புதன், 29 ஆகஸ்ட், 2018

துக்கு கயிற்றை முத்தம் இட்டு வீர மரணம் அடைந்த மாவீரன் "தூக்குமேடை தியாகி" மதுரை பாலு என்ற பாலுச்சாமி தேவர்






‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி பாலுச்சாமி என்ற பாலுவாக ஆர்யா வரும் காட்சிகளைப் பார்த்து ஐயா நல்லகண்ணு கண் கலங்கிவிட்டார். காரணம், நிஜவாழ்க்கையில் பாலுச்சாமி என்ற மதுரை பாலு என்ற ‘தூக்குமேடை தியாகி’ பாலு சிறையில் அடைக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டபோது, அதே சிறையில் சக கைதியாக இருந்து அந்த கொடிய நிகழ்வின் துயரங்களை அனுபவித்தவர் ஐயா நல்லகண்ணு” என்றார்.


மதுரை மாவட்டம் கருகப் பிள்ளை கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து காவல்துறையில் பணியாற்றியவர் தோழர் பாலு. பின்னர் உழைக்கும் மக்களின் போராட்டத்தை காவல்துறை நசுக்குவதை கண்டு வெகுண்டு தனது வேலையை தூக்கியெறிந்து விட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1948ல் தடை செய்யப்பட்டது. கம்யூனிஸ்டு தலைவர்கள் தலைமறைவானார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுப்பவர்களுக்கும், பிடித்துக் கொடுப்பவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் “சன்மானம்” கொடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட்டார்கள். நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் நரவேட்டையாடப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்டவுடன் கொடுஞ் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அடி, உதை, காலில் லாடம் கட்டுவது, செங்கல்லை கையிடுவலில் வைத்துக் கட்டி தண்ணீர் விடுவார்கள். செங்கல் விரியும்போது உடல் புண்ணாகும். நிர்வாணமாக்கி தண்ணிரில் நாள் முழுவதும் நிற்க வைப்பார்கள். தூக்கமின்றி புலம்ப வேண்டியதிருக்கும். இத்தகைய மிருகத்தனமான கொடுமைகளை அகிம்சை ஆட்சியாளர்களின் ஆசியோடு அதிகாரிகள் நடத்தினார்கள். பல மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகள் மீது சதி வழக்குகள் போடப்பட்டு, மாதக்கணக்கில் தனி நீதிமன்றங்களில் விசாரணைகள் நடந்தன.

மதுரையில் துப்பறியும் காவல்துறை தலைமைக் காவலர் செண்பகம் சேர்வை கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை பாலு உள்ளிட்ட 6 தோழர்கள் சேர்க்கப்பட்டார்கள். தோழர் பாலுவுக்கு தூக்கு தண்டனையும், மற்ற 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனை 1951 பிப்ரவரி 22ஆம் நாளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாளும் குறிக்கப்பட்டது.

இரண்டு நாட்களும் மதுரை சிறை முழுதும் பேச்சரவம் இல்லாத துக்கவீடு போல் காட்சியளித்தது.

பிப்ரவரி 21ஆம் நாள் இரவு 8 மணி வரை நாங்கள் அனைவரும் வரிசையாக நின்று, தனிக் கொட்டறையில் சிங்கம் போல் காட்சியளித்த தோழர் பாலுவுக்கு புரட்சி வணக்கம் செலுத்தினார்கள். பிப்ரவரி 22 காலை 4 மணிக்கு மரண பயம் ஏதுமின்றி, சொல் தடுமாற்றம் ஏதும் இல்லாமல், தெளிந்த உறுதியான குரலில், “புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க!” என்ற சப்தம் கேட்டதும், மறைக்கப்பட்ட பெரிய மதில் சுவரில் எதிரொலி கேட்கும் நேரத்தில், மற்றவர்களும் “தியாகி பாலு நாமம் வாழ்க! புரட்சி ஓங்குக!” என்று முழங்கினார்கள்.

தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டபோதும், படித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தார். பார்க்க வருபவர்களுக்கு ஆறுதல் கூறினாரே தவிர அவரிடம் மரண பயம் இல்லை. மாபெரும் வீரனாகத் தோன்றினார்.

குற்றம் இழைக்காதவர்கள் யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகவே சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். வழக்கறிஞர்களின் விவாதமும் நடைபெறும். அதுவே நீதித் துறையின் பெருமைக்குரிய நியதி ஆகும் என்று காலம்முழுதும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், தோழர் பாலு சம்பந்தப்பட்ட வரையில், நீதித் தராசு ஓரம் சாய்ந்து விட்டது. மன்றோரறம் சொன்ன பாழ்மனை ஆகிவிட்டது. தோழர் பாலு எந்த சம்பவங்களிலும் ஈடுபடவில்லை.

பஞ்சாலைத் தொழிலாளியாக பணியில் இருந்தபோது, வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டார். வேலையிலிருந்து நீக்கப்பட்டதும் காவல் துறையில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. தெலுங்கானா விவசாயிகளை அடக்குவதற்கு அனுப்பப்பட்டார். விவசாயிகளை சுட மறுத்தார். அதிகாரிகளின் வெறிச்செயல்களுக்கு துணைபோக மறுத்தார். கம்யூனிஸ்டாக இருந்தார் என்பதற்காகவே வழக்கில் இணைக்கப்பட்டார். நிரபராதியான பாலு துக்கிலிட்டு கொல்லப்பட்டார் என்பதே அநீதியாகும். இவ்வாறு நல்லக்கண்ணு எழுதியுள்ளார்.

ஐயா ஐ. மாயாண்டிபாரதி எழுதியுள்ள "வீரத்தியாகி தூக்குமேடை பாலு" எனும் நூலிலிருந்து, மாவீரன் பாலுவின் வீரமிகு இறுதி நாள்:

இறுதியாக 1951ஆம் ஆண்டு பிப்ரவரி 20ம்தேதியன்று கவர்னர் பவ நகர் மகாராஜா பாலுவின் கருணை மனுவை நிராகரித்துவிட்டார் என்று சேதி வந்தது. இனி அப்பீல் இல்லை தூக்குதான். அதுவும் இரண்டே நாளில் 1951 பிப்ரவரி 22ல் பாலு தூக்கிலேற்றிக் கொல்லப்பட வேண்டிய நாள் என நாளும் குறிக்கப்பட்டது. அந்த இரண்டு நாட்களும் ஒரு வீரத்தியாகியின் விசுவரூபம் எவ்வாறு இருக்கும் என்று வெளிப்படுத்திய நாட்களாக இருந்தன.

பாலுவை பேட்டி கண்டு பேச, அந்த 2 நாட்களிலும் அலை யலையாகக் கூட்டம் வந்தது.

சிறைத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள் வந்தனர்.பேட்டி காணவரும் கூட்டத்தை டெபுடி ஜெயிலர் கூட்டி வருகிறார். பேட்டி முடிந்ததும் அவர்களை வெளியில் அனுப்பி விட்டு வேறு கூட்டத்தை அழைத்து வருகிறார்.

இவ்வாறே 2 நாட்களும் கூண்டிலடைப்பட்ட சிங்கம்போல் பாலு குதித்து எழுகிறார். பாலு ஆஜானுபாகு, உடல் சிகப்பு, உருண்டை முகம், ஒளிவீசும் கண்கள், கோதிவிட்ட சுருள் கிராப்பு வயது 30 இருக்கும்.காணவரும் ஒவ்வொருவரையும் கரம்குவித்து வரவேற்றார். மதுரை வீரன் சாமிபோல் மண்டியிட்டு பேசலுற்றார். அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் தத்துவச் சுடராகவே இருந்தது.

