வெள்ளி, 31 மார்ச், 2023

தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு

தஞ்சை பெரிய கோவில் / தஞ்சைப்‌ பெருவுடையார்‌ பெரியகோயில்‌ வரலாறு / தஞ்சைப் பெருவுடையார் கோயில் வரலாறு / தஞ்சைப் பெருவுடையார் கோவில் வரலாறு / தஞ்சை பெரிய கோவில் ‎வரலாறு / தஞ்சை பெரிய கோயில் ‎வரலாறு / தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு /  தஞ்சாவூர் பெருவுடையார்‌ பெரியகோயில்‌ வரலாறு / தஞ்சை பெரிய கோவில் வரலாறு கட்டுரை / தஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்
 Thanjavur Periya Kovil History In Tamil




தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தார்கள். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுத்து வழிபட்டான். அவனது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றினர். இங்குதான் மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் ஓர் கற்கோயில் எடுத்துப்பித்து அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பெருமை பெற்றான்.




சோழர்களின் குல தெய்வமாக விளங்கிய வராகி அம்மன்








தஞ்சாவூரிலுள்ள சோழ நாடு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்,  கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற மன்னர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.



தஞ்சைப் பெரியகோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலகப் பொறியியல் வல்லுநர்கள் பார்த்து வியக்கிறார்கள்.



தமிழர்களின் கட்டடக் கலைத்திறனுக்குச் சான்றாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெரியகோயில், `ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரமாண்டம்’ என்று பெரிய கோயில் கட்டுமானத்தைப் பற்றி வரலாற்று வல்லுநர்கள் மெய்சிலிர்த்துக் கூறுகிறார்கள்.



தஞ்சை பெரிய கோயிலின் முக்கிய பொறுப்பில் கள்ளர் சமூகத்தினர்தான் இருக்கிறார்கள். கள்ளர் அரையர் தஞ்சை பாப்பா நாட்டின் குறுநில மன்னர் விசையதேவர்களின் வழியினர் சிறப்பிக்கப்படுகிறார்கள். சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் பத்தாம் நாள் மண்டகப்படி கள்ளர் குடியை சேர்ந்த ஐயா செல்வராஜ் நாயக்கவாடியார் குடும்பத்தினர்தான் செய்கிறார்கள். மராட்டிய மன்னர்களுக்கே முதல் மரியாதை தரப்படுகிறது. 


தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா பொறுப்பாளர்கள் பாராட்டு நிகழ்வு துளிகள்


ஐயா செல்வராஜ் நாயக்கவாடியார்



ஐயா வ. பழனியப்பன் சோழகர்


ஐயா குடவாயில் பாலசுப்பிரமணியம் சோழகர்



இத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூர் மற்றும் இங்கு வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலைப் பற்றி, வரலாறு, கல்வெட்டு ஆகியவைகளின் அடிப்படையில் ‘தஞ்சாவூர்’ எனும் ஓர் ஒப்பற்ற நூலையும் ‘இராஜராஜேச்சரம்’ எனும் மற்றொரு நூலையும் எழுதி வரலாற்றில் இடம்பெற்று விட்டவர் கள்ளர் குடியில் பிறந்த முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் சோழகர்.


ஐயா குடவாயில் பாலசுப்பிரமணியம் சோழகர்

இவருடைய மேற்படி நூல்களில் இருக்கும் செய்திகளைத் தவிர வேறு எந்தப் புதிய தகவலையும் மற்றவர் யாரும் கொடுத்துவிட முடியாது. 



சிவபாதசேகரன் அழைக்கிறேன் 


கோவிலில் நடக்கும் விழா ஒன்றுக்கு அரசனே அழைப்புக் கொடுத்த ஒரு நிகழ்வு. 

தஞ்சை பெரியகோவில்... எண்ணிலடங்கா சிறப்புக்களில்....

இக்கோவிலில் நடைபெற்ற திருவிழாக்களும் வெகு சிறப்புதான்... கோவில் கட்டிமுடிக்கப்பட்டு முதல் விழாவாக கி.பி. 1010 ல் பெரியகோவிலின் குடமுழுக்கு விழா நடந்தது.

அதன் பிறகு இப்பெரிய கோவிலில் நடைபெற்ற திருவிழாக்கள்..

இராஜராஜரின் பிறந்த நட்சத்திரமான சதையம் வரும் ஒவ்வொறு மாதமும் விழா கொண்டாடப்பட்டுள்ளது. திருச்சதையவிழா.. 12..

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விழா... 1

மாத சங்கிராந்தி விழா..12..

எழுந்தருளும் விழா ..1

கொடியேற்ற நாள் விழா..1..

ஆண்டு உற்சவ விழா..9

ஆக ஆண்டுக்கு 36 விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன...



இத்திருவிழாக்களுக்கான அழைப்புகளை திருப்பறை கொட்டியும்..
எக்காளம் ஊதியும் அறிவித்தனர்.

இந்த எக்காளம் என்ற வாத்தியத்தின் கங்கில் எனப்படும் அகன்ற வாய்ப்பகுதியில் அரசனின் பெயர்கள் பொறிக்கப்பட்டது...

கல்வெட்டுவரிகள் இவ்வாறு....

சிவபாதசேகரனென்றும் ஸ்ரீராஜராஜனென்றும் திருநாமம் வழங்கி கங்கில் ஒன்றும் குழல் இரண்டும்..

ஒரு எக்காளத்தில் ஸ்ரீராஜராஜன் என்றும்..
மற்றொன்றில் ஸ்ரீசிவபாதசேகரன் என்றும் பெயர்.. பொறிக்கப்பட்டது...

பறையறிவுடன் ...

அரசனினன் பெயர் பொறித்த
எக்காளங்கள் ஊதப்படும்..

சிவபாதசேகரன் என்னும் ராஜராஜன் ஆகிய நான்.. நடைபெறும் திருவிழாவுக்கு மக்கள் அனைவரையும் அழைக்கிறேன்...

இராஜராஜனே.. தம்மக்களை அழைப்பதுபோல்.. அவர் பெயர் பொறிக்கப்பட்ட எக்காளங்கள் ஊதப்பட்டன....






‘இராஜராஜேச்சரம்’  பெயர்க்காரணம்.

“கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.”

“பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.”




சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.

இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன.

“இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. 

“மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.”



‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.


பெயர்புராண பெயர்(கள்) : தஞ்சாவூர் 

பெருவுடையார் கோவில்பெயர் : தஞ்சைப் பெருவுடையார் 

மூலவர் : பெருவுடையார், பிரகதீசுவரர்

உற்சவர்: தியாகராஜர்தாயார் : பெரியநாயகி, பிரகன்நாயகி

உற்சவர் தாயார் : கமலாம்பிகை

தல விருட்சம்: வன்னி மரம்

தீர்த்தம்:சிவகங்கை தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா
பாடல் வகை:

திருவிசைப்பாபாடியவர்கள்:கருவூரார்




குடுத்தார் குடுத்தனவும்...


எவ்வளவு நிதர்சனமான வார்த்தை இது..

இராஜராஜரே கூறியது.

தற்காலத்தில் இவ்வார்த்தைதான் நிதர்சனமானது.

ஶ்ரீவிமானத்தில் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டிந.......

தஞ்சை பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டது கோவிலுக்கு வந்து குவிந்த நிவந்தங்கள் மிகவும் பிரம்மாண்டம்.



அரசர் அவரது அக்கன், அரசனது தேவியர் , அதிகாரிகள் மற்றும் பொது மக்கள், பொன்னாகவும், காசுகளாகவும், ஆடு மாடுகளாகவும், நிலங்களாகவும் வாரி வழங்கினார்.

நிவந்தமாக வந்தவற்றை கல்லில் வெட்டி ஆவணமாகப் பதிவு செய்கின்றனர்.

அரசனின் நேரடி வாய்மொழி உத்ரவாக இச்செய்தி கல்லில் வெட்டப்படுகிறது.

கல்வெட்டு வாசகம்..

" நாங் குடுத்தனவும் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுப்பார் குடுத்தனவும் கல்லிலே வெட்டி அருளுக "

என்று கல்வெட்டு ஆரம்பமாகி நிவந்தங்களின் பட்டியல் பதிவு செய்யப்படுகிறது.

வாரி வழங்கியுள்ளனர்.

யார் யார் கொடுத்தது.? எவ்வளவு கொடுத்தார்கள்.? என்ன கொடுத்தார்கள்.? அனைத்தும் கல்வெட்டுகளாய் உள்ளன..

அரசன் கொடுத்த பொன்.. தேவியர் கொடுத்த படிமம். ஒரு இடையர் கொடுத்த ஆடு. யானைப்பாகர் கொடுத்த காசு.. என்று பிரம்மாண்ட நிவந்தப்பட்டியல் இது.

குவிந்த நிவந்தங்களின் ஒரு பகுதியைப் பார்த்தால்..

நிவந்தங்களின் அளவையும், அவற்றின் இன்றைய மதிப்பையும் கணக்கிடுவோம். இக்கணக்கீடு வேலையை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் 1937 ல் கணக்கிடுகிறார்.

சோழர்கால விலைவாசியும்,தற்கால விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

கோவில் கல்வெட்டுத்தரவுகளின் படி..

1 காசுக்கு 1200 வாழைப்பழங்கள் வாங்கலாம். 1 காசுக்கு 1/2 கழஞ்சு பொன் வாங்கலாம். ஒரு கழஞ்சு என்பது 5.2 கிராம். 1/2 கழஞ்சு என்பது 2.6 கிராம். 1 காசுக்கு மூன்று ஆடுகள் வாங்கலாம். இராஜராஜன் மட்டும் கொடுத்த தங்க பாத்திரங்களின் அளவு. 41 599 கழஞ்சு பொன்.

ஒரு கழஞ்சு என்பது 5.2 கி. ஆகவே 41599 × 4.2 = 216314.8 கிராம்.

ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ 3800 என்றால் 216314.8 × 3800 = 82, 19 ,96,240 ரூ.எண்பத்திரண்டு கோடியே பத்தொன்பது லட்சத்து தொண்ணூற்றாயிரத்து இருநூற்று நாற்பது ரூபாய்..

பொன் ஆபரணங்களின் அளவு 5100 கழஞ்சு. வெள்ளிப்பாத்திரங்களின் அளவு 1,99, 800 கிராம்..

குந்தவை கொடுத்தது, இராஜராஜனின் தேவியர் கொடுத்தது, அதிகாரிகள் கொடுத்தது, மக்கள் கொடுத்தது என்று அனைத்தையும் கணக்கிட்டால்.. தற்கால கணிப்பொறி தடுமாறும்.

கோவிலுக்குச் சொந்தமாய் சோழதேசத்தின் அனைத்துப்பகுதிகளிலும் நிலங்கள் இருந்தது. அருமொழிதேவ வளநாட்டில் இருக்கும் நிலங்களில் இருந்து கிடைத்த வருவாய். 68987 கலம் 2 தூணி 2 குறுனி .. நெல்.. மற்றும் 297 கழஞ்சு பொன்.

