வெள்ளி, 13 மார்ச், 2020

சின்னதம்பி சாணையர்



சமயத்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

முதலியார் இராசநாயகம் கதிரமலையை வலி. மேற்கில் உள்ள கந்தரோடை என அடையாளப்படுத்தி, அதுவே நாக நாட்டில் தோன்றிய முதலாவது தமிழ் அரசு எனவும் அவ்வரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதற்கு சோழர் வருகையே காரணம் எனவும் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்தை ஆமோதிக்கும் சுவாமி ஞானப்பிரகாசர் இவ்வரசின் தோற்ற காலத்தை கி.பி. 8ஆம் நூற்றாண்டு என குறிப்பிடுகின்றார்.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் கதிர மலையிலிருந்து ஆட்சி புரிந்த உக்கிரசிங்க மன்னன் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை தோற்றுவித்த சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாக்கி அக்கோயிலின் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

சோழ சாசனம் ஒன்று வட இலங்கையில் வலிகாமத்தை வெற்றி கொண்டு அங்கிருந்து பெருமளவு யானைகளை தமிழகம் கொண்டு சென்றதாகக் கூறுகின்றது. மாவிட்டபுரம் அமைந்த சுற்றாடலில் காணப்படும் வளவர்கோன் பள்ளம் காங்கேசன்துறை சோழக் கல்வெட்டுக்களில் அதிலும் குறிப்பாக பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படும் பெயராகும். இவற்றை நோக்கும் போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழருடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகின்றது.

ஆயினும் கி.பி16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் யாழ்ப்பாணத்தில் 500 ற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாக இருக்கலாம்.




1782 ஆம் ஆண்டு தீட்சிதர் சபாபதிகுரு அவர்களால் மீண்டும் நிர்மாணித்து தேரோட்டமும் நடந்தது. 1927 ஆம் ஆண்டில் இருந்து மாவிட்டபுரம் கொல்லங்கலட்டி சின்னதம்பி சாணையர் குமாரர்கள் கந்தையா சாணையர், சரவணமுத்து சாணையர் தொடர்ந்து, இத்தேரோட்டத்தை நடத்தி வந்தார்கள். சாணையர் பட்டமுடையவர்கள் கந்தர்வக்கோட்டை கள்ளர் பாளையத்தில் உள்ள கள்ளர் நாடுகளில் வாழ்ந்தெ வருகின்றனர்.