, வாசுதேவநல்லூர் கோட்டைக்கு எதிர்திசையில் இருந்து நடத்தினார். கான்சாகிப்பிடம் 18 பவுண்ட் பலமுள்ள ஒரே ஒரு பீரங்கி மட்டுமே இருந்தது. மற்றவை அனைத்து 6 பவுண்ட் பலமுள்ள சிறிய பீரங்கிகள். 18 பவுண்ட பலமுள்ள பீரங்கி பழுதடைந்தது. போதுமான வெடிமருந்துகள் இல்லாமல் கான் சாகிப் திணறினான். கான்சாகிப் படையில் இருநூறு பேரும், பூலித்தேவர் படையில் இன்னும் அதிகமாகவும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இரண்டு மாதங்கள் நடந்த தொடர்ச்சியான போரின் இறுதியில், இருமுனை தாக்குதலை சமாளிக்க இயலாத கும்பினிப்படை பூலித்தேவரின் மறவர் மற்றும் கள்ளர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க இயலாமல், வாசுதேவநல்லூர் கோட்டை முற்றுகையை விட்டுவிட்டு ஒட்டம் பிடித்தனர்.
(History of Millitary transactions of the british nation in hindustan 1861: Robert orme pg 565-570)

1761 ஆம் ஆண்டு, மே மாதம் கான்சாகிப் கும்பினியாருக்கு எழுதிய கடிதத்தில் தான் பூலித்தேவரின் மூன்று கோட்டைகளையும் கைப்பற்றியதாக கூறியுள்ளான். எனவே எனவே 1759ல் இருந்து கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் பூலித்தேவர் கான்சாகிப்புடன் போரிட்டுள்ளதை அறியமுடிகிறது.(Yusuf khan the rebel commendant SC hill pg pg 104) 1764ஆம் ஆண்டு மதுரையில் தன்னாட்சி நிறுவ முயன்ற கான்சாகிப் வெள்ளையர்களால் கொல்லப்பட்டான்.

வாசுதேவநல்லூர் கோட்டை 1766 வரை நவாப் வசமிருந்தது. 1766ல் இந்தக் கோட்டை பூலித்தேவரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1767ல் இந்தக் கோட்டையை கைப்பற்ற கும்பினியார் கர்னல் காம்பெல் தலைமையில் ஆங்கிலேயரின் படை வந்தது. ஒரு வாரம் முழுவதும் இந்தக்கோட்டை பீரங்கி குண்டுகளால் துளைக்கப்பட்டது. இச்சமயங்களில் கோட்டைக்குள் இருந்த மறவர்கள் சாதுரியமாக தங்களை தற்காத்துக் கொண்டனர். சாவுக்கு அஞ்சாது கோட்டையை காக்க மறவர்கள் போராடிய விதத்தை கண்டு ஆங்கிலேயரே வியந்து போயினர். நெருப்பு மழையையும் பொருட்படுத்தாது, கோட்டையில் ஏற்பட்ட பிளவுகளை, வைக்கோல் போரையும், பனைமரத்துண்டையும் கொண்டு சரி செய்தனர். ஒரு வார காலத்திற்கு பிறகு கடும் மழையின் காரணமாக கோட்டையை காத்த வீரர்கள், அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த காட்டில் நுழைந்தனர்.

கர்னல் 1767ல் நடத்தப்பட்ட கர்னல் காம்பெலின் முற்றுகைக்கு பிறகு வாசுதேவநல்லூர் கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றுள்ளதை உறுதியாகக் கூறலாம். வீரத்தமிழ் போர்குடியில் உதித்த பூலித்தேவரின் கடைசி போராக வாசுதேவநல்லூர் போர் இருந்திருக்கலாம். இதற்கு பிறகு பூலித்தேவர் பற்றிய வரலாற்று குறிப்புகள் கிடைக்கவில்லை. கடைசி வரையிலும் எந்த சமரசமும் இன்றி, கும்பினியாரின் ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்நீத்த தமிழர் பூலித்தேவர் புகழ் உலகில் என்றும் நிலைத்திருக்கும். 

பூலித்தேவருக்கு எதிராக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மன்னர்கள் செயல்பட்டனர்.


(Kallan, formerly spelled as Colleries) COLLERIES என்று ஆங்கிலேய குறிப்புகள் கள்ளர் மரபினரை மட்டுமே குறிக்கும். சிலர் மறவர்கள், பழங்குடியினர் போன்றவர்களையும் குறிப்பதற்காக தவறாகவும் எழுதிவருகின்றனர். உதாரணமாக கீழே கள்ளர்களை Colleries என்றும், அதே பகுதியில் மறவர்களை மறவர் என்றே குறிப்பிடுகிறார். 



தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்