திங்கள், 23 ஜூலை, 2018

அஜீஸ்நகர் ஒரு வரலாறு


உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் (செட்டில்மென்ட்) ஶ்ரீமாரியம்மன் ஆலய திருவிழாவில்  தலைவர் திரு G.M.ஶ்ரீதர் வாண்டையார்





ஓர் ஊர் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகிறது. அதற்கு ஒரு பிரம்மாண்டமான விழா என்றால் யாருக்கும் அந்த ஊரைப்பார்க்க ஆவல் வரும்! .அப்படியான ஊர் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள "அஜீஸ் நகர்"! இங்கு குற்றப்பரம்பரையினர் என்று பழிவாங்கப்பட்ட 200 குடும்பங்கள் இருக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து ஆங்கிலேய கலெக்டர் மார்டின் வின்ஸ்லோவால் மதுரையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள்.


1911 ஆம் ஆண்டு, மதுரையிலிருந்து கால்நடையாக 400 கி.மீ. அழைத்துச் சென்று அப்போதைய தென்னார்க்காடு மாவட்ட கலெக்டர் அஜீஸ்தீனிடம் மதுரை மாவட்ட வெள்ளையர் விசுவாசி காவலர்கள் ஒப்படைத்தனர். விருத்தாசலம் தாலுகா, கம்மாபுரத்தில் 1377 ஏக்கர் வனத்துறை நிலத்தில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். இது மதுரைப்பகுதியில் இவர்கள் வைத்திருந்த நிலத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இவர்களிடம் இருந்து நகைகளையும்,மதுரைக்காவல் உரிமையையும் பெற்றுக்கொண்டு அதற்கு பரிசாக (?) குடிசைவீடுகளை அந்த வனத்தில் கட்டிக்கொடுத்தனர். ஊரைச்சுற்றி முள்வேலி, ஒவ்வொருவருக்கும் சிறிது விவசாய நிலம், இப்படி ஓரிடத்தில் திறந்தவெளி சிறைச்சாலைபோல அடைக்கப்பட்டனர் அம்மக்கள். இவ்வாறு இவர்களின் குடியேற்றப்பகுதிகள் 5இடங்களில் உருவாக்கப்பட்டன. ஆந்திராவில் 2இடங்களும், தமிழகத்தில் ஓட்டேரி, பம்மல், மற்றும் நெய்வேலி அருகில் கம்மாபுரத்திலும் குடியமர்த்தப்பட்டனர்.
தங்கள் சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டவர்கள், தங்கள் மண்ணிலேயே அகதிகளைப் போல குடியமர்த்தப்பட்ட ஏழு நகர்களில் 'அஜீஸ்நகரும்' ஒன்று. கம்மாபுரம் குடியிருப்புதான் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை தொடக்கத்திற்குபின் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள அஜீஸ்நகருக்கு மாற்றப்பட்டது.

காலங்காலமாக துணிச்சலையும், அடுத்தவர்களுக்கு உதவுதலையும் தலையாய அறமாகக்கொண்ட மதுரைபிரமலைக்கள்ளர்கள். இரவுநேரத்தில் கண்துஞ்சாது அடைக்கலம் கொடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாத்த காவற்கூட்டம். சேர சோழ பாண்டியர் காலத்தில் உயர்ந்த அந்தஸ்திலும், தான் சார்ந்த அரசனைச்சுற்றி பாதுகாக்கும் தற்கொலைப்படையாகவும் இருந்து வந்த உன்னத சமூகத்தின் நிலை காலச்சக்கரத்தின் சுழற்சியில் தடுமாற்றம் கண்டது.

யார் இந்த குற்றப்பரம்பரையினர்? அவர்கள் மட்டும் இந்த நாட்டில் என்ன குற்றம் செய்தார்கள்? இந்த மண்ணின் மக்களின் வாழ்வுமுறை அறியாத ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சுமத்திய குற்றப்பரம்பரை என்னும் அடையாளம் ஏன் ஏற்பட்டது? சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த மக்கள் தங்கள் சொந்த சாதி சனங்களை விட்டு ஏன் வாழ்கிறார்கள்? போன்ற கேள்விகள் ஒவ்வொருவருக்குள்ளும் எழுவது இயல்பு.

ஆங்கிலேயரும் மதுரையும் !

ஆங்கிலேயர்கள் 1800 களில் மதுரைப்பகுதியை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தங்கள் சொல்லை ஏன்? எதற்கு? நியாயம், அநியாயம் என்று சிந்தனை செய்யாத கிளிப்பிள்ளை காவல்துறையை அப்போது பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்தியது. அதுவரை ஸ்தலக்காவல், தேசக்காவல், பகுதிக்காவல் உரிமைகள் பெற்றிருந்த ஓரினம் தனது பாரம்பரிய கட்டுமானத்தில் விரிசல்கள் கண்டது. 1870 ஆம் ஆண்டு வரையிலும் பிரிட்டிஷ் போலீஸ் துறையால் தீர்க்கமுடியாத குற்றங்களை சில பிரமலைக்கள்ளர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்காக அவர்கள் பெற்றுக் கொண்ட பரிசிற்கு பெயர்தான் துப்புக்கூலி.

