ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

'உறங்காப்புலி' பி.கே.மூக்கையாத்தேவர்




மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் – சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது.

இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.







பாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.

1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார். அவ்வாறு அரசியல் களத்திற்கு வந்தவர் தான் அய்யா மூக்கையாத்தேவர்.


இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.1952 இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் அய்யா மூக்கையாத் தேவர். ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் அவர்கள் மட்டுமே! பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார். 

1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி (அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).

1952- பெரியகுளம்
மூக்கையாத்தேவர் - 36,515
என்.ஆர். தியாகராஜன் - 31,188

1957- உசிலம்பட்டி
மூக்கையாத் தேவர் - 31,631
பி.வி.ராஜ் - 11,459

1962- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 47,069
தினகரசாமித்தேவர் - 22,992

1967- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 44,714
நல்லதம்பித்தேவர் - 16,225

1971 - உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 42,292
ஆண்டித்தேவர் - 16,909

1977- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 35,361
பொன்னையா - 11,422

இவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். 

1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்
மூக்கையாத்தேவர் - 2,08,431
பாலகிருஷ்ணன் - 1,39,276



மூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும், வாக்கு வித்தியாசத்தையும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற பெருமை அய்யா மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. 

1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்வது வைப்பதற்கும், பேரவை தேர்தலை நடத்தி வைப்பதற்கும் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கலைஞர், நெடுஞ்செழியன் என பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் அய்யா மூக்கையாத்தேவர் அவர்களே.



கௌரி என்பவர் எழுதிய தேவர் தந்த தேவர் என்ற நூலில் அண்ணா அவர்களுக்கும் மூக்கையா தேவரே பதவி பிரமாணம் செய்து வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். 





கச்சத்தீவிற்காக நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய உரிமைக் குரல் மிக முக்கியமானது. அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி.யாக இருந்தார். கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தை மூக்கையாத் தேவர் நாடாளுமன்றத்திலே மிகக் கடுமையாக எதிர்த்தார். அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி. 26.06.1974 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தியும் 28.06. 1974 அன்று கொழும்புவில் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் 2 3.07.1974 அன்று சமர்ப்பிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் எழுந்த போது மூக்கையாத் தேவர் கொதித்தெழுந்தார். 


"கச்சத் தீவு என் தொகுதியில் உள்ளது. நீங்கள் ஜனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வு பாதிக்கப் பட்டுள்ளது. பல ஆயிரம் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கைப் படை கச்சத்தீவு நோக்கி செல்கிறது. கச்சத்தீவு தமிழ் நாட்டின் பகுதி, இதேபோல் வட பகுதியில் பல பகுதியை அண்டை நாடுகட்குப் பூதானம் செய்து விட்டீர்கள் " என்று கூறும் போது காங்கிரஸார் இடைமறித்தனர். "நீங்கள் துரோகிகள் " என்று கடுமையாக சாடிவிட்டு வெளிநடப்பு செய்தார்.





1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். " நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான அய்யா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்ப்பட்ட தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை" என்று வாபஸ் பெற வைத்தார். 


தமிழக அரசியல் வரலாற்றில் அய்யா மூக்கையாத்தேவர் ஓர் அதிசயம். 1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற தலைவர் அய்யா மூக்கையாத் தேவர். அவரது சீடரோ 1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார். 


கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். வீர பரம்பரையினரான கள்ளர்களை, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர்.சுதந்திரத்துக்குப் பிறகு பிறமலைக் கள்ளர் பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து உரிய இடத்தைப் பெற மூக்கையா தேவரின் முயற்சியும், பிறமலைக் கள்ளர் இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.

கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம்செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது.


மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் "உறங்காப் புலி", அதாவது தூங்காத புலி எனப் பெருமைப் படுத்தி அழைக்கப்பட்டார் .வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6 இல் காலமானார். இவர் நினைவாக மதுரை அரசரடியில் 1990 இல் ஒரு சிலை அமைத்துத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



(உசிலம்பட்டி மூக்கையாத்தேவர் மற்றும் அருப்புக்கோட்டை ஏ ஆர் பெருமாள்தேவர் அவர்கள்)





இன்றைய தொண்டர், நாளைய தலைவர் என்பதற்க்கு எடுத்துக்காட்டு மூக்கையாத்தேவர். பொதுக் கூட்டங்களுக்கான போஸ்டர் ஓட்டுவது அவர்தான்.

பிறகு அந்தக் கூட்டத்தில் தலைவர்களில் ஒருவராக பேசுவதும் அவர்தான் ;அது மட்டுமல்ல ; நேதாஜி ,தேவர் ஆகியோரின் பெயரில் 18 வாசகங்களை போஸ்டர் ஆக்கி ,பட்டி தொட்டிகளில் எல்லாம் கொள்கை முழக்கம் எழுப்பியவரும் இவரே தான். தேவர் தந்த தேவரே தான் மூக்கையாத்தேவர்

மூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 60000 கடன் சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம்.

நவம்பர் 10,1965 ல் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் மற்றும் முல்லைப் பெரியாரின் அணை மட்டத்தை உயர்த்தி தண்ணீரை திருப்பி விடுவதால் தென்மாவட்ட விவசாயிகளின் பெரும் பிரச்சனை தீர்க்கப்படும் என எடுத்துரைத்தார். ( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xxxii/ பக் 769)

மார்ச் 31, 1969ல் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர் கேரள அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தால் கோயம்புத்தூர் முழுவதும் குடிநீர் மற்றும் பாசன வசதியைப் பெறுகிறது. இதைப்போல கிருஷ்ணா நதிநீரை சென்னைக்கு திருப்பிவிடுவதன் மூலம் சென்னையின் குடிநீர் தேவை தீர்க்கப்படும் எனும் வாதத்தை வைத்தார்.

” வட இந்திய அகதிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வாரி வழங்கும் போது, தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது, வடபுலத்து அரசினால் தென்பகுதி மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ” என நேரடியாக இந்திய அரசினயனை தாக்கி பேசினார் மூக்கையாத் தேவர். ( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xx/ பக் 792)

1967க்கு பிறகு இந்திய அரசின் மொழிக்கொள்கை பல விமர்சனங்களையும், குழப்பங்களையும் உருவாக்கியது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்து வந்தது. இக்கால கட்டத்தில் 1968, ஜனவரி 23 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், இப்போது நாம் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடுமையான காலகட்டத்தில் உள்ளோம், ஏனென்றால் பல பிரச்சனைகளை நாம் எதிர்நோக்கியுள்ளோம், நம் நாடு பல மாறுபட்ட மொழி, பண்பாடு, நாகரீக பாரம்பரியங்களைக் கொண்டது, நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் குறிக்கோள் உடையவர்களாக உள்ளோம், ஒரு தாய் பிள்ளைகளைப்போல சுதந்திரத்திற்காக போராடினோம், ஆனால் இந்தி மொழிப் பிரச்சனையால் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது , இந்தி மொழி இந்தியாவில் எல்லா மக்களாலும் பேசப்படும் மொழி அல்ல, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களால் மட்டுமே பேசப்படும் மொழி, இதற்கு மாறாக இருமொழிக் கொள்கையே சிறந்தது, இதன்படி நாம் இரண்டு மொழிகளை ஏற்றுக்கொள்ளலாம் ஒன்று தமிழ் மற்றொன்னு ஆங்கிலம் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய மூக்கையாத்தேவர், அண்ணாவின் கருத்துப்படி தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் நடுவண் அரசு மற்றும் மாநில அரசின் நிர்வாக தொடர்பு மொழியாக இருப்பதே சிறந்தது, தமிழக மக்கள் மீது இந்தித் திணிப்பை இந்திய அரசு நடத்தவில்லையெனில் எந்த வகையான போராட்டத்தையும் கையில் எடுக்க தயங்க போவதில்லை என்றும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் சாதி சமய வேறுபாடுகளை கடந்து போராட்டங்களை நடத்தப்போவதாக மூக்கையாத்தேவர் அறிவித்தார்( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி vii / பக் 28-34)

நாட்டின் ஒற்றுமைக்கு இரு மொழிக்கொள்கையே சிறந்தது என அப்போதே வாதிட்டார் மூக்கையாத்தேவர். மும்மொழிக் கொள்கைக்கான வலுவான எதிர்ப்பு சட்டமன்றத்தில் மூக்கையாத் தேவரால் பதியப்பட்டது.

