சனி, 25 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ ஆதித்த சோழத்தேவர்


சிற்றரசாக இருந்த சோழ அரசை பேரரசாக உருவாக்கியவர் விஜயாலயரின் மகனான ஆதித்த சோழத்தேவர் எனலாம். 

முதலாம் ஆதித்தன் (கி.பி.871 - 907), விஜயாலயச் சோழத்தேவரின் மகன் இத்தகவல் சோழர்களது செப்பேடுகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. ஆதித்தன் என்னும் பெயர் செப்பேடுகளில் மட்டும் கூறப்படுகிறது. கல்வெட்டுகளில் இவர் இராசகேசரி என்றே அழைக்கப்படுகிறார்.

இராஜகேசரி ஆதித்த சோழத்தேவரின் போர் வெற்றிகள்

பிற்கால சோழ அரசை பேரரசாக ஆக்கிய பெருமை முதலாம் ஆதித்த சோழரையே சாரும். பிற்கால சோழர்களில் முதல் சக்கரவர்த்தி எனலாம். சிற்றரசாக எண்ணற்ற போர்க்களங்களில் பல்லவர்களுக்கோ பாண்டியர்களுக்கோ ஆதரவாக போரிட்டு வந்த சோழர்கள் திருப்புறம்பிய போரில் வலிமையாக உருவெடுத்ததை சென்ற பதிவினில் பார்த்தோம். இருந்துமே அவர்கள் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசாகவே இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. சோழ அரசை பேரரசாக மாற்றும் எண்ணம் கொண்டிருந்த ஆதித்த சோழன் திருப்புறம்பிய போர் முடிந்து சிறிது காலத்திலேயே பல்லவர்கள் மீது போர் தொடுத்தான். பாண்டியர்களுடனான தொடர்ச்சியான போர்களினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்த பல்லவ படையின் பலத்தையும் பலஹீனங்களையும் உடனிருந்து போரிட்ட போது ஏற்பட்ட அனுபவங்களால் அறிந்திருந்த ஆதித்த சோழனுக்கு சோழர்களின் வீரப்படை துணையாயிருக்க பல்லவர்களை விரைவில் வீழ்த்தினான்.

பல்லவர்களை விட படைபலத்தில் பெருமளவு குறைந்திருந்தாலும் ஆதித்த சோழனின் சிறப்பான போர் வியூகத்தினால் வெற்றி தேவி சோழர்கள் வசமானாள். போரின் போது ஆதித்த சோழனே யானை மேலமர்ந்து போர் புரிந்த அபராஜித பல்லவனின் மீது பாய்ந்து கொன்றதாக கன்னியாகுமரி கல்வெட்டு கூறுகிறது. அபராஜிதவர்மனை தோற்கடித்து பல்லவ ஆட்சிக்கு முடிவுரை எழுதிய ஆதித்த சோழன் தொண்டை நாடு முழுவதையும் கைக்கொண்டான். அதனை 'தொண்டை நாடு பரவின சோழன்' என்று பெருமையுடன் தில்லைஸ்தானத்தில் உள்ள கல்வெட்டு விளக்குகிறது. கல்வெட்டு வரிகள் இணைக்கப்பட்டுள்ளது. கள்ளர்களின் பட்டங்களான தொண்டையர் தொண்டைப்பிரியர் குறிப்பிடத்தக்க ஒன்று. இதை தவிர பல்லவர் வழி வந்த தொண்டைமான் மன்னர்களின் பட்டங்களும் குறிப்பிடத்தக்கது.

தொண்டை நாட்டின் சிறப்பான வெற்றிக்குப் பிறகு ஆதித்த சோழனின் மற்றுமொரு சிறப்பான வெற்றியாகக் குறிப்பிடப்படுவது கொங்கு மண்டலத்தை சோழர்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்ததேயாகும். 'கொங்கு தேச இராசாக்கள்' எனும் நூல் ஆதித்த சோழன் கொங்கு மண்டலத்தை கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறது. நிறைய இலக்கியச் சான்றுகள் இருந்தாலும் கல்வெட்டுச் சான்றாக நமக்குக் கிடைக்கப்பெறுவது ஆதித்த சோழனின் 'இராசகேசரி பெருவழி' கல்வெட்டேயாகும். 

