திங்கள், 12 மார்ச், 2018

கள்ளர் சிற்றரசர்களின் மயில்ராயன்கோட்டை நாடு


கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை) கள் கட்டியிருந்தனர். தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள் தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை, கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது. தொண்டைமான் மன்னர்களால் புதிய கோட்டை கட்டி அதற்க்கு புதுக்கோட்டை என்று பெயர் வைத்தார்கள். அதை போல் கள்ளர்களால் பாண்டிய மண்டலத்தில் தன்னரசாக ஆட்சி செய்யப்பட்ட ஒரு பகுதி மயில்ராயன்கோட்டை நாடு என்றும் அழைக்கப்படுகிறது. 

ஐயா மயிலை பா. தேவிந்திரன் அவர்கள் மயில் ராயன் கோட்டை நாட்டு வரலாறு என்ற நூலில், இந்த நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்து எழுதியுள்ளார். இந்த நாட்டின் வரலாற்றை அறிய , நூலின் மூலம் அறியலாம்.




















இங்கே கள்ளர்கள் 1000 வருடங்களுக்கு முன் காஞ்சிபுரம் (மல்லை) வள்ளநாடு என்ற பகுதியில் இருந்து கூட்டமாக வந்தார்கள் என்றும், அந்தக் கூட்டத்தை தலைமை தாங்கியவர்கள் நரசிங்கத்தேவர், வள்ளாளத்தேவர், சீவிலித்தேவர், மன்னத்தேவர், பொன்னத்தேவர் என்றும் கூறுகின்றனர்.

நரசிங்கத்தேவர், வள்ளாளத்தேவர், சீவிலித்தேவர் வாரிசுகள் மல்லாக்கோட்டையில் இன்றும் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்குடி பகுதியில் மழவராயன் பட்டம் உடைய கள்ளர்களுக்கு சந்திவீரனுக்கு தனிக்கோயிலும், அம்பலம் என்ற பட்டமும் ஊர் முதல்மரியாதையும் இவர்கள் கள்ளர்களின்  சேர்வாரர்கள் பெண் கொடுக்கும் உறவு முறையாகவும் உள்ளார்கள்.  தஞ்சாவூர் இளங்காடு கிராமத்தில் 
சந்திவீரனுக்கு கோயில்  உள்ளது. மூவரையர் பட்டம் உடைய கள்ளர்கள்  வணங்கி வருகிறார்கள்.

இந்நாட்டின் உட்பிரிவுகள்

கட்டாணிப்பட்டி,
மாம்பட்டி,
மல்லாக்கோட்டை,
நாமனூர்,
ஏரியூர்,
அழகமாநகரி,
ஜெயங்கொண்டான்நிலை
வடவன்பட்டி,
வடக்குவட்டம்-எஸ்எஸ்கோட்டை,
தெற்குவட்டம்-அவலாக்கோட்டை

உட்பட இந்நாட்டில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இது இன்றும் கள்ளர் குடியின் அம்பலக்காரர்களினால் ஆட்சி செய்யப்படுகிறது.

இந்நாட்டில் இருந்து கிழக்கு பக்கம் பிரிந்த நாடு நாலூர் நாடு (தமராக்கி), அஞ்சூர் நாடு (ஏனாதி). மேற்கு பக்கம் பிரிந்த நாடு பிறமலை நாடு (புத்தூர் நாடு), பிறமலை நாடு (கொக்குளம் நாடு)


பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட இப்பகுதியை, 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திரன் கைப்பற்றினார். அதன்பின், 12ம் நூற்றாண்டில் பாண்டியர் வம்சத்தில் வந்த ஜடாவர்ம குலசேகரன், சோழ மன்னனை வென்று நாட்டை மீட்டார். சிவபக்தனான ஜடாவர்ம குலசேகரன், தான் வெற்றி பெற்றமைக்கு நன்றிக் காணிக்கையாக, திருமலை கிராமம் மலையில் சிவனுக்கு கோயில் எழுப்பி,” மலைக்கொழுந்தீஸ்வரர்” என்று பெயர் சூட்டினான். மிகவும் தொன்மையான இக்கோயிலில் கி.பி.2ம் நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. முன்மண்டபத்தில் கம்பீரமாக திருமலை பகுதிக்கு திசைக் காவல் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட கள்ளர் குடியில் பிறந்த காவல் தெய்வம் மாவீரர் கருவபாண்டியர் சிலை உள்ளது.


சிவகங்கை சரித்திர கும்மி இந்தப்பகுதியை பற்றிபாடுகிறது. 

"பெருமை மிகத்தவறாப் பெரும்மாலைய நாடும் ராசவள நாடும் நல்லசிறு பூங்குடியும் மாசில்லாக் கள்ளர் மல்லாக்கோட்டை நாட்டவரும்" என மருதுபாண்டியருக்கு படை உதவி அளித்த கள்ளர் நாடுகளில் மல்லாக்கோட்டை நாட்டவரையும்"

(18 ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடிகள்- மருதுபாண்டிய மன்னர்கள் - மீ மனோகரன் பக்-305)

இங்கே கள்ளர்கள் பெரும்பாலும் அம்பலம் என்ற பட்டத்தினையே பயன்படுத்துகிறார்கள். இவர்களில் சிலர் சிவகங்கை அரசர்களிடமும் படைத்தளபதிகளாகவும், படை வீரர்களாகவும் இருந்தனர். வடக்கு வட்டத்தினை சேர்ந்தவர்களும், மல்லாக்கோட்டை பெரிய அம்பலக்காரர் வம்சத்தவரும் " சேர்வை " என்ற பட்டத்தை சூடிக்கொள்கின்றனர். இதில் சிலர் தேவர் என்ற பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் மத்தியில் கைம்பெண்மனமும், மணவிலக்கும் அனுமதிக்கப்படுகிறது.



