வியாழன், 23 செப்டம்பர், 2021

ஆகோள்பூசல் / ஆநிரை கவர்தல் /



சங்க இலக்கியங்களில் போர் முறைகள் ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல், எயில் காத்தல் - எயில் வளைத்தல் முதலியன போரின் வகைகளாம்.

படைத்தொழில் வலிமையுடைய கள்ளர்களே இதில் ஈடுபடுவர். ஆநிரை கவர்தல் , மீட்டல் என இரண்டிலும் இடைப்பட்டதாக நடுகலில் "கள்ளர்" என்ற பெயர்களே காணப்படுகின்றன. 


1) " ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்”: பசுக்களைக் கவர்ந்து வரும் கள்வர்கட்கு முதல்வன் ஆகிய பாண்டியன். மதுரைக் கணக்காயனார்  - அகநானூறு 342 - குறிஞ்சி பாடலில்

2) " புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கது"
பசுக்களைக் கவர்ந்து வரும் வெட்சி வீரர்களுக்குத் தலைவனான சோழன்.

3) " முனையூர்ப் பல்லா நெடுதிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன்" ஊர் முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக்கொண்டு வருகின்ற மலையமான்.



மேலும்

படை இயங்கு அரவம் : போய் ஆநிரைகளைக் கவர்ந்து வருக என அரசன் படை வீரர்கள் ஒன்று சேர்ந்து உற்சாகமாய் எழுப்பும் ஒலி

வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்து இறை : ஊரை சுற்றி முற்றுகை இடல்.

முற்றிய ஊர் கொலை : போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்.

ஆ கோள் : ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்

பூசல் மாற்றே : கொஞ்சம் தாமதமாக விடயம் அறிந்து பாதுகாப்பிற்கு வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்.

எரி பரந்து எடுத்தல் : பகைவரின் ஊர்களைத் தீ வைத்து எரித்தல்.

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம் : பகைவரை வென்று அழித்த வெற்றியில் மகிழ்தல்.

பொருளின்று உய்த்த பேராண் பக்கம் : பகைவரை ஒரு பொருட்டாக நினையாது அவர்களை அடக்கிய பேராண்மை பேசப்படுதல்

ஆநிரை கவர்ந்து வரச்சென்ற மழவர்கள் (மறவர்கள் (அ) மழவராயர்கள்) வெற்றியின் களிப்பில் தங்களுடைய தெய்வமான கொற்றவைக்கு கொழுத்த ஆவினை பலியிட்டு படைத்த உணவினை உண்டு மகிழ்ந்தனர் என்பதை பின்வரும் அகநானூற்று பாடல் மூலம் அறியலாம்.

"வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்
பயிர் தழீஇ கடுங்கண்  மழவர்
அம்புசேண் படுத்த வண்புலத்து உய்த்தென
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பின்
கொழுப்புஆ  எறிந்து குறுகிய தூஉய்
புலவுப்  புழுக்குஉண்டு வான்கண் அகலறை" (அகம்-309) 


நடுகல்லில் ஆநிரை கவர்தல்

தமிழகத்தின் தொன்மையான நடுகல் தேனியில் :-

தமிழகத்தின் பழமையான ஆகொள் நடுகல் கல்வெட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் உள்ள புலிமான் கோம்பை எனும் ஊரில்  கிடைத்துள்ளது. கிட்டதட்ட 2400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பிராமி எழுத்துக்களால் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நடுகல் சுமார் 3 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்டுள்ளது. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட ஈம சின்னத்தின் ஒரு பகுதியாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகளிலேயே இந்த கல்வெட்டு தான் பழமையானது என தொல்லியல் துறை கணக்கிட்டுள்ளது. இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட அகநானூறு பாடல்களில் மதுரையில் ஆகொள் பூசலில் கள்வர்கள் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டோம்.



( கல்வெட்டு நகல் :- நடுகல் கல்வெட்டுகள் : ர பூங்குன்றன்)


கல்வெட்டில் ஆநிரை கவர்தல்.

மகேந்திரவர்மன்

கம்பவர்மன்

கிபி899ல் பல்லவர் காலத்தில் வெட்சி போரான, விண்டபாடி கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்ற கல்வெட்டு


பராந்தக சோழன்

கிபி911ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழர் ஆட்சி காலத்தில் “கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கச் சென்ற கரந்தை கள்ளருக்கு எழுப்பிய நடுகல்”





ராஜகேசரி ராஜ ஆதித்த சோழர்


இராஜகேசரி என்ற சோழ இளவரசன் கால் நடைகளை (எருமை மாடுகள்) கவரச்செல்லும் போது அவர் மெய்காவலர் கொலை செய்யப்பட்டதை பராந்தக சோழரின் கல்வெட்டு சொல்கிறது. இதில் வரும் ராஜகேசரி ராஜ ஆதித்த சோழர்.


