செவ்வாய், 30 மே, 2023

சிவந்தெழுந்த பல்லவராயர்


தொண்டை மண்டலத்தில் இருந்து தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவருடன் புதுக்கோட்டையில் குடியேறிய பல்லவராயர்களில், சிவந்தெழுந்த பல்லவராயர் கிபி 17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் குளத்தூர், திருமயம் பகுதிகளை ஆண்டுவந்தார். இந்த பகுதிகள்  பல்லவராயன் சீமை அல்லது கள்ளர் சீமை என்று அழைக்கப்பட்டது. இவரது முன்னோர்கள் பாண்டியர் முடிக்காத்தவர் என தங்களை குறித்துள்ளனர்.

சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டை பல்லவராய மன்னர்களில் சிறந்தவராக கருதப்படுகிறார். பல்லவராயர் உலா இவரது புகழை எடுத்துரைக்கிறது.

சிற்றம்பலக் கவிராயர் என்பவர் சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவர் மேல் சிவந்தெழுந்த பல்லவராயர் உலா எனும் நூலை பாடியுள்ளார். இவரது காலம் கிபி 1650 ஆகும். இந்த காலகட்டத்தில் சிவந்தெழுந்த பல்லவராயர் ஆட்சி செய்த பகுதிகளாக, 

ஆலங்குடிநாடு, 
அமராபதிநாடு (பொன்னமராவதி), 
கடுவன்குடிநாடு (விராலிமலை), 
செங்காட்டு நாடு, 
பேரையூர் நாடு, 
வல்லநாடு, 
மெய்மலை(திருமயம்), 
சந்திரலேகா நாடு, 
கொடுங்குன்ற நாடு (பிரான்மலை), 
திருக்கோளக்குடிநாடு 
மற்றும் கோனாடு. 

கூடலர்கோன் என்று அழைக்கப்படுகின்றார், அதாவது மதுரைக்கு வேந்தர் என்றும் அழைக்கப்படுகிறார். 

பாண்டிய மன்னர்களுக்கு போரில் உதவிய காரணத்தால் பெறப்பட்ட வழுதி மானங்காத்தான் எனும் பட்டதையும், 18 வன்னியர்களை போரில் வென்றவர்கள் என்றும் (வன்னியர் இன்றைய சாதியில்லை, அது பட்டம். அந்த வன்னியர் பட்டமுடைய கள்ளர் மரபினர் என்றும் வாழ்கின்றனர்). வாரைப்பதி, அழும்பில், சூரக்குடி ஆகியவற்றை போர்களில் வெற்றி கண்டவர்கள்.

சிவந்தெழுந்த பல்லவராயர் உலாவில் தங்களது முன்னோர்களாக பெருமாள் நம்பி பல்லவராயர்,  கருணாகர தொண்டைமான் முதலியோரை சிவந்தெழுந்த பல்லவராயர் குறிப்பிட்டுள்ளார். பெரிய பெருமாள் பல்லவராயர் என்பவரின் மகனே சிவந்தெழுந்த பல்லவராயர். இவர் பல்லவர் வழி வந்தவர், சிறந்த சிவபக்தர், சோழனின் மருமகன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். பாண்டிய மன்னருக்கு உதவியதால் புதுக்கோட்டை பகுதியில் கேரள சிங்கவளநாட்டில் பல்லவராயர் குடி அமர்ந்ததை குறிப்பிடுகிறது.

சிவந்தெழுந்த பல்லவராயர் திருக்கோகர்ணம் சிவபெருமானுக்கு பொற்கிரீடம் அளித்துள்ளார். திருக்கோகர்ணத்தில் பாரசங்கிலி மண்டபத்தை கட்டியுள்ளார். குடுமியான்மலை கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் தான் பல்லவராயர்கள் முடிசூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்பின் தொண்டைமான் மன்னர்களும் இதே சன்னதியில் முடிசூட்டுவதை 18 ஆம் நூற்றாண்டுவரை பின்பற்றினர்.குடுமியான்மலை குடுமிநாதர் மேல் கொண்ட பக்தியினால், அக்கோயிலின் கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், பூங்கா, தேர் ஆகியவற்றை உருவாக்கினார்.    (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா/manual of pudukkottai state vol 2 part 1 )

சிவந்தெழுந்த பல்லவராயர் இன்றைய புதுக்கோட்டை மாகாணத்தின் சோனாடு, கோனாடு, கபிலை நாடு, பெருவாசல் நாடு, பைங்காட்டு நாடு, குளமங்கல நாடு போண்ற பகுதிகளை புலிக்கொடி தாங்கி ஆட்சி செய்த மன்னர். தீவிர சிவபக்தர், இவரின் சிவ பக்தியை மெச்சி இவர் மீது ஒரு உலாவே பாடப்பட்டுள்ளது. கள்ளர் நாடான கண்டதேவி சொர்ணமூர்த்தீர்ஸ்வரர் கோவிலில் தனது பொற்கையாலே சிவபெருமானை  பூஜிக்கும் சிவதொண்டர்.