முக்கியமான தோழர்கள் பலருக்கு பேட்டியின்போது அருகிருக்க அனுமதி கிடைத்தது. நெல்லை மாவட்ட கம்யூ சதி வழக்கில் ஒரு கைதியாக இருந்த ஐ.மா.பா.வுக்கு பேச்சு அருகில் இருக்கவும், பேட்டியின் பேச்சுக்களை குறிப்பு எடுக்கவும் அனுமதி கிடைத்தது. அப்போது எத்திராஜ் நாயுடு ஜெயிலர், குறிப்பு எடுக்க நோட்டுப் புத்தகமும் தந்தார்.

நான் என் சக கான்ஸ்டபிள்களின் குறைகளைப் போக்குவதற் காகப்பாடுபட்டேன். அவர்களை அதிகாரிகள் மனிதர்களாக நடத்த வேண்டுமென்பதற்காகப் போராடினேன். ஒரு கான்ஸ்டபிளை பூட்ஸ் காலால் உதைத்த வெள்ளை சார்ஜண்டையும் அதேபோல் அவமதித்த இன்னொரு தமிழ் சார்ஜெண்டையும் அடித்து அடக்கினேன்.

அதற்காக என்னைப் பழிவாங்குகிறார்கள். கொலைக்கேஸில் சம்பந்தப்படுத்தி தூக்கில் ஏற்றப் போகிறார்கள். இது பால்ச்சாமிக்கும் கவர்னர் பவநகர் ராஜாவுக்கும் உள்ள பிரச்சனை அல்ல. இது ஒரு வர்க்கப் போர். இதில் வெல்லப்போவது தொழிலாளி வர்க்கம்தான்.முதலாளி வர்க்கத்திற்கு என்ன கதி ஏற்பட்டு வருகிறது என்பதை வரலாறே சொல்லுகிறது. “என்னை ஆயிரம் தடவை தூக்கிலிட்டாலும் நான் மார்க்சிஸ்ட் கொள்கைக்காக நமது வர்க்கத்துக்காகப் பாடுபடுவேன்“ என்று கர்சித்தார்.

மனைவி வீரம்மாள், ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம்குழந்தை சரோஜினியை இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பிவேலி முன்னால் கணவனைக் கண்கொண்டு பார்க்கவும் சக்தியற்று, முகத்தை மூடிக்கொண்டு தேம்பி அழுதார். மனைவியையும் குழந்தைகளையும் சிறிதுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு “ஏன் அழுகிறாய்? அழாதே.

ஒரு பெரிய லட்சியத்துக்காக உன் புருஷன் உயிர்கொடுக்கிறான் என்பதற்காகப் பெருமைப்படு. பிள்ளையைக் கவனித்து வளர். கட்சி உன்னை விட்டுவிடாது” என்று கூறிவிட்டு குழந்தையை உற்றுப் பரிவுடன் நோக்கினார்.


பாலுவுக்குத் தூக்கு என்று தாயாரிடம் சொல்லியிருந்தால், அங்கேயே விழுந்து செத்துப்போகும் என்பதால், யாரும் சொல்லவில்லை. தாயார் வந்து பார்த்தபொழுது பாலு,“என்னாத்தா, எங்கே வந்தே? நேரடியாக ஊருக்குப் போறது தானே. எப்படியும் நான் வந்து சேர்ந்திடுவேன். நீ பயப்படாதே” என்றார்.தாயோ, “அப்பவெல்லாம் ஜெயில் வாசலிலே சின்னக்கம்பி முன்னாலே வந்து பேசவே, இப்போ பெரிய கம்பி, அறைக்குள் இருந்து பேசுறியே, இதைப் பார்க்கிறப்போ நீ சுலபமாகவா வருவே” என்று அழுதார்.

தூக்கு விஷயத்தை தாயிடம் சொல்ல முடியாமல் தத்தளித்தார் பாலு. தூக்கு என்று சொன்னால் அங்கேயே விழுந்து செத்துப் போகும் கண்ணீரைக் கொட்டினர் தோழர்கள்.

