புதன், 28 ஆகஸ்ட், 2019

துன், டத்தோ ஸ்ரீ உத்தாமா ச. சாமிவேலு நரங்கியர்



மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்தவர்.

கள்ளர் மரபில் தஞ்சாவூர் பூதலூர், ஆவாரம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட   சங்கிலிமுத்து நரங்கியர், அங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக ஜொகூர் மாநிலத்தில் குளுவாங் நகருக்கு அருகில் இருந்த செங்கமலை ரப்பர் தோட்டத்தில் மார்ச் 8, 1936 பிறந்தார். இவருடைய சகோதரர் பொன்னம்பலம் நரங்கியர் குடும்பம் ஆவாரம்பட்டியில் வாழ்ந்து வருகின்றனர்.

தனது ஐந்தாவது வயதில் ஜொகூர் மாநிலத்தை விட்டு சிலாங்கூர் மாநிலத்தில் இருந்த எல்மினா தோட்டத்திற்குப் பெற்றோருடன் வந்தார். தாய் தந்தையருக்கு பால் மரம் சீவும் வேலைகலில் உதவி செய்தார்.

பின்னர், இவருடைய குடும்பம் நிலக்கரிச் சுரங்க நகராக விளங்கும் பத்து ஆராங்கிற்கு குடி பெயர்ந்தது. பத்து ஆராங்கிற்கு குடி வந்த பின்னரும் அவருடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழ்மை தொடர்ந்து வந்தது.

பத்து ஆராங்கிற்கு அருகில் ரவாங் நகரம் உள்ளது. அந்த நகரத்தில் இயங்கி வந்த கிளைவ் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். நான்காம் வகுப்பு வரை தான் பயின்றார். அதன் பின்னர் குடும்பத்தின் வறுமை அவருடைய வாழ்க்கையைத் திசைத் திருப்பியது.

அவரால் படிப்பைத் தொடர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. குடும்பத்தின் ஏழ்மை நிலை அவரை மேலும் மோசமாக்கியது. வேறு வழி இல்லாமல், அந்தச் சின்ன வயதிலேயே குடும்பத்திற்கு உதவியாக வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

மோகினி சுருட்டு நிறுவனத்தில் சுருட்டு சுற்றும் வேலையில் சேர்ந்தார். புகையிலையின் வாடை அவருக்கு ஒத்து வரவில்லை. வேலையை விட்டு விட வேண்டிய நிலைமை.

பிறகு, பத்து ஆராங்கில் உள்ள ‘மலாயன் கொலிரியர்ஸ்’ எனும் நிறுவனத்தில் அலுவலகப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். குடும்பச் சுமையைக் குறைப்பதற்காகப் படிக்கும் வயதில் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளையும் செய்து உள்ளார். இரவு வகுப்புகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.

சாமிவேலுவின் கடின உழைப்பு மலாயன் கொலிரியர்ஸ் நிர்வாகத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அவருக்கு எழுத்தர் வேலை வழங்கப் பட்டது. அந்த வேலையில் அவர் சிறிது காலம் பணிபுரிந்தார்.

1950 ஆம் ஆண்டு நவம்பர் 7-இல் அவருடைய தாயார் அங்கம்மாள் இயற்கை எய்தினார். தாயாரின் இழப்பு அவரைப் பெரிதும் பாதித்தது. அதன் பின்னர், அவர் அங்கு இருக்க விரும்பவில்லை. 1951-இல் பத்து ஆராங் நகரையே விட்டு கோலாலம்பூருக்கு வந்து சேர்ந்தார்.

1951-இல் கோலாலம்பூரில் செந்தூல் பகுதியில் உள்ள ஓர் உணவுக் கடையில் சமையல்காரருக்கு உதவியாளராகச் சிறிது காலம் வேலை பார்த்தார். அந்தக் காலகட்டத்தில் கோலாலம்பூரில் ஸ்ரீ ஜெயா பேருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது. உதவிச் சமையல்காரர் வேலையை விட்டு விட்டு ஸ்ரீ ஜெயா நிறுவனத்தில் சேர்ந்து பேருந்து உதவியாளராக வேலை செய்தார்.