மயில்ராயன்கோட்டை நாட்டின் மட்சிமை பொருந்திய அம்பலக்காரர்களின் பெயர்கள் மற்றும் வகையறா:

1. தலைக்கிராமம்

தலைமை கிராமத்தின் மாச்சிமை பொருந்திய ச. இராஜா சேதுராமலிங்கம் பெரியம்பலம் திருகோஷ்டியூர் தேர் வடத்தில் நிற்கும் காட்சி

கட்டாணிபட்டி பெரியம்பலகாரர்கள் வகையறா
(சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு கருப்புக்குடை, தலைப்பகையும் பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) தே.பெருமாள் பெரியம்பலம் 
2) பெ.தேவர் பெரியம்பலம் 
3) தே.முத்துச்சாமி பெரியம்பலம் 
4) மு.முத்துச்சாமி பெரியம்பலம் 
5) மு.சேதுராமலிங்கம் பெரியம்பலம் 
6) சே.சத்தியமூர்த்தி பெரியம்பலம் 
7) ச.இராஜா சேதுராமலிங்கம் பெரியம்பலம் 
8') இரா.பிரவீன்குமார் பெரியம்பலம் வாரிசு




2.மாம்பட்டி பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு தலைப்பாகை, வல்லவெட்டு பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) பெரியாவிடச்சி பெரியம்பலம் 
2) பெ.சேவுகன் பெரியம்பலம் 
3) சே.சேவுகன் பெரியம்பலம் 
4) சே.சேவுகன் பெரியம்பலம் 
5) சே.சபாபதி பெரியம்பலம் 
6) ச.ராஜராஜன் குமார பெரியம்பலம்

மல்லாகோட்டை கிராமத்தின் மாச்சிமை பொருந்திய ச.பாண்டித்துரை சேர்வை பெரியம்பலம் திருகோஷ்டியூர் தேர் வடத்தில் நிற்கும் காட்சி

3.மல்லாக்கோட்டை பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு பூச்சக்கரக்குடை, தலைப்பாகை பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) ச.மொக்கைப்பிச்சன் சேர்வை பெரியம்பலம் 
2) மொ.சசிவர்ணம் சேர்வை பெரியம்பலம் 
3) ச.சசிவர்ணம் சேர்வை பெரியம்பலம் 
4) ச.துரைப்பாண்டியன் சேர்வை பெரியம்பலம் 
5) து.சசிவர்ணம் சேர்வை பெரியம்பலம் 
6) ச.பாண்டித்துரை சேர்வை பெரியம்பலம் 
7) பா.சசிதுரை சேர்வை பெரியம்பலம்

நாமனூர் கிராமத்தின் மாச்சிமை பொருந்திய ம.உதயகுமார் பெரியம்பலம் திருகோஷ்டியூர் தேர் வடத்தில் நிற்கும் காட்சி
4.நாமனூர் பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு வெள்ளிப் பிரம்பு,வல்லவெட்டு பரிவட்டமாக தந்து மரியாதையை செய்தது).
1) ச.கட்டளச்சி முத்துக்கருப்பு பெரியம்பலம் 
2) க.சண்முகவேல் பெரியம்பலம் 
3) ச.மகேந்திரகிரி பெரியம்பலம் 
4) ம.சண்முகவேல் பெரியம்பலம் 
5) ச.முத்துக்கருப்பு பெரியம்பலம் 
6) மு.மகேந்திரகிரி பெரியம்பலம் 
7) ம.உதயகுமார் பெரியம்பலம்

ஏரியூர் கிராமத்தின் மாச்சிமை பொருந்திய இராம.சுப்பிரமணியன் நாச்சியப்பன் பெரியம்பலம் திருகோஷ்டியூர் தேர் வடத்தில் நிற்கும் காட்சி

5.எரியூர் பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு பூக்காரக்குடை,தங்க உத்ராட்ச மலை,தலைப்பாகை பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) வேப்பங்குளம் நாச்சியப்பன் பெரியம்பலம் 
2) வே.விஜய ரகுநாத தொண்டைமான் பெரியம்பலம் 
3) வி.நாச்சியப்பன் பெரியம்பலம் 
4) நா.நாச்சியப்பன் அம்பலத் தேவர் பெரியம்பலம்
5) நா.நாச்சியப்பன் பெரியம்பலம்
6) நா.கருத்த நாச்சியப்பன் பெரியம்பலம்
7) க.அம்பல நாச்சியப்பன் பெரியம்பலம்
8 ')நா.இராம சுப்பிரமணியன் நாச்சியப்பன் பெரியம்பலம்
9) நா.இராம.ஜெயராம நாச்சியப்பர் தேவர் M.s.குமார பெரியம்பலம்

6.அழகமாநகரி பெரியம்பலகாரர் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு தலைப்பாகை,வல்லவெட்டு பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) வேலாயுதம் பெரியம்பலம் 
2) வே.நடராஜன் முத்துக்கருப்பு பெரியம்பலம் 
3) ந.வேலாயுதம் பெரியம்பலம் 
4) வே.புவனேஸ்வரன் பெரியம்பலம்

ஜெயங்கொண்ட நிலை கிராமத்தின் மாச்சிமை பொருந்திய பெ.குணசீலன் பெரியம்பலம் திருகோஷ்டியூர் தேர் வடத்தில் நிற்கும் காட்சி
7.ஜெயம்கொண்ட நிலை பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு வெள்ளிப் பிரம்பு,தலைப்பாகை பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) ஓதம்புலி பெரியம்பலம் 
2) சூரப்புலி பெரியம்பலம் 
3) சூறாவளி பெரியம்பலம் 
4) ஓதப்பிச்சான் பெரியம்பலம் 
5) சின்னனம் பெரியம்பலம் 
6) சி.பெரிய கருப்பன் பெரியம்பலம் 
7) பெ.சுப்பையா பெரியம்பலம் 
8') சு.சோலைமலை பெரியம்பலம் 
9) சோ.வேல்முருகன் பெரியம்பலம் 
10) வே.பெரிய கருப்பன் பெரியம்பலம்
11) பெ.குணசீலன் பெரியம்பலம்


8.வடவன்பட்டி பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு வெள்ளிப் பிரம்பு,தலைப்பாகை பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) வெள்ளச்சாமி பெரியம்பலம் 
2) வெ.முத்தையா பெரியம்பலம் 
3) மு.நல்ல கருப்பு பெரியம்பலம் 
4) ந.வெள்ளச்சாமி பெரியம்பலம் 
5) வெ.பாரி வள்ளல் பெரியம்பலம்