இன்னொரு முக்கிய நிகழ்ச்சியையும் பாலு நினைவூட்டினார். அதாவது கட்சி தடை செய்யப்பட்டு, தலைவர்கள் தலைமறைவாக இருந்தபோது, ஒருநாள் இரவில் வைகையாற்று மைய மண்டபத்தில் நகர்கமிட்டி உறுப்பினர்கள் மணவாளனும், வி.கருப்பையாவும் மே. முனியாண்டியும் இருந்தார்கள். அவர்களை பாலு சந்தித்து ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார்.“என் உயிர்மூச்சு உள்ளவரை கம்யூனிஸ்ட் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார். உயிர் கொடுக்கவும் தயார்” என்பதே அந்த வீரசபதம்.



தூக்குமேடையை நோக்கி, வீரசிங்கம் போல் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து பாலு நடக்கிறார். வழியெல்லாம் புரட்சி ஓங்குக, கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க! என்ற உக்கிர ஒலிகளை வானதிர ஒலித்தவாறே பாலு முன் செல்கிறார். வழியிலே இராமநாதபுரம் சதிவழக்கில் ஏ வகுப்புக் கைதிகளாக இருந்த பேராசிரியர்கள் சங்கரநாராயணனும், எம்.எஸ்.நாடாரும் தமது அறையின் வாசல் முன் வந்து நின்று “பாலு வாழ்க” என்றனர். அதற்கு பாலு, “கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க, செங்கொடி வாழ்க” என்று சொல்லுங்கள் என்றார்.

எமங்கிரர்கள் சுற்றிச்சூழ, பாலு தூக்கு மேடையிலே நிறுத்தப்பட்டார்.


இரவு முழுவதும், செங்கொடிப் பாட்டுகளைப் பாடிய பாலுவின்... “சுட்டுப் பொசுக்கினாலும் - தோழர்களைத் தூக்கினிலேற்றினாலும், விட்டுப் பிரியாது செங்கொடி வீரம் குறையாது” என்று பாடிச் சிறகடித்த செங்குயில் பாலுவின் பொன்னுயிர் பறிக்கப்பட்டுவிட்டது.

காலமெல்லாம் புரட்சி ஓங்குக.

பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் ஒழிக என்று முழங்கிய சுதந்திரப் போராட்ட தியாகி - சுதந்திரம் அடைந்த பிறகும் மக்களின் வாழ்வுரிமைக்காக போராடிய மக்கள் தலைவன் - பாலுவின் மூச்சை முடித்துவிட்டார்கள். ஆத்திரமும் துயரமும் கொந்தளிக்க, சிறைத் தோழர்கள் “காம்ரேட் பாலு ஜிந்தாபாத்” என்ற இடியோசைகளை மேலும் மேலும் உக்ரமாக எழுப்பினர்.




பாலுவின் சடலத்தைக் கேட்டு, பாலுவின் குடும்பத்தினரும் உறவினரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் சிறை வாசலை மொய்க்கின்றனர். சடலத்தைக் கொடுத்தால், ஊர்வலம் நடத்தி ஊரையே அதிர வைத்து விடுவார்கள் என பயந்து போன அதிகாரிகள். சிறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டதாகப் பொய் சொல்லி கூட்டத்தினரை போலீஸ் படையைவிட்டுத் தாக்கி விரட்டிவிட்டு சடலத்தை வேனில் எடுத்துக் கொண்டு அருப்புக்கோட்டை ரோட்டில் மெய்வழிச்சாலையடுத்துள்ள தரிசுக்காட்டில் (இப்பொழுது விமான தளம் உள்ள இடத்தில்) சடலத்தை இறக்கி, பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டனர்.பிறகு எலும்புகளைச் சேகரித்து திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அடுத்துள்ள பாறைப் பகுதியில் கொண்டு போய் சிதறினார்கள்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்