புதன், 9 ஆகஸ்ட், 2023

கல்லணை, கல்லணை வரலாறு (kallanai dam history in tamil)



காவிரியாற்றின் கரை உயர்த்தியதும் கரிகாலனே... காவிரியின் குறுக்கே கல்லால் ஆன கல்லணையைக் கட்டியதும் கரிகாலனே. அதற்கான ஆதாரங்கள் கீழே விளக்கமாக தரப்பட்டுள்ளது.

Kallanai Dam History In Tamil
கல்லணை - கரிகால சோழன்

1) கல்லணை கட்டியது கரிகால சோழன் என்பதற்கான ஆதாரம் என்ன?

2) கல்வெட்டு சான்று உள்ளதா?

காவிரி ஆறு, கரிகாலன், கல்லணை, இம்மூன்றும் தமிழனின் பழம் பெருமைக்கு சான்றுகள். இம்மூன்றும் ஒன்றையொன்று பிரியாமலேதான் இருக்கும்.

கல்லணையைக் கட்டியது கரிகாலன் என்று நாம் ஒவ்வொறுவரும் ஆரம்பப் பள்ளிப் பாடத்திலேயே கற்று தேர்ந்த ஒன்றுதான்.

காவிரி ஆறு எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் கரிகாலனது பெயர் இருக்கும். 

அதானால்தான் சோழர் கல்வெட்டுக்கள் காவிரியை கரிகால்சோழ பேராறு என்று அழைத்தது.

காவேரி கரை கண்ட கரிகால சோழ தேவர்


தொல்காப்பியத்தில்,

“வருவிசை புனலைக் ‘கற்சிதொல்காப்பியத்தில்கூட,
“வருவிசை புனலைக் ‘கற்சிறை’ போல
 ஒருவன் தாங்கிய பெருமையானும்”

என்றே வருகிறது. ‘கற்சிறை’ என்ற சொல்லே ‘அணை’ என்ற இக்கால பொருளில் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோழமன்னன் கரிகாற் பெருவளத்தான் கட்டிய கல்லணை பெயருக்கேற்றாற்போல அன்பின் அணை. கல்லணை கற்சிறையல்ல , அது காவிரியில் ஓடும் நீரை தேவையான அளவே செல்ல விட்டு , பாசன பகுதிக்கும் , தஞ்சைக்கும் பாதிப்பு ஏற்படும் அளவு வெள்ளம் வரும் காலத்தில் அளவுக்கு அதிகமான நீரை அணைத்து வடகாவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடத்தில் திருப்பி விடும் பணியை செய்வதே கல்லணையில் வேலை . காவிரியை கல்லால் அணைத்து சோழ நாட்டைக் காத்தருளினான் கரிகாற் பெருவளத்தான் . (கற்-கல் சிறை-அணை )


கரிகாலன் காவிரிக்கு கரை (அணை) கட்டியதற்கான குறிப்பு இலக்கியங்களில் மட்டுமல்லாமல், தெலுங்கு சோழனின் 7ம் நூற்றாண்டு ‘மாலேபட்’ செப்பேடுகளிலும், பராந்தக சோழனின் வேலஞ்சேரிச் செப்பேட்டிலும் காணப்படுகிறது.

கரிகாலக்கரை


கரைபுரண்டோடும் காவிரிக்கு கரையெழுப்பினான் இளஞ்சேட் சென்னியின் மைந்தன் கரிகாலன் என பொருநறாற்றுப்படை, பட்டிணப்பாலை வாயிலாய் அறிகிறோம். இலக்கியரீதியாய் குறிப்பு இருப்பினும், இச்செய்திக்கு வலு சேர்க்கும் கல்வெட்டுகள் மிக அரிது. அதற்கு சான்றாய் திகழ்வது, முதலாம் ஆதித்தனின் தில்லைத்தானம் கல்வெட்டில் வரும் 'கரிகாலக்கரை' என்ற குறிப்பும், அதே வார்த்தை மீண்டும் வரும் முதலாம் பராந்தகசோழனின் அல்லூர் கல்வெட்டும், முசிறி பேட்டைவாய்க்காலில் வரும் 'கரிகாலச்சோழ பேராறு' என்று காவிரியை அழைக்கும் கல்வெட்டுகள் மட்டுமே இவ்வரிய கல்வெட்டில் முதல் மற்றும் கடைசி கல்வெட்டு இரண்டும் பிற்காலத்திய கட்டுமானத்தால் மறைந்துவிட்டது. மீதி எஞ்சியிருப்பது அல்லூரில் உள்ள கல்வெட்டு மட்டுமே. இதை மற்றுமே நாம் இன்று நேரடியாய் காணமுடியும். கீழிலிருந்து 4 ம் வரியில் பார்க்கவும்.  