ராஜேந்திரசிங்க வளநாட்டிலிருந்து 51390 கலம் நெல் மற்றும் 1012 கழஞ்சு பொன். 

ஜெயங்கொண்ட சோழமண்டலம் மற்றும் பல பகுதிகள். இலங்கையில் கூட நான்கு ஊர்கள் பெருவுடையாருக்கு சொந்தமாயிருந்தன.வருமானமாக வந்த காசுகளும் ஏராளம்.

பொன்னாகவும், பொருளாகவும், நிலமாகவும், நெல்லாகவும், காசுகளாகவும், ஆடு மாடுகளாகவும் பெருவுடையார் கோவில் நிரம்பி வழிந்தது.

இந்நிலை அந்தக் காலம்.. தற்காலத்திற்கு வருவோம்.. இன்று ... பெருவுடையார் கோவிலுக்கு சொந்தமாய் எந்த ஒரு நிலமும் கிடையாது. நிரந்தர வருவாய் கிடையாது.. ( இதை கோவிலுடன் தொடர்புடைய பெரியவர்களிடம் விசாரித்து உறுதிடுத்தினேன். )

குடமுழுக்கு தேதி அறிவித்தாகிவிட்டது. (04.02.2020) அரசு நிதி ஒதுக்கி வந்து சேர்வதில் தாமதம். குடமுழுக்குப் பணிகள் நடைபெற வேண்டுமே..? என்ன செய்வது..? வந்தார்கள் இராஜராஜனின் அபிமானத்துக்குரிய.

" கொடுப்பார்கள் "

ஒவ்வொறுவரும் ஒவ்வொறு பணியை ஏற்றார்கள். நான் கொடிமரம், நான் பூஜை செலவு, கலசத்திற்கு முலாம் பூசும் தங்கத்தின் அளவு என்னுடையது, நான் அபிசேகப் பொருட்கள், நான் தடுப்பு அமைக்கிறேன் என்று பலரும் கடும் போட்டிப் போட்டு கொடுத்தார்கள். போதும் போதும் என்று நிர்வாகம் சொல்லும் அளவிற்கு நிதி நிரம்பி வழிகிறதாம்..

குடுப்பார் குடுத்த நிதியினாலே குடமுழுக்கு நடை பெற உள்ளது 04.02.2020 ல்.


தஞ்சை பெரிய கோவிலின் ராஜராஜர் வணங்கிய விநாயகர்



நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில்







இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE)

இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.


அனுக்கன் வாயில் இராஜராஜன் பெரிவுடையாரை தரிசிக்க இந்த வாயில் வழியாகத்தான் வருவார். எப்போதும் இவ்வாயில் பூட்டியே இருக்கும்.. குடமுழுயையொட்டி திறக்கபட்டபோது





தஞ்சை பெரிய கோயிலில் உள்ள அணுக்கன் திருவாயில்..சிவகங்கை தீர்த்தமாடி, கோயிலிலுக்குள் , ராஜராஜரும் அரச குடும்பத்தினரும் வரும் வாயில். அபிஷேகத் தீர்த்தமும் இவ்வழியேதான் எடுத்து வரப்பட்டு இருக்க வேண்டும்இதை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.






ராஜ ராஜன், ராஜேந்திரன், குந்தவைகள்,லோகமாதேவியார் உள்ளிட்டோர் கால்கள் தடம் பதித்த படிகளில் 
ஐயா செல்வராஜ் நாயக்கவாடியார்






திருக்கோயிலின் அமைப்பு



ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.

ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.



கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.

துவாரபாலகர்கள்


பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.



இக்கோயிலில் உள்ள துவார பாலகர்களின் உயரம் தலா 18 அடி. அதாவது உயர்ந்த ஆள்களைப் போன்று 3 மடங்கு அதிகம். இவ்வளவு பெரிய உருவங்களை ஒரே கல்லில் செதுக்கியுள்ளனர். இதுபோன்று 14 துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன.


அம்மன் ஆலயம்


நத்தி மண்டபத்திற்கு வடபுறம் அமைந்திருப்பது அம்மன் ஆலயம். இங்கு மேற்புறச் சுவரில் காணப்படும் ஓர் கல்வெட்டின்படி இது பாண்டிய மன்னனின் கல்வெட்டு என்பது தெரிகிறது. 





முதலில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில்தான் படிகள் இருந்தனவாம். பிறகு நாயக்க மன்னர்கள் காலத்தில் முன்மண்டபம் வழியாகச் செல்லும் பாதை அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நாயக்க மன்னர்கள் காலத்தில் பிரமிச்சி நாயக்கர் மண்டபம், மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம் ஆகியவற்றை எழுப்பித்ததோடு ஆலயத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியருக்கு ஓர் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயிலையும் எழுப்பியிருக்கின்றனர். 






முருகன் கோயில் 


நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் வைணவர்களாக இருந்தபோதும் தஞ்சையில் நாயக்க வம்சத்தை ஸ்தாபித்த சேவப்ப நாயக்கன் மட்டும் சைவனாக இருந்தான் எனவும், இவனே சுப்பிரமணியர் ஆலயத்தை எழுப்பியிருக்க வேண்டும் என்றும் நம்புகின்றனர்.



நந்தி தேவர் 


நந்தி மண்டபமும் அங்கே அமைந்திருக்கும் மாபெரும் நந்தியும் நாயக்க மன்னர்களின் கொடை. இந்த ரிஷப மண்டபம் 5அடி உயரமுடைய மேடைமீது 16 தூண்கள் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. மேற்கூரை ஒரே சமதளமாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் அமைந்துள்ளது. பிற்காலத்தில் வந்த நாயக்கர்களால் கட்டப்பட்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி.  இந்த நந்தியின் உயரம் 12 அடி. நீளம் பத்தொன்பதரை அடி. அகலம் எட்டேகால் அடி.






















ராஜராஜன் காலத்து நந்தி 

சோழர்களின் நந்தி இப்போது வராகி அம்மன் கோயிலுக்கருகில் இருக்கிறது. 







இந்த நந்தி மண்டபத்தையும், சந்நிதிக்குள் நுழையும் முன்மண்டபத்தையும் இணைக்க நாயக்க மன்னர்கள் முயன்றிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எழுப்பிய ஒரு தூண் இப்போதும் துவஜஸ்தம்பம் அருகில் இருக்கிறது.


விநாயகர் ஆலயம்



திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அமைந்திருக்கும் விநாயகர் ஆலயம் மராட்டிய மன்னன் சரபோஜியால் கட்டப்பட்டது. மன்னன் ராஜராஜன் கட்டிய விநாயகர் கோயில் திருச்சுற்று மாளிகையில் இருக்கிறது. இது மராட்டிய கட்டுமானத்தோடு விளங்குகிறது. இதன் பின்புறம் 108 சிறிய சிவலிங்கங்கள் உள்ளன. இவற்றை சரபோஜி மன்னன் வீரசிங்கம்பேட்டை எனும் ஊரிலிருந்து கொண்டுவந்து 1801இல் பிரதிஷ்டை செய்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இச்சிவலிங்கங்கள் வீரசிங்கம்பேட்டையில் கி.பி. 750இல் இரண்டாம் நந்திவர்மன் எழுப்பிய ஆயிரத்தளியில் இருந்தவை, பின்னாளில் அந்நகரம் அழியவே அந்த இடிபாடுகளிலிருந்து லிங்கங்களைக் கொணர்ந்து சரபோஜி இங்கே பிரதிஷ்டை செய்தான் என்கின்றனர்.




மாமன்னர் ராஜ ராஜ சோழ தேவர் எடுப்பித்த ஆலயங்களில் தனித்து நின்று அவர் வாழ்நாள் சாதனையை பாருக்கு பாடம் நடத்தி கொண்டு இருப்பது தஞ்சை பெரிய கோயில், இங்கு எல்லாமே பிராமாண்டம் இல்லையா ஆனாலும் கருவறையை விட்டு வெளியே வரும் தென் புறம் உள்ள மேடையில் இரண்டு குட்டி பிள்ளையார் உட்கார்ந்து இருப்பார்கள். இத்தனை பிருமாண்டத்தில் இத்தனூண்டு பிள்ளையாரையா ராஜ ராஜர் திருஷ்டி பரிகாரம் போல வைத்திருப்பார். இப்போது அந்த பிள்ளைகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள், அவை சோழர் கலைப்பாணியா...?..இல்லையே.....பிறகு இவர்கள் எங்கே இருந்து இங்கே வந்து அருளாட்சி செய்கிறார்கள்...?


அவை மாமன்னர் மேலை சாளுக்கியர்களை வென்று போர் நினைவு சின்னமாக கொண்டு வந்தவை என்று இப்போது புரிந்து இருக்குமே. இதுபோன்ற போர் நினைவு சின்னமாக சோழ மன்னர்கள் கொண்டு வந்த பிள்ளையார். குடந்தை நல்லூர். திருவலஞ்சுழி போன்ற கோயில்களில் வழிபாட்டில் இருப்பதையும் காணலாம்

தஞ்சை பெருவுடையார் திருவுருவம்


தஞ்சைக் கோயிலின் கட்டட அமைப்பு பெரும் கோயிலாகத் தொன்றுகிறதோ அதுபோலவே அதிலுள்ள சிற்பங்களுமும் பெரியதாகவும் எழில்மிகுந்தனவாகவும் காட்சியளிக்கின்றன. மற்ற சிவாலயங்களைப் பார்க்கும்போது இங்குள்ள சிற்பங்கள் தனித்துவமிக்கதாக இருக்கின்றன. இங்குதான் மிகப்பெரிய சிவலிங்கம் மூலவராகக் காட்சியளிக்கிறார். பெருவுடையார் எனப்பெயர் பெற்று விளங்கும் இந்த லிங்கத் திருமேனி முழுவதும் கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டது. மூன்று பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இதில் நடுவில் லிங்கபாணம் நீண்ட தூண்வடிவில் இருக்கிறது. அதன் மேல்பாகம் உருளை வடிவில் இருக்கிறது. இதன் பீடப்பகுதி சதுர வடிவில் இருக்கிறது. நடுப்பகுதியில் எண்பட்டை அமைப்பில் இருக்கிறது. இது தரையிலிருந்து 12 அடி 10 அங்குல உயரத்தில் இருந்தாலும் இதன் அடிப்பகுதி தரைக்குள் 3 அல்லது 4 அடியாவது புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ இது 16அடி உயரமுடைய ஒரே கல்லிலால் ஆன லிங்க வடிவமாகும்.