மார்ச் 31, 1969 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், தமிழகத்தின் மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருசெல்வேலி பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சியை போக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார், மேலும் இந்திய நாட்டின் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கி, மத்திய நீர்வழிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதைச் செய்வதன் மூலம் மட்டுமே மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனும் தனது வாதத்தை வைத்தார்.( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xx / பக் 788)

சேது சமுத்திர திட்டம் குறித்து….

1975 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாராளுமன்றத்தில் உறையாற்றிய மூக்கையாத் தேவர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி பகுதி மக்கள் பஞ்சத்தில் இருந்து மீள முறையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் , கிழக்கு ராமநாதபுரம் மக்களின் பின்தங்கிய நிலையை உயர்த்த, சேது சமுத்திர திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ( பாராளுமன்ற மக்களவை விவாதம் தொகுதி XLVIII பக் 298-302)


(கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதை)





இந்திய அளவில் சோசலிச அரசியலை முன்னெடுத்த அய்யா மூக்கையாத்தேவர். அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம்.

தொகுப்பு . சியாம் சுந்தர் சம்பட்டியார்
Article by www.sambattiyar.com 

நன்றி . உயர் திரு மருதுபாண்டியன் இரா














உறங்காப்புலியார் ஐயா பி.கே.மூக்கையாத்தேவர் வரலாறு

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

அய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு


ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், அய்யப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன. திருமால் மற்றும் சிவனின் அம்சமாக  அறியப்படும் ஐயனார் பற்றிய கதைகளும், புராணங்களும், பாடல்களும் மற்றும் ஆய்வுகளும் அனேக தகவல்கள் தருகின்றன. ஐயனார் எந்த குடிகளின் குல தெய்வம் என பிரிக்கவும் முடியாது. அதில் சில ஆய்வாளர்கள் ஐயனாரை கள்ளர்களுடன் தொடர்பு படுத்தி எழுதியுள்ளனர்.




நாட்டுப்புற ஆண் தெய்வங்களுள் அய்யனார் முதன்மை இடம் பெறுகிறார். அய்யனார் கோயில்கள் ஆரம்ப காலத்தில் அடர்ந்த வனத்திற்கு நடுவே, மலையிலும், எல்லைப் பகுதிகளிலும், காலப்போக்கில் சிற்றூர்களிலும் தோன்றின. கிராமத்தில் இதன்பின். மக்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளில் உள்ள எல்லைகளில் கோயில் அமைத்து வழிபட்டனர். அய்யனாரின் பிரதான காவல் தெய்வம் கருப்பசாமி. 




அய்யனாருடன் கருப்பண்ணசாமியும் இணைந்தே காணப்படுகின்றனர். கருப்பண்ணசாமி காவல் தெய்வமாகி நிற்கின்றார். இவர் வெள்ளைக்குதிரையில் கையில் அரிவாளுடன், நாய் உடன்வர, ஊரைக் காவல் செய்வதாக நம்பப்படுகிறது.


அதில் அய்யனாருக்கும் கள்ளருக்குமான தொடர்பு ஆராயும் போது

தமிழர் வரலாறு என்ற நூலில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள் என்ற பகுதியில் " தெய்வம் - ஐயனார் (கள்ளர் பிரிவு) " என்று குறிப்பிடுகிறார்.


கள்ளர் உட்பிரிவுகளில் 'அய்யனார்' என்ற பெயரும் கள்ளர்களுக்கு உள்ளது என்று நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.


எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் நூலில் " அய்யனார் கள்ளர் சாதியின் ஓர் உட்பிரிவு. கிராம தேவதைகள் பலவற்றுள்ளும் ஒரே ஆண் தேவதையான அய்யனார் பெயரையொட்டி அமைந்தது" என குறிப்பிடுகிறார். கள்ளர் இனத்தினர் அய்யனார் என்னும் பெயரிலும் வாழ்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். (க.இரத்தினம் (மொ.பெ.ஆ.)

அய்யனார், போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு எடுப்பித்த நடுகற்கள் என்றும், இறந்த வீரன் நடுகல் தெய்வமானதும் அவனை 'அய்யன்' என அழைத்து வேலும், வில்லும் சாத்தி வணங்கினர் என்பார் முனைவர் கணபதிராமன்.

சிறுகுடி கள்ளர்கள் ஆண்டி, மண்டை, அய்யனார் என்பன போனற்வற்றைத் தங்கள் வகுப்பாரின் பெயராகக் கொண்டுள்ளனர்.

தொண்டை நாட்டின் ஒரு பகுதியான ஆம்பூர், வேலூர் ஆகிய கோட்டங்களில் எயினர் என்னும் இனத்தினர் கள்ளர்களாக வாழ்ந்திருந்தனர்' என்பார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். இதையே எஸ். இராமச்சந்திரன் தனது ஆய்வில் சபரிமலை சபரர் என அழைக்கப்பட்ட எயினர்களின் வாழ்விடமாகவே முற்காலத்தில் இருந்துள்ளது வேட்டையும் ஆனிரை கவர்தலுமே சபரர்களுடைய வாழ்க்கை முறை. சபரி என்ற பெயர் கொற்றவையின் பெயர்களுள் ஒன்றாகும். இவள், ‘சபரர்’ எனப்பட்ட பாலை நில எயினர்களின் தெய்வமாவாள். பிற்காலத் தமிழிலக்கியங்கள் கள்ளர் - மறவர் குலத்தவரைச் சபரர் என்றே குறிப்பிடுகின்றன. ஐயப்பன் கோயில் அமைந்துள்ள மலை சபரிமலை என வழங்கப்படுகிறது. சபரிமலைப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள எருமைகொல்லி (எருமேலி), காளைகட்டி போன்ற ஊர்ப் பெயர்களையும், மஹிஷி என்ற எருமை வடிவப் பெண் தெய்வத்தை ஐயப்பன் கொல்வது, பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் குறிப்பிடுகிறார். காரி என்ற பெயர் இந்திரன், ஐயனாருக்கு உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

பிறமலைக்கள்ளர்கள் புன்னூர் அய்யனார், பூங்கொடி அய்யனார், ஊர்க்காளை அய்யனார், கல்யாணக்கருப்பு, தென்கரைக்கருப்பு, சோனைக்கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு தெய்வங்களைய தங்கள் குல தெய்வங்களாகவும் வணங்குகின்றனர்.

பிறமலை கள்ளர் நாட்டில் ஏழாவது நாடான வேப்பனூத்து கள்ளபட்டி நாட்டில் ஆதி ஐய்யனாருக்கு பெட்டி எடுத்து கிடா வெட்டி பெருங்கும்பிடு விழா !! சுமார் 58 ஆண்டுகளுக்குப்பின் 2019 ல் நடைபெறுள்ளது.



தஞ்சையின் கிழக்கு பகுதிகளில் கள்ளரில் வன்னியர் பட்டம் உடையவர்கள் குல தெய்வமாக அதிகம் வணங்குகிறார்கள். அதை போல கச்சராயர் பட்டம் உடையவர்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.


அருள்மிகு அய்யனார் திருக்கோயில் திருப்பட்டூரில் உள்ளது. இங்கு அய்யனார் பிறந்த ஊர் என்று குறிப்பிடுகின்றனர். இங்கு கள்ளர்கள் பலகாலமாக வாழ்ந்துவருகின்றனர்.


