புதன், 13 மார்ச், 2019

கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார்.


பர்மிய நாட்டில் கோவிந்தசாமி மாதுரார் - திருமதி சாலாட்சி தம்பதிகளின் மகனாக பிறந்தவர் வேணுகோபாலன். பல்வேறு இலக்கிய நயம் சொறிந்த நூல்களை படைத்தவர். சொந்தஊர் ஒரத்தநாடு மாவட்டதின் தென்னமநாடு கிராமம். கடல் கடந்து ஆண்டுகள் பல வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த பர்மிய மண்ணிலும் தமிழ்ப்பணியில் தளராது உழைத்து தாய்த் தமிழகத்தில் குடியிருக்க மீண்ட பின்பும் குன்றாதத் தமிழார்வத்துடன் இயங்கி வருபவர்  கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார்.


பர்மாவில் வாழ்ந்த காலங்களில் அங்கு வெளிவந்த பல்வேறு தமிழ் நாளேடுகளில் கவிதை, கட்டுரைகளை எழுதி பர்மாவின் முன்னணிக் கவிஞராகவும் திகழ்ந்தார். தொண்டன் என்னும் தமிழ் நாளேட்டின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார். பர்மா தமிழ் எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளராகவும், பர்மா பொது பாதுகாப்பிலாகாவின் இராணுவ நீதிமன்றப்பணியாளராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார். 


தமிழ்நாட்டிலிருந்து பர்மாவுக்கு வருகை தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ம்.பொ.சிவஞானம்,பேராசிரியர்கள் கி.வா. ஜகந்நாதன், தமிழ்க்கடல் இராய சொ,இலங்கை கா.பொ.இரத்தினம் ஆகிய தமிழ் அறிஞர்களை வரவேற்கும் குழுவில் வரவேற்பாளராக இருந்து சிறப்பாக செயல் பட்டுள்ளார். இவரின் கவிதைகளுக்காக அப்போதைய பர்மிய பிரதமர் ஊநூ அவர்களின் பரிசையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.


பர்மாவில் இருந்து மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் 1964ஆம் ஆண்டு தொடங்கி தாயகம் திரும்பியபோது அவர்கள் அனைவரும் உடனடியாக அடுத்தடுத்து கப்பலில் பயனிக்க அவசரகால பயணச்சீட்டு வழங்கும் பொறுப்பாளராக இரங்கூனில் உள்ள இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டுள்ளார்.


பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்பட்டு தமிழகம் திரும்பி வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்தபின் மத்திய அரசின் நிறுவனமாகிய தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் தென் மாநிலங்களுக்கான இயக்குநறாகவும் பதவி ஏற்று, தாயகம் திரும்பிய தமிழ் மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவராகவும் தமிழ்ப் பணிகளை ஆற்றியுள்ளார். தேன்முகில், வேலும் தமிலும், மனிதவேலி என்ற நூல்களையும், மண்ணின் மைந்தன், நினைத்ததே நடக்கும் நாடகங்களையும் அரங்கேற்றியுள்ளார். 


சோழமண்டல நாட்டுப்புறப் பாடல்கள், நேதாஜி கீதம் ஆகிய இரண்டு ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார். சோழமண்டலப் பாடல்கள் தமிழ்க் கொஞ்சும் தஞ்சை தரணியிலும், தமிழ்நாட்டிலும், கடல்கடந்து வாழும் கள்ளர்குல மக்களுக்காக சர்வதேச கள்ளர் பேரவை மூலமும் செவிதனில் நளினமிடுகின்றன. சோழமண்டல அமைப்பு, மண்டலத்தின் தலைநகரம், தஞ்சையின் எழில், தஞ்சை தரணியில் ஓடும் ஆறுகள்,சிறந்து விளங்கும் கோயில்கள், கரைபுரண்டு ஓடும் காவிரி,ஏருழுது, பரம்படித்து,நடவுநட்டு,நீர்பாச்சி, நெல்வளர்த்துப்பொங்கலிடும் பொலிவு அனைத்தும் இவரின் பாடல்களில் ஓங்கி ஒலிக்கின்றன. 



கோ. வேணுகோபாலன் மாதுரார் அவர்களின் படைப்புகள்

1. சோழ மண்டலப் பாடல்கள்
2. தேன் முகில்
3. வேலும் தமிழும்
4. மண்ணின் மைந்தன் ( நாடகம் )
5. நினைத்ததே நடக்கும் ( நாடகம் )
6. நேதாஜி கீதம் ( ஒலிநாடா )


கள்ளர் குல முன்னேற்றத்திற்காக இராசராசன் பண்பாட்டுகழகம், தேவர் பேரவை, சர்வதேச கள்ளர் பேரவை என்ற அமைப்புகளில் தன்னை இனைத்துக்கொண்டு செயல் ஆற்றிவரும் இவரது சேவை தொய்வின்றி தொடரும்.