தட்சிணாமூர்த்தி சன்னதி




இராஜராஜேச்சரத்தில் மனித உருவச் சிலைகள்


இராஜராஜேச்சரத்து கல்வெட்டில் மன்னனின் தமக்கை குந்தவை நாச்சியார் தன் தந்தை இரண்டாம் பராந்தகனான சுந்தர சோழருக்கும் தன் தாயார் வானமன் மாதேவியார்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்தமை பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த சுந்தர சோழனை பொன்மாளிகை துஞ்சின தேவர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவர் நந்திபுரத்து அரண்மனையில் பொன்மாளிகையில் துஞ்சினவர் என்பதால் இந்தப் பெயர் பெற்றார். இராஜராஜன் அவன் தமக்கையார் ஆகியோர் தங்கள் தந்தைக்கும் தாய்க்கும் படிமங்கள் அமைத்து வழிபட்டமை தெரிகிறது.

இவை தவிர மன்னன் இராஜராஜனுக்கும் அவனது தேவி லோகமாதேவி ஆகியோர்க்கு பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியன் எனும் தென்னவன் மூவேந்த வேளான் படிமங்கள் எடுத்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

அர்த்த மண்டப தென்வாயிலில் மன்னன் இராஜராஜனும் அவன் மகன் ராஜேந்திரனும் சிலைவடிவில் காட்சியளிக்கிறார்கள். அவை அளவில் மிகச் சிறியதாகவும் கடவுளை வணங்கும் கோலத்தில் அவை வடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.


கருவூரார் சித்தரின் சிலை







கருவூரார் சன்னதி 



இராஜராஜேச்சரத்தில் கலைப்பணிகள்


தஞ்சை இராஜராஜேச்சரத்தில் இயல் இசை நாடகம் எனும் தமிழனின் முத்தமிழ் பிரிவுகள் சிறப்பாக வளர்ந்திருக்கின்றன. இவை இங்குள்ள கல்வெட்டுகள், சுவடிகள், சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாக அறியலாம். பின்னர் வந்த விஜயநகரப் பேரரசுகள், மராத்தியர்கள் ஆகியோர் காலத்திலும் இவை இங்கு சிறப்பாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.

இராஜராஜன் தேவார ஏடுகளைச் சிதம்பரம் ஆலயத்திலிருந்து மீட்டான் எனவும், அதனை நம்பியாண்டார் நம்பி முறைப்படுத்திக் கொடுத்தார் எனவும் வரலாறு சொல்லுகிறது. எனினும் இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் முறை இருந்திருக்கிறது. இதற்காக பணியாற்றியோர் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.



இங்கு திருமுறை விண்ணப்பம் பாடுவோர், உடுக்கை வாசிப்போர், மத்தளம் வாசிப்போர் ஆகியோர் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியக் கலை மிக மேன்மையாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்பது முக்கிய செய்தி. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் நாட்டியத்திற்காக நானூற்று ஏழு நாட்டிய மங்கைகளும் ஏழு நட்டுவனார்களும், உடன்பாடுவோர் நான்கு பேரும், மெராவியம் எனும் இசைக்கருவி இசைப்பார் இருவர், கானம் பாடுவோர் இருவர், வங்கியம் இசைப்பார் மூவர், பாடவியம் எனும் இசைக்கருவியை இசைப்போர் நால்வர், உடுக்கை வாசிப்போர் இருவர், வீணை வாசிப்போர் இருவர் ஆரியம் பாடுவார் மூவர் (அதாவது வேதம் ஓதுதல்) தமிழ் பாடுவோர் நால்வர், கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவர், முத்திரைச் சங்கு ஊதுவோர் மூவர், பக்கவாத்தியம் வாசிபோர் ஐவர் இப்படி பற்பலர் இங்கு பணிபுரிந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் உண்டு. திருப்பதியம் விண்ணப்பம் செய்வோருக்கு பிடாரர்கள் என்று பெயர்.

இப்படி ஆலயத்தில் பாடுவதற்கும், உடன் வாத்தியம் வாசிப்பதற்கும், நடனமிடுதற்கும் இந்தக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் இவைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டியமாடும் நங்கையர் நானூற்றி ஏழு பேருக்கும் இரண்டு தளிச்சேரிகள் (குடியிருப்புப் பகுதிகள்) அமைத்து அவரவர்க்குத் தனித்தனியாக வீடுகள் கொடுத்து அவற்றுக்கு இலக்கங்களும் கொடுத்த செய்தி குறித்து வைக்கப் பட்டிருக்கிறது. இந்த நங்கையர் அனைவர் பெயர்களும் அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர், முன்பு பணிபுரிந்த இடம் ஆகிய செய்திகளும் கொடுக்கப் பட்டிருப்பதிலிருந்து, அரசன் இவர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தான் என்பதை அறியலாம்.

ஆடற்கலைக்கு அரசன் அளித்த முக்கியத்துவம், அவன் வடித்துள்ள கரணச் சிற்பங்களிலிருந்து அறியலாம். ஆடற்கலைக்கு மூல முதல்வன் சிவபெருமான் நடராஜ மூர்த்தி எனும் ஆடவல்லான் ஆகும். “ஒரு மொழிக்கு எழுத்தும், அவ்வெழுத்துக்களின் கோர்வையான சொற்களும்தான் அடிப்படை. அதுபோல பரதக் கலைக்கு அடிப்படையாகத் திகழ்வது நூற்று எட்டு கரணங்கள். சிவபெருமான் முதன்முதலில் கரணங்களைப் போதித்தாராம். தஞ்சை இராஜராஜேச்சரத்தைப் போலவே பரதக்கலை கரணங்கள் தில்லை, திருக்குடந்தை, திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் உள்ளன. சில இடங்களில் பெண்கள் கரணங்கள் ஆடுவதாகவும், குடந்தையில் முருகக் கடவுள் ஆடுவதாகவும் சிற்பங்கள் உண்டு. இங்கு தஞ்சையில் பெருவுடையார் மூலத்தானத்துக்கு மேலே உள்ள பிரகார சுவர்களில் இந்த 108 கரணங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. 104 முழுமை அடைந்து விட்ட நிலையில் என்ன காரணத்தாலோ கடைசி நான்கு நிறைவு பெறவில்லை.






ஆலய ஊழியர்களுக்கு நிவந்தங்களும் ஊதியங்களும்

மாமன்னன் இராஜராஜன் இவ்வாலயத்தின் செயல்பாட்டுக்காக பல நிவந்தங்களை இட்டு வைத்தான். எண்ணற்ற பொன்னணிகள், பொன்னால் ஆன பாத்திரங்கள், பொன் திருமேனிகள், வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளித் திருமேனிகள், செப்புத் திருமேனிகள் என்று இவன் வழங்கியுள்ள நிவந்தங்கள் எண்ணற்றவை. சோழமண்டலத்தில் மட்டுமல்ல இவன் வெற்றி கொண்ட பிற பிரதேசங்களிலிருந்தும் பல ஊர்களை இந்தக் கோயிலுக்கு அளித்திருக்கிறான். ஊர்நத்தம் திருக்கோயில்கள், குளங்கள் என்று இவன் செய்வித்த அறங்கள் அளப்பரியன. நிலங்களுக்கு வரி நிர்ணயம் செய்து ஒவ்வோராண்டும் அளக்கப்பட வேண்டிய நெல்லும், அந்த நெல்லை அளக்க ‘ஆடவல்லான்’ எனும் பெயரில் ஓர் மரக்காலும் நியமித்தான்.

ஒரு ஊரின் மொத்த நிலப்பரப்பு, அதில் வரி விலக்கு பெற்ற விளை நிலங்கள், கோயில்களுக்கு தேவதானமாகத் தரப்பட்ட நிலப்பரப்பு, அதற்கு நிச்சயிக்கப்பட்ட வரி கோயிலுக்கு செலுத்துதல், எவ்வளவு நெல் அளக்க வேண்டும் என்பதுபோன்ற பல விவரங்களை கல்வெட்டில் எழுதி வைத்தான். துல்லியமான நில அளவினைக் குறித்து கோயிலுக்கு வரவேண்டிய நெல்லின் அளவு போன்றவற்றையும் மிகச் சரியாகக் குறித்து வைத்தான். இவன் பல ஊர்களிலும், பல நிலப்பரப்புகளிலிருந்தும் கோயிலுக்கு வரவேண்டிய மொத்த நெல்லின் அளவையும் குறித்து வைத்திருக்கிறான். அதன்படி இக்கோயிலுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்துப் பதினையாயிரம் கலம் நெல்லும், 300 கழஞ்சுப் பொன்னும், 2000 காசுகளும் நிரந்தர வருமானம் கிடைக்க ஆவன செய்தான்.

பெருவுடையார் ஆலயத்துக்கு பணிக்கப்பட்ட தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தலைக்கு ஒரு வேலி வீதம் 400 வேலி நிலம் மான்யமாக அளிக்கப்பட்டிருக்கிறது. வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல்லை இவர்கள் பெற்றார்கள். இந்தப் பெண்கள் இறந்தாலோ அல்லது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டாலோ உரிமையுள்ள இவர்களது குடும்பத்தார் நிலத்தின் பலன்களைப் பெறமுடியும்.


பரிசாரகர் பண்டாரி கணக்கர்

இந்த ஆலய ஊழியத்துக்காக பரிசாரகர், பண்டாரி, கணக்கர் போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி இங்கு 4 பண்டாரிகளும், 170 மாணிகளும், 6 கணக்கர்களும், 12 கீழ்கணக்கர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். சிலர் நிரந்தர ஊழியர்கள். மற்றையோர் பல்வேறு ஊர்களிலிருந்து சுழற்சி முறையில் கோயில் பணியில் இருப்பார்கள். கோயில் பண்டாரம் (stores) கருவறைப்பணி, கணக்குப்பணி இவற்றில் இருப்போர் கோயிலுக்குரிய பெரும் சொத்துக்களை பராமரிப்பவர்கள் என்பதால் இவர்களுக்குச் சொந்தமாக நிலம், பொருள், உறவினர் ஆகியவை இருத்தல் அவசியம். கருவூலத்தில் பொன், நவமணிகள், நெல் போன்ற விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பதால் இங்கு பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை இதனால் அறிய முடிகிறது.


காவலர்கள்

பெரிய கோயில் பண்டாரங்களில் விலை உயர்ந்த பொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததால், இவை அனைத்தும் சோழ மண்டல மக்களுக்குச் சொந்தம் இதில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது என்பதால் மன்னன் இவைகளுக்குத் தகுந்த காவலர்களை நியமித்தான். சோழ மண்டலம் முழுவதிலும் 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் நியமிக்கப் பெற்றனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.



