புதன், 13 ஜூன், 2018

களப்பிரரும் கள்ளரும்



வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதி முதல் தென்குமரி என்பது இன்றைய குமரி வரை உள்ள பரந்த நிலப்பரப்பே தமிழகம் என்று வரையறுக்கப்பட்டது.

களப்பிரர் ஆட்சி பகுதிகள்




சங்ககால இறுதியில், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை, 'களப்பிரர்' என்ற பெயர் கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்ததாக, வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர். 'அவர்கள் ஆண்ட காலம், தமிழக வரலாற்றின் இருண்ட காலம்' என்று எழுதி உள்ளனர். அந்த இனக்குழுவினர் எங்கிருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும், சரியாக அறிய முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர்களைப் பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ, நாணயவியல் ஆதாரங்களோ அதிகம் கிடைக்கவில்லை.

8ம் நுாற்றாண்டை சேர்ந்த, 'வேள்விக்குடி' செப்பேட்டில், களப்பிரர்களைப் பற்றிய செய்தி உள்ளது.

இந்தியதொல்லியல் துறை.. 1923 ம் ஆண்டு Epigraphis indica vol 17 ல் , 291 - 309 ம் பக்கங்களில் வெளியிட்டது. திரு. கே.ஜி. சங்கரன் அவர்கள், வட்டெழுத்தில் இருந்த செப்பேட்டு வாசகங்களை தற்காலத் தமிழில், செந்தமிழ் திங்கள் என்னும் இதழில் வெளியிட்டார். இவ்வாறாக ...



இந்த செப்பேடுதான் வரலாற்று உலகில் மிகவும் பிரபலமான "வேள்விக்குடி செப்பேடு". இருண்ட கால வரலாற்றுக்கு ஒளி கிடைத்தது. களப்பிரர் என்னும் ஒறு வகுப்பினரை தமிழக வரலாற்றுக்கு முதன் முதலாக அறிமுகம் செய்தது. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் கி.பி. 770ல் வழங்கப்பட்ட தானமே இச்செப்பேடு தரும் தகவல்.
இச்செப்பேட்டில் வரும் தமிழ்ப்பகுதிகளில் வரி 39 - 46 ல்.. இந்தத் தகவல் கிடைக்கிறது.

.. அளவரிய ஆதிராஜரை அகலநீக்கி களப்பிரனென்னுங் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின். படுகடல் முளைத்த பருத்திபோல் பாண்டியாதி ராஜன் வெளிற் பட்டு விடுக திரவிரொளி விலகவீற்றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முறுக்கி செங்கோலோச்சி... கலிகால அரசன் களப்பிரன் என்பவர் பாண்டிய நாட்டின் ஆதி ராஜாவான பாண்டியர்களை நீக்கி அவ்விடத்தை கைப்பற்றினான். கடலிருந்து தோன்றிய சூரியன் போல் பாண்டியன் கடுங்கோன் தோன்றி படைநடத்தி களப்பிரரை வென்று பாண்டியநாட்டை கைப்பற்றினார். தனது எதிரிகளின் பளபளக்கும் நகரங்களை கைப்பற்றி செங்கோலோச்சினார்.


செப்பேட்டின் 31 - 37 ம் வரிகள் மிக முக்கியமானவை... பாண்டிய அரசன் பல்யாக முதுகுடுமி பெருவழுதி என்பவர், பிராமணர்களின் வேண்டுகோளுக்கிணங்க , வேள்விக்குடி என்னும் கிராமத்தை . நற்கொற்றன் என்னும் பிராமணத்தலைவனுக்கு இறையிலியாக வழங்கினார். கலியரசன் களப்பிரன், பாண்டிய நாட்டை கைப்பற்றினான். பாண்டியர்களின் தானத்தை ரத்து செய்தான். வேள்விக்குடித் தானமும் ரத்து செய்யப்பட்டது. கடுங்கோன் பாண்டியன் களப்பிரனை தோற்கடித்து பாண்டிய நாட்டை மீட்டான்... கடுங்கோனுக்குப்பிறகு அவனிசூளாமணி மாறவர்மன் பாண்டியநாட்டை ஆண்டார். பிறகு அரிகேசரி அசமசனன், ஸ்ரீமாறவர்மன், சடையன், இவ்வாறகத் தொடர்ந்து பாண்டியர்கள் மதுரையை ஆண்டனர். வரிசையின் இறுதியில் வரும் அரசன்தான் இச்செப்பேட்டை வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன். செப்பேட்டின் 103 வது வரி... ஒரு சம்பவம் போல் ஆரம்பம் ஆகிறது. பாண்டினின் 3 ம் ஆட்சியாண்டில். கி.பி. 770 மதுரையின் மாட மாளிகைகள் நிறைந்த தெருவில் ஒருவன் கூச்சலிடுகிறான். கொற்றவனே.....என்று உரக்கக் கூச்சல் இடுகிறான். உடனே அவன் அழைத்து வரப்பட்டு அரசன் முன் நிறுத்தப்பட்டான். அரசன் அவனை நோக்கி, உனக்கு என்ன குறை..? நீதி தவறா பாண்டியனே.. பாகனூர் கூற்றத்தைச் சேர்ந்த வேள்விக்குடி கிராமத்தை உனது முன்னோரான பெருமன்னன் பல்யாக முதுகுடுமி பெருவழுதி பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார்.





