வெள்ளி, 26 மே, 2023

துரை. விஜயரகுநாத பல்லவராயர்



விஜயரெகுநாத பல்லவராயர் பிலாவிடுதி துரைச்சாமிக்கும் பல்லவராயர், ஜானகி அம்மையாருக்கும் மகனாக 1931 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள் கறம்பக்குடி வட்டம் பிலாவிடுதி என்ற ஊரில் பிறந்தார்.

தன் தொடக்கக்கல்வியை பிலாவிடுதியிலும், நடுநிலை கல்வியை கறம்பக்குடியிலும், உயர்நிலைப் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி படிப்பை புதுக்கோட்டையிலும் பயின்றார்.

1953-54 ஆண்டில் தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம் ஒன்றுதான் இருந்தது. சென்னை பல்கலைக்கழக அணியில் கால்பந்தாட்ட வீரராக விளையாடினார்.

அண்ணாவின் நட்பு கிடைத்தது. தம்பி நீ நன்றாக படித்து பட்டம் பெற்று அரசாங்கப் பணிக்குச் செல்லுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் அரசியலுக்கு வராதீர்கள் என்று பாராட்டிச் சென்றார்.

கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆட்சி காலத்தில் மதுரையில் ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர்களுக்கு இடையே வாரிசுரிமை போர் ஏற்பட்டது.  மதுரையில் அச்சமயம் ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்பவனை அவனுடைய தாயாதியான குலசேகர பாண்டியன் தாக்கி மதுரையைக் கைப்பற்றிக் கொண்டு பராக்கிரம பாண்டியனையும் கொன்றுவிட்டான். அங்கிருந்த தப்பி ஓடிய பராக்கிரம பாண்டியனின் மகனான வீர பாண்டியன் இலங்கை மன்னனான பராக்கிரம பாகுவிடன் உதவி கோரினான். இதை ஏற்று இலங்காபுரித் தண்டநாயகனின் தலைமையில் ஒரு படையை பாண்டி நாட்டிற்கு இலங்கை மன்னன் அனுப்பினான். இந்தப் படை பாண்டி நாட்டில் புகுந்து பல அழிவுகளை ஏற்படுத்தி  மதுரையைத் தாக்கி குலசேகரனை அங்கிருந்து விரட்டியது. பிறகு குலசேகர பாண்டியன் சோழ மன்னனிடம் உதவி கோரினான். பாண்டிய நாட்டில் இலங்கைப் படைகள் ஏற்படுத்திய அழிவுகளைக் கேள்விப்பட்டிருந்த ராஜா திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு படையை பாண்டிய நாட்டிற்கு அனுப்பினான். 

பராக்கிரம பாண்டியனின் மகனான வீரப்பாண்டியனுக்கு உதவ ஜகத் விஜயத் தண்டநாயகன் தலைமையில் சிங்கள துணைப்படை பாண்டிய நாடு வந்தது. இவ்விரு படைத்தலைவர்களுக்கும் பல்லவராயன் தலைமையில் இருந்த சோழப்படைகளுக்கும் இடையே தொண்டி, பாசிப்பட்டணம் ஆகிய இடங்களில் கடும் போர்கள் நடைபெற்றன. இறுதியில் சோழப்படைகள் பெரு வெற்றி பெற்றன. பல்லவராயன் இலங்கைத் தண்டநாயகர்கள் இருவரையும் கொன்று அவர்களின் தலையை மதுரைக் கோட்டை வாசலில் நட்டுவைத்தான். அரசையும் குலசேகர பாண்டியனுக்கு அளித்தான். இவ்வெற்றியை குறிக்கும் விதமாக புதுக்கோட்டையை ஆட்சி செய்த பல்லவராய மரபினர் தங்களை " பாண்டியன் முடிகாத்தான்"  என கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.( க.வெ IPS 752)

இத்தகைய பெருமை மிகுந்த பெருமா நம்பி பல்லவராயரின் குடும்பத்தை சேர்ந்த வெங்கடாசல பல்லவராயர் என்பவர் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில்  தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவருடன் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வந்து புதுக்கோட்டையில் குடியேறினார்.  புதுக்கோட்டையின் தெற்கு பகுதியில் குடியேறிய இவர்கள் பிறகு வடக்கு நோக்கி நகர்ந்து பெருங்களூர், அம்புக்கோயில் முதலிய இடங்களில் குடிபெயர்ந்தனர்.

கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் புதுக்கோட்டையை ஆட்சி செய்யத் தொடங்கிய பல்லவராயர்கள் கிபி 1686 வரை ஆண்டு வந்தனர்.   கிபி 1686 முதல் புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சி மலர்ந்தது.  தொண்டைமான் மன்னர்களின் ஆட்சி காலத்தில்  அம்புநாட்டை சேர்ந்த பிலாவிடுதி பல்லவராயர் மரபில் உதித்த மார்த்தாண்ட பைரவ பல்லவராயரை மன்னர் ராமசந்திர தொண்டைமான் தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார்.  கிபி 1886ல் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் எனும் பெயருடன் இப்பல்லவராயர் புதுக்கோட்டை மன்னராக பதவியேற்று கிபி 1922 வரை நாட்டையும் மக்களையும் காத்தருளினார். 