1870 ஆண்டு வாக்கில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அதிகாரம் பெற்று விட்ட நவீன ஏவல் துறை. (காவல்துறை?)குற்றம் நடந்தால் கண்டுபிடிக்க திணறியது. இதனால் குற்றவாளிகள் அல்லாத நிரபராதிகள் குற்றம் சுமத்தப்பட்டு சிறைகளில் அடைபட்டனர். பின்னர் அவர்கள் குற்றம் புரியவில்லை என விடுவிக்கப்பட்டனர். இப்படி தடுமாறிய நேரத்தில்தான் தமிழர்கள் தங்களது பழங்காலமுறை காவல்தொழிலை திறமையான முறையில் நடத்தி வந்தனர். இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் எரிச்சலுற்றனர். இதனால் பல போலீஸ் சூப்பிரெண்டுகளும், கலெக்டர்களும் பிரமலைக்கள்ளர் சமூகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டனர்.

இந்த நேரத்தில்தான் இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் திட்டமிட்டு ஒரு செயலை அரங்கேற்றினர். கோள்சொல்லிகளின் மூலமாக தங்களுக்கு கிடைத்த தகவல்களைவைத்து 1871ல் குற்றப்பரம்பரை சட்டம் என்று ஓர் சட்டத்தை கொண்டுவந்தனர். இதில் 167 இனங்களின் மேல் நடவடிக்கை எடுத்தனர். ஒருங்கிணைந்த இந்தியா, பர்மா,இலங்கை, பகுதிகளில் வாழ்ந்த இந்த இனங்களை "குற்றப்பரம்பரையினர்" என ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். சட்டத்தை இயற்றிவிட்டு பல ஆண்டுகளுக்கு அமைதிகாத்தனர்.

1906 ஆம் ஆண்டு மதுரைப்பகுதியில் ஏற்பட்ட சில முக்கியமான களவுகளை கண்டுபிடிக்க முடியாத பிரிட்டிஷ் போலீஸ் கையைப்பிசைந்தது. துப்புக்கூலி கொடுத்து உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர்களின் அதிகார மமதை இடம்தரவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜி.இ.பாட்ரீஸிடம் பிரமலைக்கள்ளர் பற்றி கோள் மூட்டப்பட்டது. அவர் கலெக்டரிடம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். என கேட்டுக்கொண்டார்.1871ல் உருவாக்கப்பட்டு 34 ஆண்டுகளாக ரிக்கார்டு தூண்களில் தூங்கிய சட்டப்புத்தகத்தை அன்றைய மதுரை கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ தூசிதட்டி எடுத்தார்.

அதுவரை குற்றப்பரம்பரை என்றால் என்ன என்பது தெரியாத காலங்காலமாக பிரமலைக்கள்ளர்கள் சமூகத்தினோடு வாழ்ந்து வந்த, பிராமணர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள், ஆதிதிராவிடர்கள் போன்ற பிற சாதியினர் பிரமலைக்கள்ளர்களை குற்றப்பரம்பரையினர் என்று சொல்லவில்லை. ஆனால் 200 ஆண்டுகளாக வாணிபம் செய்ய வந்து இந்தியாவைக்கொள்ளையடித்த ஆங்கிலேயர் சில சமூகங்களுக்கு குற்றப்பரம்பரை என பட்டம் கட்டியதுதான் கொடுமை. எந்த விசாரணையும் இன்றி விளக்கமும் இன்றி 250 குடும்பங்கள் திருமங்கலம் தாலுகாவிலிருந்து வெளியேற ஆங்கிலேய கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ உத்தரவிட்டார்.

எங்கே போகிறோம் என்று தெரியாது!... பினாங்கா? அந்தமானா? என்று மருகிய 250 குடும்பங்கள் பச்சிளம் குழந்தைகளோடும், தமது குழந்தைகளைப் போல நேசித்த கால்நடைகளோடும், தங்கள் எதிர்காலம் என்னவென்று அறியாமல் கதிகலக்கத்தோடு பிரிட்டிஷ் ஏவல் துறையால் பலத்த பாதுகாப்போடு மதுரையில் இருந்து வடக்கு திசையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. புறப்படும்முன் பலர் தத்தம் குலதெய்வம் பிடிமண்ணையும், சிலர் குலதெய்வம் சிலையையும், கையில் எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த குலதெய்வம் மட்டுமே இனி அவர்களுக்கும் மதுரைக்கும் இருக்கும் பந்தம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.அவர்களுக்கு தத்தம் குதிரைகளையோ, வண்டிகளையோ பயணத்திற்கு பயன்படுத்த ஆங்கிலேயர் அனுமதி மறுத்தனர்.

தென்னார்க்காடு கலெக்டர் அஜீஸ்தீனிடம் மதுரை கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ தான் அனுப்பிய குடும்பங்கள் பற்றிய தகவல்களை அளித்தார். அனைத்தையும் இழந்து வறண்டு போய் வந்திருந்த மக்களுக்கு அவர்கள் இனி வாழப்போகும் பகுதியாவது அதிக ஈரமானதாக இருக்கட்டும் என்று நிலத்தினின்று பீறிட்டு வருகிற ஆர்ட்டீசியன் நீரூற்றுகளைக் கொண்ட பகுதியை இம்மக்களுக்கு வாழிடங்களாக அளித்தார், பிரிட்டிஷ் கலெக்டர். அஜீஸ்தீன். ஆங்கிலேய அதிகாரி ஏடன் இவர்களுக்கான பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

