செவ்வாய், 1 அக்டோபர், 2019

ஸ்ரீ கண்ணன் திருக்கோயில், இளங்காடு, தஞ்சாவூர்



​இளங்காட்டினை வாலைவனம், இராஜகிரி மற்றும் வல்லநாடு என்றும் அழைக்கப்படுகின்றது.

வாலைவனம்:

வாலை என்றால் இளமை வனம் என்றால் காடு எனவே வாலைவனம் இளங்காடு என்றானது. இதற்குச்சான்றாக இவ்வூரில் சிவன் கோயிலில் இறைவன் திருநாமம் வாலைவனேஸ்வரர் ஆகும்

இராஜகேசரிபுரம்:

இராஜகேசரி என்ற பட்டத்தினை சோழ மன்னன் இங்கு தான் பெற்றுக்கொண்டான்(சூடிக்கொண்டான்) ஆகையால் இவ்வூர் இராசகேசரிபுரம். இது காலத்தே மருவி இராஜகிரி என்றானது. இதற்குச்சான்றாக வருவாய்த்துறையில் இன்றும் இராஜகிரி என்றே அழைக்கப்படுகின்றது.

வல்லநாடு:

சோழமன்னர்கள் காலத்தில் இவ்வாலை வனத்தினை இங்குள்ள கள்ளர்களிடம் வீரத்திற்கு பரிசாய் கொடுத்துச்சென்றனர். இவ்வூருக்கு அருகில் தற்போது உள்ள கிராமங்களான முல்லைக்குடி, ஆற்காடு, நேமம் மற்றும் அரங்கநாதபுரம் போன்ற சிற்றூர்களுக்கு தலைநகரயாய் இவ்வூர் வல்லநாடு என்ற பெயருடன் வழங்கி வந்துள்ளது. இதற்குச்சான்றாக தமிழ்த்திரு.ந.மு.வேங்கடசாமி அவர்களின் கள்ளர் சரித்திரம் என்ற நூலில் உள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இவ்வூரில் வைணவமும் சைவமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தன. சைவத்தில் சமயக்குரவர் நால்வருக்கு மடம் இருந்தது அதேவேளையில் வைணவத்திற்கு இராமானுஜ கூடம் இருந்தது.இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இவ்வூரின் தென்திசையில் ஓடும் பிள்ளைவாய்கால் கரையில் நந்தவனம் அமைத்து, வைகாசி விசாகம் தோறும் குறைந்தது பத்து தினங்களாவது தொடர் உபன்யாசங்கள் நடத்தி தமிழையும் வைணவத்தையும் குறைவில்லாது வளர்த்து வந்தனர். மேலும் மார்கழி திங்கள் தோறும் திருப்பாவை சேவித்துக்கொண்டும் பஜனைகள் செய்துகொண்டும் திருவீதிகளில் ஸ்ரீவைணவர்கள் வலம் வந்தனர். திருவரங்கத்தில் இருந்து ஆச்சாரிய புருஷர்கள் எல்லாம் உபன்யாசம் நடத்தி சமாஸ்ரனையம் செய்து வைத்தார்கள், இவ்வாறு வைணவத்தில் வேரூன்றி இவ்வூர் விளங்கியது. ஸ்ரீபெரும்புதூர் எதிராஜ ஜீயர் மடத்திற்கு சொந்தமான 42 ஏக்கர் விளை நிலம் இங்கு இன்றும் உள்ளது.

இவ்வூரின் மக்கள் அதிகமாக திருவரங்கம் ஸ்ரீபராசரபட்டரின் சிஷ்யர்களாகவே இருந்து வருகின்றனர். மேலும்  திருவரங்கம் ஸ்ரீபெரியநம்பி திருமாளிகையாருடன் அபிமானமாகவும் இருந்து வருகின்றனர். மேலும் திருஅத்யன உற்சவத்தில் வைகுண்ட ஏகாதசியில் அன்று பெரியபெருமாளுக்கு ஒரு பொழுது அமுதுசெய்விக்க எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பராசர பட்டரின் சிஷ்யர்கள் தங்கள் கைங்கர்யமாக ஸ்ரீ பராசரபட்டர் திருமாளிகையார் மூலம் செய்து வருகின்றனர்,மறுநாள் காலை துவாதசியன்று ஸ்ரீ உடையவர் சன்னதில் நடைபெறும் திருப்பாவை கோஷ்டியின் போது காலை ஸ்ரீஉடையவருக்கு அமுதுபடி கைங்கர்யம் செய்து, கோஷ்டியின் முடிவில் மரியாதையும் பெற்று வருகின்றனர்.மேலும் திருஅத்யன சாற்றுமுறையின் போது நம்மாழ்வார் மோட்சம் அடைந்த திருப்பேர்நகரில் சாற்றுமுறை மண்டகபடி எங்கள் கிராமத்தாரை சார்ந்தது. சித்திரை மாதத்தில் திருவன்பில் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் மதியம் பெருமாளுக்கு ததியன்னம் எங்கள் கிராமத்தின் ஸ்ரீவைஷ்ணவர்கள் செய்து வந்தனர்.