ஆய்வு தகவல் : கல்வெட்டு ஆய்வாளர் திரு. திருச்சி பார்த்தி அவர்களின் கட்டுரையிலிருந்து. 



உயர்த்தி கட்டப்பட்ட காவிரிக்கரையை பராமரிக்கும் வேலை அந்தப் பகுதி கிராம மக்களிடம் தரப்பட்டது. பராமரிப்புக்குத் தேவையான கட்டாய உழைப்பு, ‘குலை வெட்டி’ என்று அழைக்கப்பட்டது. இப்படி கூலி இல்லாமல் செய்யப்படும் வேலையை வெட்டி வேலை என்று சொல்ல இதுவே காரணமானது. 

கல்லணை கட்டிய அதே பகுதியில் கரிகால சோழதேவர் தொடர்புடைய கோயில்களும் பல உள்ளன.  

கல்லணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள ள்ளர் நாட்டில் ஒன்றான கூத்தாப்பல் நாடு  விசங்கிநாட்டில் அமைந்துள்ள  - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. தீவூர் என்பது மருவி தோகூர் ஆனாது. தோகூர் கிராமத்தில் கள்ளர் மரபினரின் பாண்டுராயர் (பாண்டியராயர்)  பட்டம் உடையவர்கள் முதன்மையாக உள்ளனர்.

கல்லணை பகுதியில் வாழும் கள்ளர்கள் பட்டமாக வளவர், காவிரிநாடன், காவிரியார் உள்ளது சிறப்பு - கரிகால் சோழன் கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன், எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் மரபில் காவிரிநாடன், காவிரியார் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது. 

காவிரியார், கச்சிராயர், வாண்டையார் சிலைகள்




கள்ளர் நாட்டில் ஒன்றான கூத்தாப்பல் நாடு  விசங்கிநாட்டில் அமைந்துள்ள கல்லணை, தோகூர் மற்றும் அரசங்குடியில் உள்ள கள்ளர் மரபினரின் பட்டங்கள்

சோழதிரியர் (சோழதரையர்),
சோழகர், 
சோழங்கதேவர்,
தேவர்,
காவிரியார், 
நாட்டார்
சேதுராயர்,
வாண்டையார்
ஏத்தாண்டார்,
தொண்டமான்
பல்லவராயர்
அதியமான்
சோமநாயக்கர்,
முனையதிரியர்
மானவிழங்கியார்
அயிரப்பிரியர்,
சூரியர்
காடுரார்,
பாண்டுரார்,
பார்புரட்டியார்
கொல்லத்தரையர்
ஈழம்கொண்டார்
வளம்பர்
தென்கொண்டார் 
அடைக்கப்பட்டார்
கார்கொண்டார்
செம்பியமுத்தரசு
காரக்காச்சியார், 

என சோழர்கால சமூகப்பிரிவுகளின் கடைசிப்பிரதியாக தோகூர், அரசங்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் வாழ்ந்துவருகின்றனர்.

மேலும் கல்லணை சுற்றியுள்ள சர்க்கார்பாளையம், வேங்கூர், நடராஜபுரம், கிளியூர், பத்தாளப்பேட்டை, அகரம், எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்குறிச்சி, கீழக்கல்கண்டார்கோட்டை, சோழமாதேவி, வாளவந்தான்கோட்டை, திருநெடுங்குளம், அசூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் மற்றும் காந்தலூர் கிராமங்கள் கள்ளர் மரபினர் வாழும் ஊர்கள் ஆகும். 

கரிகால சோழசர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர்

சங்ககாலத்தில் சோழவளநாட்டு மக்கள் காவிரிக்கரை உடைப்பு, கடும் வெள்ளத்தால் சொல்லொணாத் துயரத்தால் பாதிக்கப்பட்டனர். தங்கள் பேரரசரான காவிரிநாடன், கரிகால சோழ பெருவளத்தானிடம் முறையிட்டனர். கல்லனையை உருவாக்கும் முன்பே காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்துவந்து பூசித்து அதன்பின்பே கல்லனையை கட்டியதாகவும், வருடத்தில் மூன்றுநாட்கள் மட்டுமே சூரிய ஒளியானது கற்பகிரக லிங்கத்தின் மீது விழுவது தனிச்சிறப்பு.






கரிகால சோழ - அரசங்குடி அருள்மிகு கருணாம்பிகை உடனுறை மருதபுரீஸ்வர்

கல்லணை அரசங்குடியில் கரிகால சோழன் வழிபட்ட சிவாலயமான அருள்மிகு கருணாம்பிகை உடனுறை மருதபுரீஸ்வர். முதல் கரைகாரர்கள் மானவழங்கியார் பட்டமுடைய கள்ளர் மரபினர் . மேலும் நாட்டார் (நாட்டாள்வார்), சேதிராயர், பாண்டுராயர், தென்கொண்டார் பட்டமுடைய கள்ளர் மரபினர்களும்  உள்ளனர்.

