செவ்வாய், 12 மார்ச், 2019

முனைவர் அ.தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார்




இலக்கிய நூல்களிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் மிகச்சிறந்த புலமையுடையவர் பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி நெடுவாண்டார் அவர்கள் ஆவார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டையில் 10.04.1938 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் அய்யாசாமி நெடுவாண்டார்- இராசம்மாள் ஆவர். மூன்று மூத்த சகோதரிகளோடு குடும்பத்தில் கடைசி மகனாகப் பிறந்தவர். 

பள்ளிப்படிப்பை மன்னார்குடி பின்லே பள்ளியில் முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி. ஏ. (ஆனர்ஸ்) - தமிழ்மொழியும் இலக்கியமும் (1961), பி. எட்., - தமிழ்மொழியும் சமூகவியலும் (1962) பயின்றார். சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.பில் பட்டமும் - ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை (1978-79), முனைவர் பட்டமும் - சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் (1988) பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர்கள் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தண்டபாணி தேசிகர் ஆகியோரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சங்க இலக்கியத்தில் புலமைபெற்ற முதிர்ந்த தமிழறிஞர். தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லவர். சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு முன்னோடிகளில் ஒருவர். பாரதிதாசனின் பாடல்களை மொழிபெயர்ப்பின் மூலம் வெளியுலகுக்குக் கொண்டுசென்றவர். பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், அண்மைக்கால இலக்கியங்கள் என்று பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். 


தமிழர் நாகரிகமும் பண்பாடும் எனும் வரலாற்று நூலைப் படைத்தவர். சங்க இலக்கிய உரைகள் மற்றும் ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியர். 2003 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் பாரதிதாசன் விருதை வென்றவர். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், 2015-ஆம் ஆண்டுக்கான குடியரசுத்தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருதினைப் பெற்றவர்.

33 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகவும் பேராசிரியராகவும் பல கல்வி நிலையங்களில் பணியாற்றினார். திருவாரூர் பள்ளி, மயிலாடுதுறை ஏ வி.சி கல்லூரி, பூண்டி புட்பம் கல்லூரி ஆகியவற்றில் பணி செய்தார். 







பாண்டித்துரைத்தேவர் அமைத்த நான்காம் தமிழ்ச் சங்கம் ஆகிய மதுரைத்தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகப் 1991 - இல் பொறுப்பேற்றார். நிதியின்மையால் பொலிவிழந்திருந்த சங்கத்தை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டார். பல வளர்ச்சித் திட்டங்களை வகுத்து தமிழக அரசிடம் நிதிக்கோரிக்கை வைத்தார். 1996 - இல் பணிவோய்வு பெற்ற நிலையில் அம்முயற்சியில் வெற்றியும் கொண்டார். பணி ஓய்வுக்குப்பின் தஞ்சை நகரத்தில் வாழ்ந்து வருகிறார்.

973 ஆம் ஆண்டில் தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்னும் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டார். தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டுக்கூறுகள் ஒவ்வொன்றும் காலப்போக்கில் வளர்ந்த வரலாற்றை ஒரே நூலில் தொடர்ச்சியாக விளக்கும் இந்த அரிய நூல் அவரைத் தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டியது. இந்நூல் இன்றுவரை ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ்ப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்படுகிறது. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள், தமிழியற் சிந்தனைகள் போன்ற ஆய்வு நூல்களையும் சங்க இலக்கியங்களாகிய ஐங்குருநூறு, பரிபாடல் ஆகியவற்றின் உரைகளையும் எழுதியுள்ளார்.

1999 - 2012 காலகட்டத்தில் 19 பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் முழுமையாக மொழியாக்கம் செய்தார். அவற்றில் 13 சங்க இலக்கிய நூல்களும் 6 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். இவர் பெருநூலான அகநாநூற்றை முதன் முதலில் முழுமையாக ஆங்கிலத்தில்மொ ழியாக்கம் செய்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை 1999-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஆறு நூல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தந்துள்ளார்.

குறுந்தொகையின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்து 31 ஆண்டுகளுக்குப்பிறகு வெளிவந்த இரண்டாவது முழு மொழிபெயர்ப்பு இவருடையதாகும் .இது 2012 - ஆம் ஆண்டிற்கான நல்லி – திசையெட்டும் விருது பெற்றது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகம், 2001 - ஆம் ஆண்டு வெளியிட்ட இவருடை நற்றிணையின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலத்துக்கு நெருக்கமான முதல் முழுபெயர்ப்பாகக் கருதப்படுகிறது. இவரது பத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பு, முதல் மொழிபெயர்ப்பு வெளிவந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த இரண்டாவது முழு மொழிபெயர்ப்பாகும்.

பாரதியாரின் பாரதி அறுபத்தாறு, பாரதிதாசனின் புரட்சிக்கவி, சஞ்சீவிபருவதத்தின் சாரல், புரட்சிக்கவி, தமிழச்சியின் கத்தி, நல்ல தீர்ப்பு, கடல்மேல் குமிழிகள் ஆகிய அண்மைக்கால படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.  முனைவர் அ.தட்சணாமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில்தான்  “கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ. சிவபாதம் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்கள்.

இடைக்கால இலக்கியங்களான அபிராமி அந்தாதி, நீதி வெண்பா, பெருமாள் திருமொழி ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அ. ச. ஞானசம்பந்தன் என்னும் அறிஞரின் கம்பன் -- புதிய பார்வை என்னும் நூலை இவர் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்து 2013 இல் சாகித்திய அகாதமி வெளியிட்டது.

எழுதிய தமிழ் நூல்கள்

தமிழர் நாகரிகமும் பண்பாடும் (1973)
சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் (2001)
தமிழியற் சிந்தனைகள் (2003)
சங்க இலக்கியம்-ஐங்குறுநூறு (இரண்டு மடலங்கள்) (2004)
பரிபாடல் மூலமும் உரையும் (2004)

விருதுகள் 


பாரதிதாசன் நூலாசிரியர் சான்றிதழ்--தமிழ்நாடு அரசு (1991)
பாரதிதாசன் விருது--தமிழ்நாடு அரசு (2003)
வள்ளல் பாண்டித்துரை தேவர் விருது --இராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் (2003)
திரு வி க விருது தஞ்சை தமிழிசை அகாதமி (2012)
நல்லி திசை எட்டும் விருது, சென்னை (2012)
கலைஞர் பொற்கிழி விருது--உலகப் புத்தக நாள் விழா (2013)
செம்மொழி குறள் விருது (2014)
சாதனைத் தமிழர் விருது --கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம், கொல்கத்தா (2014)
இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது (2015).











வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்