வெள்ளி, 26 மே, 2023

சோழர் கால பல்லவராயர்


வியாழ கஜமல்ல பல்லவராயன்


ஆதித்த கரிகாலனை கொலைசெய்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் உடையார் குடி கல்வெட்டு. இராசகேசரியின் இரண்டாம் ஆட்சியாண்டு. (இராஜராஜன்)

மேஷ ஞாயிறு ( சித்திரை மாதம்) பூரட்டாதி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை என்பது வானியல் குறிப்புகளைக் கொண்டு - கி.பி 986 ஏப்ரல் 23 என்கிறார்கள். 

இது ஒரு நில விற்பனை சாசனம். ஊராட்சி சபையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நிலத்தை ஒருவர் வாங்கி, ஒரு நிவந்தம் தருகிறார்.

திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த அரவணையான் பல்லவரையன் மகன் பரதன் என்னும் வியாழ கஜமல்ல பல்லவராயன் என்பவர், வீரநாரயண சதுர்வேதி மங்கலத்து சபையோரிடமிருந்து இரண்டே முக்கால் ஒரு மா நிலத்தையும், அகமனை ஆறும், இவற்றை 112 கழஞ்சு பொன் குடுத்து வாங்குகிறார். இதில் வரும் வரும்படியைக் கொண்டு,
திருவணந்தீஷ்வரர் கோவிலில் தண்ணீர் பந்தல் அமைக்கவும், பதினாறு பிராமணர்கள், இவர்களில் ஐந்து சிவயோகிகளுக்கு உணவளிக்கவும் நிவந்தம் தருகிறார்.

நிலத்தைப் பற்றிய விபரம்

பாண்டியன் தலைகொண்ட கரிகாலனை கொன்ற துரோகிகளான, சோமன், தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜன், இவன் தம்பி பபரமேஷ்வரன் ஆன இருமுடி சோழ பிரம்மாதிராஜனும் மற்றும் இவர்கள் அனைவரின் உறவினர்களுக்கு சொந்தமான நிலம்.

இந்த நிலத்தைதான் வீரநாரயண சதுர்வேதி மங்கலம் வியாழ கஜமல்ல பல்லவராயன் என்பவருக்கு விற்பனை செய்கிறது.

இவ்விற்பனையை பதிவு செய்து மேற்பார்வை செய்த அரசு அதிகாரிகள். கொட்டையூர் பிரம்மஸ்ரீராஜன் மற்றும் புள்ளமங்கலத்து சந்திரசேகரபட்டன்.

இந்நிகழ்வு நடை பெற்ற நாள் இவ்வாண்டு மேஷஞாயிறு ( சித்திரை மாதம்)ஞாயிற்றுக்கிழமை.

மேற்கண்ட நிகழ்வு அரசரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலும் பெறப்பட்டது. மேற்கண்ட சாசனத்தை பாதுகாப்போர் பாதம் என் தலைமேலே என்று கல்வெட்டில் குறிக்கிறார்.



பல்லவரையன்



கங்கைக் கொண்ட சோழபுரத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளிலேயே மிக முக்கியமானதும் அதிக வரிகள் கொண்டதுமான கல்வெட்டு இராஜேந்திர சோழரின் மகன்களில் ஒருவரான வீர ராஜேந்திர சோழரின் கல்வெட்டாகும். அதில் கோவில் பூஜை மற்றும் இதர தேவைகளுக்கு கங்கைக் கொண்ட சோழீஸ்வரருக்கு இராஜேந்திரர் காலம் முதல் நிவந்தமாக அளிக்கப்பட்ட கிராமங்கள் ஒவ்வொரு வருடமும் தர வேண்டிய நெல் மற்றும் பொற்காசுகள் குறித்து விளக்கி ஆறு அரச கட்டளைகள் கல்வெட்டு சாசனமாக பதியப்பட்டுள்ளது.

அதில் 'பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளின ஐயன்' என்று தன் தந்தை இராஜேந்திரரையும், 'கல்யாணபுரமும், கொல்லாபுரமும் கொண்டு ஆனை மேல் துஞ்சின அண்ணல்' என்றுத் தன் அண்ணன் இராஜாதி ராஜரையும் குறிப்பிட்டுள்ளார்.

அரசர் வாய் மொழியாக சொன்னவற்றைக் குறித்துக் கொண்டு எழுதியவர் பல்லவரையன் எனும் திருமந்திர ஓலை எழுதும் அதிகாரி ஆவார். அவர் எழுதியவற்றை சரிபார்க்கும் திருமந்திர ஓலை நாயகமாக மூன்று அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் வாணாதிராஜன், மதுராந்தக பிரம்மாதிராஜன் மற்றும் பல்லவராயன் ஆவர்



பெருமான் நம்பி பல்லவராயன் மற்றும் அண்ணன் பல்லவராயன் 

சோழ நாட்டில் காரிகை குளத்துரை ஆண்ட பல்லவராயன். அவன் பல்லவராயன்பேட்டையில் இராசராசேசுவரம் உடையார் கோவில் ஒன்றைக் கட்டினான். அவனே இராசராசன் இறுதிக் காலத்திலும் இராசராசன் இறந்த பிறகும் சோணாட்டை நிலைகுலையாமற் காத்த பெருவீரன். 