அங்கு வேலை செய்கின்ற காலத்தில் அவருக்கு வேதவனம் கட்டடக் கலைஞர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணி புரியும் புதிய வேலையும் கிடைத்தது. இந்த வேலை தான் சாமிவேலுவின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.

வேலை நேரங்கள் போக ஓய்வு நேரங்களில் கோவிந்தசாமி என்பவரின் துணையுடன் கட்டடக்கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கட்டட வரைபடத் துறையில் பயிற்சியாளராகவும் சேர்ந்து தன்னுடைய கல்வி நிலையை வளர்த்துக் கொண்டார்.

தந்தையார் சங்கிலிமுத்து 1957ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மறைந்த போது சாமிவேலுவின் வயது 21. இக்கட்டத்தில் சகோதரர்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பு சாமிவேலுவின் தோளில் விழுந்தது.

குடுமபத்தின் மீது காட்டிய அதே அக்கறையை, கடமை உணர்வைப் பின்னர் சமுதாயத்தின் மீதும் செலுத்த வேண்டிய பொறுப்பு சாமிவேலுவுக்கு வாய்த்தது. 1960 ஆம் ஆண்டில் பத்து கேவ்ஸ் ம.இ.கா. கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர், அக்கிளையின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

1960களில் இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரசியலில் ஓர் இறுக்க நிலை ஏற்பட்டது. அப்போது இந்தோனீசியாவை அதிபர் சுகர்ணோ ஆட்சி செய்து வந்தார். மலாய்க்காரர்கள் வாழும் நாடுகள் எல்லாம் இந்தோனீசியாவிற்குச் சொந்தம் என்று பிரகடனம் செய்தார். Ganyang Malaysia எனும் வாசகங்களிப் பயன் படுத்தி ’மலேசியாவை நசுக்குவோம்’ என்று தீவிரம் காட்டினார்.

மலேசியாவிற்குள் இந்தோனேசியப் படைகள் தரை இறங்கின. உலக அரசியல் அரங்கில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் சாமிவேலு, கோலாலம்பூரில் இருந்த இந்தோனீசிய தூதரகத்தின் கொடிக் கம்பத்தில் ஏறி இந்தோனேசிய நாட்டுக் கொடியைக் கீழே இறக்கி எரித்தார்.

அவருடைய நாட்டுப் பற்றின் மூலம் அவரது புகழ் மலேசியா முழுமையும் பரவத் தொடங்கியது. மலேசிய ஆங்கில, மலாய், சீன, தமிழ் நாளேடுகள் அவரைப் பெரிதும் புகழ்ந்தன.

சாமிவேலு 1963ல் இருந்து மலேசிய வானொலி, மலேசியத் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர்.

1964 ஆம் ஆண்டில் ம.இ.கா. மத்திய செயலவையில் இடம் பிடித்தார். அத்துடன் அவர் ம.இ.கா. தேசிய கலாசாரப் பிரிவுத் தலைவராகவும் அப்போதைய தேசியத் தலைவர் துன் சமபந்தனால் நியமிக்கப் பட்டார்.

தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.

1974 ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார். 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயக்குமார் தேவராஜிடம் தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் மலேசிய சரித்திரத்தையே மாற்றி அமைத்தது

பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட கால கட்டத்திலேயே சாமிவேலு தனது கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டார். லண்டனுக்குச் சென்று Royal Institute of British Architects எனும் அரச பிரித்தானிய கட்டடக்கலைக் கழகத்தில் கட்டடக்கலைத் தேர்வு எழுதி வல்லுநராகத் தாயகம் திரும்பினார். அந்தத் துறையிலேயே தொழில் புரியவும் தொடங்கினார்.

அரசியலில் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், தேசிய உதவித் தலைவராகவும் தொடர்ந்து தேசியத் துணைத் தலைவராகவும் கடுமையான போட்டிகளுக்கு இடையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974-இல் முதல் முறையாகச் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1978-இல் துணையமைச்சராக நியமிக்கப் பட்டார். அதற்கு மறு ஆண்டில் அதாவது 1979-இல் முழு அமைச்சராகத் தகுதி உயர்த்தப் பட்டார். 1979 அக்டோபர் 12-இல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவிற்குப் பின் சாமிவேலு தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து மலேசிய அமைச்சரவையில் பொதுப்பணி அமைச்சராகவும், 1990 முதல் 1995 வரை எரிசக்தி தொலைத் தொடர்பு அஞ்சல் துறை அமைச்சராகவும் பணி புரிந்தார். அரசாங்கத்தின் தூதுக்குழுக்களில் இடம் பெற்ற சாமிவேலு உலகின் பல நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்து சென்றுள்ளார்.