கரிகாலன் கல்லணை கட்டிக்கொண்டு இருக்கும் பொது அணை சரியாக நிற்காமல் உடைந்து விழுந்து கொண்டே இருந்ததாகவும், இவ்வூரில் கரிகாலன் தங்கியிருந்த போது சிவன் அரசன் கனவில் வந்து தனக்கு இவ்வூரில் கோவில் எழுப்பி வழிபாடு செய்துவிட்டு கல்லணை கட்ட தொடருமாறு கூறியதாகவும், அரசனும் இவூரில் ஒரு திருத்தலம் எழுப்பி சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை முடித்தார் என்ற வரலாறும் இங்கு உள்ளது. அரசன்குடியில் இருந்து சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை பார்த்துக் கொண்டதால் இவ்வூர் அரசன்குடி என பெயர் பெற்றது. இத்திருக்கோயில் அரசன்குடி சிவன் கோவில் என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் மன்னன் சிவனை வழிபடுவது போன்ற சிற்பங்களும் உள்ளது.







கரிகாலன் வணங்கிய அரசங்குடி தில்லை காளி 





கள்ளர் மரபினரால் நடத்தப்படும் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு




கள்ளர் மரபினரால் நடத்தப்படும் கபடி போட்டிகள்   



கரிகாற்சோழ பெருவளத்தானால் கட்டப்பட்ட கல்லனையில் உள்ள 
கருப்பன் கோவில்


தோகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்









தோகூர் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில்





கூத்தைப்பாரில் உள்ள ஆனந்தவள்ளி உடனுறை கூத்தபெருமான் திருக்கோவில் 



பாண்டுரார்


அதியமான்


சோமநாயகர்





கிளியூர் கிராம மக்களின் நலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த கள்ளர்குல மாணிக்கம் தியாகி.ர. கோவிந்தராஜ் அடைக்கப்பட்டார் ஆவார். 









சீறிபாய்ந்து வரும் காவிரியின் வேகத்தை குறைத்து, தடுத்து, பிரித்து , பாசனத்திற்கு பயன்பட கரிகாலன் எழுப்பியதே கல்லணை.

குறைந்தது 2000 வருடங்கள் பழமை. சங்கத்தமிழர்களின் பெருமை.

காவிரியை ஆய்வு செய்து , நீருக்குள் நடுவே களிமண் பசையால் பாறைகள் ஒட்டப்பட்டு இருப்பதை கண்டறிந்து பெரும் வியப்படைந்தார் சர். ஆர்தர் காட்டன் என்னும் ஆங்கில நீர்ப்பாசனத்துறை பொறியாளர். 

பழந்தமிழர்களின் தொழில் நுட்பம் என்னை வியக்கவைக்கிறது. இது ஒரு மகத்தான அணை என்று எழுதுகிறார்.

" The grant anicut " என்று எழுதுகிறார்.

ஆனால்... 

சமீப காலங்களில் கல்லணையைக் கட்டியது கரிகாலன் அல்ல.. கரிகாலன் காவிரியின் கரைகளைத்தான் கட்டினான் என்று ஒரு வாதம் வலிந்து திணிக்கப்படுகிறது.

கரையை உயர்த்திக் கட்டியதும் கரிகாலன்தான்.
சீறிப்பாய்ந்து வரும் ஆற்றின் நடுவில் பாறைகளை களிமண் கொண்டு ஒட்டி தடுத்த அந்த தொழிநுட்பம்தான் கல்லணை. இது நீருக்குள் மூழ்கியுள்ளது. 

இதை கரிகாலன்தான் கட்டினான் என்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சான்றுகள் உள்ளன. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, என்று ஏராளமான தொல்லியல்த் தரவுகள் உள்ளன.

கரிகாலன் கட்டவில்லை என்பவர்களால் ஒரு சான்று கூட காட்ட இயலாது. அணையை கரிகாலன் கட்டவில்லை. காவிரியின் கரைகளைத்தான் உயர்த்தினான் என்கிறார்கள்.

அப்போ.. நீருக்குள் களிமண் பூச்சுடன் இருக்கும் கற்பாறையால் செய்யப்பட்ட கற்சிறையை யார் செய்தது.? இக்கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.. 

சீறிப்பாய்ந்து வரும் நீரின் வேகத்தை தடுக்காமல் கரையை உயர்த்தி என்ன பலன்.? இக்கேள்விக்கும் பதில் இருக்காது..

நீரைத்தடுத்து, கரையை உயர்த்திய அமைப்புதான் கல்லணை. இதை செய்தவர் கரிகாலன்தான்.