ஆலயத்திற்குக் கொடைகள்

இராஜராஜேச்சரத்தில் திருவிளக்குகள் ஏற்றுவதற்காக நெய் முதலானவை கிடைக்க ஆயிரக்கணக்கான ஆடுகள், பசுக்கள், எருமைகள் ஆகியன கொடுத்திருந்தான். ஒரு விளக்குக்கு நாள் ஒன்றுக்கு ஓர் உழக்கு நெய் அளிக்க வேண்டும். இதற்காக பணமாகவோ நிலமாகவோ அளிக்காமல் ஊருக்கும் பயன்படும் விதத்தில் கால்நடைகளையே அளித்திருந்தான். மன்னன் மட்டுமா? அவன் அமைச்சர்கள், அரண்மனைப் பெண்டிர், உயர் அதிகாரிகள் அனைவருமே இந்த கொடையில் பங்கு பெற்று கொடைகள் அளித்து மகிழ்ந்தனர். காசு ஒன்றுக்கு 2 ஆடும், காசு இரண்டுக்கு 1 பசுவும், காசு மூன்றுக்கு ஒரு எருமையும் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.

பல்வேறு இடங்களில் வாழ்ந்தவர்கள் இந்தக் கொடைகளை வாங்கிக்கொண்டு நாள்தோறும் உழக்கு நெய் அளிக்க ஒப்புக்கொண்டனர். அவன் எவ்வளவு கால்நடைகள் வைத்திருந்தாலும் அவன் கோயிலுக்குத் தரவேண்டியது ஒரு உழக்கு நெய்தான், மீதம் அவன் சொந்தத்துக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

ஆலயத்தில் விநாயகருக்கு நாள்தோறும் வாழைப்பழம் நிவேதனம் செய்ய அறக்கட்டளை அமைத்திருந்தான். அப்படி விநாயகருக்கு தினந்தோறும் 150 வாழைப்பழம் வழங்குவதற்கு 360 காசுகளை முதலாகப் போட்டு ஆலயத்தின் பண்டாரத்தில் (Treasury) வைத்திருந்தான். இது என்ன வேடிக்கை? 300 காசுகள் முதல் போட்டு தினந்தோறும் 150 வாழைப்பழமா? ஆம்! ஒரு நாள் நிவேதனத்துக்கு 150 பழங்கள் தேவை என்றால் ஆண்டொன்றுக்கு (360×150=54000) பழங்கள். அன்றை வாழைப்பழ விலை ஒரு காசுக்கு 1200 பழங்கள். ஒரு வருடத்திற்கு வேண்டிய தொகை 45 காசுகள். இந்தத் தொகையை ஆண்டு வட்டியாகப் பெறும் மூலதனம் 360 காசுகள் என்பதிலிருந்து வட்டி விகிதம் 12.5% என்று தெரிகிறது. உள்ளூர் வணிகர்கள் வட்டிக்குப் பணம் வாங்கினார்கள். அந்த வட்டியைக் கணக்கிட்டே அரசன் 360 காசுகளை மூலதனமாகப் போட்டு தினந்தோறும் தேவையான வாழைப்பழங்களை நிவேதனத்துக்குப் பெற்றான் என்பதிலிருந்து, மன்னனுடைய பொருளாதார அறிவையும், விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் வழிகளையும் தெரிந்திருந்தான் என்பது புரிகிறது. மன்னனுடைய இந்த ஏற்பாட்டின்படி மூலதனம் அப்படியே இருக்கும், ஆண்டு வட்டி வருமானத்தை மட்டும் செலவுக்கு எடுத்துக் கொள்வார்கள். அப்படி வட்டிக்கு பண்டாரத்திலிருந்து பணம் வாங்கிக்கொள்ள வர்த்தகர்கள் முன்வந்தார்கள்.

வாழைப்பழ எடுத்துக்காட்டினைப் பார்த்தோம். அதுபோலவே செண்பக மொட்டு, இலாமிச்சம், பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, நெய், புளி, தயிர், கொள்ளு, உப்பு, வாழையிலை, வெற்றிலை, பாக்கு, சிதாரி, கற்பூரம், விறகு, பழைய அரிசி ஆகிய பொருட்களின் விலைகளும் கால்நடைகளின் விலைகளும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன என்பதை தஞ்சை கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.







கல்வெட்டில் செதுக்கப்பட்ட மன்னன் அளித்த நிவந்தங்கள்

தஞ்சை இராஜராஜேச்சரத்தில் உள்ள இராஜராஜ சோழனின் முதல் கல்வெட்டு கூறும் செய்தி இது:- “நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான் என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலே மூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம் ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங் கழஞ்சரையே நாலுமஞ்சாடி”.

மன்னன் ராஜராஜன் இத்திருக்கோயிலுக்கு அளித்த ஆயிரக்கணக்கான பொருட்கள் வரிசையில் முதலில் குறிப்பிடப் பெற்றவை 829 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற ஸ்ரீபலி எழுந்தருளும் தேவர் பொன் திருமேனியும் 995 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற பொன்னாலான பத்மத்துடன் கூடிய ஸ்ரீபலிபீடம் என்பதையும் அறியமுடிகிறது. இங்கு “ஸ்ரீபலி” என்று குறிப்பிடப்படும் சொல்லுக்கு “அர்ப்பணித்தல்” என்று பொருள். மாமன்னன் காலத்தில் இந்தக் கோயிலில் தினமும் வாத்திய இசையோடு கூடிய நாட்டியம் எனும் ஆடற்கலையும் ஈசனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது எனும் செய்தி இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட வாத்தியக் கருவிகள்

ஸ்ரீராஜராஜீச்சரத்தில் பல வாத்தியக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. குழல், உடுக்கை, இலைத்தாளம், கொட்டி மத்தளம், கின்னரம், பறை, மெராவியம், வங்கியம், பாடவியம், வீணை, முத்திரைச்சங்கு, சகடை ஆகியவை இவை. இவற்றில் மெராவியம் என்பது நாகசுரம் போன்ற ஒரு குழல் இசைக்கருவியாக இருக்கலாம் என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. பாடவியம் என்பதோர் மற்றொரு இசைக்கருவி. இது பற்றி ராஜராஜன் கல்வெட்டுகளில் காணப்படும் செய்தி.

“திருவிடைமருதுடையார் கோயிலில் பாடவியத்திற்கு முன்பு நிவந்தமில்லாமையில் அத்தேவர்க்கு பாடவியம் வாசிக்க நித்த நெல்லு இருதூணியாக அரையன் திருவிடைமருதூருடையானான மும்முடிச்சோழ நிருத்தப் பேரரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் காணியாகக் குடுத்தோம்…”

“திருமுகப்படியே திருவிடைமருதூருடையார் கோயிலில் பாடவியக் காணியுடையார் ஸ்ரீராஜராஜதேவர் பெருந்தனத்து காந்தப்பரில் அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிச்சோழ நித்தப் பேரரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் காணியாகக் குடுத்த இப்பாடவியம் வாசிப்பானுக்கு நித்தம் நெல்லு இருதூணியாக ஒராட்டைக்கு நெல்லு இருநூற்று நாற்பதின் கலம்…” என்று குறிக்கப்பட்டிருக்கிறது.




ஸ்ரீவிமானம் பொன்வேய்ந்தது

இராஜராஜன் திருவாயிலிலுள்ள ஒரு சிதைந்த கல்வெட்டின்படி இராஜராஜேச்சரத்துக்கு மன்னன் விமானம் முழுவதும் பொன் வேய்ந்தான் என்று தெரிகிறது. இதுதவிர மன்னனின் தமக்கையார் குந்தவை நாச்சியார் (அக்கன் என்று குறிப்பிடப்படுபவர்) பட்டத்தரசி ஓலோகமகாதேவியார், மற்றொரு மனைவியான சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி ஆகியோரும் கொடைகள் அளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே மன்னனுடைய தேவிகளாவர்.
























நாயக்க மன்னர்கள் ஆட்சியில் பெரிய கோயில்

தஞ்சையை செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாதநாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய அரசர்கள் கி.பி.1535 முதல் 1675 வரை ஆண்டுகொண்டிருந்தார்கள். இவர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணிகளும், ஆலயங்கள் பராமரிப்பும் மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. ஆலயங்களில் இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கவின் கலைகள் வளர்ச்சி பெற்றன. குறிப்பாக ஆந்திரப் பகுதியிலிருந்து இங்கு வந்த புதிய கலையான பாகவத மேளா எனும் இசைநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றன. சோழ மன்னர்கள் விட்டுச்சென்ற இசைப் பாரம்பரியத்தோடு, வளமும் புதுமையுமான நாயக்க மன்னர்களின் இசை மரபுகளும் சேர்ந்து கொண்டன. தஞ்சை கலைகளின் இருப்பிடமாக மாறியது. இவர்கள் காலத்தில்தான் ஆலயத்திலிருந்த மகாநந்தி புதிதாக அமைக்கப்பட்டது, சோழர்களின் நந்தி இப்போது வராகி அம்மன் கோயிலுக்கருகில் இருக்கிறது. பிரகாரத்தில் சுப்பிரமணிய சுவாமிக்குப் புதிய கோயில் கட்டப்பட்டது.

ஆலயத்தில் மூர்த்திஅம்மன் மண்டபம், மல்லப்ப நாயக்கர் மண்டபம் ஆகியவை நிருவப்பட்டன. செவ்வப்ப நாயக்கரும் அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இந்நகரின் பொற்கொல்லர்களுக்கு சில உரிமைகளை வழங்கினர்.

மராட்டியர் ஆட்சி காலத்தில்

கி.பி. 1675 தொடங்கி 1850 வரையில் தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஏகோஜி, சஹாஜி, முதலாம் சரபோஜி, துளஜேந்திரராஜா, பாவாசாகிப், சுஜான்பாயி, பிரதாபசிம்ம ராஜா, இரண்டாம் துளஜா, அமரசிம்மன், இரண்டாம் சரபோஜி, சிவாஜி, காமாட்சிபாயி ஆகியோர் ஆண்டு வந்தார்கள். இவர்கள் காலத்தில் ஆலயத்தின் பல பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. கலைகள் ஏற்றம் பெற்றன. சிற்ப, சித்திர, நாட்டிய, இசை போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன.



இரண்டாம் சரபோஜி காலத்தில் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. சரபோஜியின் போஸ்லே வம்ச வரலாறு கல்வெட்டில் வெட்டப்பட்டது. 1729ல் குடமுழுக்கு நடைபெற்றது. விமான உச்சியில் அப்போது ஒரு புதிய கலசம் வைக்கப்பட்டது. அதில் ‘ராசா சரபோசி மகாராசா உபையம்’ என்று எழுதப்பட்டிருந்தது. கடைசி மராட்டிய மன்னனான சிவாஜி காலத்தில் 7-9-1843ல் மற்றொரு குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. 1798 முதல் 1832 வரை தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி பல அறப்பணிகள் செய்தான். இவன் காலத்தில் பிரகாரத்துக்குக் கல் தளம் அமைக்கப்பட்டது. வடகிழக்கிலுள்ள மண்டூக தீர்த்தக் கிணறு புதுப்பிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் ஒரு கணபதி ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.