களப்பிரர்களின் பெரும்படையெடுப்புக்குபின் வேள்விக்குடித் தானம் ரத்துசெய்யப்பட்டது. அத்தானத்தை திரும்பபெறாமல் இருக்கிறோம். எனது பெயர் காமாக்கினி நற்சிங்கன். அரசனும் அவனிடம், என்ன ஆதாரம் உள்ளது என்று விசாரித்து சான்றுகளை சரிபார்த்து, அவனிடம் எனது முன்னோர்களால் உங்களுக்கு வழங்கப்பட்ட தானம் என்னால் உறுதிசெய்யப்படும். என்று கூறி... நீர்வார்த்து, அப்பிராமணருக்கு வேள்விக்குடி கிராமம் தானமாக வழங்கப்பட்டது. அரசனின் ஆணை சாசனமாக செப்பேட்டில் பொறிக்கப்பட்டது. இச்செப்பேட்டின் தகவல் சுருக்கம்.

களப்பிரர்கள் தொடர்ந்து பிரம்மதேயங்களை ரத்து செய்துள்ளார்கள். இதை மக்கள் வரவேற்றுள்ளனர். களப்பிரர்களை வென்ற பாண்டியர்கள் மீண்டும் பிரம்மதேயம் கொடுத்துள்ளார்கள். இதை மக்கள் விரும்பவில்லை. க்கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தளவாய்புரம் செப்பேட்டின் தமிழ்ப்பகுதியில் ஒரு செய்தி உள்ளது..






வழக்கமான பாண்டிய மன்னர்களின் வரிசை கூறப்பட்டு.. கடைசியில் வரும் பாண்டியன் வீரநாரயணின் 45 ம் ஆண்டில்.... தமிழ் பகுதி... 126... இந்திரனது நகர் போன்ற களக்குடியில் பாண்டியன் தங்கியிருந்தபோது பிராமணன் ஒருவர் விண்ணப்பம் செய்தார்.. திருமங்கலம் என்னும் கிராமத்தை .. உனது முன்னோரான , பாண்டியன் கடுங்கோன் களப்பிரர்களை அழித்து.. இக்கிராமத்தை 12 பிராமணர்களுக்கு தானம் செய்தான்... வரி எண் 131.. கற்றறிந்தோர் திரல் பரவ களப்பாளரைக் களைகட்ட மற்றிரண்டோன் மாக்கடுங்கோன் மானம் போர்த்தருளிய கோன்.. கல்வி வேள்வியில் சிறந்து விளங்கிய பிராமணர்கள் புகழ்பரவ, களப்பிரர்களை அழித்த மானம் காத்த பாண்டியன் கடுங்கோன்..ஆறு நற்குணங்கள் உடைய 12 பிராமணர்களுக்கு இத்தானத்தை வழங்கினான்.







1979 க்கு முன்பாக களப்பிரர்களைப் பற்றி ஆய்வு செய்த எந்த ஒரு ஆய்வாளரும் அறியாத ஒன்றுதான் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. களப்பிரர்களும் கோவில் கட்டினார்கள். களப்பிரர்களும் பிரம்மதேயத்தை ஆதரித்தார்கள் என்னும் கருதுகோளை பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் உருவாக்குகின்றன. தமிழி ( தமிழ் பிராமி) எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்தாக வளர்ச்சிபெறும் துவக்கநிலை வட்டெழுத்தாக பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் உள்ளன. கோச் சேந்தங் கூற்றன் என்னும் களப்பிரஅரசனின் கல்வெட்டு... யாண்டு 192 என்பதாக ஆரம்பிக்கும். இது சக ஆண்டு என்றும் , இதற்கு சமமாய் கி.பி. 270 ( 192 + 78 ).. என்றும் ஒரு கருத்தை ஆய்வாளர் முன்வைத்தார்... ஆனால் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டின் காலம் கி.பி. 5 ம் நூற்றாண்டு என்பதாக முடிவு செய்யப்பட்டது. முதல் கல்வெட்டு.. களப்பிர அரசன் கோச்சேந்தன் கூற்றன் ஆட்சியில்.... வேல்மருகன் கடலகபெரும்படைத்தலைவன் எங்குமான் என்பவன்.. ஓலையூர் கூற்றத்து வேல்கூர் பச்செரிச்சி மலைமேல் ஒரு தேவகுலம் எடுத்தான்.. முத்தூற் கூற்றத்து விளாமரில் ஒரு தேவகுலம் எடுத்தான். மதிரை உலவியத்தான் குளத்தின் வடப்பக்கத்தில் தாதபப் பள்ளியுள் ஒரு தேவனார் கோட்டம் எடுத்தான்... அதாவது இரண்டு கோவில்கள் ( தேவகுலம்) மற்றும் ஒரு சமணப்பள்ளியை எடுத்தான்.. கோவிலில் வழிபாடு நடத்துகிற பொறுப்பு , பாண்டங்கர், சேவுக்கர், விரும்மசாரிகள், தருமிகள், ஊர்க்காவல் கொண்டோர் .. இவர்களிடம் இருந்தது. தேவகுலம் என்று இரண்டு கோவில்களும். தேவனார்கோட்டம் என்ற பெயரில் ஒரு சமணர் பள்ளியும் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கல்வெட்டு.. சிதைந்த நிலையில் உள்ளது.. அரசன் பெயர் சேந்தன்.. வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர். மேலும் ஒரு ஊர். மொத்தம் மூன்று ஊர்களின் நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. வெள்ளேற்றன் மங்கலம் என்பது ஒரு பிரம்மதேய நிலம் என்பது தெரிகிறது. சிற்றையூர் ஒரு பிரம்மதேயம் என்று கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளாது.