வடக்கு வட்டதின் மாச்சிமை பொருந்திய இரா.அஜீத்குமார் பெரியம்பலம் திருகோஷ்டியூர் தேர் வடத்தில் நிற்கும் காட்சி
9.வடக்கு வட்டம் பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு பட்டு அங்கவஸ்திரம் பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) சின்ன அழகப்பன் சேர்வை பெரியம்பலம் 
2) சி.பெரியண்ணன் சேர்வை பெரியம்பலம் 
3) பெ.நைனப்பன் சேர்வை பெரியம்பலம் 
4) நை.நாகலிங்கம் சேர்வை பெரியம்பலம் 
5) நா.நைனப்பன் சேர்வை பெரியம்பலம்
6) நை.முத்துராமலிங்கம் சேர்வை பெரியம்பலம்

10.தெற்கு வட்டம் பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு பட்டு அங்கவஸ்திரம் பரிவட்டமாகத் தந்து மரியாதையை செய்தது)
1) காத்தப்பன் பெரியம்பலம் 
2) கா.சுப்பையா பெரியம்பலம் 
3) சு.முத்தையா பெரியம்பலம் 
4) மு.காசி பெரியம்பலம் 
5) வி.இராஜேந்திரன் பெரியம்பலம் 
6) இரா.விஜயகுமார்



இந்நாட்டில் மல்லாக்கோட்டையில் சந்திவீரன் சுவாமி கோயில் திருவிழா எருது கட்டு முதல் ஞாயிரு விரதம் தொடங்கி இரண்டாம் ஞாயிரு கொடிவளவுதல் நடைபெற்று மூன்றாவது ஞாயிரு எருது கட்டும் திருவிழா நடைபெரும் சனிக்கிழமை இரவுகளில் ஆடு வெட்டி உப்புக்கறி சமைத்து பக்கத்து நாட்டு மக்களை அழைத்து விருந்து வைப்பார்கள் பின்பு மாலை நேரத்தில் சந்திவீரனை வணங்கி வடம் போடும் நிகழ்வு நடைபெறும் ஒரு காலத்தில் மிகப் பெரிய திருவிழாவாக இருந்த எருது கட்டு கட்டாணிப்பட்டி, ஜெயம்கொண்ட நிலை, வடவான் பட்டி என ஒவ்வொரும் தனி தனியா பிரிந்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.


மயில்ராயன்கோட்டைநாடு மாம்பட்டி கிராமத்தில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு வெகு விமரிசையாக நடைபெறுகிறது . இதில் 500 க்கு மேற்பட்ட காளைகளும் 5000 க்கும் ஏற்பட்ட வீர்ர்களும் கலந்து கொண்டது குறிப்படத்தக்கது.


ஆட்டுக்கறியோடு ஆட்டுரத்தம் உப்புச் சேர்த்து அவித்து சுத்தமான கடலெண்னையில் வரமிளகாய் பட்டசோம்பு தாளித்து இறக்கினால் அவியக்கறி ரெடி. இதை வேறு ஊரிலோ, வேறு நாட்களிலோ செய்தால் இந்த ருசி அமையாது என்பது ஆச்சரியமான உண்மை.

இந்த விழாவிற்கு பின் ஒரு செவி வழி வரலாறும் உள்ளது:


16ம் நூற்றாண்டில் மயில்ராயன்கோட்டைநாடு யாரையும் சாராமல், தன்னிலை நாடாக செல்வச்செழிப்போடு விளங்கி வந்தது.



திருமலைரகுநாத சேதுபதி மன்னரால் இங்கே வரிவசூல் செய்ய முடியவில்லை. இங்கு வரிவசூல் செய்யவோ எந்த தளபதியும் முன்வரவில்லை. பிறகு வந்த கிழவன் சேதுபதி மன்னர் இங்கே நெருக்கடியான வரி வசூலை மேற்க்கொள்கிறார். ஒரு கட்டத்தில் மன்னனின் எண்ணமும் மயில்ராயன் கோட்டை நாட்டில் பலிக்க வில்லை என்பதை அறிந்த நொண்டிமறவன் தானாக முன் வந்து தான் அந்த வேலையை செய்து முடிப்பதாகவும், மயில்ராயன் கோட்டை நாட்டில் வரிவசூல் செய்து, நெற்களஞ்சியங்கள் அமைத்து அந்த கள்ளர் நாட்டை கிழவன் சேதுபதிக்கு கப்பம் கட்ட வைப்பதாகவும், மறுப்பு தெரிவிக்கும் அம்பலகாரர்கள் தலையை தங்கள் காலடியில் போடுகிறேன் என்று கூறினான்.

மயில்ராயன் கோட்டை நாட்டின் வீரப்பிரதாபங்கள் குறித்து அறிந்து வைத்திருந்த நொண்டிமாறன். நரியின் தந்திரத்தோடு உள்ளே நுழைந்து அம்பலகாரர்களை சந்தித்து நட்புடன் பழகி வந்தான். பின்னர் தக்க சமயம் பார்த்து நயவஞ்சகமாக பேசி மூன்று இடங்களில் கோட்டைகள் கட்ட அணுமதி வாங்கினான்.

கோட்டைகளின் திறப்புவிழா நாளன்று எல்லோரையும் அழைத்து விருந்துவைத்தான், விருந்துண்ட அனைவரும் மயங்கி விழுந்து இறந்தனர். விஷம் வைத்துக் இறந்து கிடந்த உத்தம வீரர்களின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தார்கள் நொண்டிமாறனின் ஆட்கள்.

அந்தத் தலைகளில் ஒன்று வீரப்பெண்மணி வீராயியின் கணவருடையது. வடவன்பட்டியில் நாட்டுக் கூட்டத்தைக் கூட்டி பொன்முடி வைத்து யார் சென்று அவனை கொன்று வருவது என்ற முடிவுக்கு வரவிருக்கிறார்கள். ஆனால் சற்றும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மின்னலென வீரத்தாய் வீராயி பொன்முடியை எடுத்துச் சூடிக்கொள்கிறாள்‌.

“என் கணவனின் உயிர் குடித்து எந்நாட்டில் இரத்தவெள்ளப் பெருக்கோட்டிய நொண்டி மறவன் தலையைக் கொண்டுவந்து நான் பிறந்த மண்ணுக்கு நன்றிக் கடனாவற்றுவேன்” என்று பயங்கரக்கோரக் கூற்றுடனே, ஆவேச உணர்ச்சியைக்கொட்டி, கட்டாணிபட்டி மங்கை வீராயி.