கிறிஸ்தவ பிரிட்டிஷ் மதபோதகர்களால் இவர்களுக்கான கல்வி அளிக்கப்பட்டது. கல்வியுடன் இவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கும் சிலர் உள்ளாயினர். மதம்மாற மறுத்தவர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. இந்த நிலை அவர்களுக்கு திருவேங்கடாச்சாரி எனும் பொருப்பாளர் வரும்வரை தொடர்ந்தது. திருவேங்கடாச்சாரி பொறுப்பாளராக பதவியேற்றதும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தினார். இது அவர்களை இந்துக்களாக தொடர வழிவகுத்தது. பின்னாளில் இவர்கள் இருக்கும் இடம் நிலக்கரி கொண்ட பெரும் புதையல் என்று கண்டறிந்து அவர்களிடம் அந்நிலம் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை அமைய கையகப்படுத்தப்பட்டது. இவர்களுக்கான புதிய "அஜீஸ்நகர் " ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை அமைய நிலம் கொடுத்ததால் இவர்களுக்கு அந்நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. சோகத்திலும் உருவான ஒரே மகிழ்ச்சிகரமான விடயம் இது மட்டுமே. இன்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இம்மக்கள் தமது நூற்றாண்டை கொண்டாடினர். இவர்கள் தமது இருப்பிடங்களில் ஆங்கிலேயர்களால் அனுபவித்த கொடுமைகளை இந்த ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது.

இம்மக்கள் தமது செட்டில்மெண்ட் பகுதிகளான மற்ற ஆறுபகுதிகளில் பெண் கொடுக்க எடுக்க செய்கின்றனர். தம் முன்னோர்கள் வாழ்ந்த மதுரை பூமியை மனதிற்குள் நினைத்து புழுங்கிக்கொண்டே மாறாத வடுக்களுடன் வாழ்கிறார்கள்.


நன்றி:

அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.






சால்வேசன் ஆர்மி (Salvation Army) என்ற தன்னார்வு அமைப்பு

குற்ற பழங்குடியினரை நல்வழி படுத்த 3 செட்டில்மெண்ட்க்கு வந்த ரட்சனியப்படை என்ற சால்வேசன் ஆர்மி (Salvation Army) என்ற தன்னார்வு அமைப்பு.

1865-ம் ஆண்டு லண்டனில் ஜெனரல் வில்லியம் பூத் எனபவரால் ரட்சனியப்படை என்ற சால்வேசன் ஆர்மி (Salvation Army) என்ற தன்னார்வு அமைப்பு நிறுவப்பட்ட து.


இந்தியாவில் 1882-ல், முதல் ஜெனரல் வில்லியம் பூத் என்பவரால் ரட்சினியப் படையை நிறுவினார், 1908 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செட்டில்மெண்ட் குடியிருப்பு சட்டத்தின் படி, இந்த சால்வேசன் ஆர்மி, அஜீஸ்நகர், பிரிசிலிநகர், பம்பல் பசும்பொன் நகர் ஆகிய மூன்று செட்டில்மெண்ட் குடியிருப்பை பார்வையிட்டது.

இந்த சால்வேசன் ஆர்மி, மிலிட்டரி போன்று சீருடை, கொடி, பதவிகளைக் கடைப்பிடித்து வில்லியம் பூத், ஜெனரல் என்று தன்னை அழைத்துக் கொண்டு, மிடுக்கான சீருடை அணிந்து கொள்வார். இவரது மனைவி கேத்தரினுக்கு மிலிட்டரி அம்மா (Army Mother) என்ற பதவி. இவரது மூத்த மகன் வில்லியம் பிராம்வெலுக்கு (William Bramwell) சால்வேசன் ஆர்மியில் முக்கிய பதவி. இந்த படையில் கேப்டன், மேஜர், ஜெனரல், சீப் செகரட்டரி, கமிஷனர் என்ற பதவிகள். பெண்களும் பதவியில் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.

அஜீஸ்நகர் செட்டில்மெண்ட்டில் 1916-1919 -ம் ஆண்டுகள் வரை வில்லியம் பிராட்வெல்பூத் உத்தரவால் அனுப்பட்ட சால்வேசன் ஆர்மி, குற்றப்பரம்பரை குடியிருப்பில் தங்கி குறிப்பாக அங்குள்ள மக்களையும், குழந்தைகளை கடுமையான ஒழுக்கம்,கல்வி,தொழிற் கல்வி, பேண்டு வாசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். அந்த கால கட்டத்தில் அஜீஸ்நகர் பேண்டு, கவர்னர் மற்றும் உயர் அதிகாரிகள் வருகையின் போதும் குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் இந்த பேண்டு வாத்தியம் மேற்கிந்திய இசையில் வாசிப்பது மிக,மிக சிறப்பு பெற்றது என்பது குறிப்பிட தக்கது.


அதேபோல் சென்னை பல்லாவரத்தில் உள்ள பம்பல்(பசும்பொன் நகர்) செட்டில்மெண்ட், சென்னை ஓட்டேரி அருகே உள்ள பிரிசிலிநகர் செட்டில்மெண்ட்டிலும் சால்வேசன் ஆர்மி படை சென்னை தலைமையிடத்திலிருந்து, அடிக்கடி வந்து பார்வையிட்டு கடுமையான ஒழுக்கம்,கல்வி, தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர். மேலும் மதமாற்றதிலும் ஈடுப்பட்டனர்.

பிரிசிலிநகர் செட்டில்மெண்ட் மற்றும் பம்பல்(பசும்பொன் நகர்) செட்டில்மெ ண்ட்டை சேர்ந்தவர்கள், சால்வேசன் ஆர்மியிடம் நம்பிக்கைக்கு உரியவராகவும் அன்புக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்த காரணத்தால், சென்னை வேப்பேரி அருகே உள்ள பழைய டவுட்டனில் Salvation Army அலுவலகத்தில் ஆண் பணியாளராகவும் மற்றும் பெண் பணியாளராகவும் பணிபுரிந்து வந்தனர்.