கல்வெட்டு வரி 10...கூடலூறு நாட்டு பிரம்மதாயஞ் சிற்றையூறு பிரம்ம தாயக்கி.... ஆக.. மேற்கண்ட மூன்று ஊர்களும் மலைமேல் எடுக்கப்பட்ட தேவகுலங்களுக்கு தரப்பட்டத் தானம் என்பது தெளிவாகிறது. அடுத்தடுத்த வரிகள் பிராமண நிலக்கிழார், பிரம்மதாயமுடையார், நாடுகாப்பார், புறங்காப்பார், ஆகியோர் பல நிலைகளில் இருந்த அரசு அதிகாரியாக இருக்கலாம். இக்கல்வெட்டில் கூறப்படும் சில ஊர்கள் சோழநாட்டில் இருப்பதாலும், கல்வெட்டிலேயே பாண்டியநாடு கொங்கு நாடு வருவதாலும். களப்பிர அரசன் சோழ, பாண்டிய, கொங்கு தேசங்களுக்கு பேரரசனாய் இருந்துள்ளான். வைதீக நெறிகளுக்கு எதிரானவர்கள் களப்பிரர்கள் என்னும் கருதுகோளை பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் மாற்றி அமைக்கின்றன.


வேள்விக்குடிச் செப்பேடு இவர்களை களப்பிரர் என்றும். தளவாய்புரம் செப்பேடு இவர்களை களப்பாளர் என்றும் கூறுவதால் களப்பிரர் என்றாலும், களப்பாளர் என்றாலும் இருவரும் ஒருவரே என்பது உறுதியாகிறது.






கர்நாடாகா.. ஹோஸ்கோட் தாலுகா, நடுகல் ஒன்றில்.. பழைய கன்னட மொழியில்
ஸ்வஸ்திஸ்ரீ மதுராளக் களவர திரு ராஜ்யதல் ( Ep car.vol 9 hoskote 13P )


சரவணபெலகுலா மற்றும் ஒரு சில சாசனங்களில் களவரராஜ்யம், களப்புநாடு, களவரநாடு, என்ற தகவல்கள் கிடைக்கிறது. கர்நாடகா.கோலார் சிக்பல்பூர் மாவட்டம் போகநந்தீஷ்வர் கோவிலில் சோழர் கல்வெட்டு ஒன்றுள்ளது.. சோழ மன்னன் இராஜாதிராஜன் கல்வெட்டு, இப்பகுதியை நிகரில. சோழ மண்டலத்து களவர நாடு என்கிறது.. "நிகரில சோழ மண்டலத்துக் களவர நாட்டு நந்திமலை மேல்மஹா நந்தீஸ்வரம் உதயமகாதேவருக்கு" (Epigraphic Carnatica Vol 10 - Chikballpur Inscription no. 21) கர்நாடகா .. பேலூர் தாலுகா.. ஹல்மிடி என்னுமிடத்தில் உள்ளகல்வெட்டு.. கடம்ப அரசன் காகுஸ்தன் ( கி.பி.425- 450) என்பவன் களப்போரருக்குப் பகைவன் என்னும் தகவலைத் தருகிறது.

களப்பிர அரசனது பெயர் அச்சுதன் என்ற பெயரில் ஆரம்பம் ஆகிறது.

களப்பிர அரசர் வைணவ சமயத்தவர். திருமாலுக்கு அச்சுதன் என்னும் பெயரும் உண்டு. களப்பிர அரசர் தங்களை அச்சுத குலத்தவர் என்று கூறிக்கொண்டனர். அதாவது. திருமாலின் வழிவந்தவர் என்பது பொருள். அவர்கள் திருமாலை (விஷ்ணுவை) வழிபட்டு திருமாலின் அருளினால் பெரிய இராச்சியத்தைப் பெற்றார்கள்.
இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த
நந்திமால்வரை சிலம்பு நத்தி - என்று களப்பிர அரசர் கூறப்பட்டனர்

திகிரியையும் (சக்கரம்) வலம்புரியையும் (வலம்புரிச்சங்கு) கையில் ஏந்தியுள்ள திருமாலை வேண்ட அவர் இவனுக்குப் பெரிய நிலத்தைக் (இராச்சியத்தை) கொடுத்தார். இதனால் களப்பிரர், அச்சுதனை (திருமாலை) வழிபட்டவர் என்பது தெரிகிறது.

களப்பிரர் சமண சமயச் சார்புடையவர் என்று வரலாற்றாசிரியர் பலரும் எழுதியுள்ளனர். களப்பிரர் சமண சமயச் சார்பு கொண்டிருந்தனர் ஆனால் அவர்களின் சொந்தச் சமயம் வைணவம்.

களப்ரர், களப்பிரர், கலப்பரர், களப்பாளர், கள்வன், கலியரசர் என பல்வேறு விதமாக குறிக்கப்படும் இம்மரபினரை பொதுவாக களப்பிரர் என்றே அழைக்கின்றனர். இவர்கள் தமிழகத்தில் ஆட்சி துவங்கிய காலம் கி.பி 250 முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை என்பது நீலகண்ட சாஸ்திரின் வாதம்.