அய்யனவர் என்று கன்னியகுமாரியிலும், திருவனந்தபுரத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களாக அறியப்படும் மக்கள் தங்களை எயினர்களாகிய கள்ளர்களின் உட்பிரிவாகிய 'அய்யனார்' என்னும் அய்யனவர்'களாக வாழ்ந்து வருவதாகவும் கூறிக்கொள்கின்றனர்.


வாணிகத்திற்குப் புறப்படும் வண்டிகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும். இக்கூட்டம் 'வாணிகச் சாத்து' எனப்பட்டது. அவ்வழிகளில் பெரும்பாடி காவல் அதிகாரி, சிறுபாடி காவல் அதிகாரி என்போர் சோழப்பேரரசின் காலத்தே பணியாற்றினர். அவர்களை பாதுகாக்கும்போர்குடி தலைவனையே சாத்தன் என அழைக்கப்பட்டுள்ளனர்.  வாணிக நாட்டு கோட்டை செட்டிகள் என்று அழைக்கபடும் நகரத்தார்களை காத்து நின்றவர்களா கள்ளர் மற்றும் மறவர்களாக அறியப்படும் வல்லம்ப நாட்டார்கள், சாத்தனாரை தங்கள் குல முதல்வனாக கொண்டுள்ளனர்

மேலும் ஐயனார் பற்றிய தகவல்கள்


கி.மு. 500 ஆம் ஆண்டில் சீவகத்தை உருவாக்கியவர் மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்றும், மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஜைன இலக்கியத்தில் குறிப்பும் உள்ளது. மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம், அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன.

தர்ம சாஸ்தா’ மரணமடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. சித்தன்னவாசல் குகைக்கோயிலில் சிலையாக இருக்கிற மூவரும், ஐயப்பன், அய்யனார்கள்தான் என்றும் நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்) என்று  ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ நூல் எழுதிய பேராசிரியர் க.நெடுஞ்செழியன் கூறுகிறார். 




நடுகல் வழிபாடாக இருந்த அய்யனார், விஜயால சோழன் தன் வெற்றியின் நினைவாக சோழ நாட்டில் அய்யனாருக்கு கோயில் ஏற்பாடு செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அய்யனார் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. சிதம்பரம் நகரம் காரிய பெருமாள் கோயிலிலில் அய்யனாரை குடும்பத்துடன் வழிபடும் சோழ மன்னன் “முடித்தலை கொண்ட பெருமாள்” என்ற பட்டப்பெயர் கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் வணங்கிய நிலையில் காணப்படும் சிற்பம் உள்ளது. 


திருப்புறம்பியம் ஊரில் பிரித்திவி மன்னன் பெயரால் பிரித்திவி ஐயனார் சன்னதியும், விஜயாலயச்சோழ மன்னன் பெயரால் விஜயாலய ஐயனார் சன்னதியும் அருகருகே உள்ளன.




 அரியலூர் மாவட்டம் திருமானூர் , விழுப்பணங்குறிச்சி அருகே உள்ள சுந்தர சோழ அய்யனார்



அய்யனார் பற்றிய புராணங் கதைகளில் "சிவஞான முனிவர் பாடிய காஞ்சி புராணத்தில் 'மாசாத்தான்'. என்னும் தனிப்படலத்தில் காஞ்சியில் ஐயனார் அவதரித்துக் கோயில். கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது”17. கந்தபுராணத்தை அடியொற்றியே. ஐயனாரின் அவதாரச் சிறப்பு கூறப்படுகிறது. ஐயனார் காஞ்சி நகருக்கு. வந்து இறைவனை வழிபட்டு காமாட்சி அம்மனுக்கு காவல் தெய்வமாக அம்மையின் அருகில் அமர்ந்தார் என்று கூறுகிறது.