திரிலோசன் காலத்தைத் தொட்டு, புண்ணியகுமாரன் செப்பேடு, இலங்கை மகாவம்சம், கங்கர்கள் செப்பேடு, சோழர்கள் செப்பேடு, இலக்கியம், சோழமண்டல சதகம் வரை இதை உறுதி செய்கிறது.

கர்நாடகமாநிலத்தில் பிரம்மகிரி குன்றுப் பகுதியில் தலைக்காவிரி என்னும் இடத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4400 அடி உயரத்தில் காவிரியாறு உற்பத்தியாகிறது. 384 கி.மீ பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூர் பகுதியை அடைகிறது. நீலகிரியில் உற்பத்தி ஆகும் பவானி ஆறு, இப்போதைய மேட்டூருக்குத் தெற்கே காவிரியுடன் கலக்கிறது.


கோவை மாவட்டத்து நொய்யல் ஆறும், மூனாறு பகுதி அமராவதி ஆறும் காவிரியில் கலக்கின்றன... 

இப்போ அகன்ற காவிரியாகி ஒரு மகா சமுத்திரமாக உருவெடுத்து திருச்சியை நோக்கி பயணிக்கிறது காவேரி .

திருச்சிக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் எலமனூறு அருகே, முக்கொம்பு என்ற இடத்தில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது. சற்று உயர்ந்த காவிரியும், தாழ்ந்த கொள்ளிடமும் மீண்டும் இணைய முயற்சிக்கும் ஓர் இடம்..

அந்த இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. திருச்சிக்கு கிழக்கே 15 கி.மீ தூரமுள்ள கரிகாலன் அணை கட்டிய இடம்..

மழைக் காலத்தில் காவிரி தனது வடகரையை உடைத்து கொள்ளிடத்தில் பாய்ந்ததால் ஏற்படும் அபரிமிதமான வெள்ளப்பெருக்கினால் இப்பகுதியைச் சுற்றியுள்ள விவாசாய நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.. இந்தப் பேரழிவைத் தடுப்பதற்காகவே கரிகாலன் காவிரியின் குறுக்கே கரை எழுப்பத் தீர்மானித்தார்.. 

கரைகளை உயர்த்தி வலுப்படுத்தவேண்டும். ஆற்றின் குறுக்கே தடுப்பும் கட்ட வேண்டும்.

அப்போதுதான் மிக வேகமாக வரும் நீரின் வேகத்தை குறைத்து. அபரிதமான நீரை தடுப்பணையின் மேல் வழிந்தோட செய்து, நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளப் பெருக்கும் ஏற்படாது.

அந்த மகா சமுத்திரம் போன்ற காவிரி ஆற்றின் குறுக்கே எதைக்கொண்டு தடுப்பு எழுப்புவது.? சாத்தியமான முயற்சியா..? 

2000 ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தான் கரிகாலன் .

எப்படி சாத்தியமாயிற்று..? அந்த சாதனை எப்படி நமக்குத் தெரியவந்தது.? வழக்கம்போல் அதைச்சொல்வதற்கும் ஒரு ஆங்கிலேயர்தானே நமக்கு வேண்டும் .

வந்தார் ... ஆர்தர் காட்டன்.. மிகச்சிறந்த நீர்ப்பாசன பொறியியல் அறிஞர். 

1829 ம் ஆண்டு.. அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியின் நீர்ப் பாசனத் தலைமைப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன்...

முதல் முறையாகக் கல்லணைக்கு வருகிறார்..

கி.பி. 1777 இல் மெக்கன்சி கையெழுத்து ஆவணங்களில் இவ்விடம்

" அணைக்கட்டி ' 

என்று குறிக்கப்பட்டிருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தார் காட்டன்.

அது என்ன அணைக்கட்டி..? அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இப்பகுதியை ஆய்வு செய்கிறார். 12 அடி ஆழ குழி தோண்டி பார்க்கும் போதுதான் நீருக்குள் இருக்கும் அந்த கட்டுமான ரகசியம் அவருக்குத் தெரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே, 1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட பாறைக் கற்களால் கட்டப்பட்ட தடுப்புச்சுவரைக் கண்டார்.. 

காவிரி ஆற்றின் நீர் தடுக்கப்பட்டதையும், தேவைப்படும் பொழுது மதகுகளின் வழியே பாசனத்திற்கு வெளிவிடப்பட்டதையும் அறிந்தார்..

இது எவ்வாறு சாத்தியம்..? தண்ணீரின் குறுக்கே கற்கள் அணை எப்படி..? இதன் அடித்தளம் எவ்வாறு இருக்கும்.? இதை எப்படி அமைத்தார்கள்.? எப்போது ? பல ஆண்டுகள் ஆய்வு நடத்தினார்..

இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழர்களின் பொறியியல் அறிவு வெளிவந்தது.. உலக பொறியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


ஆர்தர் வெளியிட்ட கல்லணையின் கட்டுமான இரகசியம் இதுதான்...

நாம் கடற்கரையில் நின்றிருப்போம்.. அலையடித்த நீர் நமது பாதங்களை தழுவும். அப்போது ஏற்படும் மணல் அரிப்பின் காரணமாக நமது பாதம் சற்று மண்ணில் புதையும்.. சற்று நேரம் இதே நிலை நீடித்தால், நமது பாதங்கள் ஒரு நிலைத்தன்மை பெற்று விடும். நமது பாதங்களை வெளியே எடுப்பதற்கு சற்று சிரமம் நேரும்.. இதுதான் கல்லணையின் மூலத் தொழில் நுட்பம்...

பெரிய பாறைக்கற்களை கொண்டு வந்து நீருக்குள் போட்டார்கள்.. அது நீருக்குள் மூழ்கி தரைத்தளத்தை தொட்டு மண் அரிப்பின் காரணமாய் இன்னும் அமுங்கி ஒரு பலமான நிலைத்தன்மை பெறும்.. 

பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒட்டுப்பசை கொண்ட ஒரு வித களிமண்ணைத் தடவி அடுத்த பாறை.. இதே முறையில் அடுத்தடுத்த கற்கள்.. மணற் பகுதியான அடிப்பகுதி இப்போது கருங்கற்களால் ஆன அஸ்திவாரமாகிவிட்டது.

( நீரை வெளியேற்றி, மணல் பகுதியில் ஆழமாய் குழி வெட்டி, கம்பி ஜல்லி மணல் சிமெண்ட் கொண்டு பில்லர் போட்டுத்தான் இப்போது ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுகிறோம்)

தொடர்ச்சியாய் கல்லின் மேல் கற்கள் போடப்பட்டு ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமாய் தடுப்பணை எழுந்தது.. இவ்வமைப்பை முழுதும் ஆராய்ந்த ஆர்தர் வாயிலிருந்து வெளிப்பட்ட முதல் வார்த்தை..

" The. Grand Anaicut. "

மகத்தான அணை.

இரண்டாயிரம் ஆண்டுகால பழமையான தமிழனின்
பொறியியல் திறன் வெளியுலகத்திற்கு தெரியவந்தது..

சர் .ஆர்தர் காட்டன் இவ்வாறு எழுதுகிறார்.

ஆழம் காண இயலாத மணற்படுகைகளில் நீருக்குள் எப்படி அடித்தளம் அமைப்பது என்பதை கல்லணை அமைப்பைப் பார்ந்து கற்றுக்கொண்டேன். இம்மகத்தான செயல் செய்த அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த பழமையான தொழில்நுட்பத்தில்தான் 1874 ம் ஆண்டு கோதாவரியின் குறுக்கே நான் தடுப்பணை ஒன்று கட்டினேன்.


அதன்பிறகு, கரிகாலன் கட்டிய அதே கல்லணையின்
மேல், சில மாற்றங்கள்.. நீரொழுங்கி எனப்படும் ரெகுலேட்டர், மதகுககள் , கல்தூண்கள் அமைக்கப்பட்டன.. 

1840 ஆம் ஆண்டு இன்று நாம் காணும் 32 அடி அகல பாலம் கட்டப்பட்டது.

தமிழகரசும் கரிகாலனுக்கு மணிமண்டபம், உருவச்சிலை எடுத்து பெருமிதமும் கொண்டது.

மழைக் காலங்களில் தண்ணீரை தேக்க, பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு என்று கல்லணை இன்றும் தன் பணியைத் திறம்படச் செய்கிறது..

எல்லாவற்றுக்கும் முன்னோடி என்றுமே தமிழன்தான் என்பதற்கு மேலும் ஒரு சான்றுதான் கல்லணை..

ஆனால்.. 

ஒரு சிலர் கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்னும் ஒரு கருத்தியலை வலிந்து திணிக்க முயற்சி செய்கின்றனர்.

காவிரி ஆற்றின் கரைகளை உயர்த்தி, நீருக்குள் பாறைகளால் தடுப்பணை கட்டியது கரிகாலனே என்பதற்கு சான்றுகளாக ஏராளமான இலக்கிய, வரலாற்று, தொல்லியல் ஆவணங்கள் உள்ளன.

அவற்றில் அவசியமான சில சான்றுகள்.

இலங்கையின் மீது படையெடுத்த கரிகாலன் அந்நாட்டை வென்று அங்கிருந்த கொண்டு வரப்பட்ட ஆட்களைக் கொண்டு காவிரி ஆற்றின் கரைகளை உயர்த்தினான் என்று இலங்கை மகாவம்சம் கூறுகிறது.