டத்தோ விருது தொகு
1979 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சுல்தான் இவருக்கு ‘டத்தோ’ விருதை வழங்கினார். 1980-இல் ஜொகூர் மாநில சுல்தானும் இவருக்கு டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

1982-இல் கொரியக் குடியரசு சாமிவேலுவுக்கு கொரிய அரச சேவை விருதை வழங்கியது. 1982-இல் இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய உயரிய அரசு சேவை விருதை வழங்கிக் கௌரவம் செய்துள்ளது. 1987-இல் உலக மாமனிதர் எனும் கௌரவ விருதை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.

அப்போதைய பிரதமர் துன். (டத்தோ ஸ்ரீ) டாக்டர் மகாதீர் தலைமையில் செயல்பட்ட அமைச்சரவை பினாங்கு பாலத்தைக் கட்டி முடிக்கும் பொறுப்பைச் சாமிவேலுவிடம் வழங்கியது. அதன்படி 1985 செப்டமபர் 14-இல் 13.4 கி.மீ. தூரமுள்ள பினாங்கு பாலம் கட்டி முடிக்கப் பட்டது. இந்தப் பாலம் உலகின் நான்காவது நீளப் பாலமாக இருந்து வருகிறது.

1989 ஆம் ஆண்டு பேராக் சுல்தான் தன் 61ஆம் பிறந்த நாளில் சாமிவேலுவிற்கு ‘டத்தோ ஸ்ரீ’ எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார். அதே ஆண்டு இந்தியாவின் புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, தமிழக முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார்.

இவருடைய மனைவியின் பெயர் டத்தின் ஸ்ரீ இந்திராணி. இவர் சமூக அரசியல் கழகங்கள், அரசு சாரா இயக்கங்களின் தொண்டூழியச் சேவைகளில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு செயல் பட்டு வருகிறார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினருக்கு வேல்பாரி (பிறப்பு:1965) எனும் ஒரு மகன் உள்ளார்.

நாட்டின் மிக உயரிய விருதான “துன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார். மலேசிய வரலாற்றில் துன் விருது பெறும் இரண்டாவது இந்தியர் சாமிவேலு ஆவார்.


ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்கு தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு கூறாக விளங்கிய துன் ச.சாமிவேலு, அதே காலக்கட்டத்தில் மலேசியத் தமிழ் இலக்கியப் பூங்காவிற்கு வசந்த காலமாகவும் தமிழ் எழுத்தாளர்களின் நலன்களுக்குக் காவலராகவும் விளங்கினார் என்றால் மிகையாகாது.


அவரின் அரசியல் பயணம் விமர்சனத்திற்கு உரியதாகத்தான் இருந்தது. ஆனால், இந்த நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் தமிழ் எழுத்தாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் இடையறாது பாடாற்றியத் தலைவர் அவர் என்றால், அந்த விமர்சனத்திற்கு உறுதியாக மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நாடாளுமன்றத் தொகுதியை ஆக்கிரமித்திருந்த ஆற்றல் அவருக்கு இருந்தது. தேர்தல் காலங்களில் நுட்பமாக களப்பணி ஆற்றும் வல்லமை கொண்டிருந்த சாமிவேலுவின் வாழ்நாளில் ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் நாள் குதூகலமாகத்தான் இருக்கும். கட்சி வட்டத்திலும் ஏன், அரசாங்க மட்டத்திலும்கூட இந்த நிலை பிரதிபலிக்கும்.

மார்ச் 8-ஆம் நாள் (தற்போது நிறுத்தப்பட்டுவிட்ட) தமிழ் நேசன் நாளேடு விளம்பரங்களால் ததும்பி வழியும்.

