ஞாயிறு, 25 ஜூன், 2023

பொ. ஆ. 1769 - 1789 இல் ராஜா ஸ்ரீ ராய ரகுநாத தொண்டைமான்



சோழ தேசத்தை காப்பாற்ற, ஐதர் சேனையை தலையோட வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான் ராஜா ஸ்ரீ ராய ரகுநாத தொண்டைமான்


தொண்டைமான் மன்னரான ராஜா ஸ்ரீராய ரகுநாத தொண்டைமான் 1769 டிசம்பர் 28 முதல் 1789 டிசம்பர் 30 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். இவர் 1738ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். தந்தையார் முதலாம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் மன்னராவார். தாயார் ராணி நல்லகட்டி ஆயி சாஹிப். இந்த தம்பதியினருக்கு இவர் மட்டுமே ஒரே புதல்வர். இவரும் அவர்கள் குடும்ப வழக்கப்படி வீட்டிலேயே தனி ஆசிரியரை அமர்த்திக் கல்வி கற்றவர்.

ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1769 டிசம்பர் 28இல் காலமான போது இவர் ஆட்சிக்கு வந்தார்.

ராய ரகுநாத தொண்டைமானும், தனது தந்தையைப் போல 20 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தார்.

இவர் தெலுங்கில் “பார்வதி பரிணயமு” எனும் நூலை இயற்றியிருக்கிறார்.

இவரது ஆட்சியில் தான் முத்துகுமரப் பிள்ளை, வெங்கப்ப அய்யர் ஆகியோர் திறமைவாய்ந்த அமைச்சர்களாக இருந்தனர்.

ராய ரகுநாத தொண்டைமான் மன்னருக்கு பதினொரு ராணிகள். இவருக்கு ஒரேயொரு மகள் மட்டும் இருந்தார். அவர் பெயர் ராஜகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆயி சாஹேப்.

தொண்டைமான் 1770 முதல் 1773 வரை அளித்த படை உதவிக்காக புதுக்கோட்டை படை வீரர்களின் செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருந்த நவாப், அந்த பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் அதற்கு ஈடாக பட்டுக்கோட்டையின் ஒருபகுதியான 142 கிராமங்களை உள்ளடக்கி தொண்டைமானுக்கு அளித்தார். இந்த பகுதியில் இருந்து 53,000 சக்கரம் (அன்றைய செலவாணி பணம்) கிடைத்தது. இதுவரை தேவைப்பட்ட படை செலவிற்காகவும், இனிவரும் காலங்களில் படை உதவி அளிப்பதற்காகவும் இப்பகுதியை அளித்ததாக ஒப்பந்தம் உருவானது. இப்பகுதியை 1773 இல் ஆங்கிலேய கம்பெனி துல்ஸாஜியைத் தஞ்சை மன்னராக மீண்டும் அமர்த்தியபோது தொண்டைமான் தஞ்சைக்கே இப்பகுதியை மீண்டும் வழங்கினார்.



ஐதர் அலியுடன் போர்:-



1750களில் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த கிருஷ்ணராஜா, தனது படையில் ஓரு போர் வீரராக இருந்து தளபதியாக உயர்ந்த ஐதர்அலிக்கு தனது ஆட்சிக்கு கீழிருந்த திண்டுக்கல் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை தந்தார். ஐதர்அலிக்கு தானே அரசரானால் என்கிற சிந்தனை வர, படை வீரர்களை தனக்கு சாதகமாக்கி 1762 ல் அரசை கைப்பற்றி மன்னராக அமர்ந்தான்.