அதற்கு ஆதாரமாக 1941- ம் ஆண்டு சால்வேசன் ஆர்மியில் பணிபுரிந்த ஆண், பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர்களுடன்,பிரிசிலிநகர், பம்பல் பசும்பொன் நகர் செட்டில்மெண்ட்டை சேர்ந்த பணியாளர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

*புகைப்படத்தில் நிற்பவர்கள் தாயார் அம்மாள், சந்திரசேகரன்,தங்கவேலு, ராஜம்பாள். கீழே அமர்ந்து இருப்பவர்கள் அம்மாகண்ணு,பூங்காவனம், ஜெபமணி, நல்லம்மாள்.

இந்த வரலாற்று புகைப்படத்தை வழங்கியவர் பிரிசிலிநகர் செட்டில்மெண்ட் அண்ணன் R. அண்ணாதுரை, முன்னாள் தலைவர், பொதுநலச்சங்கம் மற்றும் சென்னை தி.நகர் பசும்பொன் நுண்கலைக் கழகம் முன்னாள் செயலாளர் மற்றும் இந்நாள் இணை செயலாளர் அவர்கள்.*

தொகுப்பு.

பி.கே.துரைமணி,
சமூக ஆர்வலர்
அஜீஸ்நகர் செட்டில்மெண்ட்
விழுப்புரம் மாவட்டம்.




பொ. ஆ 1655 - மதுரை நாட்டின் தலைவன் திருமலை பின்னத்தேவன்


நாயக்க அரசு, குமரி முனையிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான தமிழரின் நிலப்பரப்பை கைப்பற்றி ஆண்ட ஓர் அரசு, எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி வரி வசூல் செய்து ஆட்சி நடத்திய ஓர் அரசு, தன் அரண்மனைக்கு சில மைல் தொலைவில் இருந்த கள்ளர் நாட்டிலிருந்து எந்த வரியும் வசூல் செய்ய முடியவில்லை.


தொட்டிய நாயக்கர் மதுரையில் ஆட்சி அமைக்கும் போது எதிர்த்து அடித்தனர் கள்ளர் குடிகள்( காலம் கிபி 1560), * Madura - country of kallar caste* என மதுரையை கள்ளரின் நாடாக குறித்த மெக்கன்சி ஒலைச்சுவடிகள்.

கிபி 1654 ல் கள்ளர்களை ஒடுக்க பல முயற்சி செய்த திருமலை நாயக்கன், கள்ளர் நாடுகளை அடக்கி ஒரு பாளையம் அமைக்கமுடியால் தினறியபோது ஒரு சமரசத்திட்டத்திற்கு வந்தான், எட்டு நாட்டிலும் கம்பளி விரித்து அதிகாரம் பன்ன உரிமை கொடுத்து உரப்பனூர் பின்னத்தேவருக்கு பட்டம் கட்டி, மேலும் பின்னத்தேவன், சுந்ததேவனை அழைத்து பல பட்டங்கள் பல பரிசுகள் கொடுத்து நட்பு பாராட்டிய மதுரை கள்ளர் நாடுகளை நட்பு நாடுகளாக மாற்றிக்கொண்டான்.

தருமத்துப்பட்டி செப்பேடு (1655):



மதுராபுரிக்கி கற்த்தறாகிய திருமலை னாயக்கறவற்களுக்கு பெத்த பிள்ளை திருமலைப்புன்னைந்தேவனுக்கு எழுதிக் குடுத்த பட்டயம் செயளு பங்குனி ... சோமவாறத்தில் நாடு யெட்டு வணிகத்துக்கும் கம்பிளி அதிகாரமும் புடிசெம்பும் பட்டமும் முதமையும் பாதகொறடு காளாஞ்சியும் ஆகா யிவளவும் திருமலைப் புன்னைதேவனுக்கு பட்டங்கட்டி ஸ்ரீ யானுக்கு வருமானம் சாதியாற் நாட்டில் வந்தது கம்பிளி போடுகிறபோது பாதக்கணிக்கை 5 வச்சு கண்டு கொள்கிறரது ரெண்டாவது சுந்தத்தேவன் மூணாவது ஒச்சாத்தேவன் திருமலை புன்னைத்தேவனுக்கு அரமனையிலிருந்து 60 பண முடிப்பு குடுத்தனுப்புகிரது ஷியானுக்கு பெண் குளந்தை பிரந்ததக்கு திருமலைப் புன்னியக்காளென்று பேறும் வச்சு தங்கப்பதைக்கமும் போட்டு வீரமடையான் செய்க்கி கிளக்கு கணக்கு மானிபத்துக்கு வடக்கு நாலுசெயி நிலம் நஞ்சை மானிபம் பாக்கு வெத்திலை சிலவுக்கு உச்சப்பட்டி தற்மத்துப்பட்டி ஆக ரெண்டுகிராமம் விட்டுக் குடுத்தது பதினெட்டுப் பட்டிக் கோ னாக்கள் ஆடி தீவாளி சங்கழுந்திக்கி கும்புக்(கு) கிடாய் க னாக்கமாற்கள் பால்க்குடம் நெய்க்குடம் கொண்டு வந்து கண்டு கொள்ளவும் யிந்தப்படிக்கி ராசமானிய ஒப்பம் சாட்சி சிவசங்குராச தொண்டைமான், புதுக்கோட்டை சிவதத்தம்பி, கறுமாத்தூற் கொண்டிரியதேவன் தாம்பூர ப்பட்டயஞ் செய்தவன் ஆசாரி யிந்தப் பட்டயத்தை பின்னோர்கள் அடி அளிவு செய்தால் பிராமணாளைக் கொன்றதோசத்திலுங் காறாங்கோவைக் கொன்ற தோசத்திலு அடைந்து போவாறாகவும் வேணும் சொக்கலிங்கம் மீனம்மாள் துணை முணுசாமிதுணை.



