புதன், 5 ஆகஸ்ட், 2020

இயக்குநர் மகேந்திரன் சேர்வைக்காரர்



இந்தியா சினிமாவின் இணையற்ற இயக்குனர். இவர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் பின்னாளில் தமிழ் திரையுலகை ஆளும் ஸ்டார்களாகவும், சூப்பர் ஸ்டார்களாகவும் வலம் வந்தாலும், தன்னளவில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். 

இன்றைய தலைமுறைக்கு… தெறி, பேட்ட, பூமராங் போன்ற படங்களில் நடித்த நடிகராக அறிமுகம் இருந்தாலும், அதற்க்கு முந்தைய எமது தலைமுறைக்கு இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனராக எத்தனையோ இளம் இயக்குனர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர். அதற்கும் மேல் அவருக்கு ஆத்மார்த்தமாக பிடித்த, அவர் விரும்பி செய்தது Journalism என்ற பத்திரிகை துறை. 

இன்றைய தலைமுறையினர் செய்கின்ற investigative journalism என்பதை முதன்முதலில் அவர் துணை எடிட்டர் ஆக பணிபுரிந்த துக்ளக் பத்திரிக்கை மூலம் 1970 களில் அறிமுகப்படுத்தியவர். இவரது Body Language & Mannerism போன்றவற்றின் அடிப்படையில்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் அமைந்தது. இயக்குனர் மணிரத்தினம், மகேந்திரன் அவர்களை தன்னுடைய மானசீக குரு என்றார்.



சிறந்த திரைக்கதாசிரியர். நல்ல குடும்ப தலைவர். உறவுகளை நேசித்த நல்ல உள்ளம் படைத்தவர். இவர் இயக்கிய முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, பூட்டாத பூட்டுக்கள், சாசனம், மெட்டி போன்ற திரைப்படங்கள் என்றும் இவர் பெயர் சொல்லும் காவியங்கள். 

1961 ஆம் வருடம் எம்.ஜி .ஆரின் லாயிட்ஸ் ரோடு அலுவலகத்தில் தங்கி 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைக்கதையாக எழுதி M.G.R இடம் 1500 ரூ சன்மானம் பெற்றது அவரின் சினிமா வாழ்க்கையின் முதல் அடிக்கல். பின்னர் 1966 ஆம் வருடம் 'நாம் மூவர்' திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, 2019 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 58 வருடங்கள், எழுத்து, கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என்று அனைத்து திரை துறையிலும் கால்பதித்து வெற்றி கண்டவர்.

1939 ஆம் வருடம் ஜூலை 25 ஆம் தேதி சிவகங்கை, இளையான்குடியில் தந்தை ஜோசப் செல்லையா, தாயார் மனோன்மணி ஆகியோரின் மூத்த மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் அலெக்சாண்டர். இவருடன் பிறந்தவர்கள் நால்வரில் இரு இளைய சகோதரர்கள் (பாஸ்கரன், சாந்தகுமார்) இரு இளைய சகோதரிகள் (பாப்பத்தா, ராணி).  தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, செவிலியர் பணிபுரிந்தவர்.


மகேந்திரன் 25 ஜூலை 1939 இல் ஆசிரியர் ஜோசப் செல்லியா சேர்வை, மனோன்மணி நாட்டாருக்கும் பிறந்தார். இளையான்குடியில் பள்ளிப்படிப்பும், பிறகு  இவர் சிலகாலம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அணைக்காடு கிராமத்தில் இவரது பெரியம்மா வேதமணி, பெரியப்பா பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர் ஆகியோரிடம் தங்கி அங்குள்ள லுத்தரன் பள்ளியில் பயின்றார். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், அதன் பின் காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியிலும் பயின்றார்.

அழகப்பா கல்லூரியில் அவரது தாய்மாமா Dodd அவர்கள் பேராசிரியாக பணிபுரிந்தார். அதே சமயம் அவரின் பெரியம்மா மகன் Eddy வாணாதிராயர் அவர்களும், நெருங்கிய உறவினர் தா. பாண்டியன் (Ex Tamil Nadu State Secretary, of the Communist Party of India and Ex M.P) அவர்களும் அதே கல்லூரியில் இவருக்கு மூத்த வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தார்கள். இவரைவிட 9 வருடங்கள் இளைய இவரது மற்ற தாய்மாமா மகன் நடிகர் ராஜேஷ் அதே அணைக்காடு பள்ளியிலும், பின்னர் அழகப்பா கல்லூரியிலும் இவர்களுக்கு பின்னர் பயின்றார்.


எல்.ஜி.மகேந்திரன் பக்கத்தில் இயக்குனர் மகேந்திரன் 

ஓட்டப்பந்தயத்தில் சிறுவயது முதலே மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். அதன் விளைவாக 1500 மீட்டர் ஓட்டபந்தயத்தில் மாநில அளவில் குறிப்பிடத்தக்க வீரர் என்ற பெருமையும் பெற்றார். அங்கு அவரது சீனியர் விளையாட்டு வீரரான எல்.ஜி.மகேந்திரன் என்பவரால் வசீகரிக்கப்பட்டு அலெக்சாண்டர் எனும் தனது பெயரை மகேந்திரன் என மாற்றிக் கொண்டார்.