பிரிட்டிஷ் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும்

பிரிட்டிஷ் ஆட்சியில் இவ்வாலயம் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. யுத்த காலத்தில் சிப்பாய்களும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானப்படை தாக்குதலை சமாளிக்க நிறுவப்பட்ட ஒரு படையும் இவ்வாலயத்தினுள் முகாமிட்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில்கூட பல ஆண்டுகள் இவ்வாலயத்துக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தன. இது தொல்பொருள் இலாகா வசம் இருப்பதால் அவர்கள் இதனை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்துபோகவும் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு மக்கள் சிறிது சிறிதாக இவ்வாலயத்தின் பெருமை கருதி வரத் தொடங்கினர். சுற்றுலாப் பயணிகளுக்கும் இது ஒரு முக்கிய இடமாகக் குறிக்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில் இவ்வாலய அர்ச்சகர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட திணறியது நிர்வாகம்.






மழை நீர் சேகரிப்பு

மழை நீர் சேகரிப்பின் மையமாகவும் பெரிய கோயில் திகழ்ந்திருக்கிறது. மழை நீர் செல்வதற்கு இரண்டு வழிகள் அமைத்திருக்கிறார்கள். முதலில் விழுகிற மழைநீர், தரையில் உள்ள அழுக்கோடு நந்தவனத்திற்குச் செல்லும். பின்னர் நல்ல நீர், சிவகங்கைப் பூங்காவில் உள்ள குளத்திற்குச் செல்லும். அந்தக் காலத்திலேயே மழை நீரைச் சேமிக்கும் வியக்கத்தக்க முறையை ராஜராஜசோழன் பெரியகோயிலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.



தஞ்சைப் பெரிய கோயில் வதந்திகள்



'கோயிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது!'

'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது!'

'விமானத்தின் கோபுரம் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டது.'

'இரவு நேரத்தில் பெரிய கோயில் நந்தி எழுந்து மேய்வதற்குச் செல்லும்!'. அப்படிச் செல்லாமல் இருப்பதற்காகக் கடப்பாரையைக் கொண்டு முதுகில் ஆணி வைத்து அடித்திருக்கின்றனர் என்ற நம்பிக்கையும்,

'அரசியல் தலைவர்கள் இங்கு வந்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும்' என்ற நம்பிக்கையும் பொய்யான கற்பனைத் தகவல்களே.

கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது’ என்பது கோயிலின் பிரமாண்டத்தை விளக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட ஒரு பிழையான செய்தி. பெரும்பாலானோர் அதை உண்மை என்று நம்புகிறார்கள். காலை நேரத்தில் கோபுரத்திற்குப் பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்.

இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. 
பெரிய கோயிலின் உண்மையான பெருமை, கட்டுமான நுட்பங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதே இது போன்ற தவறான தகவல்கள் பரவுவதற்குக் காரணம். 



தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..? 



பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்.


1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசால் 1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. Archaeological survey of india ( ASI) .

இத்துறையின் சென்னை மாகாண கல்வெட்டியல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Dr. Euger julius theodor Hultzsch. சுருக்கமாய் E.ஹூல்ஸ்.


1886 ல் அசோகரது கல்வெட்டை படியெடுத்தார். 1886 டிசம்பரில் மாமல்புரம் கல்வெட்டைப் படித்தார். 1887 டிசம்பர் மாதம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகிறார். கோவிலைக் கட்டியது கரிகால்ச்சோழன், தனக்கு வந்த வியாதி தீர கைங்கரியமாய் கோவிலைக் கட்டினான். மோர் வித்த அழகி என்னும் மூதாட்டி கதை என்று செவிவழிச் செய்திகள் வழக்கத்தில் இருந்த நேரம் அது.

கோவிலுக்கு வருகிறார் ஹுல்ஸ். கோவிலின் அமைப்பும் பிரம்மாண்டமும் அவரை உறைய வைத்தது. தன்னிச்சையாக அவரிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தை. 

" The great temple "

கோவிலின் வாயில் முதல் கொண்டு எங்கெங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள். அழகான தமிழ் எழுத்துக்களில் அமைந்த கல்வெட்டுகள்.

தனக்கு இங்கு நிறையவே வேலை இருக்கிறது என்று முடிவு செய்கிறார். ( பிற்பாடு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இத்தகவல்களை விவரிக்கிறார். )

பொறுமையாகக் கல்வெட்டுகளை வாசிக்கத்தொடங்கிய அவர், கல்வெட்டுகளின் தொடக்கத்தை தேடினார். மிகச்சரியாக ஸ்ரீவிமானத்தின் வடபுறம் சென்றடைந்தார்..

சண்டிகேசர் கோவிலுக்கு எதிரே விமானத்தின் வடபுற அதிஷ்டானத்து பட்டிகை..

அங்குதான் அந்த வரிகள் இருந்தன.

இராஜராஜனின் மெய்கீர்த்தியுடன் தொடங்கும் அக்கல்வெட்டில்,


" பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி இராஜராஜீவரம் "







இந்த வரிகளை வாசித்த பிறகு.

கோவிலைக் கட்டியது பேரரசன் இராஜராஜன் என்று வெளியுலகிற்கு முதன் முதலாக அறிவிக்கிறார்.

அப்போது .. இராஜராஜனை இவ்வாறு அழைத்தார்.

" The great king "

பிறகு தனது பரிவாரங்களுடன் கோவிலில் முகாமிட்டு அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து அச்சு நூலாக வெளியிடுகிறார். இவரது பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் இவரது உதவியாளர் வெங்கையா..




1887 - 1891.. நான்கு ஆண்டுகள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்கும் வேலை நடந்தது. தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி எண் 2 ல்... படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சு நூலாக வெளிவரத் தொடங்கியது..

இராஜராஜேச்சரமும், இராஜராஜனும், பெருவுடையாரும், அனைத்து மக்களின் இதயங்களை ஆக்ரமித்தார்கள்.

" The great temple "

" The great king "


மராட்டிய மன்னர்களுக்கு ஏன் முதல் மரியாதை 

மராட்டிய மன்னர்களுக்கு ஏன் முதல் மரியாதை என்று தொடர்ச்சியாக பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு அவர்கள் செய்தது என்ன. வரலாறு விசித்திரமான ஒன்றுதான்.

தஞ்சை சமஸ்தானத்தின் அதிபதியாக இருந்த வாரிசு ஒருவர் அடுத்த வேளை உணவுக்கும் ஆடைக்கும் ஆங்கிலேயரிடம் கைகட்டி நின்ற விசித்திரம்.

ராஜ்ய அதிகாரம் வேண்டாம். கோவில் போதும் .. என்று கோவிலுக்கு தன்னை அர்ப்பணம் செய்த மராட்டிய அரசர்.வட்டிக்கு கடன் வாங்கி லிங்கத்தை பூஜை செய்த சரபோஜி.

தஞ்சையும், பெரியகோவிலும் அந்நியர்களின் தாக்குதலுக்கு பலமுறை உட்படுத்தப்பட்டாலும்...

கி.பி. 1758 ல் .. தஞ்சை பெரியகோவில் மீது பீரங்கி தாக்குதல் தொடங்கியது. இத்தாக்குதல் நடத்தியவன் பிரஞ்சு தளபதி லாலி..

கி.பி. 1771 மற்றும் 1773 ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினரின் தாக்குதலும் பெரியகோவில் மேல் நடைபெற்றது. இக்காலத்திய மராட்டிய அரசர் இரண்டாம் துளஜா.

Robert orme என்னும் ஆங்கிலேய வரலாற்று அறிஞர் தான் எழுதிய

" A History of the military transaction of the British nation in indostan " என்னும் நூலில் தஞ்சை கோவிலின் மீது நடந்த தாக்குதலை வரைபடத்துடன் பதிவு செய்கிறார்.

நவாப் முகமது அலி, ஆங்கிலேயப் படையின் உதவியுடன் 1773 இல் தஞ்சையை கைப்பற்றி தஞ்சையின் மராட்டிய அரசன் துளஜாவை சிறை வைத்தான். அதிகாரம் படைத்த அந்த தஞ்சை அரசனின் அடுத்த வேளை உணவு நிச்சயமில்லை.









1773 - 1776 வரை மூன்று வருடம்.. தஞ்சை பெரியகோவில் ஆற்காடு நவாப் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியினரின் இரானுவவீரர்கள் தங்கும் படைவீடாக இருந்தது. கோவிலில் துப்பாக்கி சுடும் பயிற்சி. பூஜைகள் வழக்கொழிந்து துப்பாக்கி முழக்கம் கேட்டுக்கொண்டேயிருக்கும்..

இன்றும் பெரியகோவிலில் நாம் அந்தத் தோட்டாத் தடங்களைப் பார்க்கலாம். பெரியகோவிலில் உள்ள முருகன் கோவிலில் " Shelter for 36 person " என்ற எழுத்துப்பொறிப்பு.

கருவறை அர்த்தமண்ட வாயிலில் ARP என்னும் படைக்குறியீடு.. திருச்சுற்றில் ARP WARD. என்ற அடையாளக்குறியீடுகளை இன்றும் நாம் காணலாம். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆங்கிலேய அரசு துளஜாவை விடுவித்தது..

அதற்குப் பிறகு நடந்த அரசியல் உள்ளடி வேலைகள். 1798 ல் தஞ்சை அரசராக இரண்டாம் சரபோஜியை ஆங்கிலேயர்கள் நியமித்தனர்.

வெறும் அரசன் என்னும் அந்தஸ்து மட்டும் உனக்கு.. ஆட்சி அதிகாரம் அனைத்து வரிவசூல் எங்களுக்கு. சம்மதமா என ஆங்கிலேயர்கள் சரபோஜியிடம் கேட்க..சரபோஜியும் ஒரு நிபந்தனை விதித்தார். அனைத்தும் எடுத்துக்கொள்ளுங்கள். பெரியகோவிலை மட்டும் விட்டு விடுங்கள். அங்கு எந்த ஒரு படைப்பிரிவும் தங்கக்கூடாது. கோவிலில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறவேண்டும்.

சரபோஜியின் நிபந்தனை ஏற்கப்பட்டு, பெரியகோவிலில் மீட்கப்பட்டது. பெரியகோவிலில் பல புனரமைப்பு பணிகளை செய்கிறார் சரபோஜி. ஆங்கிலேயப்படையினரால் சிதைவுற்ற கோவிலை நன்கு சீரமைத்து, செங்கற்களால் தரைத்தளமும் அமைத்தார்.

தஞ்சை அருகே வீரசிங்கம் பேட்டை என்னும் ஊரில் சிதறுண்டும் புதையுண்டும் இருந்த 108 சிவ லிங்கங்களை பத்திரமாக எடுத்து பெரியகோவிலின் திருச்சுற்று மண்டபத்தில் பிரதிட்டை செய்தார். இந்நாள் 1801 மார்ச் 18 .