அரையன் பின்னத்தேவர்

பின்னத்தேவர் இந்த எட்டுநாட்டின் தலைவராகவும் (எட்டு நாடு 24 உபகிராமம், 64 பரப்பு நாடு, 128 சிதறல் நாடு), அவர் வாழ்ந்த உரப்பனூர் கிராமம் எட்டுநாட்டின் தலைமை இடமாகக் கருதப்பட்டது. புறமலை நாட்டின் (இராஜதானி) தலைமை கிராமம் இராஜதானி உரப்பனூர்.

திருமலை பின்னத்தேவரின் முன்னோர்கள் கீழ உரப்பனூர் கல்யாண கருப்பசாமி என்று அருள் பெயர் விளங்கும் புன்னூர் அய்யன் கோயிலை தங்களது குலக்கோயிலாக கொண்ட பின்னத்தேவர், கட்டபின்னத்தேவர், காரிபின்னத்தேவர். 


1000 வீட்டிடையர்களின் காப்பாளனாக (காவல் தெய்வமாக) திருமலை பின்னத்தேவன் இருந்தார்.

திருமலை பின்னத்தேவன் வகையறாக்களுக்கு பட்டம் கட்டி செங்கோல் வழங்கும் உரிமை மதுரை வடக்கு மாசி வீதி குருசாமி கோனார் வகையறாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 








A SOUTH INDIAN SUB CASTE BY - DR.LOUIS DUMONT (French Anthropologist)


திருநெல்வேலி ஜில்லாவில் புதுநாட்டில் வாழ்ந்த இடையர்களுக்கு அங்கிருந்த பாளையக்காரன் தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால் அந்தநாட்டு இடையர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு ஓடிவந்து திருமலை நாயகனிடம் அடைக்கலம் புகுந்தார்கள். நாயக்கர் கள்ளர் தலைவன் திருமலை பின்னதேவரை புதுநாட்டு இடையர்கள் ஆயிரம் வீட்டுக்கார்களுக்கு அதிபதியாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்.

இம்மாதிரியாகத் தங்களைப் பரிபாலித்து வரும்படி யாக மன்னனால் நியமிக்கப்பட்ட திருமலைப்பின்னத் தேவர் காலமாகிவிட்டால் அவர் ஸ்தானத்திற்கு வாரிசாக வரும் அடுத்த பட்டக்காரருக்கு முடி சூட்ட வேண்டிய பொறுப்பு இடியர்களுடையது. (மதுரை ஜில்லா கெஜட்டியர்) 

மதுரையில் இராமாயணச்சாவடியிலிருந்து மாரியம்மன் தெப்பக்குளம் வரையிலும் உள்ள இடத்தில் ஆயிரம் வீட்டு இடியர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்கத் தேவர் வசம் ஒப்புவிக்கப்பட்டு அதன்படி வீடுகள் அமைக்கப்பட்டன. இவர்களை இடையர்கள் என்றும் கோனார்கள் என்றும் கோங்கிமார்கள் என்று சொல்வதுண்டு. மதுரைக்கு வடக்கிலும் வடமேற்கில் உள்ள 18 பட்டி (ஊர்கள்) இவர்கள் கன்று காலி ஆடுமாடு மேய்த்துக்குடி வாழ்வதற்கு நாயக்க மன்னர்களால் விடப்பட்டது.

மதுரையில் இராமாயணச்சாவடி மேற்கே உள்ள கிருஷ்ணன் கோவில் கோங்கிமார்களுக்கு சொந்தம். இந்த கோவிலுக்குத் திருமலை பின்னதேவன் பாதுகாவலனாகும். விழாக்காலங்களில் தேவருக்கு பட்டம் பரிவட்டம், பாதகாணிக்கை, தீர்த்தம் துளசி மரியாதையும் உண்டு. இவர்களின் காவல் தெய்வமாக இருந்தார்.


ஆதித்திருமலை பின்னத்தேவரில் இருந்து பாத்து பேர் பட்டம் ஆண்டிருக்கிறார்கள்.


1) ஆதித்திருமலை பின்னத்தேவர்
2) திருமலை பெருமாள் தேவர்
3) திருமலை பின்னத்தேவர்
4) திருமலை மூக்குப்பரி பெரியபாண்டி தேவர்
5) திருமலை பின்னத்தேவர்
6) திருமலை மூக்குப்பரி கலியாணித்தேவர் 
7) திருமலை ஆணைஞ்சித்தேவர் 
8) திருமலை மூக்குப்பரி கலியாணித்தேவர் 
9) திருமலை ஆணைஞ்சித்தேவர் 
10) திருமலை பின்னத்தேவர்

மேலும் தெய்வேந்திர கோத்திரமாகிய திருமலை பின்னதேவனை சேர்ந்த ஆறு தாய் மகன்களும் திருமலை நாயக்கனை சந்திக்கும் போது கீழ்கண்டவற்றை அளித்துள்ளனர்.