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்றை நடத்தினார். தீபாவளிதோறும் அது வெளிவந்தது. கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.

1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் பேசினார்.

"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் இவர் (எம்.ஜி.ஆரை காட்டி) சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்றார், மகேந்திரன்.

இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார்.

பிற்காலத்தில் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை எடுத்து வந்து, மகேந்திரனிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர் . "நான் இதைப் படமாக எடுக்கப்போகிறேன். நீங்கள் திரைக்கதை எழுதவேண்டும்'' என்று கூறினார்.

அந்த நாவலுக்கான திரைக்கதையை, 3 மாதத்தில் இயக்குநர் எழுதி முடித்தார். "திருடாதே'' படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் திரைக்கதையை கொண்டு போய்க் கொடுத்தார்.

"இவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டீங்களாப'' என்று வியப்புடன் கேட்டார், எம்.ஜி.ஆர். பிறகு, "ஊரில் இருந்து ஒழுங்காக பணம் வருகிறதாப'' என்று கேட்டார். இயக்குநர் தன் நிலைமையைக் கூறினார். உடனே எம்.ஜி.ஆர். நூறு ரூபாய் கொடுத்தார்.

பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். தள்ளிப்போட்டார். தன் நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார்.

"அனாதைகள்'' என்ற நாடகத்தை இயக்குநர் எழுதித் தந்தார். நாடக ஒத்திகை எல்லாம் முடிந்து திருச்சியில் அரங்கேற்ற முடிவு செய்தார், எம்.ஜி.ஆர். ஆனால், புயல்-மழை காரணமாக அப்போது நாடகம் அரங்கேறவில்லை.

பின்னர் சென்னை வந்ததும், அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், படத்தின் பைனான்சியர் இறந்ததால், படம் பாதியில் நின்றுவிட்டது.

இந்த நிலையில் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக  எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.

இதுபற்றி இயக்குநர் கூறுகையில், "என்னுடைய சினிமா பிரவேசத்துக்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம்.

என் கலைப்பணிக்கு அவர் வித்திட்டார்; உரமிட்டார்; நீர் வார்த்து வளரவிட்டார் என்பதை நான் என்றுமே மறக்கமாட்டேன்'' என்றார்.

"முள்ளும் மலரும்'' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். சிவாஜிகணேசன் நடித்த "தங்கப்பதக்கம்'' படத்திற்கு கதை-வசனம் எழுதி புகழ் பெற்ற மகேந்திரன், "முள்ளும் மலரும்'' என்ற படத்தை இயக்கி பிரபலமானார்.

1966-ம் ஆண்டு பாலன் பிக்சர்சார் "நாம் மூவர்'' என்ற படத்தை எடுத்தனர். இந்தப்படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது.

தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.

எம்.ஜி.ஆர் மூலமாக காஞ்சித்தலைவன் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். பொருளாதரம் மற்றும் பல காரணங்களால் சினிமாவே வேண்டாம் என திரும்பிய மகேந்திரனை மீண்டும் அழைத்து வந்தவர் எம்.ஜி.ஆர் தான். தொடர்ந்து தங்கப்பதக்கம், கை கொடுக்கும் கை காளி உள்ளிட்ட 26 படங்களுக்கு கதை வசனம் எழுதினார்.

"நிறைகுடம்'' படம் நிறைவடைந்ததும், மறுநாள்சொந்த ஊருக்குப் போகத் தயாரானார், மகேந்திரன். அப்போது அவரைப்பார்க்க நடிகர் "சோ'' விரும்பினார். அவர் அழைப்பை ஏற்று, இயக்குநர் சென்று பார்த்தார்.

"துக்ளக்'' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில் "போஸ்ட் மார்டம்'' என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் எழுதவேண்டும் என்றும் "சோ'' கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட இயக்குநர், கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் துக்ளக்கில் பணிபுரிந்தார்.


இயக்குனர் மகேந்திரனின் திருமணம் 1966 ஆம் வருடம் நடைபெற்றது. மனைவியின் பெயர் கண்ணம்மா மகேந்திரன். 







இவரது மூத்த மகன் ஜான் மகேந்திரனும் ஒரு திரைப்பட இயக்குனர். 'சச்சின்', 'ஆணிவேர் போன்ற புகழ்பெற்ற தமிழ் படங்களையும் வேறு பல தெலுங்கு படங்களையும் இயக்கியவர். இயக்குனர் மகேந்திரனின் மூத்த மகள் டிம்பிள், இளைய மகள் அனுரீட்டா பாசு ஆகியோர்.