திருமயமேகிப் பதுங்கிக்கிடந்த இடம் கண்டாள் வீரமங்கை வீராயி, ஒருநாள் நடுயாமம் நெருங்கும் வேளையிலே கோர யுத்தித்திற்குத் தயாராகி, தனது 16 முழச் சேலையிலே மல்யுத்தக் கச்சையென இழுத்துக்கட்டி பொன் வாளை உருவி, “பழிக்குப் பழியடா பழிகாரப் பாண்டியா" என்று ஆவேச வீரகர்ஜனையிட்டு, நொண்டி மறவன் தலையை வெட்டி, தன் சேலை முன்தாங்கியில் முடிக்கி, வேங்கை போலப் பாய்ந்து, மயில்ராயன் கோட்டை நோக்கி வீரநடை போட்டாள்


வழியிலே கீழநிலைக்கிராம முச்சந்தியிலே “வீரணசாமி” தேவனும் வழிமறிக்க, “அப்பனே! எனக்குத் துணைவா, வீரநாட்டார் உனக்குக் கோயிலெழுப்பி குலவழியே பணிந்து வாழ்த்துவர்” எனத்தழுவி, துணைகொண்டு மல்லாகோட்டையை அடைந்தாள். மல்லரகோட்டைப் பெரியம்பலம் சேர்வைகாரனை மந்தைக்கு வரவழைத்து, பழிகாரன் தலையை வீசி எறிந்து, “நான் பிறந்த மண்ணுக்கு நன்றிக்கடன் இதுவே “சந்தியினின்று துணைவந்த “சந்தி வீரணசாமியை குலவழியே பணிவிர்”என்றும், நான் கொண்டுவந்த ஒரு தலைக்கு சாட்சியாக எருதுகட்டு விழா எடுக்கப்பட்டு ஆடுகள் பலியிட்டு அதன் தலையை வீரணசாமி படைத்து வணங்க வேண்டும் என்மேல் ஆணை என்று வாக்களித்து. வீரணன் ஜோதியில் ஒளியாய் கலந்து விடுகிறாள்.

ஆயிரம் ஆட்டுத்தலை தருவார்கள் என சபதம் செய்ததால் இன்றுவரைக்கும் வீட்டுக்கு வீடு ஆட்டுக்கிடாய் வெட்டி தலையை முனிக்கு காணிக்கை செய்து, சந்திவீரனுக்கு அவியக்கறி படையலிடுகின் றனர்.

வீரத்துக்கென எழுப்பிய கோவிலிலே “சந்திவீரன்”கோவில் கொண்டு கம்பிரக் காட்சி அளித்து, மயில்ராயன் கோட்டை நாட்டு மக்களுக்கு அன்றும், இன்றும், என்றும், எல்லாச் செயல்களிலும் சிந்தனையிலும் தோன்றாத் துணைவராய் நின்று அருள்புரிந்து வருகின்றான்.


வீராயியின் வாக்கையும், சந்தியா காலத்தில் ஒளி வடிவாக காட்சி தந்ததால் வீரணண் சந்திவீரன் என்றும் வணங்கிவருகின்றனர்.

நாட்டின் தலைக் கிராமமாம் கட்டாணிபட்டி கிராமம். கிராமத்தில் முக்கிய கோவில்கள்



சந்திவீரன் சுவாமி திருக்கோயில்

மலைக்கந்த சுவாமி திருக்கோயில்

சந்திவீரன் சுவாமி திருக்கோயில்: 


கட்டாணிபட்டி கிராமத்தில் அனைத்து மக்களையும் காக்கும் தெய்வமாகவும் மக்கள் வேண்டும் வரத்தை வழங்கும் தெய்வமாக அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார் சந்திவீரன் சுவாமி.


சந்திவீரன் சுவாமிக்கு எடுக்கப்படும் திருவிழாக்களில் முக்கியமானது எருதுகட்டு திருவிழா.

அந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி கொடிவளவு....
அடுத்து கிடா வெட்டு, எருது தழுவுதல் எனப்படும் மஞ்சுவிரட்டு போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக நடக்கும்.

மலைக்கந்த சுவாமி திருக்கோயில்:


கட்டாணிபட்டி கிராமம் பெரியகோட்டை மலையில் அமைந்துள்ள அருள்மிகு மலைக்கந்த சுவாமி மிகவும் பிரசித்தி பெற்றவர்.


10ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மலைக் கோவில் முருகன் ஸ்தலம் பெரியகோட்டை மலையில் அமைந்துள்ள மலைக்கந்த சுவாமி திருக்கோவில். இங்குள்ள கொமப்பாள் அம்பலக்காரச்சியிடம் தனது அன்பையும், அருளையும் தெரிவிக்கும் வகையில் குழந்தை வடிவில் பிரசன்னமாகி பால் குடித்ததும், நாச்சியாபுரம் நாட்டுக்கோட்டை செட்டியார் கனவில் குழந்தை பாக்கியம் அருளி கனவில் தான் இருக்கும் இடமான பெரியகோட்டை மலையைக் கூறி திருப்பணி செய்ய இறைவன் கூறினார் என்பது கோவிலின் ஸ்தல வரலாறு ஆகும்.


இதனையொட்டி பல்லாண்டுகளாக தைப்பூசத் திருவிழா விமரிசையாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மயில்ராயன்கோட்டை நாடு, கட்டாணிபட்டிக் கிராமம், பெரியகோட்டைப்பட்டி, பொன்குண்டுப்பட்டி, நடுவிப்பட்டி, கீழ்ப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தும், பால்குடம், காவடி ஆகியவற்றுடன் வந்து விழாவில் கலந்து கொண்டு மலையின் மேல் உள்ள முருகனை வழிபடுவர். விழாவையொட்டி கரும்புத் தொட்டில் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடனை பக்தர்கள் செலுத்துவர். தைப்பூசத்தையொட்டி பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்படும்.


இக்கோவில் முக்கிய சிறப்பு.


தைப்பூசத்திற்கு பழனி செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து அருள் பெறலாம்.  பழனி முருகன் கேரளாவை பார்த்த வண்ணம் அருள்பாளிக்கிறார்.  மலைக்கந்த சுவாமியோ நம் தமிழகத்தை பார்த்த வண்ணம் அருள்பாளிக்கிறார்.