1) தங்கத்தால் செய்யப்பட்ட கிளியின் சிலை
2) தங்க பூக்கள்
3) வெள்ளி பூக்கள்
4) அரிசி
5) பணம்
6) பசு
7) ஆடு

இதனை பெற்றுக்கொண்ட திருமலை நாயக்கன் மகிழுந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து குடுத்தார்.

மூக்குப்பரி பட்டம்


கி.பி. 1656ல் மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான் மிகக் கொடியவன். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை நாயக்கர், திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.


அதே நேரத்தில் தன்னரசு படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கும் மூக்குப்பரி என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு திருமலை சேதுபதி என்ற பட்டமும் ராணி சொல் காத்தான் என்ற பெயரும் வழங்கினார்.

தருமத்துப்பட்டி செப்பேடு (1655):






நன்றி: 

உயர்திரு. ஐயா முத்து தேவர் (மூவேந்தர்குலதேவர்சமூகவரலாறு)
உயர்திரு. த. வல்லாளத்தேவர்( கள்ளர் நாடு அறக்கட்டளை )

ஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

திங்கள், 16 ஜூலை, 2018

பொ. ஆ. 1698-1700 இல் மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்த கள்ளர் நாட்டு அரையன்



மதுரையில் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்த பாதரியார்கள், தங்களது மெசினரி ரெக்கார்டுகளில் அக்கால வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.

Father Peter Martin கிபி 1700 ல் அவர் எழுதிய குறிப்புகளில் மதுரை தேவர்கள் பற்றி குறித்துள்ளார்.

மதுரை கள்ளர்கள் மிகவும் பலம்பெற்று திகழ்கின்றனர். இவர்கள் மதுரை மன்னருக்கு கட்டுப்படாமல் தன்னாட்சி செய்து வருகின்றனர்.




சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, கள்ளர்களின் தலைவர், மதுரை நகரை தாக்கி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

பிறகு இரண்டு வருடங்களாக மதுரையை, கள்ளர் தலைவர் ஆட்சி செய்து வந்தார்.

இதனால் நாட்டை இழந்த ராணி மங்கம்மாவின் தளவாய், பெரும்படையுடன் மதுரையை தாக்க தயாரானார். இரவில், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், மதுரையை தாக்கினார். கோட்டையின் ஒரு வாயிலை நான்கு யானைகளை கொண்டு தாக்கினார்.

கள்ளர்கள் போருக்கு தயாராகும் முன்பே பெரும்படையுடன் தாக்கியதால், கள்ளர்களால் சமாளிக்க இயலவில்லை. பல கள்ளர்களின் வீரர்கள்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையை ஆண்ட கள்ளர்களின் தலைவர் (Rebellious Prince), அங்கிருந்து தப்பி, அவரது கள்ளர் நாட்டுப்பகுதியில் வாழத்தொடங்கினார்.

இந்த கள்ளர் தலைவர் கீழக்குயில்குடி பகுதியை சேர்த்தவர். கீழக் குயில்குடி மதுரையின் வடகீழ்திசையில் சமண(அமண) மலை என்ற ஒரு குன்றின் சாரலில் இருக்கின்றது.

திருமலை நாயக்கர் தன்னுடைய ஆட்சி காலத்தில், கள்ளர்களுக்கு பட்டம் கட்டி, மரியாதைகள் அளித்து சுமுகமாக வாழ்ந்தார். ஆனால் அவருக்கு பின் வந்த நாயக்க மன்னர்களால், கள்ளர்களுடன் சுமூக உறவை மேற்கொள்ள இயலவில்லை என்பதற்கு சான்றாக இந்த தகவல் உள்ளது.

1801 இல், மதுரை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதும் கீழகுயில்குடி கள்ளர்கள் எதிராகவே இருந்துள்ளனர். ஆங்கிலேயர்கள், நிலத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளை, உணவுப் பொருட்களைப் பயிரிடாமல், பணப் பயிர் என்று சொல்லப்படும், பருத்தியை விதைக்கச் சொன்னார்கள். அதற்கு விவசாயிகள் மறுத்தனர்.

அப்படி மறுத்த தங்களுக்கு உடன்படாத கள்ளர்கள் மீது, இந்தச் சட்டத்தை தேவையில்லாமல் ஆங்கிலேய அரசு ஏவியது. இதற்காக கீழக்குயில்குடியில் தனியாக நீதி மன்றம் ஒன்று உருவாக்கப் பட்டது. 1911 ம் ஆண்டே தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக „கீழக்குயில்குடி“ என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த ஊர் மதுரையின் காலனிய எதிர்ப்புச் சரித்திரத்தில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. மதுரையில் எது நடந்தாலும் உடனே கீழக்குயில்குடிக்கு காவல்துறை விரைந்து வருவதற்கு வெலிங்கடன் வீதி என்ற பெயருள்ள வீதியே மதுரைப் பகுதியில் முதலில் போடப்பட்ட சீரான வீதியாகும். ஆங்கிலேயருக்கு எதிராக மதுரையில் எது நடந்தாலும், இந்தக் கீழக்குயில்குடி மக்கள் முதலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவர்.

ஐயா ந.மு.வேங்கடசாமி நாட்டார் மதுரைக்கு மேற்கில் உள்ள கீழக்குடி நாடு பற்றி தனது கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் "திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பகநாடு என்னும் இரண்டு நாடுகளைப்பற்றி எழுதியனுப்பினர். அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது 4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும். கற்பக நாடு என்பது 7 மாகாணமும், 30 ஊர்களும் உடையதாகும். முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேதுநாடு, கற்பகநாடு என்னும் பெயர்களால் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப் படுகிறது".