கி.பி., ஒன்றாம் நுாற்றாண்டிலிருந்து, கி.பி., மூன்றாம் நுாற்றாண்டு வரை ஆட்சி செய்த பெரும் வல்லமை பொருந்திய சாதவாகனப் பேரரசர் வீழ்ச்சியுற்ற பின், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ்நாட்டின் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த தலைவன், தன் படையுடன் சங்ககால சேரர்களின் தலைநகரான கரூரை கைப்பற்றினர். அந்த தலைவன் வேங்கடத்தையும் வாழ்ந்து வந்த கள்வர் கோமான் புல்லி இனத்தவரே என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர். வேங்கட மலைப்பகுதியை ஆண்டு வந்த புல்லியின் வழி வந்த கள்வர் இனத்தவர் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்து தமிழ்நாடடின் பல பகுதிகளைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி ஆண்டனர். கள்வர் இனத்தவரின் ஒரு பிரிவினரே களப்பிரர் ஆவர் என்று கருதுகின்றனர். களவர் என்பது வடமொழியில் களப்ரா என வழங்கும். அதுவே தமிழில் களப்பிரர் என்று வழங்கியது என்று கூறுகின்றனர்.

கடைச்சங்ககால பாண்டியர்களின் காலத்திற்குப்பிறகு, மற்ற பாண்டியர்கள் பற்றியத் தகவல் இல்லை என்பதால், இக்காலத்தில் களப்பிரர்கள் பாண்டியநாட்டை கைப்பற்றியிருக்க வேண்டும். இக்காலம் கி.பி. 275 எனத் தீர்மானிக்கப்படுகிறது. பாண்டியன் கடுங்கோன், களப்பிரர்களை வீழ்த்தி மதுரையை கைப்பற்றிய காலம் கி.பி.575 என முடிவு செய்கிறார்கள். கி.பி. 275 - 575 வரை தமிழகத்தை ஆண்டார்கள் என தீர்மானிக்கப்படுகிறது. இக்காலச் சூழ்நிலைக்கு சங்க இலக்கியமான அகநானூறு பாடல் 61 ல் ஒரு குறிப்புக் கிடைக்கிறது... கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் கள்வர் கோமான் என்று புகழப்படும் புல்லி என்னும் அரசன், மழவர்கள் நாட்டை கைப்பற்றியவன். விழாக்கள் நடைபெறும் மிகச்சிறந்த நாடான வேங்கடமலையைச் சேர்ந்தவன். இன்றைய சேலம், தருமபுரிப் பகுதிகளைச்சேர்ந்த மழநாட்டை, வேங்கடத்து அரசன் புல்லி என்பவர் கைப்பற்றி, மழநாட்டு அரசனை பணியவைத்தேன் என்கிறார். கள்வர் கோமான் என்றழைக்கப்படுவதால், இவரது பெயரும் களப்பிரர் வரலாற்றில் இடம்பெறுகிறது.

களப்பிரர்கள் காலத்தில், தமிழகத்தில் இருந்து இடம் பெயர்ந்த சோழர்களே தெலுங்குச் சோழர்கள் என்னும் கூற்று வலுவாகிறது. ஆனால் தெலுங்குச் சோழர்கள், கரிகாலனின் இளைய மகன் தசா வர்மன் வழி வந்தவர்கள் என்று அவர்களது ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தெலுங்குச் சோழர்கள், கரிகாலனின் வட இந்தியப் படையெழுச்சியின் போதோ அல்லது கரிகாலன் காவேரிக்குக் கரையெழுப்பும் போது உதவ மறுத்த த்ரிலோச்சன பல்லவனை வென்ற பிறகோ அங்கு ஆட்சி செய்ய அனுப்பப் பட்டவர்களாக இருக்க வேண்டும். களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தபோது அவர்களின் கீழ் கொடும்பாளூர் வேளிர்கள் சிற்றரசர்கள் இருந்தனர். இருக்குவேள், பரவீரஜித்து, வீரதுங்கன், இவர்கள் களப்பிர காலத்தில், அவர்களுக்கு சிற்றரசர்களாக இருந்தவர்கள்.





சாதவாகனர்களிடம் தளபதிகளாக இருந்த பல்லவர்களும், சாதவாகனர்கள் வீழ்ச்சியடைந்த பின், தங்கள் அரசை உருவாக்கிக் கொண்டு, தமிழகத்தின் வட பகுதிகளை கைப்பற்றினர்.

கி.பி. 250 ல் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு குப்தர்கள் எழுச்சிப் பெற்றனர். ஆந்திராவில் ஆதிக்கம் செலுத்திய பல்லவன் சிவஸ்கந்தவர்மன் காஞ்சியையும் கைப்பற்றுகிறார். இவரது மகன் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் காஞ்சிவரை படையெடுத்து வென்றார்.

“பல்லவர் வரலாறு” என்ற நூலில் மா.இராசமாணிக்கனார் களப்பிரர், கள்ளர் வகுப்பினரில் ஒரு பிரிவினர் என்று குறிப்பிடுகிறார்.


கள்ளரில் புல்லி (புல்லி கூட்டம்)வகையராவும், மேலும் களப்பளார், களப்பிலார், களப்பிரர், களப்பாளியார், களப்பாடியார், களப்பாள்ராயர் பட்டம் உடைய குடியினர் என்றும் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். மன்னார்குடியில் உள்ள களப்பால் என்ற ஊரில் களப்பாளர் பட்டம் உடைய குடியினர் வாழ்ந்த ஊராதலின் இப்பெயர் பெற்றது.