மானவீர பாண்டிய மன்னனின் அமைச்சர்களாக ஏழுபேர் இருந்தனர். என்றும், அவர்களில் அருஞ்சுனை காத்த ஐயனாரும், கருக்குவேல் ஐயனாரும் முதலிடம் பெற்றிருந்தனர். பாண்டிய மன்னர்கள் காலத்தில். இத்தெய்வங்களுக்கு முதலிடம் கொடுத்து வணங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கற்குவேல் அய்யனாரும், மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரும் சகோதரர்கள் எனப் பதிவு செயயப்பட்டுள்ள கருத்து சிறப்பானது.(H.R.Pate,tinneveli Manuel,1916)


அய்யனார் செண்டு என்னும் படைக்கருவியை உடையவர். பாண்டியர்களின் முத்திரை சின்னமான இரண்டு மீன்களுக்கு நடுவே ஒரு செண்டு உள்ளது. கரிகாலன் தனது கையில் செண்டு என்னும் படைக்கருவியைக் கொண்டிருந்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. செண்டு என்னும் படைக்கருவி திருமாலின் திருக்கரத்திலும் திகழ்கிறது. 


மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலஸ்வாமி தமதுத் திருக்கரத்தில் ஏந்தியிருப்பதுவும் செண்டு என்னும் ஆயுதமே ஆகும்.

இந்திரன் இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்குக் காவலாக நியமித்தார் என்ற கதைகளும் உள்ளது.

“தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் சிலம்பு கூறுகின்றது. பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக்கொள்வதாகவும். மேலும் மறக்குலத்தினர் அந்தபூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர்.

கோழிக் கொடியோன் சாதவாகனன்
காரி, சாத்தன், கடல்நிற ஐயன்

எனக் குறிக்கும் ஐயனாரின் கொடி சேவல் என்பதும், ஊர்தி குதிரை என்பதும் அவ் ஐயனார் காரி, சாத்தன், கடல் நிற ஐயன் என அழைக்கப்பட்டார் என்பதும் அப்பாடற்பகுதியின் பொருளாகும்.

கற்குவேல் அய்யனார் கள்ளர் வெட்டு திருவிழா தல வரலாறு



கற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. தேரிகாடு என்னும் மணற்பாங்கான பகுதி தமிழகத்திலுள்ள பாலைவனம் எனலாம். அப்பாலைவனச் சோலைகளில் அய்யனார் கோவில்கள் உள்ளது.


தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை நிறைந்தது. இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார்.
இவ்வாலயத்தின் மற்றொரு தெய்வம்தான் கள்ளர்சாமி. அவர் பெயரால் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழாவே இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகும். இதையறிந்த விஜயநகர பேரரசின் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த (இப்போதைய ஆந்திரா) குப்பண்ணா என்பவன் தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்புக்கு வந்தான். கோயிலை நோட்டமிட்ட அவன் பொருட்களை களவாட திட்டமிட்டு செம்மண்தேரி பகுதியில் பனைமரங்களுக்கிடையே தங்கினான். நள்ளிரவு நேரம் சில ஆயுதங்களுடன் கோயிலுக்குள் நுழைந்தான்.

கருவூலக பெட்டியில் இருந்த ஆபரணங்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானான். அப்போது வன்னியராஜன் குப்பண்ணா கைகளை பின்புறமாகக் கட்டினார். முன்னடியான் அவனை இழுத்துச் சென்றார். அனைவரும் சேர்ந்து அய்யனார் முன்பு நிறுத்தினார்கள். அய்யனார் அவனை கோயிலின் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கொண்டு சென்று சிரச்சேதம் செய்துவிடுங்கள் என்றார். அதன்படி அவனை செம்மண் தேரிக்கு அழைத்துச் சென்று தலையை வெட்டி எறிந்தனர். அவனது ஆவி, அய்யனாரை அழைத்தபடி கோயிலின் வாசலில் நின்றபடி கத்தியது: ‘‘கட்டிய மனைவியும், பெற்ற நல்பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள்.