ஆய்வு : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

பொ. ஆ. 1662 - தஞ்சையை காத்த, எதிரிகளால் "காட்டின் அரசன்" என்று போற்றப்படும், நந்தவனம்பட்டி அரையன் மெய்கொண்டான்



திரிபுவன சக்ரவர்த்தின் ஸ்ரீ கோனேரி மெய்க்கொண்டான் குலசேகர தேவன் என்ற பாண்டியன் ஐடில வர்மன் 1475 ல் இத்தமிழ் மண்ணை ஆட்சி செய்தார்.

அது போல அரையன் மெய்க்கொண்டான் தஞ்சை நந்தவனம்பட்டியை 1662 ல் அரையனாக ஆட்சி செய்கிறார்.

கள்ளர்நாடுகளில் ஒன்று கீழத்துவாக்குடி நாடு - நந்தவனப்பட்டி.

கிராமத்தின் அம்பலகாரர் : கண்டியர் பட்டம்.

பொதுக்கோவில்: காமாட்சி அம்மன், முனியாண்டவர்.

மற்றப்பட்டப்பெயர்கள் கொண்ட கள்ளர்கள் :

கூழாக்கியார், கொடும்புரார், சோழங்கர் வாழ்கிறார்கள்.

நந்தவனப்பட்டி (கொற்கைநாடு) அன்னகாமாட்சி அம்மன் ஆலயத்தில் :

விசாத்தேவர்களின் அறப்பணிகள், கண்டியர்கள், கொடும்புறார்கள் மரபினர்களும் அடர்த்தியாக வாழும் ஊர்களில் ஒன்று.







கிபி 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்த பாதரியார்கள், தங்களது மெசினரி ரெக்கார்டுகளில் அக்கால வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.

Father J Bertrand என்பவர் தனது காலத்தில் பதிவு செய்த நிகழ்வுகளை காணலாம்.

மெய்க்கொண்டான் தஞ்சை நந்தவனம்பட்டியை ஆட்சி செய்த கள்ளர் நாட்டின் அரையனாக விளங்கினார்.

அவரது வீரத்தின் சிறப்பை அந்த சீமையிலுள்ள அனைவரும் அறிவர். மெய்கொண்டான் வாள் சண்டையில் வல்லவர்.


அப்பகுதியில் ஒரு கிறிஸ்தவர் வாள் சண்டை பயிற்சி அளிக்கும், பள்ளியை நடத்தி வந்தார். அதை கேள்விப்பட்ட மெய்கொண்டான் , கிறிஸ்தவரை சந்திந்து, தன்னுடன் வந்து , வாள் சண்டையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் , மெய்கொண்டானின் பெருமையை உணர்ந்த, கிறிஸ்தவர், அவருடன் சண்டையிட மறுத்தார்.ஆனால் மெய்கொண்டான் அவரை ஊக்குவித்து சண்டையிட அழைத்து, அவருடன் சண்டையிட அழைத்தார்.


அவரின் அழைப்பை ஏற்று, கிறிஸ்தவர், சண்டையிட்டார். அவர் மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையான முறையிலும் சண்டையிட்டார். கிறிஸ்தவரின் நேர்த்தியை,கண்டு வியந்த மெய்கொண்டான், கிறிஸ்தவரை வீழ்த்தினாலும், தன்னுடைய வாளை அவரிடம் அளித்து, அவரை தனது ஆலோசகராக ஏற்றுக்கொண்டார். அவரின் சார்பாக தேவாலயத்தை கட்டிக்கொடுத்தார். பாதிரியார்களிடம் மிகுந்த அன்பை காட்டியதாக குறிப்பிடுகிறார்.


Father Proenza என்பவர் கிபி 1662 ல் தனது வரலாற்று குறிப்பில் பின்வருவற்றை குறிப்பிட்டுள்ளார்.


பிஜப்பூர் சுல்தான்கள் தஞ்சையை தாக்கி சூரையாடினர். விஜயராகவ நாயக்க மன்னர் தப்பித்து ஒடினார். மக்கள் தஞ்சையை காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு குடியேறினர். எங்கும் பஞ்சம் தொற்றிக்கொண்டது.

ஆனால் மெய்க்கொண்டானின் ஆளுகை பகுதிகள் மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. பெரும்பான்மையான மக்கள் மெய்கொண்டானிடம் தஞ்சம் அடைந்தனர்.

சுல்தான்கள் பல முறை இவரது பகுதிகளில் படையெடுத்தனர். ஆனால் மெய்க்கொண்டான் மிகவும் தீரத்துடன் போரிட்டு அவர்களை விரட்டினார்.

சுல்மான் ஆதில் ஷா பல முறை போரிட்டு தோல்வி அடைந்து ஒடினான்.

இவரது வீரத்தை கண்டு மெச்சிய, சுல்தான் இவரை " காட்டின் மன்னன்" என அறிவித்து, அப்பகுதியை விட்டு அகன்றனர்.

அவரை சரணடைந்த மக்களையும், உடைமைகளையும் காப்பாற்றினார்.

ஆனால் அவரது உதவியால் பிழைத்த பிற கள்ளர் தலைவர்கள் அவரது மேலாண்மையை எதிர்த்து அவரிடம் மோதினர். ஆனால் பல முறை மோதியும் மெய்கொண்டானே வெற்றி பெற்றார்.

