சனி, 25 ஏப்ரல், 2020

மலையக மக்களுக்காக போராடிய ப.ரெங்கராஜ் மழவராயர்



மலையகத்தின் மூத்ததொழிற்சங்கவாதி காலஞ்சென்ற கே.பி. ரெங்கராஜ், புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளனூர் கிராமத்தில் 1930ம் ஆண்டு பழனியாண்டி மழவராயர் அவர்களுக்கு மகனாகப் பிறந்த ரெங்கராஜ் தனது ஐந்து வயதில் பெற்றோருடன் இலங்கை வந்து பதுளை தெமோதரையில் குடியேறினார்.

பாடசாலைப் படிப்பை நிறுத்தி விட்டு, தனது பதினாறாவது வயதிலே இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தன் தோழர்களான இரா. இளஞ்செழியன் போன்றோருடன் மேற்படி கழகத்தின் நேரிய கொள்கைகளை மலையகமெங்கும் எடுத்துச் சென்று செயற்படுத்த ரெங்கராஜ் மழவராயர் முனைந்தார்.

இவரின் புரட்சிக் கருத்துகளாலும் போராட்ட முனைப்பினாலும், இளைஞர் மத்தியில் பெருஞ் செல்வாக்குப் பெற்றார்.

பெரியாரின் கருத்துகளைப் பின்பற்றி சமூக சீர்த்திருத்தம் பேசிய இவர்களால் சமூகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்புகள் இலங்கை அரசைத் திரும்பிப் பார்க்கச் செய்து விட்டன. இலங்கை அரசினாலும், இடது சாரிகளாலும், இவர்களின் இயக்கம் தடை செய்யப்பட்டதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 1946 இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்ட ரெங்கராஜ் அவர்கள், சாதாரண தோட்டக் கமிட்டித் தலைவராகத் தெரிவாகி பதுளை மாவட்டத் தலைவராகவும், தொடர்ந்து உதவிப் பொதுச் செயலாளராகவும் சேவையாற்றினார். இவர் இ.தொ.காவில் உதவிப் பொதுச் செயலாளராக சேவையாற்றியுள்ளார்.

1972 இல் இலங்கை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு ஊடாகத் தோட்டங்களைத் தனியாருக்குப் பிரித்தளிக்கும் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பல போராட்டங்கள் கண்டி மாவட்டத்தில் வெடித்தன. அத்தகைய போராட்டங்களில் ஒன்றே 'டெவன் போராட்டம்'. 

தாங்கள் பிறந்த மண்ணைக் காக்கப் போராடிய தோட்ட மக்களை முன்னின்று வழிநடத்தியவர்களுள் ரெங்கராஜ் மழவராயரை மலையக சமூகம் இலகுவில் மறந்து விட முடியாது. 

டெவன் போராட்டத்தில் தன் மண்ணைக் காப்பதற்குப் போராடியபடி, பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சிவனு லட்சுமணன் மற்றும் ரெங்கராஜ் ஆகிய இருவரும் மலையக மக்களுக்காக வாழ்ந்தவர்களாவர்.

இதேபோல் ஊவா மாகாணத்தில் எழுந்த கீனகலை போராட்டம், கலுகலைப் போராட்டம், ரோபேரிப் போராட்டம் போன்றனவும் குறிப்பிடத்தக்கனவாகும். வெள்ளையர்களையும், முதலாளி வர்க்கத்தினரையும் எதிர்த்துப் போராடி, மலையக மக்களின் உரிமைகளைத் தட்டிக்கேட்டுப் புரட்சிகள் புரிந்த ரெங்கராஜ் மழவராயர் இச்சமூகம் மறந்து விட முடியாது.

பல நாட்களாக மேற்படி போராட்டங்கள் சம்பளமற்ற போராட்டங்களாகவும், உணவுத் தியாகப் போராட்டமாகவும் தொடர்ந்தன. இத்தகைய பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வழிநடத்திய காலஞ்சென்ற ரெங்கராஜ் மழவராயர் ஆவார்.

45 வருடங்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுக்கும், காங்கிரஸிற்கும் தன் இறுதிக் காலம் வரை விசுவாசியாகவே இருந்தவர் ரெங்கராஜ் மழவராயர். எத்தகைய சூழலிலும் தன் கொள்கை மாறாதவராக செயலாற்றியவர் ரெங்கராஜ் மழவராயர். 

அவரது இறுதி ஊர்வலத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டவர் அவர்.

அமரர் ரெங்கராஜ் கட்சி பேதமின்றி அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவர். தனது கொள்கைக்கேற்ப சீர்த்திருத்தத் திருமணம் செய்து வாழ்ந்த இவர், தன் தோழர்கள் பலருக்கும் சீர்த்திருத்த மணம் செய்வித்ததுடன், மூவின மக்களுடனும் சுமுகமான உறவுப்பாலம் அமைத்து வாழ்ந்தார். இவருடைய நாமம் மலையக வரலாற்றில் இருந்து அழிக்க முடியாதது.

30.12. 2019 ஆண்டு 28 வது நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டது.

நன்றி : பதுளை. எம். செல்வராஜ்