VRS சாத்தனூர் சரண்ராஜ் களப்பாடியார்


கருநாட தேசத்தில் இருந்த களப்பிரரின் களபப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் (கோலாலபுரம்) வரையிலும் பரவி யிருந்தது. இவர்கள் ஆண்ட பகுதி களவர நாடு அல்லது களப்பு நாடு என்றழைக்கப்படுகிறது. களப்பிர அரசர்களது சிறப்புகளைக் கூறும் யாப்பெருங்கலம் என்னும் இலக்கண நூலில் " நந்தி மாமலைச் சிலம்ப நந்திநிற் பரவுதல் நாவலர் கரிதே " என்னும் பாடல் மூலம் நந்திமலைப்பகுதியை ஆட்சிசெய்தவர் அச்சுதன் என்னும் களப்பிர அரசன் ஆவார்.

கோலாலபுரத்திலுள்ள நந்தி மலை களப்பிரர் மலை என்று கூறப்படுகிறது. (Epi. Car., Vol. X, Chickbalpur, 9). பழைய தமிழ்ச் செய்யுட்கள், தமிழகத்தை யாண்ட களப்பிரரை நந்தி என்றும் நந்தி மலையை யுடையவர் என்றும் கூறுகின்றன: “நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி,” “புகழ்துறை நிறைந்த பெருவேல் நந்தி. கள்ளர்களின் நந்தியர்" பட்டம் இதனோடு தொடர்பு உடையதாக இருக்கலாம். நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போக நந்தீசுவரர் கோவில் உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.


கூற்றுவன் - களப்பாளன்", களப்பால் என்னும் சிவதல (திருவிசைப்பா) நகரத்தை உண்டு பண்ணித் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர். சிறந்த சிவபக்தியும் வீரமும் உடையவர். மூவேந்தர்களை வென்று சபாநாயகப் பெருமான் திருவடினை முடியாகச் சூடிக்கொண்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பெயர் களந்தையாண்டான், களந்தையாளி, களந்தையுடையான், களப்பாளி என்று வழங்குகிறது. இவருடைய மரபுளோர்க்கு களப்பாளன், களக்குடையான், களாக்கான் முதலிய பெயர்கள் வழங்குகின்றன. நாடுகளைப் பல கூற்றங்களாகப் பிரித்த காரணத்தால் கூற்றுவன் என்ற சிறப்புப் பெயர் வந்தது.” ஆதாரம் : சூரியகுலக் கள்ளர் சரித்திரம் திருக்களர் சுவாமிநாத உபாத்தியாயர் எழுதியது - 1926ல் வெளியீடு. (நடிகை மனோரமா அவர்கள் கிளக்குடையான் பட்டம் உடையவர்)


களப்பாளர் தான் களப்பிரர் என்றும் களப்பாளர், களப்பிரர் வேறு வேறென்றும் ஆய்வாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சில ஆய்வாளர்கள் "கள்ள" பிறர் என்பது தான் "களப்பிறர்" என்று ஆனதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இக்களப்பிரருக்குரிய இப்பெயர் கள்வன் என்னும் பெயரின் திரிபென்று கொண்டு வேங்கட நாட்டையாண்ட கள்வன் புல்லி என்ற குலத்தைச் சார்ந்தவரென்று டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறுவர்.

திரு. மு. இராகவ ஐயங்கார் இ
க்களப்பிரர், பிற்காலத்தில் பலவிடங்களில் களப்பாளர் என்று விளங்கியவர் குலத்தின் முன்னோராவர் என்று கூற்றுவ நாயனார் வரலாற்றைச் சான்றாகக் கூறுவர்.

இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களாய் இருக்கலாம் என்பது மயிலை. சீனி.வேங்கடசாமி கருத்து.

களப்பிரரின் ஆட்சியின் கீழ் மூவேந்திரர்கள்:





சேரர்களின் தலைநகரமான வஞ்சி (கரூர்) வழியாக முதலில் பாண்டியர்களை தாக்கி, பாண்டி தேசமும், பின்பு சோழ தேசமும் கைப்பற்றினர்.



களப்பிரர்களின் படை பலம் பற்றி யாப்பருங்கலம் இலக்கண நூல்
“படுபருந்தும் சூர்பேயும் பல்லிலலங்கும் நாயும்”,
“கொடியும் கழுகுமிவை கூடி – வடிவுடைய”
“கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு”
"கோமாறு கோமாறு போம்”

பொருள் : களப்பிர மன்னன் தன் யானைப் படையுடன் போருக்கு போகும் போது அந்த படைகளுடன், பேய்கள், நாய்கள், நரிகள், பருந்து, ஓநாய், கழுகு இவை போன்ற பிணந்தின்னி பிராணிகளும் கூடவே செல்லுமாம்.. களப்பிரர்களால் தோற்கடிக்கப்படும் எதிரிகளின் பிணத்தை உண்பதற்காக அவைகளும் சென்றன.

அச்சுதக் களப்பாளன் ஓர் மாபெரும் வீரன், இவன் தமிழகத்தின் மூவேந்தர்களையும் போரில் வென்று சிறை செய்தவன். இத்தகைய வீரம் மிக்க அச்சுதக் களப்பாளனை கொங்கின் 24நாடுகளில் ஒன்றான தென்கரைநாட்டுக் (தற்போதைய தாராபுரம்) களத்தூரைச் சேர்ந்த பூசகுலநல்லவன் என்பவன் போரில் வெற்றி கொள்கிறான். இவ்வீரனை பாராட்டி ஆதொண்டைமான் அவனுக்கு கொங்கு நாட்டில் உள்ள 24 நாடுகளையும், ஆதொண்டை நாட்டின் 24 கோட்டங்களையும் பரிசாக அளித்து, பட்டயங்கள் பலவும் வழங்கி பாராட்டிய குறிப்பு கொடுமணலில் கிடைத்த ஓலைச்சுவடி ஒன்றில் காணப்படுகிறது.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த தமிழறிஞர் புத்ததத்தர் பாலி மொழியில் பல நூல்களை எழுதியவர், பாலி மொழி நூல்களுக்கு உரையாசிரியராகவும் இருந்தவர். இவர் தன் நூலில், தமிழத்தின் மூவேந்தர்களையும் வென்று ஆட்சி புரிந்தமையை சுட்டும் விதமாக அச்சுதக் களப்பாளனை “தமிழகத்தினை ஆண்டதனால் உலகினை ஆட்சி செய்தான்” எனப் புகழ்ந்து கூறியுள்ளார்.

யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூல்களை இயற்றிய தமிழ் புலவர் "அமுதசாகரரும் தன் யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்களை கூறியுள்ளார்.

17 ம் நூற்றாண்டில் புலவர் பலர் பாடிய, சூழல் விளக்கத்துடன் தரும் செய்யுள்கள் அனைத்தையும் ஒரு தமிழ் திரட்டு நூலாக தொகுத்தனர். இந்நூல் “தமிழ் நாவலர் சரிதை” என வழங்கப்படுகிறது. இந்நூலில் அச்சுதக் களப்பாளன் பற்றி சேரனும், சோழனும், பாண்டியனும் இயற்றிய செய்யுள்கள் இடம்பெற்றுள்ளது.

அச்சுதக் களப்பாளன் பற்றி தமிழ் நாவலர் சரிதையில் முதற்பாட்டு சேரனாலும், இரண்டாம் பாட்டு, சோழனாலும், ஏனைய இரண்டும் பாண்டியனாலும் பாடப்பெற்ற நான்கு வெண்பாக்கள் உள்ளன. அப்பாக்களின் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் கொளுக்களின்படி, அம்மூவரும் அச்சுதகளப்பாளனால் விலங்கிடப் பட்டவர்கள் என்பது அறிய முடிகிறது.

முதல்பாட்டு:
தினைவிளைத்தார் முற்றம் தினை உணங்கும் ; செந்நெல்
தனைவிளைத்தார் முற்றம் அதுதானாம்
முரசுணங்கச் சங்கு உணங்கும் மூரித்தேர்த்தானை
அரசு உணங்கும் அச்சுதன் முற்றத்து.'

பாடல் விளக்கம் :

தினை விதைத்துப் பயிர் செய்தவர் முற்றங்களில் தினை உலரும் ; செந்நெல் விளைத்துப் பயிர் செய்தார் முற்றங்களில் செந்நெல் உலரும் ; போர்முரசும் சங்கும் ஒலிக்கும்; அச்சுதன் முற்றத்தில் பெரிய தேர்ப்படையுடையராகிய அச்சுதனின் பகையரசர் இருந்து உலர்வர்.'

சோழனால் பாடப்பெற்ற இப்பாடல், அரசர்குல திலகனாகிய அச்சு தனுடைய முற்றத்தில், அவன் பிறந்த நாள் விழா அன்று முரசுகள் அதிரக் கொட்டிவிடுவதால் எழும் ஒசையைக் காட்டிலும், அவன் பகை அரசர்களாம் பேரரசர்களின் உரிமைகளைத் திரும்பத் தந்து, அவர்களை நாட்டிற்குப் போக விடுவதற்கு முன்னர், அவர்களின் கால்களில் இட்டிருந்த விலங்குகளை வெட்டி விடுவதால் எழும் பேரொலியே பெரிதாம்’ என்கிறது.

அடுத்து பாண்டியன் பாடிய முதற்பாட்டு:

குறையுளார் எங்கிரார் ? கூர்வேல் இராமன்
நிறையாறு திங்கள் இருந்தான்-முறைமையால்
ஆலிக்கும் தானை அலங்குதார் அச்சுதன்முன்
வாலிக்கு இளையான் வரை."

இப்பாடலின் விளக்கம், வாழ்க்கையில் குறையிலாதவர், உலகில் எங்கே இருக்கிறார்கள்? தன் மனைவியைப் பிரியவிட்டு, கூரியவேல் உடையோனாகிய இராமனே, வாவியின் தம்பியாம் சுக்கிரிவன் மலைக்கு முன்பே, ஒர் ஆறு மாதம் முழுவதும் காத்திருந்தான்; போர் எனக்கேட்டுப் பூரிக்கும் படையும் அசையும் மாலையும் உடையோனாகிய அச்சுதன் முற்றத்தின் முன் நான் காத்துக் கிடக்கின்றேன்.' என்று பாண்டியன் இப்பாடலில் தன்னை இராமனாகவும், அச்சுதனை, இராமனை வழிபடும் குரங்கினத்தவனாகவும் கூறிவிடவே, கோபங்கொண்ட அச்சுதன், பாண்டியன் கால் விலங்கை இரட்டிப்பாக்கிவிட்டான். ஆகவே பாண்டியன் மேலும் ஒரு பாட்டு பாடவேண்டி நேர்ந்தது.

அப்பாடல்,

"குடகர் குணகடல் என்று ஆர்த்தார் ; குடநர்க்கு
இடவர் குடகடல் என்று ஆர்த்தார் -வடகடல்
தென்கடல் என்று ஆர்த்தார் தென்தில்லை அச்சுதா ! நின்தன்
முன் கடை நிற்றார்க்கும் முரசு'

இப்பாடலின் விளக்கம், தென் தில்லைக்கு உரியோனாகிய அச்சுதா! உன் முற்றத்தே முழங்கும் முரசொலி கேட்ட மேலைத் திசை வாழ்வார், அது கீழ்க்கடல் ஒலியோ எனக்கொண்டு அஞ்சி ஆரவாரித்தனர். கீழ்த் திசை வாழ்வார் அது மேலைக்கடல் ஒலியோ எனக்கொண்டு அஞ்சி ஆரவாரித்தனர்.