மல்லாகோட்டை கிராமத்தின் கோவில்கள் மற்றும் திருவிழாக்கள்











ஸ்ரீசந்திவீரன் சுவாமிதிருக்கோவில்:


மல்லாகோட்டை கிராமத்தில் மத்தியில் எழுந்தருளி அனைத்து மக்களையும் காக்கும் தெய்வமாகவும் மக்கள் வேண்டும் வரத்தை வழங்கும் தெய்வமாக அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீசந்திவீரன் சுவாமி. கோவில் ராஐகோபுரம் தற்போது விஸ்வரூபமாக எழுப்பப்பட்டு உள்ளது.

சந்திவீரன் சுவாமிக்கு எடுக்கப்படும் திருவிழாக்களில் முக்கியமானது எருதுகட்டு திருவிழா.

அந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி கொடிவளவு. அடுத்து கிடா வெட்டு, எருதுகட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக நடக்கும்.


கொடிவளவு, கொடிவளவு என்பது சுவாமி ஒருவர் மீது இறங்கி கிராமத்தின் எல்லை தாண்டி சென்று ஒரே ஒரு கொடியை மட்டும் எடுத்து வந்து சுற்றுவார்கள்.


கிடாவெட்டு, இந்நிகழ்ச்சி மல்லாகோட்டைகிராம மக்கள் தம்தம் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்து கிடாவெட்டி விருந்தளித்து சிறப்பாக உறவுப்பாலத்தை மேம்படுத்துவர். இந்நிகழ்ச்சி மிக சந்தோசமான சிறப்பான நிகழ்ச்சியாகும்.


எருதுகட்டு, எருதுகட்டு திருவிழாவில் எருது என்ற காளையை ஒரு வடத்தில் கட்டி அவிழ்த்து விடப்படும். பிறகு அனைத்து காளைகளும் அவிழ்க்கப்பட்டு மஞ்சுவிரட்டு போல் நடத்தப்படும். இது இளைஞர்களின் வீர விளையாட்டு என்பதால் இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு வெகுவிமரிசையாக நடத்தப்படும்.


மயில்ராயன் கோட்டை நாடு மாம்பட்டி கிராமம் M.வலையபட்டியில் எழுந்தருளி உள்ள வழி விடு விநாயகர் திருக்கோவில்












மாம்பட்டி கிராமத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்கள் 











விநாயகர் ஆலயம்:


விநாயகர் மாம்பட்டியில் எழுந்தருளி அருள்பாளிக்கிறார். இக்கோவிலின் மற்றுமோர் சிறப்பு சிவபெருமானும் லிங்கமாக அருள்பாளிக்கிறார் கோவில் எதிரில் கோவில் ஊரணியும் உள்ளது.


மந்தையகாளி கோவில்:


மந்தையகாளி கோவில் மாம்பட்டி மந்தையில் எழுந்தருளி அருள்தருகிறார். மிகவும் தச்சுருவான தெய்வம், இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்து விஷேச பூஜைகள் நடைபெறும்.


காடுகாவலர் கோவில்:


கிராமத்தின் காவல் தெய்வமாகவும் மணிமுத்தாறு கரையில் காட்டுக்குள் எழுந்தருளி அருள்பாளிப்பதால் மூலவர் காடுகாவலர்சுவாமி என்று அழைக்கப்படுகிறார் என்பது நம் முன்னோர்கள் கூற்று. சுவாமிக்கு வெள்ளானைக்காரர் என்ற மற்றுமொரு பெயரும் உண்டு.


காடுகாவலர் சுவாமி கரந்தமலையில் இருந்து ஒரு ஐயரால் பச்ச மண்பானையில் மூலமாக கொண்டுவரப் பட்டதாகவும் காடுகாவலருக்கு தற்போது உள்ள இடத்தை விரும்பி ஐயரை அடித்து ஊர் பெரியவர்களுக்கு கனவில் தான் எழுந்தருளி உள்ள இடத்தை கூறி திருக்கோவில் எழுப்பப்பட்டு அருள்பாளிப்பதாக வரலாறு.... கோவிலின் முகப்பில் வெள்ளானை ஒன்று கம்பீரமாக நிற்கிறது.


கரந்தமலை ஐய்யனார்கோவில்:


கரந்தமலை ஐய்யனார் காடுகாவலர் கோவிலுக்கு சற்று வடகிழக்கில் முல்லியக்கரையில் அருள்பாளிக்கிறார்.


புரவிஎடுப்பு திருவிழா:


கிராமத்தின் முக்கிய திருவிழாவாக புரவிஎடுப்பு திருவிழா கொண்டாடப்படுகிறது. புரவிக்குதிரைகள் மற்றும் யானை மாம்பட்டி மந்தையில் செய்யப்பெற்று கால் கட்டி நாடகம் நடத்தப்பெறும். அடுத்த நாள் புரவிகள் தூக்கி காடுகாவலர் கோவில் வழியாக சென்று கரந்தமலை ஐய்யனார் கோவிலில் செலுத்தப்படும். 


அன்றும் மந்தைதிடலில் நாடகம் நடைபெறும். இரண்டு நாள் திருவிழா வெகு விமரிசயாக நடக்கும்.


வைகாசிவிசாகத் திருவிழா:


மயில்ராயன்கோட்டைநாடு வடவன்பட்டியில் எழுந்தருளி உள்ள பொன்னாவிடைச்செல்வி பிரியாவிடை நயினார் அவர்களுக்கு 10நாள் திருவிழா நடக்கும் அதில் 10-ம் மண்டகபடி அன்று பொன்னாவிடைச்செல்வி பிரியாவிடை நயினார் சுவாமி மாம்பட்டி கிராமத்திற்கு வந்து மணிமுத்தாற்றில் தீர்த்தம் ஆடி மாம்பட்டி கிராம தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளி அன்று இரவு நடத்தப்பெறும் நாடகத்தை கண்டுகழித்து காலையில் திரும்ப மயில்ராயன்கோட்டைநாடு வடவன்பட்டியில் எழுந்தருள்வதோடு திருவிழா முடிவடையும்.




ஜெயங்கொண்டநிலை கிராமத்தின் கோவில்கள் மற்றும் திருவிழாக்கள் 














ஸ்ரீமந்தை கருப்பையா சுவாமி :


மந்தை கருப்பையா சுவாமி மயில்ராயன்கோட்டைநாடு ஜெயங்கொண்டநிலை கிராமத்தின் காவல் தெய்வமாகவும் கிராமத்தின் பொதுவான தெய்வமாகவும் கேட்கும் வரங்களை வழங்கும் தெய்வமாகவும் விளங்குகிறார். மந்தை கருப்பையா சுவாமி கோவிலில் தான் ஜெயங்கொண்டநிலை கிராமத்தின் திருவிழாக்கள் மற்றும் பஞ்சாயத்துகள் அனைத்தும் நடைபெறும்.