அகில இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசிய கவுன்சில் உறுப்பினரும், ரெப்கோ வங்கியின் முன் னாள் இயக்குனரும், அகவை முதிர்ந்த தமிழறிஞராக, தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கவிஞர் கோ.வேணு கோபாலன், சமீபத்தில், மியான்மர் நாட்டின் தலைநகர் யாங்கோனுக்கு சென்று, அங்கு வாழும் தமிழர் களுக்கு, தமிழ் இலக்கணம், யாப்பிலக்கண வகுப்புகளை நடத்தியுள்ளார். அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:


மியான்மரில் வாழும் 10 லட்சம் தமிழ் மக்கள் நலன் பேணும் அமைப்பான, அகில மியான்மர் தமிழ் இந்து மாமன்றத்தின் அழைப்பின் பேரில், அந்நாட்டின் தலைநகரான யாங்கோன் சென்றிருந்தேன். தமிழ்நாட்டிற்கு நேர் கிழக்கே, ஆயிரம் கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய நாடு மியான்மர். பர்மா எனும் பழங்காலப் பெயரை, ராணுவ ஆட்சி வந்த பிறகு, மியான்மர் என்றும், தலைநகர் ரங்கூனை, யாங்கோன் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.


பழைய தலைநகரான ரங்கூனிலிருந்து 250 கி.மீ., தூரத்தில், "நேபிடோ' என்ற புதிய நகரை அமைத்து, ஆட்சி நடந்து வருகிறது. சீனியர் ஜெனரல் தான்சுவே ஆட்சித் தலைவராகவும், ஜெனரல் தெயின்செயின் பிரதமராகவும் உள்ளனர்.


சில நூற்றாண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்களால் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்கள், மியான்மர் முழுவதும் பரவி, பலர் விவசாயத்திலும், சிலர் தொழில், வணிகம், கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 1964ல் தாய்நாடு திரும்பிய மூன்று லட்சம் தமிழ் மக்கள் போக, இப்போது மியான்மரில் 10 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.



பர்மிய - ஆங்கிலம் இரண்டைத் தவிர, மற்ற இன மக்கள் அவரவர் தாய்மொழியில் கல்வி பயிலும் வாய்ப்புகள் இல்லை. தமிழர்களின் பிள்ளைகள் எல்லாம் பர்மிய மொழிப் பள்ளிகளில் பயில்வதால், வீட்டில் தமிழில் பேசுவதில்லை. அந்தப் பிள்ளைகளுக்காக அவர்களின் பெற்றோரும் பர்மிய மொழியிலேயே உரையாடுகின்றனர்.


தமிழ்த் தொலைக் காட்சிகள் அனைத்தும் மியான்மரில் தெளிவாகத் தெரிகின்றன. தமிழ்க் குழந்தைகள், தமிழ்த் தொலைக்காட்சிகள் வாயிலாக, ஓரளவு தமிழை அறிந்து கொள்கின்றனர்; இருந்தாலும், தமிழறிவு அந்த அளவு நிறைவு தருவதாக இல்லை.


தமிழ் மாணவர்கள், பர்மிய - ஆங்கில வழிக் கல்வி பயின்று, டாக்டராகவும், இன்ஜினியராகவும், வழக்கறிஞர்களாகவும் பணியாற்றுகின்றனர். இந்தத் தலைமுறையோடு, தமிழ் மொழி, மியான்மர் தமிழர்களை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.


மியான்மர் வாழ் தமிழர்கள், தமிழ்மொழி, தமிழர் தொல் மரபு, தமிழ்ப் பண்பாடு இவைகளைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். அங்கு தமிழ் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு, தமிழ் நூல்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. தமிழ் நாளிதழ்கள், வார - மாத இதழ்களை, யாங்கோன் இந்தியத் தூதராலயத்திற்குச் சென்று தான் படிக்க முடிகிறது; தமிழ்த் திரைப்படங்களும், திரையிடப்படுவதில்லை.


மியான்மர் முழுவதும் ஐந்தாயிரம் இந்துக் கோவில்களும், தலைநகர் யாங்கோனில் மட்டும் 500 கோவில்களும், வழிபாட்டு நிலையில் இருந்து வருகின்றன. ராணுவ அரசு, சமய வழிபாட்டிற்கு நல்ல ஒத் துழைப்பு தந்து வருகிறது. மியான்மரில் உள்ள அனைத்து இந்து கோவில்களுக்கும், தலைமைக் கோவிலாக யாங்கோனிலிருந்து 30 கி.மீ., தூரத்தில் இருக்கும் பீலிக்கான் எனும் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் போற்றப்படுகிறது. மார்ச் 29ம் தேதி, அந்தக் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திரத் தீமிதி விழாவில், நான் கலந்து கொண்டேன். எனக்கு ஆலயத்தின் சார்பில், சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.


ஒரு லட்சம் தமிழர்கள், மியான்மர் நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து கலந்து கொண்டனர். ஆணும், பெண்ணும் வேல் குத்தி காவடி தூக்கி வந்து, தீ மிதித்து, நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். பொதுத் தொண்டில் பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ் மக்களுக்கு மனிதாபிமானமிக்க உதவிகளைச் செய்து வருகின்றன. முப்பது முதல் 70 வயது வரையிலான தமிழ் ஆர்வலர்களுக்கு, தமிழ் இலக்கணமும், யாப்பிலக்கணமும் வகுப்பெடுத்து சொல்லித் தந்தேன். ஒரு பெண் கவிஞர் எழுதிய, "கவித்தமிழ்க் களஞ்சியம்' என்ற தலைப்பிலான கவிதை நூலை வெளியிட்டு, பல தமிழ் அமைப்புகளின் பாராட்டுதலையும் பெற்றேன்.


இவ்வாறு தன் அனுபவங்களை கூறினார் கவிஞர் கோ.வேணுகோபாலன்.  






வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்