லிங்கங்களுக்கு தினசரி பூஜை செய்ய 1802 மே 29. இல் சென்னையைச் சேர்ந்த ஹாரிங்டன் என்பவரிடம் 5000 புலி வராகன் கடன் வாங்கி இக்காரியத்தை செய்கிறார்.

இச்செய்திகள் அனைத்தும் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணத்தில் உள்ளது. ( ஆவண மொழிபெயர்ப்பு Vol 1 no 14 /7 )..

இவ்வாறு தஞ்சை பெரியகோவிலை சீர்படுத்திய, சரசுவதி மகால் நூலகத்தை அமைத்துத் தந்த இரண்டாம் சரபோஜி 1832 மார்ச் 7 ஆம் தேதியில் இறைவனடி சேர்ந்தார்.

இவருக்குப்பிறகு இவரது மகன் இரண்டாம் சிவாஜி தஞ்சை மன்னராக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டார். இவரது ஆட்சி 1832 - 1855 வரை நடந்தது. இதன் பிறகு தஞ்சை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் முழுவதுமாக ஆட்பட்டது.

இந்த சிவாஜி மன்னர் காலத்தில் 1843 ம் ஆண்டு செப்டம்பர் 7 ம் நாள் தஞ்சை பிரகதிசுவர சுவாமிக்கு சிகரப் பிரதி ஷசை செய்து அஷ்டபந்தனம் முதலான சீரணோத்ரம் கும்பாபிசேகம் செய்தார். இச்செய்தி விமான கலசத்திலும், தஞ்சை சரசுவதி நூலக ஓலைச்சுவடியிலும் ஆவணமாக உள்ளது. 1729 ஆம் ஆண்டும் ஒரு கும்பாபிசேகம் நடந்த தகவலும் உள்ளது.

தஞ்சை பெரியகோவிலை அரும்பாடுபட்டு மீட்டு, இன்றைய நிலைக்கு இருக்க காரணமான சரபோஜி வாரிசை வந்தேறி என்று வசைபாடுவது தவறு. 1729 மேற்றும் 1843 ஆண்டுகளில் நடைபெற்ற வைதீக கும்பாபிசேகத்தை, 300 ஆண்டு வழக்கத்தை, ஆண்டாண்டு கால வழக்கம் எனக்கூறுவதும் தவறு.

சரபோஜிகளின் பிரகதிசுவரர் என்னும் பெயர் பலகை பெரியகோவில் என்றும் பெருவுடையார் கோவில் என்றும் மாறியதைப் போல்.வழக்கம் என்பது 300 ஆண்டுகள் அல்ல.கோவில் வழக்கம் 1000 ஆண்டுகளுக்கும் மேல்..



தஞ்சைப் பெரிய கோயிலின் தேர் 


தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயிலின் தேரோட்டத் திருவிழா நூறாண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நிலையில் அதிக ஆர்வத்தோடு மக்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.


இதற்கு முன்னர் தஞ்சாவூரில் தேரோட்டம் நடைபெற்றது குறித்து சில விவரங்களை அறியமுடிகிறது. கி.பி.18ஆம் நூற்றாண்டு முதல் அவ்விழா தொடர்பான நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளன.

கி.பி.1776இல் 20,200 நபர்கள் இழுத்து தஞ்சாவூரில் தேர் உலா வந்தததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி.1813இல் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் இழுப்பதற்காக 27,394 நபர்கள் பல தாலுக்காக்களிலிருந்தும் அழைக்கப்பட்டுள்ளனர். திருவையாறு (1900), பாபநாசம் (2800), கும்பகோணம் (3494),மாயவரம் (3484), திருவாரூர் (2920), மன்னார்குடி (4200), கீவளூர் (4500), நன்னிலம் (3200) என்ற நிலையில் தேருக்காக 26,494 நபர்களும், வாகனங்களுக்காக திருவையாற்றிலிருந்து 900 நபர்களுமாக மொத்தம் 27,394 நபர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 



1801இல் மன்னர் தேர் சக்கரங்களைப் புதுப்பிக்க 500 சக்கரம் வழங்கியுள்ளார். கி.பி.1801 மற்றும் கி.பி.1811இல் குறிக்கப்பட்டுள்ள சரபோஜி மன்னரின் மோடி ஆவணங்களில் அவ்வாண்டுகளில் தேரினை இழுப்பதற்காக 30150 சக்கரங்களைச் செலவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மன்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு 5 பெரிய தேர்களையும், 4 ராஜவீதிகளில் தேர்முட்டிகளையும் அமைத்தார். 1801 இல் தேரில் சக்கரங்களைப் புதுப்பிக்க 500 சக்கரங்கள் (அக்காலத்தின் பண மதிப்பு) செலவிடப்பட்டதாகவும், 1801, 1811ஆம் ஆண்டுகளின் தொடர்புடைய ஆவணங்கள் அந்த ஆண்டுகளில் தேர்த் திருவிழா நடத்துவதற்காக 30,150 சக்கரங்கள் செலவிடப்பட்டதாகவும் மோடி ஆவணங்களில் பதிவு காணப்படுறது.

பெரிய கோயிலில் தேரோட்டம் நடந்து, 100 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தேர் கட்டுமானம் என்பது பல்வேறு நிலைகளைக் கடந்து நிறைவுற்றது.  தேர் சிற்பங்கள் இலுப்பை மரத்தைக் கொண்டு செய்யப்படுகின்றன. ஆகம சாத்திரங்களின்படி சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

தேரில் முதல் அங்கணம் அமைக்கும் பணியாக முதல் கட்ட பணியில், ஒன்றரை அடி உயரத்தில், 40 சிற்பங்களும், 2ம் கட்ட பணியில் இரண்டேகால் அடி உயரத்தில், 56 சிற்பங்களும், 3ம் கட்ட பணியில், ஒன்றரை அடி உயரத்தில், 56 சிற்பங்களும் செதுக்கப்பட்டன. இந்தத் தேரானது தரைமட்டத்தில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை, பதினாறு அரை அடி உயரத்தில் தேர் அமைந்தது.

இரண்டாம் கட்ட பணி முடிவடைந்து, இறுதிக்கட்ட பணி நடந்து  நிறைவுற்ற நிலையில் தேர் வெள்ளோட்டம் நடத்தப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தேருக்கு அச்சு பொருத்தும் பணி நிறைவுற்றது. பதினாறரை அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள இந்தத் தேரில் மூன்று நிலைகள் பொருத்தப்பட்டன.

அதிக எதிர்பார்ப்புடன் காணப்பட்ட இந்தத் தேர் பல சிறப்புக்கூறுகளைக் கொண்டு அமைந்திருந்தது.

30க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உழைப்பு

25 டன் இலுப்பை மற்றும் நாட்டுத்தேக்கு

மூன்று அடுக்கு

மூன்றடுக்கின் மேல் சிம்மாசனம் (சுவாமி பீடம்)எனப்படும் இடத்தில் உற்சவர்

பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வீரபத்ரன், பிட்சாடணமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி உட்பட பல்வேறு சிற்பங்கள் 

நான்கு திசைகளிலும் குதிரை மற்றும் யாளி உருவங்கள்

முதல் படிநிலையில் ஒன்றரை அடியில் 67 மரச்சிற்பங்கள்

இரண்டாம் படிநிலையில் இரண்டேகால் அடியில், 67 சிற்பங்கள் என மொத்தம் 360 சிற்பங்கள்

தேரின் முன்பக்கம், ஐந்தரை அடியில் கைலாசநாதர் கைலாய காட்சி சிற்பம், பின்புறம் அதே அளவில் நந்தி மண்டபத்துடன் கூடிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிற்பம்

பதினாறரை அடி உயரம், பதிமூன்றரை அடி அகலம்

நூறாண்டுகளுக்குப் பின் 20.4.2015 அன்று தேரோட்டத்திற்கான வெள்ளோட்டம் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் தொடங்கியது. தேர் புறப்படும் முன்பாக, தேரில் இறைவனைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள சிம்மாசனத்திற்குச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.  அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தேரை இழுத்தனர். மேலவீதி விஜயராமர் கோவில் அருகில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி வழியாக மேலவீதிக்குச் சென்றது. காலை 9.30 மணியளவில் மேலவீதியில் உள்ள நிலையைச் சென்றடைந்தது.

புதிய தேர் செய்யப்படும் பணி மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமசாமி கோயில் எதிரில் உள்ள தேர்முட்டியில் நடைபெற்று நிறைவுற்றது.
தேரோட்டத்துக்கு பின் தேரை நிலைநிறுத்துவதற்காக மேலவீதியில் தெற்கு வீதி சந்திப்பின் அருகே உள்ள மற்றொரு பழைய தேர்முட்டி புனரமைக்கப்பட்டது.

அப்போது கடந்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய தேரின் 20 மரச்சக்கரங்கள், 15 தேர் நிறுத்திகள் ஆகியவை கிடப்பது தெரியவந்தது. 

தேரோட்டத்தின் முதல் நாளன்று (28.4.2015) கோயில் களை கட்ட ஆரம்பித்தது. முளைப்பாரி ஊர்வலமாக நடராஜர் மண்டபத்திலிருந்து மேள வாத்தியங்களுடன் கிளம்பி ராஜராஜன் வாயில்,கேரளாந்தகன் வாயில் வழியாக கோயில் வெளியே வந்தது. பக்தர்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு சென்றனர். 29.4.2015 அன்று தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.  தேரோட்ட நாளன்று தேர் காலை 5.15 மணிவாக்கில் பெரிய கோயிலிலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன், தனி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு, சோழன் சிலை, சிவகங்கைப் பூங்கா வழியாக மண்டபம் வந்தடைந்தனர். கிளம்பத் தயாராக இருந்த தேரின் சிம்மாசனத்தில் இறைவனும் இறைவியும் வைக்கப்பட்டனர். காலை 6.15 மணிவாக்கில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் கிளம்பியது. அலங்கரிக்கப்பட்ட யானை அழகாக நடந்து வர விநாயகர், சுப்பிரமணியர் ரதங்கள் முன்னே செல்ல தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய தேர் அசைந்து அசைந்து சென்றது.தேரின் முன்னர் தப்பாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளை கலைஞர்கள் சிறப்பாக நிகழ்த்திக்கொண்டு வந்தனர். ஓதுவார்கள் தேவாரம் ஓத, மேள வாத்தியங்கள் இசைக்க தேர் அழகாக பவனி வந்தது. தேரை நீலோத்தம்மன், சண்டீகேசுவரர் ரதங்கள் பின்தொடர்ந்தன. கீழ்க்கண்ட இடங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக தேர் நிறுத்தப்பட்டது. அவ்விடங்களில் பக்தர்கள் அளித்த தேங்காய்கள் உடைக்கப்பட்டன. தீபாராதனை காட்டப்பட்டது. 

