செவ்வாய், 24 ஏப்ரல், 2018

பெருவள்ளல் தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார்


தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் வழியில் அமைந்துள்ள அழகிய கிராமம் தென்னங்குடி ஆகும். பாண்டிய மன்னர் தென்னவனோடு தொடர்புடைய தென்னன் குடி என்பது காலப் போக்கில் மருவி தென்னங்குடி என அழைக்கப்படலாயிற்று.
இத்தகு வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த பெருநிலக்கிழார் நாராயணசாமி நாட்டார், துளசியம்மாள் தம்பதியினரின் ஒரே மகனாய், அருந்தவப் புதல்வராய் சுந்தரராச நாட்டார் தோன்றினார்.
தனது தந்தையாரைப் போலவே, விவசாயப் பணியினை மேற்கொண்டு அயராது உழைத்து, தனது விளை நிலங்களின் எல்லையை விரிவு படுத்தினார்.
இளமை முதலே தமிழின் சுவையறிந்து, தாய்மொழியாம் தமிழ் மீது தீராக் காதல் கொண்டவர் சுந்தரராச நாட்டார். சுந்தரராச நாட்டாருக்கு சிட்டியம்மாள், மங்கை நல்லாள் என மனைவியர் இருவர்.
இயற்கையாகவே ஈகை குணமுடைய சுந்தரராச நாட்டார் அவர்கள், பொருள் இல்லாமையால், கல்வி கற்க இயலாது தவிக்கும் சிறார்களை எல்லாம், தனது மக்களாகவே கருதினார். திக்கற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கு உதவுதலையே தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டார்.

ஏழை மாணவர்களுக்கு எவ்வகையில் உதவிடலாம் என எண்ணி சிந்தனையில் ஆழ்ந்த சுந்தரராச நாட்டாரின் மனக் கண்ணில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் முன் வந்து நின்றது.


செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் பிள்ளை முய்ற்சியால், கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியின் சார்பில் 1930 ஆம் ஆண்டு திக்கற்ற மாணவர் இல்லம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. தாயை இழந்தோ. தந்தையை இழந்தோ,இருவரையும் இழந்தோ, பாதுகாவலர் ஒருவருமின்றி வாடும் ஆறு வயது முதல் பதிமூன்று வயது வரையுள்ள மாணவர்கள் இத்திக்கற்ற மாணவலிரில்லத்தில் சேர்க்கப் பெற்றனர். இவ்வில்லத்தில் சேர்ந்த நாள் முதல் இவர்கள் தம் துன்பம் நீங்கி, இன்பமெய்தி, எழில் தரு முகத்தோடு உடல் நலம் பெறு கல்வி பயிலத் தொடங்கினர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத் திக்கற்ற மாணவரில்லத்தின் ஈடு இணையற்ற, அப்பகுக்கற்ற சேவைக்கு, தஞ்சைப் பகுதி மக்கள் நேசப் பார்வையோடு, ஆதரவுக் கரம் நீட்டி, தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளைச் செய்வதைப் பெருமையாய் கருதினர்.
சிறு வயது முதலே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளர்ச்சிப் பணிகளையும், திக்கற்ற மாணவரில்லத்தின் சீரிய தொண்டினையும் நேரில் கண்டு மகிழ்ந்திருந்த சுந்தரராச நாட்டார் அவர்கள், தனது செல்வமும், சேவையும் சென்றடைய வேண்டிய இடம் கரந்தைத் தமிழ்ச் சங்கமே என்று முடிவு செய்தார்.
1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள், சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தருமம் எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் புலவர் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கட்கு இலவச உணவு அளிப்பதே இவ்வறக்கட்டளையின் நோக்கமாகும்.
சுந்தரராச நாட்டார் அவர்கள், தாமே இந்த அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து செயல்படுவது என்று முடிவு செய்தார். 22 ஏக்கர் 50 செண்ட் பரப்பளவு கொண்ட விளை நிலங்களை, அறக்கட்டளைக்காக எழுதி வைத்தார். இன்றைய தேதியில் இந்த சொத்துக்களின் மதிப்பு ரூபாய் நாற்பது இலட்சத்தினையும் தாண்டும். சுந்தரராச நாட்டார் அவர்களுக்கு எத்துனை பரந்து பட்ட மனமும், ஈகை குணமும், சேவை மனப்பான்மையும் இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணினால் வியப்பே மிஞ்சும்.
9.4.1961 முதல் பல்லாண்டுகள் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினராக்வும் சுந்தரராச நாட்டார் அவர்கள் திறம்படப் பணியாற்றினார்.
1970 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 21 ஆம் நாள் மேலும் 92 செண்ட் நிலத்தினை தனது அறக்கட்டளையில் சேர்த்து, கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் திக்கற்ற மாணவர் இல்லத்தில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு அளிப்பதற்காக வழங்கினார்.