சேர, சோழ, பாண்டியராகிய இவ்வரசர்கள் எல்லாம் திரண்டிருந்த தென் தில்லை சிதம்பரம், அந்நாளில் சோழர்கள் தங்கள் முடிசூட்டு விழாவினைச் மேற்கொள்ளும் இடமாக விளங்கி வந்தது. அக்காலத்தில் தெய்வத் தன்மைக்காகப்புகழ் பெற்று விளங்கியதால், அச்சுதனும் அவ்வழக்கத்தை மேற்கொண்டு சிதம்பரத்தில் முடிசூடிக்கொண்டான் போலும். அதனாலேயே பாண்டியன் தென்தில்லை அச்சுதா என கூறியுள்ளான். இவ்வரிய செய்தியும் இப்பாவால் நமக்கு கிடைக்கிறது.

மூர்த்தி நாயனார் புராணம்

ஒரு களப்பிர அரசன் காலத்தில் நடைபெறுகிறது. பாண்டிய நாடு, மூர்த்தியார் நாள்தோறும் ஆலவாய் பெருமானுக்கு சந்தனம் அரைத்துப் பூசும் பணியை இடையில்லாமல் செய்தவர். இந்நிலையில் களப்பிரமன்னன் பாண்டியனை வென்று மதுரையை கைப்பற்றுகிறான். அவன் சமண சமயத்தை ஆதரித்ததால், சிவத்தொண்டர்களை இடையூரு செய்கிறான். மூர்த்தியாருக்கு சந்தனகாப்பை கிடைக்கவிடாமல் செய்தான். மூர்த்தியார் தன் முழங்கையினை கல்லில் உரசி சந்தனமாக பூச முயன்றார்.. இறைவன் அருள் கிட்டி, பின் மூர்த்தியாரே அரசன் ஆகிறார் தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச் சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும் வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான்.. தாழ்ந்த சமணர்களின் பொய்யான தவத்தை மெய்யென்று நினைத்தான் அம்மன்னன்.பிறைச் சந்திரனை தன் தலையில் சூடிய சிவனின் அடியார்களை கொடுமைப் படுத்தினான். கூற்றுவ நாயனார் புராணம் சோழநாட்டை ஆட்சி செய்த கூற்றுவன் என்பவர் , களப்பிரர் குலத்தைச் சேர்ந்தவர் என திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி கூறுகிறார். சோழநாட்டை தன் பெரும்படையால் கைப்பற்றி ஆட்சி செய்த கூற்றுவன் .. இவர் சிறந்த சிவ பக்தர். தனக்கு சோழனுக்குரிய மணிமுடியைச் சூட விரும்பினார். இறைவனிடம் தனக்கு மணிமுடியாக சிவனின் திருவடிகளை சூட வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே அவர் உறங்கும் போது கனவில் தோன்றிய பெருமான் தனது திருவடிமலரை கூற்றுவன் தலையில் சூட்டினார். அதையே மணிமுடியாக ஏற்று மகிழ்ந்த கூற்றுவன் ஆட்சி செய்தார். ஒரு களப்பிர அரசன் சமணத்தை பின்பற்றி, சைவத்திற்கு இடையூறு செய்கிறார். மற்றொரு களப்பிர அரசன், மிகச்சிறந்த சிவபக்தராய் இருக்கிறார்.

களப்பிரர் காலத்தில் தமிழும் வளர்ச்சியடைந்தாக பல ஆய்வாளர்கள் தங்கள் கருத்தை முன்வைப்பர். வட்டெழுத்தாக வளர்ச்சிப்பெற்றது..புதுவகை பாக்கள் உருவாகின. யாப்பிலக்கணம் புதுவடிவம் பெற்றது. மேலும் பல நூல்கள் தமிழில் இயற்றப்பட்டதாக கருதுகோள் உண்டு.

களப்பிரர்களின் பார்வை தொண்டை மண்டலம் காஞ்சியை நோக்கி திரும்பியது, காஞ்சியின் மேல் படையெடுத்தனர்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இடைக்காலப் பல்லவருள் ஒருவனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் (களப்பிரர்) சேனையை நடுங்க வைத்தான் என்று ஒரு பட்டயம் கூறலால், தொண்டை-சோழநாடுகளில் இருந்த களப்பிரர்க்கும் பல்லவர்க்கும் போர் நடந்த செய்தி அறியலாம்.

இக் களப்பிரர் அடிக்கடி பல்லவரோடு போரிட்டு வந்திருக்க வேண்டும் இவர்களைக் காஞ்சியினின்றும் துரத்தித் தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்ற இடைக்காலப் பல்லவரும் இடருற்றவராதல் வேண்டும்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் பல்லவப் பேரரசனாக இருந்த சிம்ம விஷ்ணு கி.பி. 575-615) களப்பிரரை முறியடித்த பெருவீரன் என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறுகின்றது. சிம்மவிஷ்ணுவின் பெயரனான முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-660) இக் களப்பிரரோடு போரிட்டான். கி.பி.7ஆம் நூற்றாண்டின் கடையிலும் எட்டாம் நூற்றாண்டின் இடையிலும் சாளுக்கியர் இக் களப்பிரரைக் கண்டுள்ளனர்.