மேல ராஜ வீதி : கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில்

வடக்கு ராஜ வீதி : ராணிவாய்க்கால் சந்து எதிரேயுள்ள பிள்ளையார் கோயில், காந்தி சிலை அருகேயுள்ள ரத்தினபுரீஸ்வரர் கோயில்

கீழ ராஜ வீதி : மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கொடிமரத்துமூலை, அரண்மனை எதிரே உள்ள விட்டோபா கோயில், தமிழ்ப்பல்கலைக்கழக அலுவலகம் அருகேயுள்ள மணிகர்ணிகேஸ்வரர் கோயில், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகேயுள்ள வரதராஜப்பெருமாள் கோயில்

தெற்கு ராஜ வீதி : கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில், இந்தியன் வங்கி அருகேயுள்ள காசி விசுவநாதர் கோயில், தங்கசாரதா அருகில் உள்ள காளியம்மன் கோயில்

மேற்கண்ட இடங்களில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்றன. நான்கு வீதிகளையும் சுற்றிய பின் தேர் மதியம் 1.45 மணியளவில் தேர்நிலையை வந்தடைந்தது

கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.


முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.



இங்கு ஒருபுறம் காவிரியின் கிளை நதியான வெண்ணாறு, அதன் கிளையான வடவாறு என இரு நதிகளும் செல்வதால், அப்பகுதி வண்டல், களிமண், மணல் சார்ந்ததாக உள்ளது. இது நகரின் வட பகுதி. மேற்கு, கிழக்குப் பகுதிகள் வயல்களும், புன்செய் நிலங்களும் உள்ள பகுதியாகத் திகழ்வதால் மண் அழுத்தமுடையதாக இல்லை. நகரின் தென்பகுதி மட்டுமே செம்பாறைக் கற்களால் ஆன அழுத்தமான பூமி. 

மொத்தம் ஒன்றரை லட்சம் டன்கள் எடை கொண்ட கருங்கற்களை உடைய கோயிலைத் தாங்கி நிற்பதற்கு ஆழமான அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்கோயிலுக்கான அடித்தளம் எவ்வளவு ஆழம் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கோயிலின் ஆயிரக்கணக்கான அதிசயங்களில் ஒன்றாக கோயிலுக்கான அடித்தளம் வெறும் 5 அடி ஆழம் மட்டுமே போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மரபுவழி அடித்தளம் என்ற அடிப்படையில், ஆற்று மணல் மீதான படுகை மீது கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயில் அமைந்துள்ள இடம் சுக்கான் பாறை பகுதி. கோயிலின் கட்டுமான அளவுக்குப் அந்தப் பாறையை ஆழமாகத் தோண்டி ஒரு பெரிய தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். பின்னர், அந்தத் தொட்டியில் பருமணலைப் போட்டு நிரப்பி இருக்கின்றனர். இதுதான் கோயிலின் அடித்தளம்.

பொதுவாக, மணல் அசைந்து கொடுக்கும் தன்மைக் கொண்டது. ஆனால், அது ஆழமான தொட்டியில் கொட்டப்பட்டால் பூமி அதிர்ச்சி போன்ற நிகழ்வுகளின்போது அதற்கு தக்கபடி அந்த மணல் அசைந்து கொடுக்குமே தவிர, அக் கல் தொட்டியிலிருந்து மணல் வெளியேறாது.  இந்த நிபுணத்துவம்தான் தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக்கோயில் வளாகத்துக்கு 240 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நீள் சதுர நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில், நடுப்பகுதியில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்விதமாக இக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோபுரம் மொத்தம் 13 நிலைகள் கொண்டது. இதன் உயரம் 216 அடி. ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து உயரத்தில் பிரமிட் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். கோபுரத்தின் உச்சியில் தலா 26 அடி அகலம், நீளம் கொண்ட சமதளம் உள்ளது.

கோயில் விமானத்தின் உச்சியில் உள்ள பாறை போன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது என்றும், 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அது உண்மையல்ல என்பது வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்தது. இந்தப் பாறை வடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இருந்தாலும் ஒரே கல் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.



கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் 13 அடி. இந்தச் சிலைக்குத் தனியாகக் கர்ப்பகிரகம் கட்டாமல் கோயில் கோபுரத்தின் உள்கூடு அமைப்பையே கர்ப்பகிரகமாகக் கட்டப்பட்டுள்ளது.  இந்தச் சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடத்தைப் பார்க்கும்போது 216 அடி உயர லிங்கம் போல காட்சி அளிக்கும்.


பல்லவ, பாண்டிய, முற்காலச் சோழர்கள் உயரம் குறைந்த கோபுரங்களையே எழுப்பினர். தஞ்சாவூர் பெரியகோயில் நுழைவுவாயிலில் உள்ள முதல் கோபுரமே தமிழகத்தில் எழுந்த உயரமான முதல் கோபுரம். இது கேரளாந்தகன் கோபுரம் என அழைக்கப்படுகிறது. மொத்தம் 5 நிலைகள் கொண்ட இந்தக் கோபுரமே பெரியகோயிலுக்கு நிகராக, உயர்ந்த கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இக்கோபுரத்தின் உயரம் 90 அடி, அகலம் 54 அடி.

மாமன்னன் ராஜராஜசோழன் முடி சூடியதும் முதல் முறையாகச் சேர நாட்டின் மீது படை எடுத்துச் சென்றான். அதாவது, கி.பி. 988 ஆம் ஆண்டில் கேரள நாட்டில் திருவனந்தபுரம் அருகேயுள்ள காந்தளூர்ச்சாலை மீது படையெடுத்தான். கடற்கரைப் பட்டினமான காந்தளூர்ச் சாலையில் கடும் போரிட்டுச் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனை வென்று மலைநாட்டை தன் அடிமைப்படுத்தினான். 

இது, ராஜராஜசோழன் தலைமையேற்றுச் சென்று பெற்ற பெரும் வெற்றி நிகழ்வு. இச்சிறப்பின் காரணமாகவே ராஜராஜசோழனுக்கு "கேரளாந்தகன்' என்ற அடைமொழியும் சூட்டப்பட்டது.  

நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள கரணங்களை சிவபெருமான் ஆடிக்காட்டுவது போன்ற சிற்பத் தொகுதிகள் வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. நாட்டிய இலக்கணத்தில் 108 கரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கரணங்களை சிவன் ஆடிக் காட்டுவது போன்ற சிற்பங்கள் கோயிலுக்குள் வரிசையாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.


உலக மரபுச் சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா  கடந்த 2010 -ஆம் ஆண்டில்  கொண்டாடப்பட்டது.


















தஞ்சை பெரியகோவிலில் வெளிநாட்டவர் சிற்பம்

கர்னல் லாம்ப்டன் - பிரிட்டிஷ் சர்வேயர் 1808ல் பெரிய கோயில் விமனத்தில் இருந்து சர்வே செய்யும் போது கனமான சர்வே எந்திரம் விழுந்து சேதமடைந்த இடத்தில் அவருடைய கழுத்தளவு சுதை சிற்பம் வைக்கப்பட்டது.










மாமன்னன் ராஜராஜன் சிற்பம்

தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு நுழைவு வாயில்கள் , ராஜ கோபுரங்கள ,முறையே கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் எனப்படுகின்றன.



இரண்டாவதாக உள்ள ராஜராஜன் திருவாயில் பிரமாண்டமான இரண்டு துவாரபாலகர்களுடன் ,பல புராண சிற்பங்கள்,எண்திசை காவலர்கள்,வினாயகர், முருகன்,துர்க்கை,என பல தெய்வ வடிவங்களையும் ,முனிவர்கள் சிலைகளையும் தாங்கி நிற்கின்றது.

இதில் இரண்டு தளங்களுக்கு மேலுள்ள சிகரத்தின் மையத்தில் உள்ள மாடத்தில், சிவபெருமான் இடது தொடையில் உமையவள், எதிரில் வணங்கிய நிலையில் நின்று கொண்டு இருப்பவரை பார்த்தவண்ணம் அமர்ந்து இருக்கிறாள். இந்த உயர்ந்த இடத்தில, நின்று ராஜராஜீஸ்வரம் உடையாரை வணங்கிக் கொண்டிருப்பது யார், ? மன்னனாகத்தானே இருக்கமுடியும்..? சில் ஆய்வாளர்கள் இவரை, நாயக்க மன்னன் செவ்வப்பனாக இருக்கலாம் என்கின்றனர். இதே கோபுரத்தில் உள்ள முருகன் வடிவத்திற்கு அருகில் இருப்பவரும் செவ்வப்பன் என்கிறனர். தலையில் உள்ள சாய்வு கொண்டையயை வைத்து இக்கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.வேறு ஆதாரம் ஏதுமில்லை.

ராஜராஜன் தன பெயரால் அமைத்த திருவாயிலில் ,இறைவனையும், இறைவியையும் பணிந்து வணங்கி ,தான் அமைத்த ராஜராஜீஸ்வரம் உடையாரை தரிசிக்கவரும் அடியார்களையும் , தன் சோழ தேசத்து மக்களையும்,கைகூப்பி வணங்கி வரவேற்பது ,மாமன்னன் ராஜராஜ சோழனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ? அவர் ராஜராஜரேதான்...பெரிய கோயிலில் வேறு எங்கும் ராஜராஜருக்கு கல்லிலோ சுதையிலோ முழு உருவ சிற்பம் ஏதும் இல்லை.ராஜராஜரே விரும்பாவிட்டாலும் கூட ,சோழ நாட்டு மக்கள் எண்ணத்தை, சோழ சிற்பிகள் உணர்ந்து,தங்கள் ஆசையையும் பூர்த்திசெய்யும் முகமாக ,ராஜராஜன் திருவாயில் உச்சத்தில் ராஜராஜரையே சிலையாக வடித்து உள்ளார்கள்.



நாயக்கர் காலம் என்றால், இறைவனுக்கு வலப்புறம் மன்னனின் சிலை வைப்பதற்காகவே அதற்குரிய இடம் இருப்பதை பாருங்கள்...சாய்ந்த கொண்டை...? நாயக்கர் காலத்திலோ,மராட்டியர் காலத்திலோ திருப்பணிகள் செய்யும் போது,பின்னப்பட்ட கிரீடத்தை சீர் செய்யும் ஸ்தபதிகள் செய்த சிறு பிழையாககூட இருக்கலாம்.ஒரே கோபுரத்தில் தனக்கு இரண்டு சிலைகள் வைக்கவேண்டுமென்று செவ்வப்ப நாயக்கரே விரும்பி இருக்கமாட்டார்.

எனவே ராஜராஜன் திருவாயில் கோபுரத்து சிகரத்தில் வணங்கிய நிலையில் நிற்பவர் ,,ராஜராஜீஸ்வரமுடையார்க்கு திருக்கற்றளி எடுப்பித்து ,கோயில் கட்டட கலையின் உச்சம் தொட்டு, புகழின் உச்சம் தொட்டு நிற்கும் மாமன்னன் ராஜராஜரேதான்....