கரிகாலன், தனது வடபகுதி படையெடுப்பின் போது இன்றைய ஆந்திராவை வென்று தனது வம்ச பிரநிதி ஒருவனை தெலுங்குப்பகுதியை அரசாளவைத்தான். இவனது வம்சத்தில் வந்தவர்களே தெலுங்குச்சோழர்கள் மற்றும் ரேணான்டு சோழர்கள். இவர்களது சாசனத்தில் தங்களை காவிரிக்கு கரை எழுப்பிய கரிகாலன் வம்சத்தினர் எனக்கூறுகிறார்கள். 

தெலுங்குச் சோழர்களின் மூலமே தமிழ் சோழர்தான். 

இவர்களது சாசனம் இவ்வாறு தொடங்கும்..

" சரண சரோருஹ விஹித விலோசன பல்லவ த்ரிலோசன ப்ரமுகாகில ப்ரித்விஸ்வர காரித காவேரிதீர கரிகால குல ரத்ன ப்ரதீப”

காவிரி ஆற்றின் கரைகளை உயர்த்தும் பணியில் ஈடுபட்ட திரிலோசனவ பல்லவன் மற்றும் அரசர்கள் அடி பணிந்த கரிகாலன் வழிவந்த விளக்குகள்.

கரிகாலனின் வடபகுதி படையெடுப்பின் போது இன்றைய ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட திரிலோசன பல்லவன் என்பவனை வென்று காவேரியின் கரையை உயர்த்திக் கட்டும் பணியில் ஈடுபடுத்தினான். இந்நிகழ்வு குறித்து ஏராளமான இலக்கியத் தரவுகளும் உண்டு.

தான் வென்ற ஆந்திரப்பகுதியில் தனது மகனை ஆட்சியில் அமர்த்தியதாகவும், அவன் வழி வந்தவர்களே தெலுங்குச் சோழர்கள் என்பதும் ஆய்வாளர்கள் முடிவு. 

இங்கு.. நமக்குத் தேவையான ஒரு விடயம்... இவர்கள் அனைவருமே தங்களை காவேரிக்கு கரை உயர்த்திய கரிகாலன் வம்சம் என்று சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.

திரிலோச பல்லவன் என்பவரை கரிகாலன் வென்று காவிரியின் கரை கட்டிய வேலையில் பணிசெய்ய வைத்த நிகழ்வு இலக்கியங்களிலும் உள்ளது. இக்காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் கருத்து.

தெலுங்குச் சோழரான புண்ணிய குமாரனின் மலபேடு செப்பேடும் இதே தகவலை பதிவு செய்கிறது.

"கவேர தனயா வேலோலங்கன பிரஸமான பிரமுக தியானகாடிசயகாரிண கரிகாளஸ்ய..."
( Ep.ind.vol 11 no 35 line 3-5 )

கி.பி. 550 - 600 கங்க மன்னன் துர்வினீதன் என்பவன் சோழர் குல இளவரசியை மணந்தான். அவளை கங்கர் செப்பேடு இவ்வாறு கூறும்.

" காரித காவேரி தீர கரிகால சோழ குல வம்ச சோழ நிருபதி புத்ரீ "

காவேரியின் கரைகளை உயர்த்திய கரிகாலனின் குலத்தில் உதித்தவள்..

சோழர் செப்பேடுகளில் கரிகாலன் பற்றிய தகவல்கள். அனைத்து செப்பேடுகளும் கரிகாலனை காவிரி ஆற்றுடன் இணைத்தே அடையாளப்படுத்துகின்றன.

முதலாம் பராந்தகனின் உதயேந்திரம் செப்பேடு காலம் கி.பி. 922

சோழர் குலத்தோன்றலாக கரிகாலனை அடையாளப்படுத்துகிறது..

முதலாம் பராந்தகனின் வேளஞ்சேரி செப்பேடு. காலம் கி.பி 932.

காவிரியை இரு கரைகளுக்குள் அடக்கி, நீருள்ளவளாய்ச் செய்த கரிகாலன் .
( செய்யுள் - 8 )

பெரிய லெய்டன் செப்பேடு. காலம் கி.பி 1005

எதிரிகளுக்கு எமனான கரிகாலன் காவிரி நதிக்கு கரை எடுத்தான் .
( செய்யுள்- 11)

திருவாலங்காடு செப்பேடு.. கி.பி.1018

காவேரியின் கரைகளை கட்டித் தன் புகழை மெய்பித்தான்.
( செய்யுள் - 42) 

கரந்தை செப்பேடு.
கிபி. 1020

எதிரிகளுக்கு கூற்றுவனான கரிகாலன் காவிரி நதிக்கு கரை எடுத்தான் .
( செய்யுள் - 13)

எசாலம் செப்பேடு.
கி.பி. 1037

கரிகாலனது ஆணையினால் அரசர்கள் காவிரிக்கு கரை எடுத்தனர் .