இதனால் அவருடன் இருந்தவர்களின் உதவியால், அவர் தனிமையில் வைத்து சதியால் வீழ்த்தினார்கள்.

மக்களை பேரழிவில் இருந்து காத்த மாவீரன், கள்ளர்களாலேயே வீழ்த்தப்பட்டார் என பாதிரியார் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


மெய்கொண்டானின் தம்பி

Father Andre கிபி 1666 ல் மெய்கொண்டானின் தம்பியை பற்றி குறித்துள்ளார்.


அவர் வீரத்தில் சிறந்து விளங்கி தஞ்சை நாயக்கருக்கு படையெடுப்புகளில் பங்கேற்று சாகசங்களை செய்துள்ளார். நாயக்கரின் கோட்டையை, எதிரிகள் தாக்கியபோது, தீரத்துடன் போரிட்டு விரட்டினர்.

சில துரோகிகளின் உதவியுடன் கோட்டைக்குள் நுழைந்த, எதிரிகளை கடைசி எதிரி இறக்கும்வரை போரிட்டு, வென்றார் என குறிப்பிடுகிறார்.

ஆட்சி செய்த கள்ளச்சி :


Father Britto என்பவர் கிபி 1683 ல் தன்னுடைய வரலாற்று குறிப்புகளில் மெய்கொண்டானின் அத்தை, மெய்கொண்டான் ஆட்சி செய்த பகுதிகளை ஆட்சி செய்தார் என்றும்.

வீரமான கள்ளர்களின், தலைவியாக ஒரு பெண் இருந்ததை கள்ளர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.


Father Proenza தன்னுடைய குறிப்புகளில் நந்தவனம்பட்டியை சுற்றி வாழ்ந்த கள்ளர்களை பற்றியும் எழுதியுள்ளார்.


தஞ்சை சீமையில் நடந்துவரும் தொடர்ச்சியான போர்களால் கள்ளர்கள் தங்களை பலத்தை இழந்து உள்ளனர். (தஞ்சை நாயக்கரிடம் இருந்து மராத்தியர் கைக்கு மாறிய குழப்பமான காலம்)

மாபெரும் பலத்துடன் எதிரிகளின் கிராமங்களை சூரையாடும் இந்த கள்ளர்களை யாரும் அடக்கமுடியாது.

கள்ளர்கள் வலுவிழந்தது ஒரு சில பிரிவினருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் மற்றொரு தரப்பினர் இதை துருதிஷ்டமாக கருதினர். ஏனெனில் போர் காலங்களில் கள்ளர்களின் உதவியே அவர்களுக்கு தேவைப்பட்டது. கள்ளர்கள் ஒரு வலிமையான போர்படைக்கு நிகராக திகழ்ந்தனர்.

தஞ்சையை துலுக்கர்கள் தாக்கிய போது , மன்னரின் சிப்பாய்களை சமாளிப்பதைவிட, கள்ளர்களின் தாக்குதலை எண்ணியே துலுக்கர்கள் அஞ்சினர்.

கள்ளர்களுக்கு நிகர் எவருமில்லை. கள்ளர்களின் ஒன்றினணயும் திறன், அவர்களின் போர்க்குணம், பல அணிகளாக பிரிந்திருந்தாலும் , நொடி நேரத்தில் ஒன்றினணந்து தாக்கும் திறன் கள்ளர்களின் சிறப்பியல்புகள்.

கள்ளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலைப்போல குதிரையில் பறிந்து சென்று தாக்குதலிலொ ஈடுபடும் திறனுடன் விளங்கினர்.

கள்ளர்கள் குதிரையை எந்த கடிவாளமும் இல்லாமல் கட்டுப்படுத்தும் திறனுடன் விளங்கினர் . கடிவாளம் இன்றி குதிரையை தாங்கள் விரும்பிய திசையில் செலுத்தும் வல்லமை பெற்றவர்கள். நொடிப்பொழுதில் நூற்றுக்கணக்கான குதிரைகளில் மின்னல் போல ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி விட்டு இடி போல் தோன்றி மறையும் வல்லமையுடன் திகழ்ந்தனர் கள்ளர்கள்.

தஞ்சை சீமையில் நாயக்கர் ஆட்சி முடிவுற்று மராட்டியர் ஆட்சி தோன்றிய காலத்தில் நந்தவனம்பட்டி சுற்று வட்டார பகுதி கள்ளர்களின் போர் உதவியையும் வல்லமையும் நேரில் கண்ட பாதிரியாரின் குறிப்புகள், கள்ளர்களின் வல்லமையையும், தஞ்சை நாயக்கர் காலத்திலும் அப்பகுதி கள்ளர்கள் தன்னாட்சியோடு விளங்கியதையும் எடுத்துரைக்கிறது.


மேற்கொண்டார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் அங்கு சிறப்பாக வாழ்கின்றனர். இந்த மேற்கொண்டார் என்பது மெய்க்கொண்டான் என்றும் மருவி அல்லது மாரி இருக்க வாய்ப்பு உள்ளது.



(Source: Tamilaham in seventeenth century :c sathyanathaier)


ஆவூர் (புதுக்கோட்டை) கிறிஸ்தவ மெசினரியில் முதல் கடிதமே அவரைப்பற்றிதான்.

வீரமுடன் போரிட்டு தஞ்சை மக்களை காத்த மாவீரன் மெய்கொண்டான் வீரத்தினை போற்றுவோம்.



ஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் , திரு. பரத் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்