ஸ்ரீகொசத்தி அம்மன் கோவில் :


கொசத்தி அம்மன் மயில்ராயன்கோட்டைநாடு ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் எழுந்தருளி சக்தியுடன் கிராம மக்களுக்கு அருள்பாளித்து கொண்டுருக்கிறார்.

கொசத்தி அம்மன் தெய்வம் ஒரு சிறு குடிசைக்குள் எழுந்தருளியுள்ள சக்தி வாய்ந்த தெய்வமாகும் இக்கோவிலில் நடைபெறும் செவ்வாய் பொங்கல் சிறப்பான ஒரு திருவிழா ஆகும்.

ஸ்ரீபெருமாள் சுவாமி கோவில் :


மயில்ராயன்கோட்டைநாடு ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் ஸ்ரீபெருமாள் சுவாமி எழுந்தருளி அழகாக அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார்.

இப் பெருமாள் சுவாமி கோவிலில் கார்த்திகைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

திருவிழாக்கள்:


கார்த்திகைத் திருவிழா:

கார்த்திகைத் திருவிழா மயில்ராயன் கோட்டைநாடு ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் எழுந்தருளி உள்ள பெருமாள் கோவிலில் வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெறும்.

செவ்வாய் பொங்கல் திருவிழா:


செவ்வாய் பொங்கல் திருவிழா மயில்ராயன் கோட்டைநாடு ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் எழுந்தருளி உள்ள கொசத்தி அம்மனுக்கு ஜெயங்கொண்ட நிலை கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைப்பர் இத்திருவிழா ஆவணி மாதம் நடைபெறுவதால் ஆவணிப் பொங்கல் என்றும் அழைப்பர்.



மயில்ராயன்கோட்டைநாடு அழகமாநகரி கிராமத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்கள் 










ஸ்ரீஅழகியநாயகிஅம்மன் ஆலயம்:


அழகியநாயகிஅம்மன் ஆலயம் மயில்ராயன்கோட்டைநாடு அழகமாநகரி கிராமத்தில் எழுந்தருளி வேண்டும் வரம் தரும் தெய்வமாக அருள்பாளிக்கிறார்.


அழகமாநகரி கபடி:



மயில்ராயன் கோட்டை நாடு அழகமாநகரி கிராமத்தில் நாட்டுக் கபடி என்று ஒரு விளையாட்டு வருடா வருடம் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நமது மயில்ராயன் கோட்டை நாட்டில் உள்ள பத்து கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் தம்தம் கிராமத்தோடு இணைந்து விளையாட வேண்டும்.
இந்த நாட்டுக் கபடி அமைதியாக அருமையாக நடத்த பெற்று பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படும்.


ஏரியூர் கிராமத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்கள் :


மயில்ராயன்கோட்டைநாடு ஏரியூர் கிராமம் அக்காலம் முதலே வியாபாரம் நிறைந்த ஒரு சிறு நகரமாகவே திகழ்கிறது.

















ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம்:


ஏரியூர் கிராமத்தில் சேங்காய் ஊரணிக்கரையில் வீற்றிருந்து அருள்பாளித்து கொண்டிருக்கிறார் செல்வ விநாயகர்.


ஸ்ரீமந்தையகாளி கோவில்:


ஏரியூர் கிராமத்தின் மத்தியில் உள்ள மந்தை திடலில் அமைந்து ஊரைக்காக்கும் தெய்வமாகவும் கேட்கும் வரத்தை வழங்கும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் திகழ்கிறது ஸ்ரீமந்தையகாளி தெய்வம். இங்கு வாரந்தோறும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மக்கள் கோழிபூஜை கொடுத்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.


ஸ்ரீமலைமருந்தீஸ்வரர் ஆலயம்:


ஸ்ரீமலைமருந்தீஸ்வரர் ஆலயம்  ஏரியூர் கிராமத்தில் உள்ள ஏரிமலை மீது அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக மருந்தீஸ்வரர் எழுந்தருளி அருள்பாளிக்கிறார்.

இராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்தபோது, இங்கு, அம்மலையின் சிறு குன்றுகள் சிதறுண்டன. அந்த மலை மீது ஈஸ்வரன் குடிகொண்டதால், இக்கோயிலில் மலைமருந்தீஸ்வரராக காட்சியளிக்கிறார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. இங்கு பங்குனி உத்திர விழா சிறப்பு. இக்கோயில், மருதுபாண்டியர்கள் காலத்தில் திருப்பணி நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம், முனிநாதசுவாமி, பர்வதவர்த்தினிஅம்மன், விநாயகர், பாலதண்டாயுதபாணி, பைரவர்,கருப்பர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன.

ஸ்ரீஅம்மன் கோவில்:


வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் மலைமருந்தீஸ்வரர் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்மன் பூச்சொரிதல் விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.


ஸ்ரீகல்குளத்துஐயனார்  , ஸ்ரீகாளிகாபரமேஸ்வரி ஆலயம்:


இக்கோவிலில் ஸ்ரீகல்குளத்துஐயனார் தனி சன்னதியாகவும் ஸ்ரீகாளிகாபரமேஸ்வரி தனு சன்னதியாகவும் எழுந்தருளி அருள்பாளிக்கிறார்கள்.


கல்குளத்துஐயனார் சன்னதியில் விநாயகரும்,முருகரும் அருள் தருகின்றனர். ஸ்ரீகாளிகாபரமேஸ்வரி தனி சன்னதியில் கையில் திரிசூலத்தோடு காட்சி தருகிறார். மிகவும் தச்சுருவமான மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக மக்களால் கல்குளத்துகாளியாத்தாள் என அழைக்கப்படுகிறார் 

ஸ்ரீகாளிகாபரமேஸ்வரி அன்னை. மேலும் முன்னோடிக்கருப்பு, பெரியகருப்பு, சின்னக்கருப்பு, பதினெட்டாம்படிகருப்பு, சர்ப்பகன்னிகள், ஆஞ்சநேயர், பைரவர் என தனித்தனி சன்னதியில் அருள்பாளிக்கிறார்கள்.

