திங்கள், 12 மார்ச், 2018

நாலூர் நாடு / தமராக்கி நாடு





நாலூர் கள்ளர் நாடான தமராக்கி. தமர் + ஆக்கி = தமராக்கிதமர் = தம் சுற்றம்ஆக்கி = ஆக்கிக் கொள்ளுதல்எனவே தமராக்கி என்றால், மக்கள் அனைவரையும் தங்களது சுற்றமாக ஆக்கிக் கொள்ளும் உள்ளம் நிறைந்த மக்கள் வாழும் ஊர்.

தமராக்கி தெற்கு, தமராக்கி வடக்கு, குமாரபட்டி, கள்ளங்குளம் ஆகிய கிராமங்கள் சேர்ந்தது தமராக்கி நாடு என்று அழைக்கப்படுகிறது. தமராக்கியில் விவசாயம் முக்கிய தொழிலாகும். நெல் மற்றும் கரும்பு முக்கியமாக இங்கு வளர்க்கப்படுகின்றன.

கலிதீர்த்த ௮ய்யனார் மற்றும் ஏழைகாத்தாள் அம்மன் கோவில்கள் இங்கு அமைந்துள்ளது. 


தமராக்கி நாடு அய்யனார்கோயில்
திருவிழாக்கள்:

சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.

எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.

புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.

முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். 

பூணூல் அணிந்தும் அசைவம் (மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாரிகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.

அய்யனார்பாரிவார தெய்வங்கள்

இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.

ஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி,வீரபத்திரர்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், செல்லியாய், காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.































தமராக்கி நாடு எருதுகட்டு விழா.
ஸ்ரீ கலிதீர்த்த அய்யனாரின் குதிரை வாகனம்