மைசூரின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஐதர் அலி மாபெரும் படைபலத்தை பெற்று தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணினான். ஆங்கிலேயரும் ப்ரெஞ்சுகாரரும் அதிகாரப்போட்டியில் இருந்தப்போது ப்ரெஞ்சு அரசாங்கத்துக்கு பேராதரவை அளித்து வந்தான். கிபி 1779 ல் ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு காரர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவு பற்றி எரிய, போர் மேகங்கள் தென்னிந்தியாவிலும் சூழ்ந்தது. ப்ரெஞ்சு காரர்களின் மாகே துறைமுகத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், இதனால் ஐதர் அலிக்கு வெளிநாட்டில் இருந்து வந்துக்கொண்டிருந்த போர் தளவாடங்களின் வருகை நின்றது. ஆங்கிலேயருக்கு எதிராக ப்ரெஞ்சுகாரர்கள் தலைமையில் பெரும் கூட்டணியை உருவாக்க எண்ணினான் ஐதர் அலி.

கிபி 1780 , ஜுலை மாதம் பெரும்படை கொண்டு மைசூரில் இருந்து கிளம்பிய ஐதர், இரு வாரங்களில் பல குறுநிலமன்னர்களை வென்றான்.


புத்தூர் புன்னைத்தேவன் காவியம் எனும் காவிய நூலிலே 





தமிழகத்தில் நுழையும் முன் மலபாரின் கோயில்களை இடித்து தள்ளி, ஊரை எரித்து, அனைவரையும் மதம் மாற்றி, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக அழைத்து செல்கின்றான், நூற்றுக்கணக்கான மக்கள் கொள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் நுழைந்து கண்ணில் பட்ட இடங்களை எல்லாம் நாசமாக்கிவிட்டு முன்னேறுகிறான்.

அடுத்து மதுரையை தாக்கிய ஐதர் அலி 11 கிராமங்களை தீக்கிரையாக்கினான். நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்களை தன்னுடன் இணைய வலியுறுத்தினான். தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரும் ஐதரின் பக்கம் சென்றனர். தஞ்சை மன்னர் ஐதருடன் சேரும் பேச்சுவார்த்தையில் இருந்தார். தஞ்சை மன்னர் எந்த முடிவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். புதுக்கோட்டை அரசர் ராய ரகுநாத தொண்டைமான் நவாப் மற்றும் ஆங்கிலேயர் பக்கம் இருந்தார். தமிழகத்தின் மற்ற ஏனைய பாளையக்காரர்கள் ப்ரெஞ்சு கூட்டணியில் ஐதருக்கு ஆதரவாக இருந்தனர். தனது பக்கம் வரும்படி ஐதர் அலி அனுப்பிய தூதுகளை மறுத்து தொடர்ந்து ஆங்கிலேயர் பக்கம் இருந்தார் தொண்டைமான்.
(General history of pudukkottai state 1916 R.aiyar page 262-263)



தஞ்சையை சூரையாடிய ஐதர் அலி :-



மே மாதம் 1781, ஐதர் அலி தன் பக்கம் சேராத தஞ்சையை தாக்கினான்.23 ஜூலை 1781 அன்று தஞ்சையின் கோட்டை தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் ஐதர் கைப்பற்றினான். தஞ்சையின் மற்ற அனைத்து கோட்டைகளையும் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். தஞ்சையில் இருந்து கால்நடைகள் கடத்தப்பட்டன. விவசாய நிலங்கள் கொளுத்தப்பட்டது. கிராமங்கள் தீக்கிறையாயின.குளங்கள் மற்றும் ஏரிகள் உடைக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தப்பட்டது. கிணறுகளில் மனித பிணங்களே மிதந்தன. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அடிமைகளாக மைசூருக்கு இழுத்துசெல்லப்பட்டனர். கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பழமையான தெய்வ சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.



அந்த சமயத்தில் தஞ்சையில் வசித்து வந்த பாதிரியார் சுவார்ச் தனது குறிப்பில் :- வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், கோயில்கள் சூரையாடப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான சிறுவர்கள் (7-8 வயது) மைசூருக்கு கடத்தப்பட்டதால் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் தஞ்சை வீதிகளில் சுற்றி வருவதாகவும், பல பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், பல ஏரிகளும் அணைகளும் உடைக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாழாகி போனதாக எழுதியுள்ளார்.