இத்தகைய வரலாற்று பெருமைகளைக் கொண்ட  பல்லவராயர் மரபில் உதித்தவர் ஐயா. துரை விஜய ரகுநாத பல்லவராயர்.  பெரும் புகழுக்கு சொந்தக் காரரான பல்லவராயர் அவர்களின் சாதனைத் துளிகளில் சிலவற்றை காண்போம்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி ஏ பட்டப்படிப்பு படிக்கும்போது பல்லவராயர் அவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைத்துள்ளார்.   மன்னர் கல்லூரிகல்லூரி வரலாற்றில் தொடர்ந்து 3 ஆண்டுகள் விளையாட்டில் சேம்பியன் பட்டம் பெற்றவர் ஐயா பல்லவராயர் அவர்கள் மட்டுமே.

1953-1954 காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக கால்பந்து அணியில் தென் தமிழகத்தில் இருந்து இடம்பிடித்த இருவரில் பல்லவராயரும் ஒருவராவார். 

1954 ஆம் ஆண்டு கறம்பக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அண்ணாவும் அன்பில் தர்மலிங்கமும் கூட்டம் முடிந்ததும் இரவு உணவை அய்யா பல்லவராயர் அவர்களின் பிலாவிடுதி இல்லத்தில் உண்டு மகிழ்ந்தனர்.

1962ல் திருமண நிகழ்வில் பங்கேற்க கறம்பக்குடி வந்த கலைஞர் கருணாநிதி மதிய உணவை பல்லவராயர் அவர்களின் இல்லத்தில் உட்கொண்டு சிறப்பித்தார்.

கறம்பக்குடியில் தென்னக இளைஞர் காலபந்து கழகம் எனும் கால்பந்து கழகத்தை நிறுவினார். கால்பந்து கழகத்தின் மூலம் தமிழர் விழாவான பொங்கல் விழாவை  இலக்கிய விழாவாகவும் விளையாட்டு விழாவாகவும் சிறப்பாக கொண்டாடி ஒற்றுமையை ஊக்குவித்தார்.


கறம்பக்குடி ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்த போது பல்லவராயரின் பெரு முயற்சியால் வெட்டன்விடுதியில்  உயர் நிலைப் பள்ளி உருவாக்கப்பட்டு பேரரறிஞர் அண்ணாவால் திறக்கப்பட்டது. 

மகளிர் முன்னேற்றம் கருதி கறம்பக்குடியில் மகளிர்க்கென்றே உயர்நிலைப் பள்ளியை தனது பதவிக் காலத்தில் தொடங்கினார்.

தமிழக ராஜீவ் காங்கரஸ் தொடங்கப்பட்டபோது,  பல்லவராயர் அவர்கள் இக்கட்சியின் மாநில துணைத் தலைவராகவும்,  மாவட்டத் தலைவராகவும் சிறப்பித்தார்.

மனித நேய மாண்பாளர், நீதி அரசர்,  அய்யா என கறம்பக்குடி மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பல்லவராயர் அவர்களுக்கு இப்பகுதி மக்களே தங்களது முயற்சியால் பல்லவராயர் மணி மண்டம், சிலை, நூலகம் மற்றும் அறக்கட்டளை அமைத்து சிறப்பித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 11 பிப்ரவரி இரண்டாயிரமாம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.  கருணாநிதி அவர்களால் பல்லவராயருக்கு சிலை திறக்கப்பட்டது.

முள்ளங்குறிச்சி மாரியம்மன் கோயில் குடமுழுக்கினை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சி தலைவரைக் கொண்டு நடத்தி கலைஞர் கருணாநிதியால் பாராட்டப்பெற்றவர்.

பல்லவராயரைப் பற்றி கூறிய கலைஞர் கருணாநிதி " புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தின் உறவினரான விஜய ரகுநாத பல்லவராயர் மனித நேய சிந்தனையும்,  சமத்துவ எண்ணமும் கொண்ட புரட்சியாளர் என குறிப்பிட்டுள்ளார்.

பல்லவராயர் அய்யா அவர்களைப் பற்றி குறிப்பிடும் முன்னாள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வாழப்பாடியார் " தனது வட்டாரத்தில் ஏராளமான கல்விக்கூடங்களை திறந்து கல்விப் புரட்சி செய்தவர் " என்று பாராட்டுகிறார்

கறம்பக்குடி விவசாயிகளின் நன்மைக் கருதி " ஆறு அணைக்கட்டு திட்டத்தை"  தனது பெருமுயற்சியால் நிறைவேற்றினார்.

அய்யா பல்லவராயர் காமராஜரிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர்  காமராஜர் மறைந்தபோது இரண்டு நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். 

பல்லவராயர் அய்யா பற்றி குறிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள்  மக்களுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் பல்லவராயர் என பாராட்டினார்.