1) திருவரங்கம்

வைகுந்த ஏகாதசி முதல் நாள் மாலை பெரியபெருமாள் அமுதுபடி சேர்த்தல்

ஸ்ரீமான்.வீ.எதிராஜகொல்லத்தரையர் வகையறா
(ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

வைகுந்தஏகாதசிக்கு மறுநாள் துவாதசி ஸ்ரீ உடையவர் சன்னதி காலை அமுதுபடி மற்றும் மரியாதை

ஸ்ரீமான்.எதிராஜ கொல்லத்தரையர் வகையறா
(ஸ்ரீபராசரபட்டர்சிஷ்யர்கள்)

திருஅத்யன உற்சவம்20 நாட்கள் ததியாராதனை
ஸ்ரீமான்.எதிராஜ கொல்லத்தரையர் வகையறா
(ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

2) திருப்பேர்நகர்

நம்மாழ்வார் மோட்சம் மண்டகபடி மற்றும் மரியாதை
ஸ்ரீமான்.எதிராஜ கொல்லத்தரையர் வகையறா
(ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

நித்யபடி திருமாலை
(புஷ்ப கைங்கர்யம்)
ஸ்ரீமான்.விஷ்னுசித்தன் சேதிராயர்

3) திருவன்பில்

சித்திரை மாதம் முழுவதும் மதியம்  தத்(தி)யன்னம்     ஸ்ரீசுந்தரராஜ பெருமாளுக்கு
ஸ்ரீமான்.ந.வேலு பாப்புரெட்டியார்
(ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

4) திருக்கண்ணபுரம்

ப்ரம்மோற்சவம் ததியாராதனை
ஸ்ரீமான்.எதிராஜ கொல்லத்தரையர் வகையறா
(ஸ்ரீ பராசரபட்டர்சிஷ்யர்கள்)

5) திருவில்லிபுத்தூர்

திருவாடிப்பூரம் ததியாராதனை
ஸ்ரீமான்.எதிராஜ  கொல்லத்தரையர் வகையறா
(ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

6) தஞ்சைமாமணிக்கோயில்
கருடசேவை ததியாராதனை
ஸ்ரீமான். வெங்கடாச்சலம் சேதிராயர்


இவர்கள் எல்லாம் வெளியில் உள்ள திவ்யதேசங்களுக்கு கைங்கர்யங்கள் செய்தாலும் ஸ்ரீமான்.விஷ்னுசித்தன் சேதிராயர் குடும்பத்தினர் இளங்காட்டிலேயே இராமானுஜ கூடம், நந்தவனம் அமைத்து அதிலே      ஸ்ரீ ஹயக்ரீவரை எழுந்தருளிச்செய்து திருவாய்மொழி கோஷ்டி என வைணவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்கள்.