சித்திரைப் பெரு விழா 10 ம் நாள் மண்டகப்படி

தஞ்சாவூர் பெரிய கோயில்..ஹேவிளம்பி சித்திரைப் பெரு விழா..... ஐயா செல்வராஜ் நாயக்கவாடியார் குடும்பத்தினர் 10 ம் நாள் மண்டகப்படி. முத்துப் பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா எழுந்தருளுதல். தேவார விண்ணப்பம். திருவாசகம் முற்றோதல். சின்ன மேளம் சதிர் கச்சேரி.


















இது தஞ்சை பெரிய கோயில் கோட்டை வடபுறம் கோட்டையிலேயே உள்ள நுழைவு வாயில்....இது இப்பொழுது பயன்பாட்டில் இல்லை ( அதான் பார்த்தாலே தெரியுதே ) இதற்கு கீழ்புறம் சிவகங்கை தோட்டத்திற்கு உள்ள நுழைவு வாயில் மராட்டிய மன்னர்கள் காலமாகும்.


தஞ்சை சோழர் அரண்மனையில் இருந்து பெரிய கோயிலுக்கு அரச குடும்பத்தினர் வந்த நுழைவு வாயிலாக இது இருக்கலாம் என்று தோன்றுகிறது.






இதற்கு நேர் தெற்கில் அணுக்கன் திருவாயில் உள்ளது.... மாமன்னர் ராஜ ராஜ சோழர் வழிபாடு செய்ய பெரிய கோயிலுக்கு வந்த சிறப்பு நுழைவு வாயில் , அணுக்கன் திருவாயிலும் படத்தில் உள்ள நுழைவு வாயிலும் ஒரே நேர் கோட்டில் உள்ளது நம் யூகத்திற்கு வலுவூட்டுகிறது.


The great temple at tanjore...



தஞ்சை பெரியகோவில் பற்றி ஏராளமான நூல்கள் தற்காலத்தில் வெளிவந்துள்ளன. கோவில் அமைப்பு, கட்டுமானம், கல்வெட்டு, சிற்பங்கள், தொழில்நுட்பம், என்று பெரியகோவிலைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. மேற்கண்ட விபரங்கள் அடங்கிய
பெரியகோவிலைப்பற்றிய முதல் நூல் எது.?

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே இந்த நூல் வெளிவந்தது. 1935 ஆம் ஆண்டு.. இந்தியத் தொல்லியல் துறையால் இந்நூல் வெளியிடப்பட்டது. நூலின் பெயர் "The great temple at tanjore"




















நூல் வெளியான ஆண்டு 1935.

தனியாக ஒரு கோவிலைப்பற்றி மட்டும் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட நூல் இது..

கோவில்.. கல்வெட்டு..
படங்கள். தொல்லியல் விபரங்கள்.. என்று முழுமையான தரவுகள் அடங்கிய நூல்..

இன்றளவும் கோவிலைச்சுற்றும் தவறானத் தகவல்களை அன்றே மறுத்துள்ளார்கள்.

ஸ்ரீவிமானத்திற்கு சிகரக்கல் கொடுத்த அழகி என்னும் கதையை சொல்லும் பெருவுடையார் உலாப் பாடல்கள்,

அம்மையார் நிழலில் யாம் அமர்ந்தோம் என்று கூறும் மாயூரப்புராணம்..

தஞ்சை தளிகுளத்தார் என்று பாடும் அப்பர் பாடல்..

தஞ்சை மாமனிக்கோவிலே என்று பாடும் திருமங்கையாழ்வார்..

இதுபோன்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளனர் இந்நூலில்.

2015 ல் தஞ்சை பெரியகோவிலின் ஸ்ரீவிமானத்தில் வடபுறச்சுவற்றில் உள்ள அந்த ஐரோப்பிய தொப்பிக்காரன் சிற்பம் வெகுபிரபலம். 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேருடன் தொடர்பு கொண்ட ராஜராஜன் என்று வாட்சப் வதந்தி இன்றும் சுற்றுகிறது..

இதற்கானப் பதிலை 1935 லேயே கூறிவிட்டார்கள். அது நாயக்கர் கால சுதை வடிவம் என்று குறிப்பு எழுதியுள்ளனர்.

கல்வெட்டுகளை சிறப்பான முறையில் திறனாய்வு செய்துள்ளனர்..

தமிழ் திருப்பதியம் பாட இராஜராஜன் கொடுத்த ஓதுவார் 48 பேரில் யார் யாருக்கெல்லாம் திருஞானசம்பந்தர் பெயர் வருகிறது.? எத்தனை முறை வருகிறது..? என்ற ரீதியில் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நூலில் உள்ள புகைப்படங்கள் 1935 க்கு முன்பாக எடுக்கப்பட்டவை. இப்படங்களைப் பார்க்கும் போது அன்றைய கோவிலின் நிலையை அறியமுடிகிறது.

1798 ல் ஆங்கிலேயர் ஒருவர் வரைந்த தஞ்சை பெரியகோவிலின் ஓவியம் வெகு அழகாய் இருக்கிறது.

சில புகைப்படங்கள் அபூர்வமானவை.

திருவிசலூர் கோவிலில் இராஜராஜன் தன் தேவியருடன் லிங்கத்தை வணங்கும் தோற்றத்தில் இருக்கும்
ஒரு சிற்பம் உள்ளது.

கோவில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது இச்சிற்பம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது..

மீட்டுருவாக்கம் செய்வதற்கு முன் இச்சிற்பம் எவ்வாறு இருக்கும் ..? அப்புகைப்படத்தை இந்நூலில் காணலாம்.

திருவிசலூர் சிற்பத்துடன், மேலும் ஒரு புகைப்படம் போட்டு இராஜராஜன் தன் மனைவியருடன் என்று குறிப்பிட்டுள்ளனர். தஞ்சையில் இருந்த இச்சிற்பம் தற்போது அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும் தகவல்.

காலங்கள் மாறினாலும், மன்னன் வாழ்ந்த அரண்மனை, நகரம் இவை அழிந்து போனாலும், அவன் எழுப்பிய இந்த வானுயர இராஜராஜேச்சரம் காலம் காலத்துக்கும் நிலைத்து நின்று, மன்னன் ராஜராஜனின் புகழை உயர்த்திப் பிடிக்கும்.


சோழ மன்னர்கள் வழங்கிய நில மானியங்கள் எங்கே ?????

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் 88 சிவா...விஷ்ணு..அம்மன் கோயில்கள் உள்ளன. இக் கோயில்களுக்கு சோழ மன்னர்கள் வழங்கிய நில மானியங்கள் எங்கே.... இன்று அவை யாரிடம் எங்கே இருக்கிறது...என்பது பற்றிய வரலாற்று ஆர்வலர்களிடையே பெருத்த ஐயப்பாடு நிலவுகிறது...

இதுபற்றி ஒரு சிறு வரலாற்று குறிப்பு...சோழர்களுக்கு பின் ஐநூறு ஆண்டுகள் கழித்து தான் தஞ்சையில் நாயக்கர் ஆட்சி ...இந்த கால கட்டத்தில் கோயிலும்... கோயிலுக்கு உரிய நிலங்களுக்கும் என்ன நிலை என்று சொல்ல எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை ..ஆனால்...

கிபி 29/10/1885 ல் தஞ்சையின் கடைசி மராட்டிய மன்னர் சிவாஜி மறைவிற்கு பின் அனைத்து கோயில்கள்....சத்திரங்கள் மற்றும் அவற்றின் எல்லா வகையான உரிமையையும் சொத்துக்களையும் இங்கிலீஷ் கிழக்கு இந்திய கம்பெனி அதிரடியாக அபகரித்து கொண்டது. இவருடைய விதவை மனைவி, ராணி காமாட்சி பாய் சாகேப் லண்டன் கோர்ட்டில் வாதாடி கோயில்களையும் அதன் சொத்துக்களையும் மீட்டார்... 1892 ல் இவரது மறைவுக்கு பின்னர் மீண்டும் கம்பெனி கோயில்களை தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது...இன்னொரு மராட்டிய ராணி உமாம்பா பாயி சாகேப்... ராணி... ஜீஜாம்பா பாயி சாகேப் தொடர்ந்து கம்பெனியுடன் கடுமையான மோதல்களுக்குப் பின் 88 கோயில்கள் திருப்பி தரப்பட்டன.ஆனால் கிழக்கு இந்திய கம்பெனி கோயில்களுக்கு மன்னர்கள் வழங்கிய நிலங்களை இனாம் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்து எல்லா நிலங்களையும் எடுத்து கொண்டு.... கோயில் நிர்வாக செலவிற்கு மோகினி தொகை என்று ஒரு அலவன்ஸ் வழங்கி வந்தார்கள்.... அப்படி 1865 ல் எல்லா கோயில்களுக்கும் வழங்கிய மொத்த மோகினி தொகை ரூபாய் 32,655-7-9.

இதை தவிர பத்து கிராமங்களின் நிலங்களையும் கேட்டு பெற்றார்கள்... HR&CE நிருவாகத்தில் வந்ததும் இவையெல்லாம் அந்த துறையின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டன.
ஆதாரம்:


The Great Temple at Tanjore by J.M.Somasundaram Pillai in 1935.






தகவல் : நன்றி . 

ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர் 

ஐயா செல்வராஜ்  நாயக்கவாடியர் 
ஐயா மா.மாரிராஜன்..




சோழர் கால கல்வெட்டு 


கொடிமரம் 


கும்பாபிஷேகம் 


வரைபடம் 


பாலபிஷேகம் 


 ஒற்றைக்கல் நந்தி


நந்தி சிலைகள் 


நடராஜர் சன்னதி 

இரவின் விளக்கொளியில்



தூண்கள் 





ராஜராஜன் சிலை 


மேற்கூரை ஓவியங்கள் 









பிரம்மாண்ட சிவலிங்கம் 


சிவலிங்கங்கள் 


தஞ்சாவூர் ஓவியம்


தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் பின்னாட்களில் மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட விநாயகர் சன்னதி.


படிக்கட்டுகள் 


சோழர் கால ஓவியம் 


பத்மா சுப்ரமண்யம் நாட்டியம் 


கோயில் யானை 


நடன அரங்கேற்றம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் 


நெய் தீபம் 


ராஜராஜன் நாடகம்


சேதமடைந்த சிலைகள் 


மரப்பல்லியை பார்த்தல்


சிவகங்கை பூங்கா 


பெரிய கோயிலுக்கு அருகே பாய்ந்தோடும் காவிரி 


அபிஷேக நீர் வழியும் இடம். 



பலிபீடம் 










ஐயா வ. பழனியப்பன் சோழகர்


























தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா


































































தஞ்சாவூர் நூலில் இருந்து 































திரு. மோகன் குமார் அவர்களின் படங்கள் 















































வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்