களப்பிரர்களை எதிர்கொண்டார் பல்லவ அரசர் சிம்ம விஷ்ணு நடைபெற்ற மிக கடுமையான ஒரு போரில் களப்பிரர்களை வெற்றி கொண்டு, அவர்களிடம் இருந்த சோழதேசம் முழுவதையும் கைபற்றினார். சோழதேசத்தை இழந்த களப்பிரர்களுக்கு, பாண்டியத்திலும் பாண்டியன் கடுங்கோன் என்பவர் களப்பிரர்களைத் தாக்கி மதுரையைக் கைப்பற்றி பாண்டிய அரசனாக முடிசூட்டுகிறார். களப்பிரர்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

வடக்கே பல்லவராலும் தெற்கே பாண்டியராலும் அடிக்கடி தாக்குதல் பெற்று வலிகுன்றிய இக் களப்பிரர், கி.பி.7,8 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சைக்கு அருகிலும் கொடும்பாளுரிலும் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் அடங்கி வாழ்ந்து வந்தனர். இவர்கள் இன்று கள்ளர்களின் களப்பாளர் குடியினர்களாகவே இருக்கலாம்.


களப்பிரர் நாணயம்
களப்பிரர் நாணயத்தின் முன்புறம்: யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. யானையின் முன்பு, மூன்று மரத்துாண்களைக் கொண்ட ஒரு இலச்சினை இருக்கிறது. கிளைகளுடைய ஒரு மரச்சின்னம் யானையின் பின்னே இருக்கிறது. யானையின் மேல் பகுதியில், இடமிருந்து வலப்பக்கமாக, நான்கு பிராமி எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது. 'Ga' என்ற எழுத்து ஆரம்பத்திலும், அதை அடுத்து, 'ல' எழுத்தும், அதை தொடர்ந்து, 'ப' எழுத்தும், அதன் வலப்பக்கத்தில், 'ர' என்ற எழுத்து, தனியாக மேல் பகுதியிலும் உள்ளது. இந்த எழுத்துத் தொடரை அடுத்து, நான்கு சின்னங்கள் உள்ளன. முதல் சின்னம், 'சுவஸ்திகை', இரண்டாது, 'திருவஸ்தா' என்று அழைக்கப்படும் சின்னங்கள் இரண்டும், அடுத்தடுத்து உள்ளன. கடைசியாக உள்ள சின்னம், ஐந்து கால்களுடைய சக்கரம்.

நாணயத்தின் பின்புறம்: நாணயத்தின் முழுமையான இடத்தை, ஐந்து கிளைகளுடைய மரச்சின்னம் அடைத்து கொண்டுள்ளது.

இந்த நாணயத்தின் முன்புறம் யானையையும், பின்புறம் கிளைகளுடைய மரச்சின்னத்தையும் காண்கிறோம். அதேபோல், சின்னங்களைக் கொண்ட நாணயங்களை தக்கணத்தில் கி.பி., ஒன்றாம் நுாற்றாண்டிலிருந்து, கி.பி., மூன்றாம் நுாற்றாண்டு வரை ஆட்சி செய்த பெரும் வல்லமை பொருந்திய சாதவாகனர்களும் வெளியிட்டுள்ளனர்.

களப்பிரர் - இலக்கியம்

களப்பிரர் காலம் நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி நீதி நூல்களும், பக்தி இலக்கியமும் முதலில் தோன்றியது களப்பிரர் காலத்திலேயே ஆகும். சங்க காலத்தில் ஆசிரியப்பாவும், கலிப்பாவும் செல்வாக்குப் பெற்றிருக்க, களப்பிரர் காலத்தில் வெண்பா செல்வாக்குப் பெற்றது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை, ஆகிய ஒன்பது நீதி நூல்களும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு அகப்பொருள் நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறப்பொருள் நூலும் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும்.

அறுபத்து மூன்று சைவ சமய நாயன்மார்களில் காலத்தால் முற்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் திருமூலர், காரைக்கால் அம்மையார் ஆகிய இருவரும் ஆவர். இவர்கள் இருவரும் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர்கள்.

பன்னிரு ஆழ்வார்களில் காலத்தால் முற்பட்டவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவர் ஆவர். இவர்கள் முதலாழ்வார்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுவர். இவர்களும் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் திருமால் மீது நூறு பாடல்கள் கொண்ட திருவந்தாதி என்னும் பெயருடைய நூலைப் பாடினர்.

களப்பிரர் காலத்தில் தோன்றிய மற்றொரு நூல் முத்தொள்ளாயிரம் ஆகும். இந்நூல் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் நூல் ஆகும்.

இவர்கள் அனைத்து சமயத்தையும் ஆதரித்தார்கள். பிரம்மதேயத்தை ரத்தும் செய்தார்கள், பிரம்மதேயம் ஒன்றை வழங்கியும் உள்ளார்கள். தமிழ், பாலி, பிராக்ருதம் போன்ற மொழிகள் வளர்ச்சி பெற்றன.

குறிப்பு :

களப்பிரர் தான் கள்ளர் என்று உறுதியாக கூறமுடியாது , களப்பிரர் தொடர்பு மட்டுமே கூறியுள்ளேன். களப்பிரர் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூற்று. கள்ளரின் ஒவ்வொரு பட்டத்திற்கும் , கூட்டத்திற்கும் தனி தனி வரலாறு உள்ளது.

நன்றி : மா. மாரிராஜன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்