ஐதரால் மைசூருக்கு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இஸ்லாமியராக மதமாற்றம் செய்யப்பட்டு, அனைவரையும் தனது பணியாளராக மாற்றினான். விவசாயம் பல ஆண்டுகள் தடைப்பட்டது. வறட்சியால் வீதிகளில் தினமும் மக்கள் மடிந்து விழுந்தனர். பிணங்களை அகற்றி மொத்தமாக எரிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். மக்கள் பசியால் கண்ணீர் விட்டனர். ஒரு சமயம் 1200 பேர் எலும்புக்கூடுகளை போல் நிற்க கூட முடியாமல் உணவுக்காக கையேந்தி நின்றுக்கொண்டு இருந்ததாகவும், பசியால் வீதிகளில் இறந்து கிடந்தவர்களின் உடல்களை நாய்களும், பறவைகளும் தின்றதாகவும், அவர்களுக்கு உதவ சென்ற கிறிஸ்தவ மிசனரி குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
(The history of christian missions 1864 p147-148)
(General history of pudukkottai state 1916 R.aiyar page 264-265)

ஐதர் அலியிடம் இருந்து புதுக்கோட்டை மக்களின் உயிரை காத்த தொண்டைமான் :-

தஞ்சை மீது படையெடுத்து வந்த ஹைதரலி சேனையுடன் எதிர்த்து போர் புரிந்த ஆங்கிலேய அரசுக்கு தேவையான படை உதவிகளை தொண்டைமான் செய்ததால் ஆத்திரமடைந்த ஐதர் அலி படைகள் புதுக்கோட்டை மீது தாக்குதல் தொடுத்தனர். 



ஐதர் படையின் முதல் தாக்குதல்:-

கிபி 1781 ல் , ஐதர் அலியின் பெரும்படை தனது எதிரணியில் உள்ள புதுக்கோட்டை தொண்டைமானை அழிக்க புறப்பட்டது. புதுக்கோட்டை எல்லையில் இருந்த ஆதனக்கோட்டை எனும் ஊரின் வழியே ஐதர் அலி படையின் ஒரு பிரிவு தாக்கியது. ராய ரகுநாத தொண்டைமான் தனது தளபதி சர்தார் மண்ண வேளார் தலைமையில் படையை அனுப்பி, ஐதரின் படைகளை ஆதனக்கோட்டையில் எதிர்க்கொண்டு விரட்டி அடித்தனர். பல நூறு ஐதர் குதிரை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். (சர்தார் மண்ணவேளார் வம்சாவளிகள் இன்றும் வைத்தூர் அம்மன் கோயிலில் முதல் மரியாதை பெறுகின்றனர். இவர்கள் புதுக்கோட்டை பல்லவராயர்களுடன் மண உறவில் இணைந்தவர்கள்). இந்த சமயத்தில் ஐதர் அலியின் கைகளில் சிக்கியுள்ள கீழாநிலைக்கோட்டையை மீட்கும்படி தஞ்சை மன்னர் தொண்டைமானுக்கு கடிதம் எழுதினார். ஐதருக்கு ஆதரவாக மருங்காபுரி பாளையக்காரனான பூச்சி நாயக்கனும், நத்தம் பாளையகாரன் லிங்க நாயக்கன் புதுக்கோட்டையில் தாக்குதல் நடத்தினர். தொண்டைமான் இவ்விரு பாளையக்காரர்களையும் விரட்டி அடித்தார். புதுக்கோட்டை தொண்டைமானின் ஏறுமுகத்தை அறிந்த தஞ்சையை சார்ந்த அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் தொண்டைமானிடம் தஞ்சம் அடைந்தனர்.



ஐதர் படையின் இரண்டாம் தாக்குதல் :-



ஐதர் அலியின் மற்றொரு படைப்பிரிவு புதுக்கோட்டை - திருச்சி எல்லையில் உள்ள மல்லம்பட்டி, எனும் பகுதியின் வழியாக புதுக்கோட்டையை தாக்கினர்.ராய ரகுநாத தொண்டைமான் தானே நேரடியாக களத்தில் இறங்கினார்.ஐதர் அலியின் வீரர்களின் தலைகளை கொய்தார்.