காட்சிக்கு எளியராய், பழகுதற்கு இனியராய் விளங்கிய சுந்தரராச நாட்டார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு மேலும் ஏதாகினும் செய்திட வேண்டும் என்று எண்ணினார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் திக்கற்ற மாணவர் இல்லத்திற்கு, நல்லதொரு கட்டிடத்தினைத் தனது வருவாயிலிருந்து, தானே முன்னின்று கட்டித் தருவது என்று தீர்மாணித்து செயலில் இறங்கினார்.
கரந்தைத் தமிழ்ச் சங்க நுழைவு வாயிலின் இடது புறம்,ஏ.கே.வேலன் அவர்கள் தனது முதல் வருவாயிலிருந்து கட்டி அன்பளிப்பாக வழங்கிய அருணாசல நிலையக்கட்டிடத்திற்கும், சங்க அலுவலகத்திற்கும் இடையே உள்ள இடத்தினைத் திக்கற்ற மாணவரில்லத்திற்காகத் தேர்வு செய்து, கட்டிடப் பணியினைத் துவக்கினார்.
கட்டிடப் பணிக்குத் தக்க, கட்டுமானப் பணியாளர்களை நியமித்து, தானே மேற்பார்வைப் பணியினை மேற்கொண்டு, திக்கற்ற மாணவர்களுக்காக ஒரு புதிய கட்டிடத்தினைக் கட்டினார். சுட்டெரிக்கும் வெயிலினைப் பொருட்படுத்தாமல், இடையில் வேட்டியுடனும், தோளில் துண்டுடனும், மேற்சட்டையின்றி, கட்டிடப் பணியாளராகவே மாறி,கட்டிடத்தினை அங்கலம், அங்குலமாக பார்த்துப் பார்த்து உருவாக்கினார்.
ஓய்வு நேரங்களில், தமிழ்ப் பெரு மன்றத்தில், தலைக்கு இரு செங்கல் கற்களையேத் தலையணையாக்கி ஓய்வெடுப்பார்.

எளிமை, எளிமை பழகுவதில் இனிமை, இனிமை இவைகளையே தனது குணநலன்களாகப் பெற்றிருந்த சுந்தரராச நாட்டார் அவர்களால் ரூபாய் நாற்பது ஆயிரம் பொருட் செலவில் கட்டி முடிக்கப் பெற்ற கட்டிடத்திற்கு.




தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார் அறநிலையக் கட்டிடம் திக்கற்ற மாணவர் இல்லம் எனப் பெயர் சூட்டப்பெற்றது.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மணி விழாவானது, 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெரு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. விழாவின் இரண்டாம் நாளான 14.4.1973 சனிக்கிழமை மாலை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில், அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் மாண்புமிகு டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார் அறநிலையக் கட்டிடத்தினைத் திறந்து வைத்து, தமிழ்ப் பெரு மன்ற மேடையேற, விழா தொடங்கிற்று.