கோவை வனப்பகுதியில் மதுக்கரை எனும் இடத்திற்கருகே காற்றாடும் பாறை எனுமிடத்தில் வட்டெழுத்தும் தமிழும் சேர்ந்திருக்கும் அழகிய வெண்பா வடிவிலானக் கல்வெட்டொன்று கண்டறியப்பட்டது. 'ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராசகேசரி பெருவழி' எனத் தொடங்கும் அந்த வட்டெழுத்துக் கல்வெட்டு (இணைக்கப்பட்டுள்ளது) 

முதலில் யாருடையதாக இருக்கலாமென அடையாளம் காணப்படாமல் இருந்தது. பின்னர் எழுத்தமைதி வைத்தும் அதில் குறிப்பிடப்படும் கோக்கண்டன் எனும் பெயர் மேலே குறிப்பிட்டுள்ள தில்லைஸ்தானத்து ஆதித்தன் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும் அது ஆதித்த சோழர் கல்வெட்டுதான் என வரலாற்றாய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டது. சேர அரசனான தாணு ரவி என்னும் மன்னனுடன் நட்புறவுக் கொண்டிருந்த ஆதித்த சோழன் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றியவுடன் சேர நாட்டுடன் சோழர்கள் வாணிபம் செய்யும் பொருட்டு இந்த இராச கேசரி வழியை அமைத்ததுடன் அதில் பயணம் செய்வோர்க்கு நிழல் போல் பாதுகாப்பளிப்பேன் என்று உறுதி கூறியுள்ளதையும் கல்வெட்டு வரிகளால் அறியலாம். ஆதித்த சோழர் மேற்கொண்ட போர்களில் இந்த இரண்டு போர்களே ஆதாரங்களுடன் குறிப்பிடத்தகுந்தவையாகும். அடுத்த பதிவினில் ஆதித்தனின் மகனான பராந்தக சோழ சக்கரவர்த்தியின் சிறப்பான போர் வெற்றிகளை காணலாம்...! 


பல்லவரை வென்ற ஆதித்த சோழன் 


கொங்கு, : இந்த கொங்கு வெற்றியோடு தொடர்புடைய கள்ளர்களின் பட்டங்கள் கொங்கணர் கொங்கரையர், கொங்ககரையர், கொங்குதிரையர் கொங்குராயர் .


குடகுப் பகுதி ( தலைக்காடு), இந்த போர் வெற்றியோடு தொடர்புடைய கள்ளர்களின் பட்டங்கள் கூரார், கூராயர் கூரராயர் 


கங்கபாடி ( கன்னட மையப்பகுதிகள்)இந்த போர் வெற்றியோடு தொடர்புடைய கள்ளர்களின் பட்டங்கள் கங்கர் கங்கநாட்டார், கங்கநாடர்


நுளம்ப்பாடி :  இந்த போர் வெற்றியோடு தொடர்புடைய கள்ளர்களின் பட்டங்கள் நுளம்பர்


ஆதித்தன் கொங்கில் கிடைத்த பெரும் பொருள் கொண்டு தில்லை அம்பலத்திற்கு பொன்வேய்ந்தான். ( திருத்தொண்டர் திருவந்தாதி 65- நம்பியாண்டார் நம்பி).




கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் "இடங்கழி நாயனார்" வரலாற்றில் கூறுகின்றார். தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது.








காவிரிக் கரையில் பல சிவலாயங்கள் எழுப்பியதாக அன்பில் செப்பேடு கூறுகிறது..

இவருக்கு இரு மனைவியர், ஒருவர் இளங்கோ பிச்சி, இவர் இராஷ்டிர கூட வம்சமாக இருக்கலாம். இத்தம்பதியருக்கு ஒரு மகன். அவர் கன்னரத்தேவன்.

மற்றொரு மனைவியின் பெயர் வயிரியக்கன். பல்லவ குடியாக இருக்கலாம். இத்தம்பதியின் மகன் பராந்தகனாக இருக்கலாம்.

ஆதித்தனுக்கு கோதண்டராமன் என்னும் ஒரு சிறப்பு பெயரும் இருந்தது.


இவர் கி.பி. 907 ல் இறந்திருக்க வேண்டும்.


ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களின் எழுச்சிக்கு வித்திட்ட ஆதித்த சோழர்(871-907) காளஹஸ்தி அருகே உள்ள தொண்டைமானாற்றூர் எனும் இடத்திற்கு வரும் போது இயற்கை எதியுள்ளார். அவரது நினைவாக அவரது மகனான பராந்தக சோழன் அங்கேயே கோதண்டராமேசுரம் என்னும் பெயரில் பள்ளிப்படை கோவில் எழுப்பியுள்ளார். இந்த பகுதியில் இருந்து தான் மாட்சிமை மிக்க புதுக்கோட்டை மகாராஜா தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டைக்கு வந்தார்கள். பள்ளிப்படை கல்வெட்டில் இந்திர விழ பற்றிய செய்தியும் உள்ளது.

"ஏழுநாளைக்கும் உண்ண . . . . ண்காடி இருதூம்பு ஆழாக்கு இந்திரவிழாவினுக்குமாக விளக்[கினுக்கு] [நெ]ய் மேல்படி நாளைக்கு"
இவ்வாறு அவர் தொண்டைமான் பேராற்றூரில் இறந்தமை சில கல்வெட்டுகளில் 'தொண்டைமானாற்றூர் துஞ்சிய தேவர்' என அழைக்கப்படுவதிலிருந்து அறியலாம். காஞ்சிபுரம் அருகேயுள்ள திருமால்புரம் எனும் ஊரிலுள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலில் அவ்வாறு அவர் குறிப்பிடப்படும் கல்வெட்டு கீழே உள்ளது.


ஆதித்தேசுரம்.







பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர் விஜயாலச்சோழர்.

பழயாறை என்னும் குறுநிலப்பகுதிக்குள் அடைப்பட்டிருந்த சோழ தேசத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர். தஞ்சையைக் கைப்பற்றி சோழநாட்டின் எழுச்சிக்கு அடித்தளமிட்டவர்.

தந்தை அமைத்துக்கொடுத்த அடித்தளத்தின் மேல் தனது பயணத்தைத் தொடங்கினார் விஜயாலரின் மகன் ஆதித்தச் சோழன்.

இவரது காலமான 871-907

சோழ தேசத்தின் எல்லைகள் பரந்து பெருகி விரிந்தன. தொண்டை நாடு முழுவதும் சோழ ஆதிக்கத்தின் கீழ் வந்தன.

சிற்றரசு நிலையில் இருந்து பேரரசாக சோழம் உருவெடுத்தது.

மகா கீர்த்தியும் பராக்கிரமும் பெற்ற ஆதித்தச் சோழரின் ஆளுமையின் கீழ் சோழநாடு தனது பழம்பெருமையை மீட்டது..

காவிரிக்கரையின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் எடுத்து சோழர்களின் சைவ நெறிக்கும் அடித்தளமிட்டவர்.

பிற்காலச் சோழ சாம்ராஜ்யத்தின் ஒப்பற்ற தலைவனாக இருந்து பெரும் பராக்கிரமம் கொண்ட மாவீரரான ஆதித்தச்சோழர், தொண்டை நாடு தொண்டமானூற்றூர் என்னும் இடத்தில் சிவபதம் அடைந்தார்.

ஆதித்தச் சோழரின் மகனான பராந்தகன், தனது தந்தை இறந்த இடத்தை கோதண்டராமேசுவரம் என்னும் ஊர்ப்பெயரை அமைத்து, ஆதித்தேசுரம் என்ற பெயரில் தனது தந்தைக்கு ஒரு பள்ளிப்படை கோவிலை எடுத்தார்.

தனது 34 ஆவது ஆட்சியாண்டான
கி.பி.941ல் இப்பள்ளிப்படைக் கோவிலை எழுப்பினார்.

இக்கோவிலில் உள்ள மதுரை கொண்ட கோபரகேசரி பராந்தகனின் கல்வெட்டு சிறப்பான வரலாற்றுத்
தகவல்களளைச் பதிவு செய்கிறது.

"ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு முப்பத்தினாலாவது திருவேங்கட கோட்டத்து ஆற்றூர்நாட்டு தொண்டைமான் ஆற்றூர் சபையோமும் நகரத்தோமும் பள்ளிப்படை வாகீஸ்வர பண்டித படாரர் ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தேஸ்வரத்து ஆள்வார்க்குப் புரட்டாசித் திங்கள் திருக்கேட்டை முதல் எதிரெழு நாளும் திருநட்சத்திரமாகிய திருச்சதையத்தன்றுந் திருஉத்ஸவஞ் செய்வதற்கும் போஜனத்துக்கும் பள்ளிப்படை வாகீஸ்வர பண்டித படாரர் தொண்டைமான் பேராற்றூர் சபையோமும் நகரத்தோமும் வழி சந்திராதித்தவற்குத் தர்மஞ் செய்வதாக எங்கள் வழி வைத்த பொன்....."

என்று தொடங்குகிறது.

ஆதித்தச்சோழரின் பிறந்தநாள் புரட்டாசி மாத சதையம் நட்சத்திரம்.

புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரம் தொடங்கி வரும் 7ம் நாள் ஆதித்தரின் திரு நட்சத்திரமான புரட்டாசி சதையம்.

புரட்டாசி கேட்டை முதல் சதையம் வரை உள்ள 7 நாட்களும்..

ஆதித்தனது பள்ளிப்படைக்கோவில்
விழாக்கோலம் பூண்டது.

சிறப்பு வழிபாடு, இறைவனுக்கு தனித்துவமான அலங்காரம், ஆயிரம்பேருக்கு அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், என்று ஏழு நாட்களும் களை கட்டும்.

இந்நிகழ்வுகளுக்காக 105 கழஞ்சு பொன்னும், வருடத்திற்கு 4000 காடி நெல்லும் முதலீடாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.

நிவந்தப் பட்டியலும் இக்கல்வெட்டில் உள்ளன..

ஆயிரம் பேர் அன்னதானத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, நெய், உப்பு, காய்கள், போன்றவை தேவைப்படும் விபரம்.
இதற்கான நிவந்தம்.

அடுப்பெரிக்க விறகிடுவான், இலைகொண்டு
வருபவர், கலசம் கொண்டு வரும் குசவர்,
இவர்களுக்கான நிவந்தம்.

சுவாமி அலங்காரத்திற்கு பூமாலை கொண்டு வந்தவர், நீர் கொண்டு வந்தவர்.. இவர்களுக்கான நிவந்தம்.

ஏழாம் நாள் நடைபெறும் இந்திரவிழாவிற்கான மேடை அமைத்தத் தச்சர், கூத்தாடுபவர், பாடல் பாடுபவர்.
இவர்களுக்கான நிவந்தம்.

அனைத்து விபரங்களும் கல்வெட்டில் விரிவாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்ட தொல்லியல் சான்றுகளில் முதல் சான்று ஆதித்தனது பள்ளிப்படைக் கல்வெட்டு..

ஏழு நாட்களும்..
திருவிழாக்கள் நடத்தி
ஆடல் ,பாடல், என்று களிப்புற்று தங்கள் தேசத்து தலைவனின் நினைவை நினைவு கூர்ந்துள்ளனர்.

ஆனால் இன்றைய நிலையோ....?

ஆந்திரமாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள ஆதித்தனின் பள்ளிப்படை .. ஆள் நடமாட்டமில்லாமல் வெறுமையாய் உள்ளது.

பழைய நிகழ்வுகளின் நினைவுகளை சுமந்து நிற்கும் கல்வெட்டும்..
சலனமற்று இருக்கும் ஆதித்தேசுரரும்..

சோழத்தின் மாவீரரான ஆதித்தச் சோழரை நினைவூட்டுகின்றன.

விழா நடக்கும் ஏழு நாட்களின் முதல் நாளான புரட்டாசி கேட்டை நட்சத்திரம்.

ஏழாம் நாள் விழா நிறைவு பெறும் ஆதித்தரின் திருநட்சத்திரமான
புரட்டாசி சதையம்.


நன்றி

இந்தியத் தொல்லியல் துறை
வரலாற்றறிஞர் திரு.சதாசிவ பண்டாரத்தார்.
வரலாற்றறிஞர் திரு.பூங்குன்றன்.
உயர்திரு. உதயா சங்கர்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்