கோனாட்டு வெள்ளாழ தலைவர்களுக்கும் கானாட்டு வெள்ளாழ தலைவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில், கோனாட்டு வெள்ளாழ தலைவர் வேண்டுகோளுக்கு இணங்க 8000 கள்ளர் போர்வீரர்களை அனுப்பி கோனாட்டு தலைவர்கள் வெற்றி பெற உதவினார். (தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள், General history of pudukkottai state page 68-69) R aiyar.)

கள்ளர் சீமையின் மன்னராக இருந்த பல்லவராயர், விஜயநகர மன்னர்களின் மேலான்மையில் கீழ் இருந்தார்.  புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்றை எழுதிய ராதாகிருஷ்ணன் ஐயர், வெள்ளாற்றுக்கு வடக்கே ஆட்சி செய்த பல்லவராயர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தனியாட்சி செலுத்தியதாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கே திருமயத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே சேதுபதியின் ஆதிக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளைப்பற்றிய கல்வெட்டு / ஒலைச்சுவடி/ செப்பேடுகளில் சேதுபதிகளை பற்றிய எந்த குறிப்புமே இல்லை என அவர் தெரிவிக்கிறார். (General history of pudukkottai state R.aiyar 1916 page 134)

திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் பட்டுக்கோட்டைச் சீமைகளைக் கடந்து திருவாரூர்ச் சீமை, கள்ளர் சீமை ஆகியவைகளையும் சேதுநாட்டில் இணைத்துச் சேதுநாட்டின் பரப்பை விரிவுபடுத்தினார் என்று எஸ். எம். கமால் தனது நூலில் குறிப்பிட்டாலும் வெள்ளாற்றுக்கு தெற்கே திருமயத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே சேதுபதி மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. 

திருமலை ரெகுநாத சேதுபதி பிறகு 1678ல் ரகுநாத கிழவன் சேதுபதி முடிசூட்டப் பெற்றார். பல்லவராயர், சேதுபதி மரபினை விட மிகவும் பழமையான மரபினர். சேதுபதியின் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாமல் தனியாட்சியாக இருக்க விரும்பி, தஞ்சை மராட்டிய மன்னர் எக்கோஜியின் உதவியை நாடினார் பல்லவராயர். எக்கோஜியின் காலத்தில், அவரது படையில் தலைவர்களாக "சாவடி நாயக்கர்" போன்ற கள்ளர் மரபினரும் இருந்தனர்.
விசயநகரப் பேரரசின் மன்னரான மூன்றாம் ஸ்ரீரங்கரிடம் படைத் தளபதியாக இருந்த ஆவடையரகுநாத தொண்டைமானின் வீரத்தையும் அவரது இரணுவப் பணிகளையும் பாராட்டி ஸ்ரீரங்கர் அவருக்கு 1639 ஆம் ஆண்டு ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய என்ற பட்டத்தையும் ஏராளமான நிலங்களையும், பரிசுகளையும் அளித்தார். கிபி 1639ல் பல்லவராயர்கள் புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த போது, ஸ்ரீரங்க ராயரின் உதவியோடு தொண்டைமான், புதுக்கோட்டை சில பகுதிகளை பல்லவராயர்களிடம் இருந்து கைப்பற்றியதாக கிபி 1819 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை அரண்மனை குறிப்பு உணர்த்துகிறது. (General history of pudukkottai state R.aiyar 1916 page 120). ஆவடையரகுநாத தொண்டைமானின் மகனாக 1641இல் இரகுநாதராய தொண்டைமான் பிறந்தார். இவரும் தனது வீரத்தால் தஞ்சை மற்றும் மதுரை நாயக்கர்களுக்காக பல போர்களில் கலந்துகொண்டார். அதனால் இவருக்கு  ராமா பாணம், பன்னிரண்டு கள்ளர் குடிகளுக்கு தலமையாகவும், திருச்சியின் காவலராகவும் நாயகர்கள் நியமித்தனர். கள்ளர் சீமையின் அரையர் நிலைக்கு உயர்ந்த தொண்டைமான்கள், இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.