சாரளச்சேப்பேடு. கி.பி. 1069.

சோழர்குல மன்னர்களின் திலகமான கரிகாலன், காவிரி நீர் வீணாக காட்டில் பாய்வதைக் கண்டு, எதிரி அரசர்களின் தலையில் மண் கூடைகளை சுமந்து வரச் செய்து கரையமைத்தான். 
( செய்யுள் - 49)

" பொன்னி கரை கண்ட பூபதி " என்கிறது விக்ரமச்சோழனுலா.

" மண்கொண்ட பொன்னிகரைகட்ட வாராதான் கண் கொண்ட சென்னிக் கரிகாலன் " என்கிறது குலோத்துங்கச் சோழனுலா.

" தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில் தொடர " என்கிறது கலிங்கத்துபபரணி.

சோழர் கல்வெட்டுகள் காவிரி ஆற்றுக்குக் 'கரிகால சோழப் பேராறு' என்று பெயர் சூட்டி பெருமையடைகிறது.

இவ்வாறாக.. காவிரி ஆறு என்றாலே கரிகாலன் ஆறுதான் என்பதை வலியுறுத்தும் சான்றுகள் ஏராளம்.

அனைத்து சான்றுகளும் காவிரிக்கு கரை எடுத்தான் என்றுதானே கூறுகிறது. அணை கட்டினான் என்று எங்கே வருகிறது.? என்பது ஒரு சிலரின் வாதம்.

அணை என்பதே பிற்காலச் சொல்தானே. கரை உயர்த்துவது , கரை கட்டுவது, இரண்டுமே நீரின் வேகத்தை தடுத்து பாசனத்திற்கு பயன்படத்தானே. நீரின் குறுக்கே அணை கட்டாமல் கரையை மட்டும் கட்டுவது என்ன பயன்..?

அதாவது ..

சீறிப்பாய்ந்து வரும் நீரின் வேகத்தைத் தடுக்க நீரின் குறுக்கே கற்பாறை கொண்டு அணை கட்டியதும் கரிகாலனே. ஆற்றின் கரையை உயர்த்தி பலப்படுத்தியவனும் கரிகாலனே.

இதை தெளிவாக சோழமண்டல சதகம் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது.. இவர்கள் கேட்ட கல்லணை இப்பாடலில் வரும்.

செல்லார் பணியும் செம்பியர்கோன் செழுங்கா விரியின் சிறந்தகரை
கல்லால் அணைகட் டுதற்கேவு கருமம் முடித்த சோழியர்கள் "

சோழமண்டல சதகம் செய்யுள் 41 .. கரிகாலனை இவ்வாறு கூறுகிறது.

கரிகாலன் வளவன் காவேரிக்கு கரைகட்டும் போது அப்பணியில் சோழியர்கள் ஈடுபட்டனர். கரிகாலன் உத்திரவால் கல்லால் அணைகட்டினார்கள்.

ஆக...

காவிரியாற்றின் கரை உயர்த்தியதும் கரிகாலனே...

காவிரியின் குறுக்கே கல்லால் ஆன கல்லணையைக் கட்டியதும் கரிகாலனே.


ஆர்தர் காட்டன்ஆர்தர் காட்டன்




கல்லணை மதகைச் செப்பனிட்ட ஆங்கிலேயர்  காப்டன் ஜே.எல். கால்டெல்


கல்லணையில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலின் ஒரு மூலையில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 1804-ஆம் ஆண்டு, கல்லணையில் இருக்கும் ஒரு மதகு ஆங்கிலேயர் ஒருவரால் செப்பனிடப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு சொல்கிறது.


 கல்லணைக் கல்வெட்டு


கல்வெட்டின் செய்திகள்

கல்வெட்டஇன் படத்தை கீழே காணலாம். கல்வெட்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு வரிகள் ஆங்கிலத்திலும், அவற்றை அடுத்து ஐந்து வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் வருமாறு:


அ) ஆங்கிலக் கல்வெட்டின் பாடம்:


   Repaird this COLLING

       2  LAH & Erected the 268

       3  Upright Stones

       4   By Capt. J.L. Calddel

       5   A.D. 1804

 

ஆங்கிலக் கல்வெட்டு, கி.பி. 1804-ஆம் ஆண்டில் கல்லணையின் மதகு ஒன்றை ஆங்கிலேயரான காப்டன் ஜே.எல். கால்டெல் என்பவர் செப்பனிட்டதாகக் கூறுகிறது. செப்பனிடும் பணியின்போது 268 கற்கள் சீரமைத்து வைக்கப்பட்டன என்பதாகக் கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக அறிகிறோம். ஆங்கிலக் கல்வெட்டில் மதகு என்பதற்கு ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சொல்லான “கலிங்கு என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பானதொன்று. அதை ஆங்கில எழுத்துகளால் ”கலிங்”  என்று எழுதியுள்ளனர். “கலிங்கு என்னும் சொல் மதகைக் குறிக்கும். இச்சொல், கல்வெட்டுகளில் மிகுதியாகப் பயின்றுவரும் சொல்லாகும். ஆங்கிலக் கல்வெட்டில் எழுத்துப்பிழை இருப்பதைக் காணலாம்.