இயக்குனர் மகேந்திரன் 2017 ஆம் ஆண்டிலிருந்து சென்னையிலுள்ள BOFTA Film Insitute இல் இயக்குனர் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 

2018 ஆம் ஆண்டு நிமிர் படப்பிடிப்பின்போது இதயக்கோளாறினால் சுகவீனமடைந்தாலும், பின்னர் குணம் பெற்று பல திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் இந்த ஆண்டு ஜனவரி முதல் சிறுநீரக கோளாறால் மிகவும் பலகீனமடைந்து சில வாரங்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 3 நாட்களாக மிகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 02.04.2019 காலை அவர் உயிர் பிரிந்தது.

கலை, திரைத்துறை எல்லாவற்றிலும் ஒரு சகாப்தமாக அவர் விளங்கினாலும், அதற்கும் மேல் நாம் அன்புடன் சித்தப்பா என்றழைக்கும் ஒரு அன்பான ஜீவனை இழந்தோம்.

இது காலத்தால் ஈடு செய்ய முடியாத இழப்பு.

கட்டுரை : திரு. ஜோன்ஸ்  எடி வாணாதிராயர் 





ரஜினிகாந்த் :

இயக்குநர் மகேந்திரன் உடனான தன்னுடைய நினைவுகளை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார். தனக்கும், மகேந்திரனுக்கும் இடையேயான நட்பு சினிமாவுக்கும் அப்பாற்பட்ட ஆழமான நட்பு என கூறியுள்ளார். சினிமாவிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தன்னுடைய சுய மரியாதையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர் என பாராட்டியுள்ளார். 

மேலும் பேசிய அவர், ‘சினிமாவில் எனக்கு புதிய பரிமாணத்தை கற்றுக் கொடுத்தவர். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அவர் என்றும் முன்னுதாரணமாக இருப்பார். தமிழ் சினிமா இருக்கும் வரை மகேந்திரனுக்கென்று ஒரு தனி இடம் இருக்கும்’ என கூறியுள்ளார்.








இயக்குநர் மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பச்சை மை கடிதம்!- உருகும் நடிகர் ராஜேஷ்

எம்.ஜி.ஆரின் 'நாடோடி மன்னன்' ரிலீஸாகி, படம் வெள்ளி விழாக் கொண்டாடியது. அதனால், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் எம்.ஜி.ஆரை பேச அழைத்திருந்தார்கள். விழாவில் மாணவன் ஒருவன் `தமிழ் சினிமா எப்படியிருக்கிறது' என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர். உட்பட அனைவரையும் விமர்சித்துப் பேசுகிறார். அந்த மாணவனுடையப் பேச்சை எம்.ஜி.ஆரும் ரசித்து கைதட்டுகிறார். பிறகு, தான் மேடையில் பேசும்போது, `இந்த மாணவன் படிப்பு முடிந்ததும் தமிழ்த் திரையுலகத்துக்கு வர வேண்டும். தமிழ்த் திரையுலகை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல இந்த மாணவனால் முடியும்' என்று பாராட்டுகிறார். வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல், பச்சை நிற மையால் `அந்த மாணவரைச் சென்னைக்கு வந்து தன்னைப் பார்க்கும்படி' எழுதியும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

ஆனால், அந்த மாணவன் சென்னை வந்து பத்திரிகையாளர் ஆகி விட்டார். காலம் மறுபடியும் அந்த மாணவனையும் எம்.ஜி.ஆரையும் ஒரு பிரஸ் மீட்டில் சந்திக்க வைக்கிறது. பார்த்த முதல் பார்வையிலேயே எம்.ஜி.ஆர். அந்த மாணவனை அடையாளம் கண்டு அழைக்கிறார். அதன் பிறகு, அந்த மாணவன் எம்.ஜி.ஆரின் வீட்டில் சில வருடங்கள் தங்கியிருந்தார். `காஞ்சித் தலைவன்' படத்தின் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குநராக அந்த மாணவரைச் சேர்த்து விடுகிறார் எம்.ஜி.ஆர். பிறகு எழுத்தாளர், பத்திரிகையாளர், சினிமாவில் இயக்கம் என்று ஓஹோவென அந்த மாணவன் வளர ஆரம்பிக்கிறார். திரையுலகம் அவரை `இயக்குநர் மகேந்திரன்' என்று கொண்டாட ஆரம்பித்தது'' என்றவர் தொடர்ந்தார்.

மகேந்திரன் 'உதிரிப்பூக்கள்' படம் எடுத்து இந்திய அளவில் பேசப்பட்ட நேரம் அது. அப்போது எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்தார். அதே நேரத்தில் மகேந்திரனும் டெல்லியில் தங்கியிருப்பதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், தன்னுடைய அடையாளங்களான தொப்பி, கண்ணாடி இரண்டும் இல்லாமல் மகேந்திரன் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார்.