பல்லவராயன்பேட்டை

இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன். இவனது இயற்பெயர் எதிரிலிப்பெருமான் என்பது. இவனுக்கு இளையவன் ஒருவன் இருந்தான். இந்த இருவரும் கங்கை கொண்ட சோழ புரத்திலிருந்து ஆயிரத்தளி அரண்மனைக்குக் கொண்டுவரப் பெற்றனர். அங்கு இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து வந்தனர். இராச ராசன் இறக்கும் அன்று எதிரிலிப் பெருமாளுக்கு முடிசூட்டி இறந்தான். அப்பொழுது இவன் வயது இரண்டு. அதனால் அரசன் இறந்தவுடன் சோணாட்டில் கலவரம் மிகுந்தது. உடனே பல்லவராயன் இப்பிள்ளைகளையும் இராச மாதேவி யாரையும் இராசராசபுரத்திற்குக் கொண்டு சென்று தக்கார் பாதுகாவலில் விட்டுச் சோழப் பெருநாட்டு அரசியலை இரண்டு வருடகாலம் தானே கவனித்து வந்தான்.

எதிரிலிப் பெருமாள் நான்கு வயதினன் ஆனதும், அவனுக்கு இராசாதிராசன் என்ற பெயருடன் முடி சூட்டிச் சிறப்புச் செய்தான்; இக்குறிப்புகள் அனைத்தும் பல்லவராயன் பேட்டைச் சாசனத்தில் நன்கறியக் கிடக்கின்றன.

இராசாதிராசனுக்குப் பேருதவியாக இருந்தவன் திருச்சிற்றம்பலம் உடையானான பெருமான் நம்பிப் பல்லவராயன். பல்லவராயன் திரண்ட படைகளுடன் பாண்டியன் நாட்டை அடைந்தான். அவனுக்கு உதவியாகச் சென்ற மற்றொரு தலைவன் நரசிங்க வர்ம ராயன் என்பவன். பாண்டியன் படை, கொங்குப் படை, சோழர் படை யாவும் ஒன்று கூடின, அதுகாறும் பாண்டிய நாட்டுக் கோவில்களை இடித்துக் கொள்ளை-கொலைகளால் குடிகளைத் துன்புறுத்திவந்த ஈழப்படைகளைத் தாக்கின. அதனால் திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும் இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது. குலசேகரன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கினான்.

இராசராசன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பனும் முதல் அமைச்சனும் சிறந்த வீரனும் ஆகிய பல்லவராயன் மேற்சொன்ன போருக்குப் பின் நோய்வாய்ப்பட்டுக் காலமானான். உடனே அந்தப் பதவிக்கு வேதவனம் உடையான் அம்மையப்பன் ஆன அண்ணன் பல்லவராயன் என்பவன் வந்தான். இவன் ஆற்றலும் போர்ப் பயிற்சியும் மிக்கவன். இவன் அரசனது நன்மதிப்புப் பெற்றவன். 

இராசாதிராசன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணை விடுத்தான்.அஃதாவது, குலசேகரனை விரட்டிப்பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனை அரசனாக்க வேண்டும் என்பது. உடனே அண்ணன் பல்லவராயன் பெரும் படை அனுப்பிக் குலசேகரனை ஒழித்து, வீரபாண்டியனை அரியணை ஏற்றினான். இச்செயற்காக இப் பெரு வீரன் பழையனூரில் பத்து வேலி நிலம் இறையிலியாகப் பெற்றான்.

இங்ஙனம் இராசாதிராசன் ஆட்சியில் சோழர்க்கும் ஈழ அரசர்க்கும் இரண்டு முறை போர் நடத்தது. இருமுறையும் பாண்டிநாடு சம்பந்தமாகவே நடந்தது. முதற்போரில் வெற்றி பெற்ற சோழர் படைத்தலைவன் பல்லவராயன், இரண்டாம் போரில் வெற்றிபெற்ற பெருவீரன் அண்ணன் பல்லவராயன், இந்த இருபோர்களிலும் ஈழத்தரசன் காலாட்படையையும் கப்பற்படையையும் இழந்தான்.

'காரிகைக் குளத்துர் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிபல்லவராயன் ஆவன். இவன் இராசராசன் உள்ளங் கவர்ந்தவன்; அவனது பேரன்பிற்குப் பாத்திரன் ஆனவன்; அங்ஙனமே இராசாதிராசன் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவனாக இருந்தான். இவனுக்கு அடுத்து அப்பதவியில் இருந்து அருந்தொண்டாற்றிய சிற்றரசன் ‘வேதவனம் உடையான் அம்மையப்பன் என்ற அண்ணன் பல்லவராயன்’ என்பவன். ஈழ வெற்றிகட்கு இவ்விருவரே பொறுப்பாளிகள்.இவர்கள் இன்றேல் சோழப் பேரரசு பல துண்டுகளாகப் பிரிந்து ஒழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அண்ணன் பல்லவராயன் திருவாரூர், திருவாலங்காடு முதலிய இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் நிபந்தங்கள் விடுத்துள்ளான்.இவனது சொந்த ஊர் பழையனூர் .

விக்கிரமசோழன் காலத்தில் திருவாரூர் கோவிலை சுற்றி உள்ள மனைகளை கோவில் பணியில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் பிரித்து அளித்துள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மற்றவர்களின் மனையை ஆக்கிரமித்து கைக்கொண்டு நெடுங்காலம் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் இராஜாதிராஜர் காலத்தில் அவரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான பல்லவராயன் என்பவரால் இந்த திருட்டுத்தனம் கண்டுபிடிக்கப்பட்டு அரசரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரின் திருமுகத்தின்படி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் அழிக்கப்பட்டதுடன் தகுந்த அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கியமான செய்தியை திருவாரூர் கோவில் கல்வெட்டு ஒன்றுத் தெளிவாக விளக்குகிறது.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்