நிரைகவர்தலில் இறந்த மெய்க்கவலரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 1500 குழி நிலம் (1குழி = 144 சதுரடி) கொடுக்கப்பட்டு உள்ளது.

ராஜராஜ சோழன்

ஆடுகளை கவர்ந்து வந்த வெட்சி வீரர். ஆதாரம்:- South Indian inscription volume 13 - inscription number 149

A.R.NO.79 of 1921



சோழப்பெருவேந்தன் ராஜ ராஜ சோழனுக்காக ஆகோள் பூசலில் ஈடுப்பட்ட கள்ளர்கள் :-

ஹொட்டூர் வீரக்கல் ;
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம், பங்காபூர் வட்டத்தில் உள்ள ஹொட்டூர் எனும் ஊரில் மாண்ட ஒரு வீரனுக்காக எடுக்கப்பெற்ற நடுகல் ஒன்றில் காணப்பெறும் பழைய கன்னட எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் இராஜராஜனின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகும்.

இந்த நடுகல்லான வீரக்கல்லில் உள்ள கல்வெட்டுச் சாசனத்தின் மைப்படி இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் எனும் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர்களிடம் இருந்ததை ஆராய்ந்து கட்டுரை வரைந்த லைனல் பானட் (Lionell Barnett) என்பார் அந்த நடுகல்லின் அமைப்பு பற்றியும், கல்வெட்டின் முலம், மொழிபெயர்ப்பு, ஆய்வுக்குறிப்பு ஆகியவற்றையும் விரிவுற எடுத்துரைத்துள்ளார். அக்கல்லின் மேற்புரம் அமைந்துள்ள ஒரு தெய்வத்தின் இருபுறமும் இருவர் சாமரம் வீசி நிற்க அவைகளுக்கு கீழாக ஆறுவரி கல்வெட்டு சாசனமும்,மீண்டும் ஒரு குறுக்கு கோடிட்டு அதற்கு கீழே ஏழிலிருந்து பன்னிரண்டாவது வரிவரையிலும் கல்லெழுத்துக்கள் காணப்பெற மீண்டும் சாசனத்திற்கு கீழாக நடுவண் மாண்டவீரன் வில் அம்புடன், மூவரும் போரிடவும்,பின்புலத்தில் ஆறு பசுக்களும் காணப்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.






புத்தகம் : இராஜேந்திர சோழன் - குடவாயில் பாலசுப்பிரமணியன்

இக்கல்வெட்டு காலக்குறிப்புகளை முதலில் குறிப்பிட்டு பின்பு இராஜராஜ நித்யவிநோத ராஜேம்ந்தர வித்யாதர நூர்முடிச்சோழனின் படை எடுப்பு பற்றி குறிப்பிடுவதாகவும், அவ்வாறு குறிப்பிடப்பெறும் சோழமன்னன் அக்கல்வெட்டு குறிப்பிடும் காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவரும் நித்ய விநோதன் என்ற பட்டம் பூண்டவருமான முதலாம் இராஜராஜ சோழன்தான் என்றும் கூறியுள்ளார்.

முதலாம் குலோத்துங்கன் 

முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில், சோழ நாட்டில் காவிரிக்கு வடகரையில், கஞ்சனூரில் படைவீடிருந்து, ஆட்சிக்குப் பகையாயிருந்த குறும்பொன்றை அழித்து, ஆநிரைகளைக் கவர்ந்து வந்தமையை, திட்டைக்குடிக் கல்வெட்டு புலப்படுத்துகிறது.

இத் தேவர்க்கு மூன்றாவது நாளிலே, சோழ மண்டலம் இடங்கை வலங்கையாய் இன்னாயனார்க்குக் குறும்பெரிய காவேரிக்கு வடகரையில் கஞ்சனூரகத்திலே விட்டுக் கொடு இருந்து, குறும்பெறிந்து, நிறைகொண்ட ஆடும், மாடும், கிடாவும், எருமையும் இன்னாயனார் விளக்குக்கு குடுத்த உருக்களில் திருதுன்தா விளக்கு இரண்டுக்கு உடலாக நீக்கின பசு நாற்பதும் நீக்கி, ஆடும், மாடும், எருமையும், முதலான காசு கள அய” (தொல்பொருள் ஆய்வுத்துறை அறிக்கை 1903);. குலோத்துங்கன்  ஆட்சியேற்ற மூன்றாவது நாளிலேயே இந் நிகழ்ச்சி நிகழ்ந்திருப்பது இச் செய்திக்கு உறுதுணையாகும்.
“ஶ்ரீ ராஜ ராஜ தேவர் வலங்கைப் பழம்படை” (தெ.கல். தொ. 2: 2 கல். 35);.

ஆதாரம்:- South Indian inscription volume 8 - inscription number - 284

A.R.NO 15 of 1903

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்