உனக்குள் இருந்த நெருப்பை நான் 1958-லேயே கண்டுபிடித்துவிட்டேன்' என்று பட்டு சால்வை போர்த்தி பாராட்டுகிறார். அந்தப் பட்டு சால்வை மகேந்திரனிடம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். மகேந்திரனுக்குக் கொடுத்த அந்தப் பச்சை மை கடிதத்தை மகேந்திரன் பல காலம் பத்திரமாக வைத்திருந்தார். அதை நான் அவரிடமிருந்து கேட்டு வாங்கி, ஃபிரேம் போட்டு வைத்திருக்கிறேன்.

இயக்குநர் மகேந்திரன் அந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆர். நினைவாக வைத்திருந்தார். நான், இனிமேல் அந்தக் கடிதத்தை மகேந்திரன் நினைவாக வைத்திருக்கப் போகிறேன்'' என்பவரின் குரல், தன் மதிப்புக்குரியவரை இழந்த வேதனையில் தேய்ந்து ஒலிக்கிறது.

இயக்குனர் மகேந்திரன், தேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை பற்றி இயக்குனர் மகேந்திரன் :






"துப்பாக்கிகளுக்கும்,கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.

திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன்.

அருமையான மூன்று மாதங்கள். 2006 ஆம் ஆண்டில் அங்கே தங்கியிருந்து “1996 ஆம் ஆண்டில் ஈழத்தில் நடந்த இடப்பெயர்வு” குறித்தும் அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவையும் எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது.
2006 இல் அந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்த போது தான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.
சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள்.

அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம்.

சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.

அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது.

என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க் கொண்டேயிருந்தார் தலைவர்.உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.

நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்?. உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம்.

ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப்படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்... யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.

நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.

கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார்.

விமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது,சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.

அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது





ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மறைவின் போது இயக்குநர் மகேந்திரன் கூறியவை


''நான் சினிமா உலகத்துக்கு வர ஆசைப்பட்டவன் இல்லை; சினிமாவை நேசித்தவனும் இல்லை; சினிமா மீது வெறுப்பு கொண்டிருந்தவன். அந்த வெறுப்புதான் என்னை சில சினிமாக்களை இயக்கத் தூண்டியது. ஆனால், ஒரு கட்டத்தில் நான் சினிமாவை நேசிக்கத் தொடங்கியதற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் அசோக்குமார். என் சினிமாக்களுக்கு அவர்தான் உருவமும் உணர்வும் கொடுத்தார். அசோக்குமார் இல்லாமல் 'சாசனம்’ படத்தை எடுக்க நேர்ந்தது. அப்போதுதான் அவர் இல்லாமல் என் படைப்புகள் முழுமைபெறுவது இல்லை என்பதை உணர்ந்தேன். நான் அசோக்குமாருடன் ஒன்பது படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். அதில் 'உதிரிப்பூக்கள்’, 'பூட்டாதப் பூட்டுக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'மெட்டி’, 'நண்டு’ போன்ற படங்களை இன்றும் பலர் வியக்கிறார்கள். அந்தப் புகழ்ச்சிகள் அனைத்தும் அசோக்குமாருக்கு உரியது.''

''எனது படங்களை நான் விருது பரிசீலனைக்கு அனுப்பியது இல்லை. அசோக்குமாருக்கு ஒளிப்பதிவுக்கான தேசிய விருது கிடைத்த 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தையும் நான் அனுப்பவில்லை. தேவி ஃபிலிம்ஸின் உரிமையாளர்கள்தான், அந்தப் படத்தை தேசிய விருது பரிசீலனைக்கு அனுப்பினார்கள். சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த மாநில மொழி படம் என அது மூன்று விருதுகளை வென்றது. பிறகு அந்தப் படத்துக்கு மாநில அரசின் விருதுகளும் கிடைத்தன. இன்று யோசித்தால், என் எல்லா படங்களையும் விருது பரிசீலனைக்கு அனுப்பி, அசோக்குமாருக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது!''

''இருட்டு, எண்ணங்களைக் கூர் ஆக்கும்; இருளும் குறைந்த ஒளியும்கொண்ட கறுப்பு வெள்ளை வண்ணம், இதயத்துக்கு நெருக்கம் தரும். உலகின் ஆகச் சிறந்த இயக்குநர்கள் இன்னும் கறுப்பு வெள்ளையில் படம் எடுக்க விரும்புவது அதனால்தான். வண்ண வண்ண நிறங்களில் படம் பார்க்கும்போது கவனச்சிதறல் இருக்கும். அது கறுப்பு வெள்ளையில் இருக்காது. 'உதிரிப்பூக்கள்’ படத்தை கலர் படமாக எடுத்தால் நுட்பமான உணர்வுகள் சிதைந்துவிடுமே என நான் பயந்தேன். ஆனால், கலரிலும் அதன் ஆன்மாவை அப்படியே கொடுத்தவர் அசோக்குமார். அப்போதெல்லாம் மானிட்டர் கிடையாது. எடுத்தது எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்ள முடியாது. 'உதிரிப்பூக்கள்’ படம் தொடங்கியபோது விஜயனும் அஸ்வினியும் வருகிற ஒருசில ஷாட்களில் என்னென்ன நிறங்கள் இருக்க வேண்டும் என அசோக்குமாரிடம் ஸ்கெட்ச்சை வைத்துக் கீறிக் காட்டுவேன். ஒருமுறை அதைப் பார்த்துவிட்டு, நான் எதிர்பார்த்ததைவிடவும் ஒளியை மிக இயல்பாகவும் அழகாகவும் காட்சிகளில் கொண்டுவந்திருப்பார்.