சிவந்தெழுந்த பல்லவராயர் கள்ளர் நாடான கண்டதேவி நாட்டில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் சிவபூஜையில் இருந்தபொழுது கிழவன் சேதுபதியின் மன்னர்களின் எல்லையான காளையார் கோவிலில் சேதுபதி மன்னரை சந்திக்க அழைத்தனர். ஆனால் பூஜை முடியாமல் வர இயலாதென பல்லவராயர் கூறிவிட்டார். இதனால் சேதுபதி தனது மகனை அனுப்பி சிவந்தெழுந்த பல்லவராயரை கொன்றார். சிவந்தெழுந்த பல்லவராயரின் வீரர்களான சின்ன பங்காரு மற்றும் பெரிய பங்காரு சேதுபதியின் மகனை ஈட்டியால் குத்தி கொன்றனர்.

சிவந்தெழுந்த பல்லவராயர் அவரின் மரணத்தை தொடர்ந்து அவர்தம் மனைவி தீப்பாய்ந்து இறந்துவிடுகிறார். கிபி 1681 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு (968) , சிவந்தெழுந்த பல்லவராயர் ராச்சியம் பண்ணியருளுகையில் குடுமியான்மலை கோயிலுக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடுகிறது. இதுவே சிவந்தெழுந்த பல்லவராயர் பற்றி கிடைத்த கடைசி கல்வெட்டாகும்.

பல்லவராயர் இறப்பிற்கு பிறகு அவரின் ஆட்சிப்பகுதியான கள்ளர் சீமைக்கு, சேதுபதியின் கள்ளர் மரபை சேர்ந்த  தளபதி இளந்தாரி அம்பலம் வரையறுத்து, அங்கு அதே பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த விஜயரகுநாத தொண்டைமானரை அமர வைக்கிறார். வெள்ளாற்றுக்கு தெற்கே திருமயத்தை ஒட்டியுள்ள பகுதிகளே, சேதுபதியால் தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டதாக இளந்தாரி அம்பலக்காரர் கும்மி எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. (General history of pudukkottai state R.aiyar 1916 page 127)

கள்ளர் மரபை சேர்ந்த பல்லவராயர் இறந்தபின் அவர் ஆட்சி செய்த பகுதிகளுக்கு, அதே கள்ளர் மரபை சேர்ந்த தொண்டைமானை பொறுப்பில் அமர்த்த எண்ணிய சேதுபதி, திருமயத்தில் இருந்த தர்மபிள்ளை என்பவருக்கு இளந்தாரி அம்பலம் என்பவர் மூலம் தகவல் அனுப்பினார். ஆனால் தர்மபிள்ளை தன்னால் 1000 பேர் வாழும் முனிசந்தை, செங்கீரை பகுதிகளை மட்டுமே தர இயலும் என்றார் . இதன்பிறகு சேதுபதி தனது மோதிரத்தை அத்தாட்சியாக, இளந்தாரி அம்பலம் மூலம் அளித்து வெள்ளாற்றுக்கு தெற்கே பல்லவராயர் ஆண்ட பகுதிகளை தொண்டைமானுக்கு அளிக்கவேண்டும் என கூறினார். அதன்படி திருமயத்தை சுற்றியிருந்த பல்லவராயரின் பகுதிகள் தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது.

சேதுபதி மன்னர் மற்றும் கள்ளர் மரபை சேர்ந்த சேதுபதியின் தளபதி இளந்தாரி அம்பலம் துணையோடு ஆட்சியில் அமர்ந்த தொண்டைமான்களும், பல்லவராயர் போல் தனியாட்சி அமைக்கவிரும்பி, சிறிது காலங்களிலேயே தன்னரசராக தம்மை அறிவித்துக் கொண்டார். கள்ளர் நாடுகள் எப்பொழுதும் தன்னரசாகவே இருந்தன. அதைபோல் பல்லவராயர்களும், தொண்டைமான்களும் இருந்தனர்.

பிற்காலங்களில் தொண்டைமானார் பல்லவராயரின் வகையறாக்களிடம் பெண் எடுத்துக்கொள்கிறார், இன்றும் பெருங்களூரில் பல்லவராயரின் வகையராக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தொண்டைமான்களிடம் ஆட்சிப்பகுதியை இழந்த பல்லவராயர்கள், பிற்காலத்தில் தொண்டைமான்களின் படையில் பணியாற்றி, தனிபடைபிரிவை நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்து, திருமண உறவின் மூலம் கலந்து, பிற்காலத்தில் மீண்டும் பல்லவராயர் குலத்தவர் (மார்த்தாண்ட பைரவர் )புதுக்கோட்டையை ஆளும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். பல்லவராயர்குல அரசர் புதுக்கோட்டை பல்லவன் குளத்தருகில் இன்றும் கம்பீர சிலையாக காட்சி அளிக்கிறார்.



























சிவந்தெழுந்த பல்லவராயர் பிறகு சிறப்புடன் இருந்த பல்லவராயர்கள் 

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்