ஸ்ரீகலுங்குஐயனார் ஆலயம்:


ஸ்ரீகலுங்குஐயனார் கோவில் ஏரிக்கண்மாய் கலுங்கில் அமைந்துள்ளதால் கலுங்குஐயனார் எனப் பெயர்பெற்றது.

கலுங்குஐயனார், காளியாத்தாள், முன்னோடிக்கருப்பு, பெரியகருப்பு, சின்னக்கருப்பு, பதினெட்டாம்படிகருப்பு, சர்ப்பகன்னிகள், ஆஞ்சநேயர், பைரவர் என இக்கோவிலிலும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாளிக்கிறார்கள்.
இக்கோவிலில் பங்குனிஉத்திரத்திருவிழா அன்று பக்தர்கள் காவடி எடுத்து தீமிதித்து தம் நேர்த்திக்கடனை செழுத்துவார்கள். இத்திருவிழா இக்கோவிலின் சிறப்பு.

அம்மன் பூச்சொரிதல் விழா:


ஏரியூர் அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா மாசி மாதம் நடைபெறும். அன்று அம்மன் பூக்களாள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுசென்று மந்தையில் எழுந்தருள்வார். மக்கள் பூக்களை பூத்தட்டில் வைத்து காணிக்கையாக செழுத்துவர். பின் ஏரியூரில் உள்ள சீரணி அரங்கத்தில் நாடகம் நடைபெறும். பின் அம்மன் ஊர்வலமாக கொண்டுசென்று கோவிலில் எழுந்தருள்வார்.


பங்குனி உத்திரத்திருவிழா:


பங்குனி உத்திரத்திருவிழா பத்துநாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பத்துநாளும் பத்து மண்டகப்படி உண்டு. பத்துநாளும் ஸ்ரீமலைமருந்தீஸ்வரர் மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பிறகு மந்தையில் எழுந்தருள்வார். அங்கு பத்துநாளும் நாடகம்,கச்சேரி போன்றவை நடைபெறும். 9-ம் நாள் திருவிழாவாக ஸ்ரீமலைமருந்தீஸ்வரர் கோவிலில் காவடி எடுப்பு நடைபெறும். 10-ம் திருவிழாவாக ஸ்ரீகலுங்குஐயனார்கோவிலில் காவடி எடுப்பு தீமிதித்திருவிழாவோடு நிறைவுபெறும்.


மயில்ராயன்கோட்டைநாடு நாமனூர் கிராமம். நாமனூர் கிராமத்தில் உள்ள கோவில்கள்












நாமனூர் கிராமம் நாமனூர், பெருமாள்பட்டி, லெட்சுமிபுரம், கருத்தம்பட்டி,அம்மச்சிபட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. நாமனூர் கிராமத்தில் எண்ணற்ற கோவில்கள் இருந்தாலும் முக்கியமான கோவில்கள்


ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயம்:


மயில்ராயன்கோட்டைநாடு நாமனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் கோவில் கொண்டு கிராம மக்களுக்கு வேண்டும் வரங்களை அளித்து வருகிறார். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இருக்கிறார் இந்த சித்தி விநாயகர்.


ஸ்ரீமலைகோலி அம்மன் ஆலயம்:


மயில்ராயன்கோட்டைநாடு நாமனூர் கிராமம் அம்மச்சிபட்டிக்கு அருகாமையில் வனப்பகுதியில் வீற்றிருக்கும் தெய்வம் மலைகோலிஅம்மன்.


ஸ்ரீபழங்குலத்து ஐயனார் கோவில்:


மயில்ராயன்கோட்டைநாடு நாமனூர் கிராமம் லெட்சுமிபுரம் அருகாமையில் வனப்பகுதியில் கோவில் கொண்டுள்ள தெய்வம் ஸ்ரீபழங்குலத்துஐயனார். ஸ்ரீபழங்குலத்துஐயனார் காவல் தெய்வமாக இருந்து அருள்பாளித்து கொண்டிருக்கிறார்.



























பதினாலு கள்ளர்நாடுகளில் தொன்மையான நாடான மயில்ராயன்கோட்டை நாடு நாமனூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டை துவக்கி வைக்க மேளதாள வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி புறப்பட்ட நாட்டு அம்பலகாரர்









மயில்ராயன்கோட்டை நாடு தம் மூதாதையர்கள் வகுத்துவைத்த வாழ்வியல் நடைமுறைகளை தம் சந்ததியினருக்கும் பக்குவமாக கடத்துகிறார்கள். உதாரணத்திற்கு இறந்த வீடுகளில் நடைபெறும் சம்பிரதாய முறைகள் ஒன்றே போதும், அதில் பங்களிப்பு, சமுத்துவம், மருத்துவம், ஒழுக்கம், ஆத்மார்த்தமான அன்பு அனைத்துமே ஒளிந்திருக்கும்.

மேல் சட்டை அணிவதில்லை


துக்க வீடுகளில் ஆண்கள் மேல் சட்டை அணிவதில்லை. காரணம் அழிக்கும் கடவுளான சிவனின் செயலால் நடந்த இறப்பு சம்பவத்தின் முன்னே அனைவரும் சமம். இங்கே ஆண்ட மன்னனாயினும், அடிமை சேவகனாயினும் அனைவரும் சமம் என்பதோடு, தான் எங்கிர அகம்பாவத்தை மேல்சட்டையோடு கழற்றி வைத்துவிட்டு இறந்த ஆன்மா இறைவனோடு ஐகியமாக அனைவரும் ஒன்றிணைந்து பிரார்திப்போம் என்பதற்காகவே சட்டை அணிவதில்லை.

கை நிறவுதல் 
இறந்தவர் வீட்டின் உரிமைக்குறிய பங்காளிகள் துக்கம் விசாரிக்க வருபவரை மறியாதை நிமித்தம் எழுந்து நின்று, தம் கைகளை நீட்டி உள்ளங்கை திறந்துவைத்து வரவேற்பர். வருகிறவர்களும் தனது இரு கைகளாலும் நிற்பவர்கள் கைகளை அழுத்தி பிடித்து விட்டு செல்வர். இதற்கு காரணம் இதோ நாங்கள் வந்துவிட்டோம் எதற்கும் கலங்கவேண்டாம். ஆகவேண்டிய காரியங்களை தைரியமாக பாருங்கள் என்பதற்கான சான்றாக இந்த நிகழ்வு அமைகிறது. அதேபோல் இறப்பு என்பது யாரும் எதிர்பார்க்காத சம்பவம். அங்கே கையில், மடியில் காசுபணம் இல்லாமல் இருப்பதும் சகஜம். வசதிபடைத்தவர்கள் ஏழை உறவினருக்கு அந்த இக்கட்டான தருணத்தில் சத்தமில்லாமல் பணம்கொடுத்து உதவிக்கொள்வது இங்கே சர்வசாதாரணம். அதற்காகவே இந்த ஆதரவு நிகழ்வான கைநிரவுதல்.