பிழைப்புக்கு வழியுமில்லை, பேரரசனும் உதவவில்லை. கருணை காட்ட யாருமில்லை, களவாட உம் இருப்பிடம் வந்தேன். பிச்சாடனார் மைந்தனே, உயிர் பிச்சை தாரும். பழி பாவத்தால் இழி பிறப்புக்குள்ளான என்னை போற்றி புகழ்ந்துரைக்கும் வகையில் வாழ்வு கொடும். ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். உம்மால் உயர்வு பெற வேண்டும்.’’ ‘‘மாண்டவன் மீள்வதில்லை, இது மானுட நீதி. உம் மனைவி, மக்கள் எல்லா வளத்துடன் வாழ்வார்கள். நீ என் சந்நதியில் கள்ளர்சாமி என்ற பெயரில் வணங்கப்படுவாய். எனது ஆலய விழாவில் நீ முக்கியத்துவம் பெறுவாய். உன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு நீ கொடுக்கும் வரம், அவர்களை மேன்மை அடையச் செய்யும். உனது மரணம் திருட நினைக்கும் யாவருக்கும் பாடமாக அமையும் வகையில் கள்ளன் உன்னை வெட்டிய நிகழ்வே என் ஆலய விழாவில் முக்கிய நிகழ்வாகட்டும்,’’ என்று உரைத்தார் அய்யனார்.

அதன்படி குப்பண்ணன் தெய்வமானார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 30ம் தேதி கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறுகிறது. பேச்சியம்மன் சந்நதி முன்பு நின்று, ‘‘தாயே நான் போகிறேன். உத்தரவு கொடு அம்மா’’ என்று கள்ளர்சாமிக்கு ஆடுபவர் கேட்பார்.

தெய்வமாக மாறிய குப்பண்ணன் வணங்குபவர்களுக்கு எல்லா பாக்கியமும் கிடைப்பதாக அப்பகுதியினர் மெய்சிலிர்க்கக் கூறுகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் என்னும் கரிகாற்சோழன் போன்ற சோழப் பேரரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் சோழ வளநாடு பல கூற்றங்களாகப் பகுக்கப்பெற்று விளங்கியது. ஆவூர் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம், கிழார் கூற்றம், உறையூர் கூற்றம் போன்றவை அவர்கள் வகுத்த சோழநாட்டு ஆட்சிப் பகுதிகளாகும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆத்திமரங்களை மிகுதியாகப் பெற்ற காடாக இக்கூற்றம் விளங்கியதால் ஆர்க்காடு என அழைக்கப் பெற்றது. சோழப் பேரரசர்களுக்குரிய மாலை ஆத்தி மாலை என்பதால் ஆர் என்றும் ஆத்தி மரத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பேரரசர்களின் யானைப்படைக்கு தலைமை வகித்த அழிசி, அவன் மகன் சேந்தன் போன்றவர்க்கு உரிய நாடாக இக்கூற்றம் திகழ்ந்தது. காவிரி, ெவண்ணாறு ஆகிய இரண்டு பேராறுகளுக்கு இடையில் திகழ்ந்த இக்கூற்றத்திற்கு தலைமை இடமாக விளங்கியது ஆர்க்காடு என்னும் ஊராகும்.


வரலாற்றில் சாத்தன் என்று பெயர் உடையவர்கள்

தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் கொளகத்தூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (கிரு.மா. கல். 86/1974


மாந்த பருமற்கு இரபத்திரண்டா / வது வரி ஊரி நாட்டுவர் கரு இரும்புரை / சாத்தன்னோ / டு கற்றொறு / கொள்ளுட் ப / ட்டாரு கல்

கற் - கன்று; கொள்ளுட் - கவர்தலில்; கல் – நடுகல்


யாருக்கும் அடங்காமல் தனி ஆட்சி செலுத்திய மாந்த வர்மனுககு இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 728) வரி ஊர் நாட்டவரான கரு இரும்பொறை சாத்தன் என்பவனோடு சேர்ந்து கன்றையும் ஆநிரையையும் கவரும் போது எதிரணிப் படை நடத்திய காப்புப் போர் தாக்குதலில் வீர சாவடைந்தான். 

புறநானூறு, 242. பாடியவர்: குடவாயில் கீரத்தனார். பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;

நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

இதன் பொருள்:-


முல்லையே! தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ? இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள்.


நொச்சி சாத்தன் : -


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)


ஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு அருங்கள்வர் கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)


கட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை



வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்