எனக்கு பாடல்கள் எடுக்கப் பிடிக்காது. அதுவும் டூயட் எடுப்பதைக் கொடுமையாக நினைப்பவன். ஆனால், 'ஆடியோ ரைட்ஸ்’ என்பது தனி வியாபாரமாக இருந்ததால், பாடல்களை காட்சிகளைப்போல எடுப்பதாக தீர்மானித்தோம். 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் 'பருவமே புதிய பாடல் பாடு’ பாட்டுக்கு சுஹாசினி, மோகன் இருவரையும் பெங்களூரு கப்பன் பார்க்கில் வைத்து படம் பிடிக்கலாம் என முடிவெடுத்தோம். எங்களுக்கு அதிகாலை பெங்களூரு எப்படியிருக்கும் என்பதே தெரியாது. காலை 4:30 மணிக்கு கப்பன் பார்க் சென்றால், என் அருகில் நின்றிருந்த அசோக்குமார்கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பனி மூட்டம். ஆனாலும் அதிகாலை 5:30 மணிக்கு விளக்குகள் எதுவும் இல்லாமல், அசோக்குமார் அந்தப் பனிசூழ் காலையிலேயே பாடலைப் படம் ஆக்கினார். சென்னைக்கு நெகட்டிவ் அனுப்பி ரிசல்ட் பார்த்தபோது, மிகச் சிறப்பாக இருந்தது. பனி படர்ந்த அந்த அதிகாலையை ஒளிப்பதிவு செய்த அசோக்குமாரின் அசாத்தியமான திறமையும், அவருடைய நம்பிக்கையும்தான் அந்தப் படத்துக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்தது!''

'' 'மெட்டி’ படம் இரு சகோதரிகளின் கதையைப் பேசிய படம். அந்தப் படம் ஸ்வீடன் இயக்குநர் இங்மெர் பெர்க்மென்னின் படங்களைப் போல இருப்பதாக சிலர் பாராட்டினார்கள். அதை அபத்தமான பாராட்டாகவே நான் நினைத்தேன். திரைப்பட ரசனை பற்றிய அறியாமையில் பேசுகிறார்கள் என நினைத்தேன். எனது வியட்நாம் ரசிகர் ஒருவரும் தொலைபேசியில் 'மெட்டி’ படம் இங்மெர் பெர்க்மென்னின் 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ படத்தின் தரத்தில் இருப்பதாகச் சொன்னார். 'இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே?’ என அந்தப் படத்தைப் பார்த்தேன். அதுவும் 'மெட்டி’யும் இரு சகோதரிகளின் கதைகளைப் பேசியது என்பதைத் தவிர, ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருந்தது இங்மெர் பெர்க்மென்னின் படம். 'இரண்டு படங்களையும் எப்படி ஒப்பிடலாம்? மோசமான ரசனை கொண்டவர் நீங்கள்...’ என்று நான் வியட்நாம் நண்பரைத் திட்டினேன். ஆனால், பிறகு யோசித்தால், 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’, 'மெட்டி’... இரண்டு படங்களின் ஒளிப்பதிவுத் தரமும் ஒன்றுபோலவே இருந்ததை உணர்ந்தேன். 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நீக்விஸ்ட் உருவாக்கிய அதே தரத்தை, அபாரமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத இந்தியாவில் கொண்டுவந்திருந்தார் அசோக்குமார். அதுதான் அவரது பலம்!''

''சில வருடங்களாகவே அசோக்குமார் எங்கே இருக்கிறார் என யாரைக் கேட்டும் தெரியாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு அவரது மகன் தொலைபேசியில் அழைத்து அதிர்ச்சியைக் கொடுத்தார். திண்டிவனம் அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்துடன் படுத்திருந்தார் அசோக்குமார். அடையாளமே தெரியாமல் உருக்குலைந்துபோயிருந்தார். 'சார், நீங்க அவரைக் கூப்பிடுங்க; பேசுங்க. உங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னாலும், நீங்க வந்திருக்கீங்கனு புரிஞ்சுப்பார்’ என்றார் அசோக்குமாரின் மகன். அருகில் சென்று அவரது தலையை வருடியபடி, 'அசோக்... அசோக்... மகேந்திரன் வந்திருக்கேன். கொஞ்சம் கண்ணைத் திறங்களேன் ப்ளீஸ்...’ என்றேன். அது, அவரது நினைவை எட்டவே இல்லை! ஒன்பது படங்களில் என்னோடு பரஸ்பரம் உரையாடி பழகிய அசோக்குமார், என் வார்த்தைகளையோ உணர்வுகளையோ புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அசோக்குமார் கடைசியாக ஹைதராபாத்தில் குடியேறி சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தார்.