இதில் விலக்காக, 2008-ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள், சாமிவேலுவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தழும்பை ஏற்படுத்திவிட்டது. நாட்டின் பன்னிரண்டாவது பொதுத் தேர்தல் அன்றுதான் நடைபெற்றது. முடிவும் அன்றே வெளியான போது, ஏறக்குறைய 1,821 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி மாலையைத் தவற விட்டார் சாமிவேலு.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பொறுப்பு, கட்சித் தலைவர் என பதவிகள் இப்போது இல்லாத காலத்திலும் செல்வாக்குமிக்கத் தலைவராக சாமிவேலு விளங்கி வருகிறார். இந்த ஆற்றல் வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்காது. அமைச்சருக்கு ஈடான தெற்காசிய கட்டுமானத் தூதர் பதவியை தேசிய முன்னணி அரசு சாமிவேலுவிற்கு அளித்து சிறப்பித்தது.

சாமிவேலுவின் கனவுத் திட்டமான எம்ஐஇடி கல்வி அற வாரியத்தின் வழி அவர் நிர்மாணித்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம், என்றும் அவர் பெயர் சொல்லும் கம்பீரமாக வீற்றிருந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை பல்வேறு துறைகளில் உருவாக்கியிருக்கிறது.

ஒரு தமிழ் நாளேட்டை நீண்ட காலம் நடத்தி, அதன் வழி நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தார் சாமிவேலு. ஆனாலும், இன்னும் ஒருசில ஆண்டுகளில் நூற்றாண்டை எட்டவிருந்த அந்த நாளேட்டை பொருளாதார சிக்கல்களால் இடையில் நிறுத்தியது ஒரு வரலாற்றுப் பின்னடைவாகும். தமிழ் நேசன் நிறுத்தப்பட்டதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்; இருந்தபோதும், முனைப்பும் அக்கறையும் காட்டி இருந்தால், அந்த பழம்பெரும் நாளேடு இன்று தமிழ் வாசகர்களின் கரங்களில் வலம் வந்து கொண்டிருக்கக்கூடும்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இரு முறை கோலாலம்பூரில் நடத்தி தமிழன்னைக்கு பெருமை சேர்ந்த சாமிவேலுவை உலக அளவில் தமிழர்கள் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பதவி வகித்த காலத்தில்தான் பாரதியார் நூற்றாண்டு விழா 1982-ஆம் ஆண்டில் அப்போதை மஇகா கலாச்சாரப் பிரிவு தலைவர் வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தமிழகத்திலிருந்து வருகை தந்த எண்ணற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு ஆதரவளிப்பதிலும், அவர்களுக்குரிய மரியாதைகளை வழங்குவதிலும், அவர்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் சாமிவேலு பெரும் பங்காற்றினார்.

உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது அவரது வழக்கமான நிகழ்ச்சிகளில் ஒன்று. எத்தனையோ உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு அவர் ஆதரவளித்துள்ளார்.

மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரவை நடத்தும் சிறுகதைப் போட்டிகளுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்திருக்கும் காரணத்தால் இன்று அந்த சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தொடர்ந்து 32 ஆண்டுகளைக் கடந்து வெளிவந்து, கின்னஸ் சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் தொடர்பான எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, பலவகைகளிலும் ஆதரவு அளித்த வகையில் அவர் பதவி வகித்த காலம், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கும் வசந்தகாலமாகக் கருதப்படுகிறது.

ஐம்ஸ்ட் பல்கலைக் கழகம்: மலேசியாவில் டத்தோ சாமிவேலு நிறுவிய, தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய கல்விக் கடல்



ஏழாவது உலகத் தமிழ் மாநாடு.

மொரீஷியஸில் 1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 3 முதல் 8 வரை ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம் - அந்நாட்டின் தலைநகரான போர்ட் லூயி. மொரீஷியஸ் நாட்டுப் பிரதமர் அனெரூட் ஜக்நாத், கவர்னர் ஜெனரல் சர்.வீராசாமி ரிங்கார்டு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 150 அறிஞர்கள் வந்திருந்தனர். ''மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற இந்த 21 ஆண்டு காலத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை...'' என்றார் பிரதமர். மாநாடு வெற்றி பெற தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு. இந்திய அரசு, தனது சார்பில் ஒரு கோடி ரூபாயை வழங்கியது.

சென்னையில்






வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்