திருவாடுதுறை ஆதீனம் சுப்ரமணிய தம்பிரான் அவர்கள் "  தன்னலம் கருதாத பெருந்தகை"  என பல்லவராயர் அவர்களை போற்றுகிறார்.

புதுக்கோட்டை மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் "  அரசியல் வியாபாரிகளிடம் விலை போகாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர் அய்யா பல்லவராயர்" என குறிப்பிடுகிறார்.

பூண்டி ஸ்ரீமான் மறைந்த துளசி ஐயா வாண்டையார் தன்னுடைய குறிப்பில் "உழைப்பு ஆக்கம் உண்மை தெளிவு நாகரீகம் நாணயம்" இதுவே பல்லவராயரின் அகராதி என போற்றுகிறார். 

திருச்சி மாவட்டத்தில் சிறந்த யூனியனுக்கான விருதை கறம்பக்குடியின் சேர்மனாக அய்யா பல்லவராயர் அவர்கள் இரண்டு முறை பெற்றுள்ளார்.

கறம்பக்குடி அல்பத்திரிய்யா அரபிக் கல்லூரி அய்யா பல்லவராயர் அவர்களின் சேவைகளைப் பாராட்டி மனித நேய மாண்பாளர் எனும் விருதினை அளித்து சிறப்பித்தனர்.

கறம்பக்குடியின் பெருந்தலைவராக பதினோரு ஆண்டுகள் பணிபுரித்த அய்யா பல்லவராயர் அவர்கள் கறம்பக்குடியை தாலுகாவாக உயர்த்தும் அலுவல் காரணமாக சென்னை சென்ற போது விபத்தில் சிக்கி இப்பூவுலக வாழ்வை நீத்தார்.

இரு முறை பிலாவிடுதி  ஊராட்சி மன்ற தலைவராகவும் இருமுறை கறம்பக்குடி பெருந்தலைவராகவும் பதவி வகித்த அய்யா பல்லவராயர் அவர்கள் மக்களின் அன்பை பெற்று பெருமதிப்பிற்கு உரியவராக திகழ்ந்தார். மக்கள் இவரிடம் கொண்ட அன்பிற்கு சாட்சியாக மணி மண்டபம் அமைத்து அய்யாவிற்கு புகழ் சேர்த்துள்ளனர். 

அய்யா துரை. விஜய ரகுநாத பல்லவராயரின் 91 வது பிறந்த நாளில் பல்லவர் வம்சத்தின் ஒளி விளக்கை போற்றி வணங்குகின்றோம்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் விளையாட்டின் ஆர்வத்தால் கறம்பக்குடியில் இளைஞர் கால்பந்து கழகம் ஒன்றை நிறுவினார். கறம்பக்குடியில் தமிழர் திருநாளை அனைத்து தரப்பு மக்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவாக கொண்டாடினார்.1965ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற்றார்.

1966ஆண்டு தன் ஒன்றியத்தில் மழையூர், ரெகுநாதபுரம் மற்றும் வெட்டன்விடுதி ஆகிய ஊர்களில் உயர்நிலை பள்ளிகள் துவங்க காரணமாக இருந்தார். தன் ஒன்றியத்தை மாவட்டத்தின் சிறந்த ஒன்றியமாக மாற்றினார்.

கறம்பக்குடி அரபிக் கல்லூரி வெள்ளி விழாவில் மனிதநேய மாண்பாளர் என்ற பட்டம் பேரறிஞர்களால் வழங்கப்பட்டது. பின்பு அனைவராலும் சமூக நீதி காவலர்,கல்விக்காவலர் என அன்போடு அழைக்கப்பட்டார்.

முள்ளங்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா பல ஆண்டுகள் தடைப்பட்டது. இவரின் முயற்சியால் கோவில் குடமுழுக்கு திருப்பணி நடந்தது.

11.02.1999 அன்று இயற்கை எய்தினார்.

அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகில் அவரது முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஒவ்வோரு நினைவு ஆண்டிலும் ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களும் சிறப்பாக பணியாற்றும் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்லவராயர் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பல்லவராயர்கள் வழிவந்த விஜய ரகுநாத பல்லவராயர் கறம்பக்குடி சேர்மனாக போட்டியின்றி தேர்நதெடுக்கப்பட்டு , தன்னலமின்றி பல சேவை செய்துள்ளார். அவரது பொது நலத்தொண்டால் பலனடைந்த குடும்பங்கள் தங்களது சொந்த செலவிலேயே பல்லவராயருக்கு சிலை வைத்து வருடா வருடம் அவரது பிறந்தநாளில் விழா எடுத்து வருகின்றனர்.

காமராஜருக்கு வலது புறம் கறம்பக்குடி முன்னாள் சேர்மன் விஜய ரகுநாத பல்லவராயர்,  இடப்புறம் புதுக்கோட்டை முன்னாள் MLA (இருமுறை) ,   இளைய மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் (மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி)



 















































வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்