என் வாழ்வில் உறவினர்கள், நண்பர்கள் என எத்தனையோ பேரை இழந்திருக்கிறேன். ஆனால், அசோக்குமாரின் இறப்புதான் முதன்முறையாக எனக்கு தனிமையை உணர்த்துகிறது.

''தன் பலம் என்னவெனத் தெரியாமல் வாழ்ந்து மறையும் யானையைப்போல, காவியங்களைப் படைத்து மறைந்த அசல் கலைஞன் அசோக்குமார்!''

இதில் இன்னோர் அதிர்ச்சி... நாம் அசோக்குமாரை மட்டும் தொலைக்கவில்லை. அவருடையை படைப்புகளையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். சினிமாவுக்கான நவீன ஆவணக் காப்பகத்தை நாம் உருவாக்க வேண்டும். அதுதான் அசோக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி. ஏனென்றால், இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான அசோக்குமாரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வரும் ஒரு மாணவன், எதைப் பார்த்து அசோக்குமாரின் ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்வான்? ஏனென்றால், 100 படங்களுக்கு மேல் ஒரு சமூகத்தின் வரலாற்றை கலையழகுடன் பதிந்திருக்கும் அசோக்குமாரைப் பற்றி எந்தப் பதிவும் இங்கே இல்லை; அவரது படைப்புகளைப் பாதுகாக்கவும் இல்லை.


இந்து நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி


புதுமைபித்தன், தி.ஜானகிராமன், குபரா, சூடாமணி போன்ற இலக்கிய ஆளுமைகள் மகேந்திரனுக்கு பிடித்தவர்கள். புதுமைபித்தனின் சிற்றன்னை குறுநாவலை படிக்கையில் அதன் அனுபவத்தில் உருவானதுதான் உதிரிபூக்கள் திரைப்படம். குறிப்பாக தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படித்ததும் அதன் உணர்வுகளை அப்படியே சினிமாவாக எடுக்க வேண்டும் என முயற்சித்தார். அதுபற்றி

நிரூபர் : ‘மோகமுள்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தீர்கள் அல்லவா…?

மகேந்திரன் : ஆம். ‘மோகமுள்’ நாவலை வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் நான் ஒன்பது தடவைக்கும் மேல் படித்திருக்கிறேன். ஒன்பதாவது தடவை படித்து முடித்த பிறகுதான் அந்த நாவலின் விஸ்தீரணம் எனக்கு முழுமையாகப் புரிந்தது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குள் பதிந்துபோயின. அப்புறம் 10 நாட்கள் உட்கார்ந்து திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன். நடிகர்கள் தேர்வு எல்லாம் முடிந்து, படமாக எடுக்கப் போனபோது தயாரிப்பாளர் குறுக்கே புகுந்து எல்லாவற்றையும் நாசமாக்கிக் கடைசியில் அந்தப் படத்தை எடுக்க முடியாமலே போய்விட்டது. அதற்குப் பிறகுதான், ஞானராஜசேகரன் படமாக எடுத்தார். எனக்கு இப்போதும்கூட ஆசை விடவில்லை. எப்படியாவது அந்த நாவலைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

தனது அனுபவங்களை சினிமாவும் நானும் என்ற புத்தகமாக 2004ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். அப்புத்தகம் சினிமா உதவி இயக்குனர்கள், கலைஞர்கள் என அனைவருக்கும் சினிமா பற்றியான ஆழ்புரிதலை தெளிவுபடும் விதமாக இருந்தது.

மேலும் தனது நடிப்பு சார்ந்த நுணுக்கங்களின் வெளிப்பாடுகளை ’நடிப்பு என்பது’ என்ற புத்தகம் மூலம் வெளிகொணர்ந்தார். இப்புத்தகம் மிகமுக்கியமாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு கையேடாக அமைந்தது. தொடர்ந்து சினிமாவின் வளர்ச்சியை பற்றி யோசிக்கும் மகேந்திரன் தமிழ்சினிமா மட்டுமல்ல… இந்திய சினிமாவே போதுமான வளர்ச்சி பெறவில்லை எனக்கூறுகிறார்.

நல்ல சினிமா பற்றி என்பதன் விளக்கத்தை ஒரு பத்திரிகையில்
”நான் எடுத்ததுபோல் யதார்த்த பாணி திரைப்படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ‘பாகுபலி’, ‘அவதார்’ போன்ற படங்களும் எடுக்க வேண்டும், திகில் படம், நகைச்சுவைப் படம், அறிவியல் புனைகதைப் படம், வரலாற்றுப் படம் என்று எல்லா வகையிலும் எடுங்கள்! ஆனால், தனித்துவத்தோடு எடுங்கள். அசலாக எடுங்கள்... அவ்வளவுதான்! இவ்வாறாக கூறுகிறார்.