அன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.தனக்கோடி பிள்ளை அவர்கள், விழாத் தலைவரையும், மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும், சொற்பொழிவாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
சங்கத் தலைவரின் உதடுகள், வரவேற்பிற்குரிய வார்த்தைகளை உதிர்த்தாலும், அவரது கண்ணும், மனமும் தமிழ்ப் பெருமன்ற வாயிலையே நோட்டமிட்ட வண்ணம் இருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்க மாணவர்களுக்காக தனது நிலங்களை அறக்கட்டளையாக எழுதிவைத்தவரும்,பெரும் பொருட்செலவில் திக்கற்ற மாணவரில்லத்திற்கானக் கட்டிடத்தினைத் தானே முன்னின்று கட்டி வழங்கியவரும், அன்றைய விழாவின் நாயகருமான சுந்தரராச நாட்டார் அவர்கள், அந்நேரம் வரை விழா அரங்கிற்கு வராததே காணரம் ஆகும். விழா முடியும் வரை சுந்தரராச நாட்டார் அவர்கள் வரவேயில்லை.
எனது செல்வமும், எனது உழைப்பும் தமிழ் கற்கும் திக்கற்ற மாணவர்களின் வாழ்வை வளமாக்கப் பயன்படவேண்டும் என்பதே, எனது பிறப்பின் நோக்கமும், எனது கடமையுமாகும். கடமையைச் செயததற்காக, மேடையேறி பொன்னாடைபோர்த்திக் கொள்வதும், அதன் மூலம் விளம்பரம் தேடுவதும் எனக்குப் பிடிக்காதவை ஆகும். வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக்கூடாது என்று எண்ணுபவன் நான். எனக்கு ஏன் இந்தப் பாராட்டு? என்று கூறி கேள்வி கேட்டவரை வியப்பில் ஆழ்த்தினார்.
உலக வரலாற்றிலேயே பாராட்டப் படுபவர் இல்லாமல் நடைபெற்ற பாராட்டு விழா இதுவாகத்தான் இருக்கும்.
சுந்தரராச நாட்டார் அவர்கள் தனது அறக்கட்டளையின் அறங்காவலராக 24 ஆண்டுகள் பணியாற்றினார். முதுமை காரணமாக உடல் நிலை தளர்வுற்ற வேளையில், 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள், எனக்கு வயதாகிவிட்ட படியாலும், எனக்குப் பிறகு இந்த தர்ம சொத்துக்களைப் பராமரித்து வர டிரஸ்டிகளை நியமிக்க முடிவு செய்திருக்கிறேன் என தனது உயில் சாசனத்தில் பதிவு செய்து,
1. வழக்கறிஞர் ஆர். கண்ணுசாமி ராசாளியார்
2. திரு தி. கண்ணப்ப நாட்டார்
3. திரு க.சண்முகசுந்தர நாட்டார்
4. திரு மு. சாமிநாத புண்ணாக்கர்
5. திரு தி. சரவணவேல் நாட்டார்

ஆகிய ஐவரையும் அறங்காலவர்களாக நியமித்தார். மேலும் மாணவர்களுக்குக் கட்டிடம் கட்டவும், புத்தக நிலையங்களை அபிவிருத்தி செய்யவும், மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும், ஆண்டு விழாக்களுக்கு நன்கொடை வழங்கவும், பள்ளிக்கு விஞ்ஞான அபிவிருத்திக்கு சாமான்கள் வாங்க உதவித் தொகை கொடுக்கவும் அறக்கட்டளை நிதியினைப் பயன்படுத்தலாம் என நெறிமுறைகளை வகுத்து வழிகாட்டினார்.
களைப்பு, அயர்ச்சி, தளர்ச்சி என எதனையும் பொருட்படுத்தாமல் ஓயாது, உறங்காது உழைத்தவர் தென்னங்குடி சுந்தரராச நாட்டார் அவர்களாவார்.

ஏழை எளியவர்க்கு உணவிடும் உன்னதத் தொண்டினைச் செய்து வந்த பண்ணன் என்னும் குறுநில மன்னனை,
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எனக்கே

என மூவேந்தருள் ஒருவனான கிள்ளிவளவன், பசிப்பிணி மருத்துவன் என்றழைத்துப் புகழ்ந்து பாடுவான். இந்தப் பண்ணனைப் போலவே, வாழ் நாளெல்லாம் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், திக்கற்ற மாணவர்களுக்கும், உணவு வழங்கிடும் உயர் சேவையினை இனிதே செய்து வந்த பெருவள்ளல் தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார் அவர்கள், தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, 1983 ஆம் வருடம் ஆகஸ்ட்டு மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை பொன்னுடம்பு துறந்து புகழுடம்பு பெற்றுத் தமிழோடு கலந்தார்.

என் வாழ்வும் 
என் வளமும்
மங்காத தமிழே 
என்றுரைத்து,
தமிழ் தேடி 
கரந்தை நாடிவரும்
திக்கற்ற மாணவர்க்கு 
பசிப்பிணி மருத்துவராய் 
வயிறார அன்னமிட்டு 
உயிர்காத்து
தமிழ் வளர்த்த 
வள்ளால் சுந்தரராச
வாழி நின்புகழ்
வாழிய வாழியவே

தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார்
புகழ் ஓங்குக...

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்