ஆ)  தமிழ்க் கல்வெட்டின் பாடம்:


1 1804 இல் - த.ர

ராச (?) - கெவுணர்

மெண்டாரவற்க

ள் உத்திரவுப்படி

5  க்கி மகண ச- ராச -மே

ம்பன் ஜெம்சு  (?) 

7.......................



தமிழ்க் கல்வெட்டு வரிகளிலிருந்து, முழுமையான செய்தியை அறிய இயலாது. சொற்றொடர்கள் முழுமையானதாக இல்லை. கி.பி. 1804-ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. மதகு செப்பனிடுதல் பற்றிய சொற்றொடர்கள் இல்லை. அரசு ஆணையின்படி என்னும் தொடர் மூலம், செப்பனிடும் பணி அரசு ஆணையின்படி நிறைவேற்றப்பட்டது. என்பது அறியப்படுகிறது. தமிழ்க் கல்வெட்டில், ஆங்கில அதிகாரியின் பெயர் முழுமையானதாக இல்லை. அவருடைய பெயரின் முன்னொட்டாகவுள்ள “ஜே”  என்னும் எழுத்தின் விரிவான “ஜேம்சு”  என்பது குறிக்கப்பட்டுள்ளது. 1800 களில் “ஜே”  என்பது போன்ற நெடில் எழுத்துகளைக் குறிலாகவே எழுதும் வழக்கம் இருந்துள்ளது. முதல் வரியின் இறுதி எழுத்துகளும், இரண்டாம் வரியின்  முதலில் உள்ள ”ராச”  என்னும் எழுத்துகளும்,  சென்ற நூற்றாண்டு வரை மூத்த வயதினர் எழுதும் வழக்கப்படி “மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ” என்பது போன்ற ஒரு தொடரைக் குறிப்பதாகலாம். 2, 3 , 4  வரிகளில் உள்ள  “கெவுணர்மெண்டாரவற்கள்” என்பது,  ”கெவர்ண்மெண்(ட்)டாரவர்கள்”  என்பதன் பிழையான வடிவம் என்று கூறலாம்.  மேம்பன் என்னும் சொல்,  ”கேப்டன்” என்பதைக்குறிப்பதாகலாம்.  ஐந்தாம் வரியில் காணப்படும் தொடரான மகண ச-ராச-”  என்பது, மீண்டும்  “மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ என்பதையொத்த ஒரு தொடராகலாம்.

ஆஞ்சநேயர் கோயிலின் பின்னணி


கல்லணையைச் செப்பனிடும் பணியின்போது ஓரிடத்தில் தோண்டியதில் அங்கு ஓர் ஆஞ்சநேயரின் திருமேனி கிடைத்துள்ளது. அதன் பிறகே, கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், வேளாண்மைக்காக இவ்வணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும்போது, இந்த ஆஞ்சநேயருக்குப் பூசைகள் நடைபெறுவதும், ஒவ்வோர் ஆண்டும் பயிர் விளைந்ததும் முதல் நெற்கதிரை ஆஞ்சநேயருக்குப் படையலிட்டுப் பூசை நடைபெறுவதும் வழக்கம்.




அறிஞர் வா.செ.குழந்தைசாமி, “உரகில் உள்ள அணைகளில் இன்றும் உயிரோடு பயன்பாட்டில் உள்ள காலத்தால் மூத்த அணை கல்லணை" என்றார். இவர் நீரியல் அறிஞர். முக்கொம்பும் கல்லணையும் காவிரியின் பாதையில் முக்கியமான இடங்கள். திருச்சிக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில் முக்கொம்பு உள்ளது. இங்கிருந்துதான் காவிரி, கொள்ளிடம், காவிரிக்கால் என்று காவிரி மூன்றாகப் பிரிகிறது. இதனால்தான் இந்த இடம் ‘முக்கொம்பு’ ஆனது.

கல்லணையை உலக  பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் - கள்ளர் மரபை சேர்ந்த திரு. திருச்சி சிவா சேதுராயர் எம் பி அவர்கள் நாடாளுமன்ற்றதில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.







நன்றி. கொங்கு கல்வெட்டு ஆய்வு, உயர்திரு ஐயா சுந்தரம்

நன்றிஅணையை பற்றிய தகவல் உயர்திரு. மா.மாரிராஜன் ஐயாவின் கட்டுரையில் இருந்து.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்