புகையிலை பரிமாறுதல். 

துக்கம் விசாரிக்க வந்து அமர்ந்தவுடன் அனைவருக்கும் புகையிலை பரிமாறப்படும். அதன்காரணம் அந்தக்காலத்தில் இறந்தவரின் உடலை பதப்படுத்தும் குளிர்சாதணப்பெட்டி ( ப்ரீசர் பாக்ஸ்) கிடையாது. ஆகவே டெட்பாடியில் இருந்து பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்தொற்று கிருமிகள் வெளியேற வாய்ப்புண்டு. அதனால் புகையிலை ஒரு கிருமி நாசினி (ஆன்டிபயோடிக் மெடிசன்) மருந்து என்பதால் அதை கொடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்து சிறிது மூக்கிலும் உருஞ்சிக்கொள்ள செய்தனர்.

வைக்கோல் விரிப்பு 




எவ்வளவு பெரிய சீமான் வீட்டு எளவாக இருந்தாலும், தரையில் வைக்கோல் விரித்து அதில் அமர்ந்துதான் காரியங்கள் நடைபெருகிறது. காரணம் துயரம் நிறைந்த இடத்தில் சமதர்மம் நிலவவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கம்தான். அண்ணன் பெரிய பணக்காரன், அவன் வீட்டில் பட்டு கம்பளம் விரிக்கலாம் அதே நேரத்தில் அவனது தம்பி ஒரு ஏழை அதை அவனால் செய்யமுடியாமல் போய்விடும். அப்போது ஒருதாய்ப்பிள்ளைகளில் ஒருவன் மனதளவில் கூனிக்குருகி போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.

பரிவட்டம்

இறந்தவரின் மூத்த மகனை அரியனையில் அமரவைத்து பத்து ஊர் அம்பலகாரர்கள் மற்றும் நாட்டார்கள் முன்னிரிலையில் பரிவட்டம் கட்டுகிறார்கள். இதற்கு காரணம் இந்த வீட்டில் இதுவரை அரசாட்சி புரிந்து வந்தவர் (தந்தை அல்லது தாய்) தவறிவிட்டார் ஆகவே இனிமேல் அந்தப்பொருப்பினை தலைமகனான இவரே ஏற்கிறார். இவரது ஆலோசனப்படியே இந்தக்குடும்பம் இனிமேல் வழிநடத்தப்படும் என்பதற்கு அத்சாட்சியாக இந்த முடிசூட்டு வைபவம் நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்வருக்கு பரிவட்ட மறியாதை முடிந்த கையோடு வந்திருக்கும் அனைத்து நாட்டார்களும் பரிவட்ட தலைபாகை கட்டிகொள்ள வேண்டும். காரணம் அனைவரும் சம அந்தஸ்து உள்ளவர்களே, யாரும் யாருக்கும் தாழ்தவரில்லை எனும் மறியாதையை நிலைப்படுத்தவே அனைவரும் அவரவர் கட்டிக்கொள்கின்றனர்.

பிறநாட்டு  நாட்டார் மறியாதை 

இந்த நிகழ்வில் விபூதி, வெற்றிலை பாக்கு பிரயோகம் செய்து வந்திருக்கும் அனைவருக்கும் மறியாதை செய்யப்படும். அந்தவகையில் கள்ளர்குடிகள் குழுக்களாக பிரிந்து பல நாடுகளாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி யாரேனும் இந்த நாட்டை தவிர்த்து பிரநாட்டில் இருந்து வந்திருந்தால் அவர்களுக்கே முதல்மறியாதை செய்யப்படும். அதன்பின் பத்து ஊர் அம்பலகாரர்களை தொடர்ந்து அனைவருக்கும் மறியாதை செய்கிறார்கள். காரணம் இந்தமக்கள் விருந்தோம்பலையும், விருந்தினர்களை மறியாதை செய்வதையும் தம் இருகண்ணென நினைப்பவர்கள்.

விருந்து

எல்லாம் முடிந்தபின் இலைக்கட்டு மற்றும் சொம்பில் தண்ணீர் வைத்து இருவர் சபையில் கும்பிட்டு விழுந்து அனைரையும் சாப்பிட அழைப்பர். சாப்பிட்டு முடித்ததும் வாழையிலையை உட்புறமாக மடக்காமல் வெளிப்புறமாக மடக்குவர். இதன்காரணம் இனிமேல் இதுபோன்ற விருந்து வைபவம் இந்த வீட்டில் நடக்ககூடாது ஆண்டவனே மாறாக இலையை உள்னோக்கி மடக்கும் சுபநிகழ்ச்சி விருந்து நடைபெறச்செய் என்பதற்காகத்தான்.

அகத்தி கீரை 

விருந்தில் அகத்திக்கீரை கட்டாயம் இடம்பெறும். காரணம் இறந்தவர் வீட்டிலிருந்து ஏதேனும் நோய்தொற்று பரவி அது உணவில் கலந்திருந்தாலும் இந்தக்கீரையின் கசப்புத்தன்மை அனைத்துவிதமான ஒவ்வாமை நோய்களையும் செரிமானம் செய்துவிடும். கொரோனா எனும் கொடிய வைரஸைக்கூட மழுங்கச்செய்யும் பவர் இந்தக்கீரைக்கு உண்டு என்று தற்போது இயற்கை மருத்துவர்கள் கூறுவதை கேட்கும்போது இந்த பழந்தமிழர்களின் முன்அறிவை நினைத்து பெருமையாக இருக்கிறது.


நன்றி : 

உயர்திரு. வெற்றிவேல் தேவன் 
உயர்திரு. கலைமணி  அம்பலம்
உயர்திரு. வல்லாளதேவன் - கள்ளர்நாடு அறக்கட்டளை
முகநூல் நண்பர்கள்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்