தொண்டைமானின் வீரத்தை பாடும் வெங்கண்ண சேர்வைக்காரர் வளந்தான் எனும் நூல்

" மலம்பட்டி வாடியிலே வந்த ஐதர் சேனையை தலையோட
வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான்"
என இந்நிகழ்வை குறிப்பிடுகிறது.

ஐதர் படையின் மூன்றாம் தாக்குதல் :-

ஐதரின் தளபதி ஒருவனை, ஒற்றைக்குதிரைக்காரன் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர். அவனும் மற்றொரு பகுதி வழியாக தாக்குதல் நடத்தியுள்ளான். அவனது தாக்குதலை தவிர்க்க எண்ணிய பேராம்பூர் மக்கள், ஒரு ஏரியில் உடைப்பை ஏற்படுத்தினர். உடைப்பினால் ஏற்பட்ட வாயக்கால் இன்றும் ஐதர் வாயக்கால் என அழைக்கப்படுகிறது.

இந்த ஒற்றைக்குதிரைக்காரன் புதுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடத்தினான். இந்த போர் நிகழ்ச்சிகளை பற்றி அம்புநாட்டு வளந்தான் மற்றும் வெங்கண்ண சேர்வைக்காரர் வளந்தான் எனும் இரு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தன் நாட்டில் புகுந்து சூரையாட தொடங்கிய ஒற்றைக்குதிரைக்காரனை தொண்டைமான் விரட்டி அடித்து, விராலிமலை பகுதியில் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் வைத்து கொன்றுள்ளார்.

" மஸ்தகம் பதித்ததொரு விராலிமலை தன்னில்
ஒற்றைக்குதிரைக்காரன் ஒருமையாக வந்தவனை
பற்றித் துரத்திவெட்டும் பகதூர் தொண்டைமான்"

என தொண்டைமானின் வீரத்தை புகழ்கிறது. தேசத்தில் இருந்த தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை சாப்பிட வைக்க ஒற்றைக்குதிரைக்காரனிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டும் பழக்கம் கிபி 20 ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளதை புதுக்கோட்டை வரலாறு எழுதிய ராதாகிருஷ்ண ஐயர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திருக்காட்டுப்பள்ளியை தொண்டைமான் கள்ளர் படை மீட்டல்:-


கிபி 1781, ஜூலை மாதம், ஐதர் அலியின் மகனான திப்புவுக்கு, ஒற்றர்கள் மூலம் தகவல் வந்தது. தொண்டைமானின் படைகள் தஞ்சையில் இருந்த சிறுபடையோடு திருக்காட்டுப்பள்ளியை மீட்க வருவதே அந்த தகவல். சையது சாகிப் எனும் ஐதரின் தளபதி தாக்குதலை சமாளிக்க தயாரானார்கள். ஆனாலும் தொண்டைமான் படைகளால் ஐதரின் படை விரட்டப்பட்டு , திருக்காட்டுப்பள்ளி மீட்கப்பட்டது. இந்த வெற்றியை குறிப்பிடும் ஆங்கில ஆவணம் , " The officer commanding the troops had frequently been shamefully defeated by kullars of tondaiman and regular cavalry of tanjore " என விளக்கியுள்ளது.
(General history of pudukkottai state 1916 R.aiyar page 267)




மன்னார்குடியை மீட்ட தொண்டைமான்:-



பட்டுக்க்கோட்டை, தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை ஆகிய பகுதிகள் ஐதரின் வசம் தொடர்ந்து இருந்தது. கிபி 1781, செப்டம்பர் மாதம், தொண்டைமான் படைகள் மன்னார்குடியில் இருந்து ஐதரின் படைகளை விரட்டியது. சிதறி ஒடிய ஐதர் படை பட்டுக்கோட்டையில் தஞ்சம் அடைந்தது.

தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை, பட்டுக்கோட்டையை மீட்ட புதுக்கோட்டை பல்லவராயர் படை :-



புதுக்கோட்டை தொண்டைமான் அடுத்த தாக்குதலுக்கு தயாரானார். தஞ்சை ஐதரின் கோர பிடிகளில் சிக்கித் தவித்தது. ஆங்கிலேயரும் நவாபும் ஐதரை விரட்டியடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.

தஞ்சையை மீட்க வலிமையான படை ஒன்றை உருவாக்கினார் தொண்டைமான். பெருங்களூர் போரம் பல்லவராயர், ராமசாமி ராங்கியத்தேவர், சுப்ரமணிய முதலியார் தலைமையில் பெரும்படையை அனுப்பினார். தஞ்சை, கீழாநிலைக்கோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டது.


ஐதருக்கு ஆதரவாக செயல்பட்ட, சேதுபதியின் உறவினர் மாப்பிள்ளை தேவன், தொடர்ந்து போரிட்டார். அவரை வீழ்த்த நலம் கொண்ட ஆவுடையப்ப சேர்வைக்காரர் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் தொண்டைமான். மாப்பிள்ளை தேவன் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கிபி 1781 இறுதியில் ஐதர் படை சோழ தேசத்தில் இருந்து பின்வாங்கியது.

சோழதேசத்தில் துலுக்கரால் ஏற்பட்ட கழகங்களை ஒடுக்கி, ஐதர் படையை விரட்டி அடித்து, மக்களையும் பாரம்பரிய சின்னங்களையும் காக்க தன் உயிரை துட்சமாக எண்ணி போரிட்ட தொண்டைமான் தலைமையிலான படையினருக்கு சோழ நாட்டு மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். தஞ்சையை ஆட்சி செய்த மராத்திய மன்னர் தன் உயிரை காக்க தப்பி ஒடியபோதும், தன் நாடான புதுக்கோட்டையில் எந்த சலசலப்பும் ஏற்படாமல் காவல் தெய்வங்களை போல காத்து நின்றவர் புதுக்கோட்டை மன்னர் ராய ரகுநாத தொண்டைமான்!

திப்பு சுல்தான் படைகளை 1783ல் ஆங்கிலேயரோடு கைகோர்த்த தொண்டைமான் படை வென்றது. கரூர், அறவக்குறிச்சி,திண்டுக்கல் பகுதிகளை தொடர்ந்து பாலக்காடு பகுதிகளையும் தொண்டைமான் படைகள் கைப்பற்றியது.

எதிர்த்த எல்லா படைகளையும் (சிவகங்கை, இராமநாதபுரம் அரசுகள், தஞ்சை மராத்தியர், மதுரை நாயக்கர்கள், நவாப்கள்,பிரஞ்ச் படைகள்,மைசூர் சுல்தான் )



இன்று புதுக்கோட்டையில் இந்துக்களும் பழங்கால கோயில்களும் அதே பொலிவுடன் விளங்குவதற்கு காரணம் 13 ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் ஐதரின் படைகளிடம் இருந்து புதுக்கோட்டையை காத்த கள்ளர்களும் மற்றும் தொண்டைமான் மன்னர்களே.

இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்:

“நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.” இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று.

இருபது ஆண்டுகள் இவர் ஆட்சி முடிந்த நிலையில் இவர் 1789 டிசம்பர் 30 இல் காலமானார். இவர் இறந்த போது இவருக்கு ஆண் மக்கள் எவரும் இல்லாத நிலையில் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் உறவினரான “விஜய ரகுநாத தொண்டைமான்” அரச பதவியைப் பெற்றார்.

General history of pudukkottai state R aiyar 1916/ p 264-271

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்










புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' எழுதிய ஜெ. ராஜாமுகம்மது பார்வையில் தொண்டைமான்










வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்