சிலகாலம் கழித்து நந்தவனத்திலிருந்த ஸ்ரீஹயக்ரீவர் திருப்பேர்நகரில் அப்பகுடத்தான் சன்னதிக்கு பின்புறம் எழுந்தருளப்பட்டார் அங்கே ஒரு சிறிய நந்தவனமும் அமைக்கப்பட்டது. காலம் கழிந்தது திவ்யதேசங்களுக்கு செய்யும் கைங்கர்யம் மட்டும் நடைபெற்றது ஆனால் திவ்யபிரபந்த கோஷ்டியோ அல்லது வைணவர்கள் வணங்க ஒரு மடம் கூட இல்லாத நிலையில் ஸ்ரீவைணவர்கள் மேலும் இணைய வேண்டும் என்றும் பிரபந்தகோஷ்டிகள் மற்றும் அனைவரும் வழிபட ஒரு ஆலயம் அமைக்கவும் ஆச்சாரியர்கள் மீண்டும் எழுந்தருளவும் இங்குள்ளோர்கள் மீண்டும் வைணவத்தில் தங்களை ஆட்படுத்திக்கொண்டு ஸ்ரீவைணவர்களாகவும் இங்கோர் ஆலயம் அமைதல் வேண்டும் என்று பகவான் சங்கல்பத்தோடு மேற்கூறிய ஸ்ரீவைணவர்களின் வாரிகள் மூலம் 2007ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 5ஆம் நாள் திருவோண திருநட்சத்திரம் அன்று திருப்பேர்நகர் திருவப்பகுடத்தான் திருச்சன்னதி முன்பு இரவு எட்டு மணியளவில் இளங்காட்டை சார்ந்த எண்மரும் எம்பெருமான் திருமுன்பே அவன் திருவருளினை முன்னிட்டு “ஸ்ரீ கண்ணன் திருச்சபை” என்று ஒரு அமைப்பு துவங்கினோம். திருவப்பகுடத்தான் கெளரி(பல்லி) மூலம் தன் ஆசியினை அளித்தார் நாங்கள் அவன் திருவன்புடன் திருப்பணி கார்யங்களை துவங்கினோம்.

ஒரு சிறிய மடம் நிறுவதான் நாங்கள் எண்ணம் கொண்டு திருப்பணியினை துவங்கினோம் ஆனால் எங்கள் ஊரின் அருகில் உள்ள அரங்கநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ இரகுநாத பட்டாச்சார் அவர்கள் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து மடத்தினை ஆலயமாக அமைக்க வழிவகை கூறினார்.

மடம் துவங்க இருந்தது ஆலயமாக அமையப்போகின்றது என்ற அதீத மகிழ்வில் நாங்கள் திருக்கோயில் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்ய துவங்கினோம். திருமதி.கமலவேணி சீனிவாசன் அவர்கள் தங்களுடைய இடத்தினை தானமாக ஆலயம் அமைய வழங்கினார்

2008ஆம் ஆண்டு சித்திரை தமிழ் வருடபிறப்பு அன்று அருகில் உள்ள மாரனேரி என்ற கிராமத்தில் உள்ள திரு.ஆறுமுகம் என்ற ஆசாரியார் ஆலய அமைக்க மணை அளந்து கொடுத்தார், மூலஸ்தானம் அமையவிருக்கும் இடத்தில் ஒரே கருவைமரங்களாக இருந்தன, ஆனால் நாங்கள் சற்றும் எதிர்பாரதா விதமாக அங்கே தற்போது மூலவர் எழுந்தருளிய இடத்தில் திருத்துளாய் எங்களுக்கு காட்டிகொடுத்தது இங்கே தான் மூலவரை எழுந்தருளச்செய்ய வேண்டும் என்று, நாங்களும் அப்படி செய்தோம்.

இளங்காட்டினை பூர்விகமாக கொண்டு தஞ்சாவூர் வசிக்கும் ஸ்ரீமான்.எதிராஜன் சேதிராயர் அவர்கள் திருகுமரன் ஸ்ரீமான்.குமரவேல் சேதிராயர் அவர்கள் தனது ப்ராத்தனைக்காக ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவரை எழுந்தருளச்செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறினார் நாங்கள் எங்கள் ஊரை விட்டு சென்ற பரிமுகன் எங்கள் மீதுபரிவு கொண்டு வருகின்றார் போலும் என்று நாங்கள் இசைந்தோம்.

திருமகளுடன் உறை பரிமுகப்பெருமாள் எங்கள் ஊருக்கு எழுந்தருளிய உடன் 25ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் ஊர் அரசு உயர்நிலைப்பள்ளி அரசுப்பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி அடைகின்றது மேலும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
2009ஆம் வருடம் தைத்திங்கள் 19ஆம் நாள் திருவரங்கம் பெரியபெருமாளின் திருநட்சத்திரமான ரேவதி திருநட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை (01.02.2009)   அன்று கடவுள்மங்களம் (திருகுடமுழுக்கு) நடைபெற்றது.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்