ஆனந்த விகடனுக்காக அவர் அளித்த பேட்டிகளிலிருந்து




''மகேந்திரன் பற்றிய அறிமுகம்?"

“நான் குறை மாசத்துல பிறந்தவன். மற்ற குழந்தைகளைப்போல நான் என்னோட சின்ன வயசுல இருந்ததில்லை. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலகூட என் அம்மாகிட்ட மத்தவங்க, 'எப்படியோ... உன் பிள்ளை பிழைச்சுட்டான். என்ன ஒண்ணு, மத்த பிள்ளைங்க மாதிரி இருக்க மாட்டான்'னு சொல்வாங்க. இதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுதான் இருப்பேன். அதுதான் என்னை மாத்துச்சுனு நினைக்கிறேன். அப்போ, என்னால மத்த பிள்ளைங்க மாதிரி ஓட முடியாது, விளையாட முடியாது. மத்தவங்க செய்யாததை நாம செய்யணும்னு முடிவு பண்ணேன். லைப்ரரி பக்கம் ஒரு பையனும் வரமாட்டான். அர்த்தம் புரியுதோ இல்லையோ, எல்லா மொழிப் புத்தகங்களும் படிக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து லைப்ரரி போனேன். போகப்போக எனக்குப் புத்தகங்கள்தான் உலகமா மாறுச்சு. கல்கி, சாண்டில்யன், தி.ஜானகிராமன்னு பெரும் உயரத்துல இருந்த எழுத்தாளர்களோட படைப்புகளைப் படிச்சேன். சினிமாவுல எழுத்தாளர், அப்புறம் இயக்குநர் ஆனேன்."

“எம்.ஜி.ஆர், சிவாஜி கூட பல வருடம் பயணிச்சிருக்கீங்க. அவங்க கூட ஒரு புகைப்படம்கூட நீங்க எடுத்ததில்லைனு சொல்றாங்களே?" 

"அது என்னன்னு தெரியல... தோணவே இல்லை. அப்பப்போ நினைச்சுப் பார்க்கிறப்போ எனக்கே ஆச்சர்யமா இருக்கும். எம்.ஜி.ஆர் கூட இருந்தப்போவும் சரி. ரஜினி, கமல் கூட இருந்தப்போவும் சரி. நானா விருப்பப்பட்டு அவங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கிட்டது கிடையாது. நான் தேவ் ஆனந்த்தோட மிகப்பெரிய ரசிகன். ஒருமுறை பாம்பே போனப்போ ஒரு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஒரு புரொடக்ஷன் மேனேஜர் மூலமா நான் இருக்கிறதைத் தெரிஞ்சிக்கிட்டு என்னைப் பார்க்க வந்திருக்கார் தேவ் ஆனந்த். என் ரூம் கதவை அவர் தட்ட, நான் யாருனு தெரியாம 'எஸ். கம் இன்'னு சொல்றேன். அவரைப் பார்த்தவுடனே ஆடிப்போயிட்டேன். எதுவும் பேசாம நிக்கிறேன். 'ரூமுக்கு வாங்க'னு சொல்லிட்டுப் போறாரு. 'நாம ஒண்ணும் அவ்வளவு பெரிய டைரக்டரும் இல்லையே. நம்மளைப் பார்க்க வந்திருக்காரே'னு நினைச்சுக்கிட்டே அவரோட ரூமுக்குப் போனேன். ஒரு ரசிகரா, எனக்கு அவர் எத்தனை மணிக்கு எழுந்திருப்பாரு, என்ன சாப்பிடுவாருங்கிறது வரைக்கும் தெரியும். அவர்கிட்ட போனேன். என்னென்னவோ பேசுறாரு, நான் அவரைப் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருக்கேன். இந்தச் சந்திப்பு 'ஜானி' படம் வந்த சமயத்துல நடந்துச்சு. இப்படியெல்லாம் அவரை நேசிச்சிருக்கேன். ஆனா, அவரோடும் நான் போட்டோ எடுத்துக்கிட்டது கிடையாது. அவ்வளவு பெரிய மனுஷங்ககூட எல்லாம் இருந்திருக்கோம். ஒரு போட்டோ கூட எடுக்கலையேனு சமயத்துல வருத்தமாகூட இருக்கும்."


"நீங்க விருப்பமில்லாமல்தான் சினிமாவுக்கு வந்ததா சொல்லியிருந்தீங்களே?"

"ஆம். விருப்பமில்லாமதான் வந்தேன். எம்.ஜி.ஆர் என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்தார். சினிமாவும் கல்யாணம் மாதிரிதான். ஒருசிலர் விருப்பப்பட்டு கட்டிக்குவாங்க. ஆனால், சினிமா எனக்குக் கட்டாயக் கல்யாணம்தான். எம்.ஜி.ஆர் கட்றா தாலியனு சொல்லிட்டாரு. அதுக்குனு என் மனைவியை நான் கொடுமைப்படுத்தலை. எனக்குத் தெரிஞ்ச சினிமாவை எடுத்தேன். அதுக்கப்புறம் இந்த சினிமாவே வேணான்டானு நிறைய தடவை ஓடியிருக்கேன். சினிமாவுல படங்கள் இயக்க ஆரம்பிச்ச பிறகும் ஓடியிருக்கேன். ஏன்னா, நான் யார்கூடவும் அதிகம் பேசமாட்டேன். ரஜினி கூட நல்லாப் பேசுவேன். மத்த யார்கிட்டயும் எந்தத் தொடர்பும் வச்சிக்க மாட்டேன். பணத்துக்காக எந்தப் படமும் எடுக்கலை. என் வேலை என்னவோ அதை நான் ஒழுங்கா பார்த்தேன்."

‘‘எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் பழகிய நீங்கள் அடுத்து கமல், ரஜினி, விஜய்... மூன்று தலைமுறை ஹீரோக்களுடனான நட்பைப் பற்றி?"


‘‘நீங்கள் இப்படிக் கேட்டப் பிறகே ‘யப்பா... நம்ம டிராவல் அங்கே இருந்து ஆரம்பிச்சிருக்கா?’ என நினைக்கத் தோணுது. சில சமயங்களில் வயது பெரிய அனுபத்தைத் தருது; ஒரு வகையான மறதியையும் தருது. என் வாழ்க்கையில் எந்த நல்ல விஷயமாக இருந்தாலும், அதைத் தந்தது எம்ஜி.ஆர்-தான். அதேபோல சிவாஜி சார், `தங்கப் பதக்கம்’ மூலமா இந்தியா முழுவதும் என் பேரைக் கொண்டுபோய் சேர்த்தவர். வெளியில் எம்.ஜி.ஆரை கடவுள் மாதிரி பார்த்த காலகட்டத்தில், மேலே துண்டு மட்டும் போட்டு்க்கொண்டு உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆர் உடன் அவர் பக்கத்தில் நான் இருந்த காலங்கள் உண்டு. அதுவும் நான்கு ஆண்டுகள். ஒருநாள்கூட அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோணவே இல்லை. இப்போது நினைத்துப்பார்த்தால், `அவங்களோட கிரேட்னெஸ் புரியாமலேயே ஜடப்பொருளா இருந்திருக்கோமே’ என்று தோன்றுகிறது. ரஜினி, கமலைத் தொடர்ந்து அந்த நட்புப் பயணம் மூன்றாவது தலைமுறையாக விஜய்யுடன் தொடர்வது மகிழச்சியாக இருக்கிறது.’’



"பொன்னியின் செல்வனுக்குத் திரைக்கதை எழுதிய அனுபவத்தைச் சொல்லுங்களேன்?"

"அப்போ எம்.ஜி.ஆர் எழுதச் சொன்னாரு. நிறைய பேரோட கதைகளைப் பார்த்தாரு. கடைசியா, நான் எழுதியதை ஓகே பண்ணாரு. படம் ஏன்னு தெரியல... எடுக்க முடியலை. அப்போ ஏதோ எழுதிட்டேன். இப்போ அதைப் படமா எடுக்க முடியாது. அந்தக் கதைக்கு வர்ணனையே 15 பக்கத்துக்குப் போகும். அதைத் திரைக்கதை பண்றது கஷ்டம்ங்க. நான் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி திரும்பவும் படிக்க ஆரம்பிச்சேன். பிரமிச்சுப் போயிட்டேன். 30 பக்கத்துக்கு மேல என்னால போகவே முடியலை. இப்போ நினைச்சுப் பாக்குறேன், நான் எம்.ஜி.ஆருக்காகப் பண்ண பொன்னியின் செல்வன் திரைக்கதையெல்லாம் எங்க போச்சுனே தெரியலை."

''தற்போதைய தமிழ் சினிமாவின் சில அபத்தங்களை எப்படி மாற்றலாம்?''


''படம் பார்த்துட்டு வந்த பிறகும் மனசுக்குள்ள ரம்மியமான காட்சிகள் நினைவுக்கு வரணும். 'தி ஆர்டிஸ்ட்’ ஹாலிவுட் படம் வசனமே இல்லாமல் அழகா கறுப்பு - வெள்ளையில் எடுத்திருக்காங்க. நாமதான் 'பிளாக் அண்ட் வொயிட்’டை ஃப்ளாஷ் பேக் உத்தியா மட்டுமே பயன்படுத்துறோம். 1958-லேயே எம்.ஜி.ஆர்-கிட்ட 'ஏன் படத்துல டூயட் வருது’ன்னு கேட்டேன். அது இப்போ 2012 வரை தொடருது. குத்துப் பாட்டு, டூயட் இல்லாத மாற்று சினிமா வேணும். அதுதான் நல்ல சினிமாவும்கூட!''

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்