திங்கள், 1 மே, 2023

கள்வன் /கள்ளன் - பெயர்க்காரணம்



"கள்ளர்" என்று ஏன் பெயர் வந்தது?

கள்ளர் / கள்வர் என்பதற்கு அகராதியில் பண்டையர், இறைவன், கரியவன், அரசன், வெட்சியர், திருடன், நண்டு என பல விளக்கங்களை  தருகிறது.



திணைமக்கள் என்ற இயற்கைப் பாகுபாடு உடையவராகச் சங்கத் தமிழ்மக்கள் விளங்கினர். 

கள்ளர் குடியினர் பாலை நிலத்தில் தோன்றியவர்களாக சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதாக கூறிகிறார்கள். ஆனால் பாலை என்பது தனி நிலம் அல்ல. இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை நிலம் கோடை காலத்தில் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"சிலப்பதிகாரம்

தமிழ்நாட்டு நிலம் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது.

ஆதிகால ஓவியங்களில் வேட்டையாடுதல் அதுவும் கூட்டாக வேடியாடுவது காணப்படுகிறது. இடைக்கால ஓவியங்களில் விவசாயம், நாய் முதலிய வளர்ப்பு மிருகங்கள் காணப்படுகிறது. பிற்கால ஒவியங்களில் தான் போர், குதிரை மீது அமர்ந்த போர்வீரன், மனிதன் மனிதனை கொல்வது போன்ற சித்திரங்கள் உள்ளன. இந்த ஓவியங்களிளிருந்து கற்கால நாகரிகம் வளர்ந்த போக்கினை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. வேட்டை சமுகம் விவசாய சமுகம மாறியது, பின்னர் விவசாயம் வளர வளர நாடு நகரம் என வளர்ச்சி ஏற்பட்டு தனி உடமை சமுகம் ஏற்பட்டது என்ற போக்கு விளங்குகிறது.

தமிழ் நிலத்தை வரையறை செய்துள்ள கருத்தைத் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் “வடவேங்கடம் தென்குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல் உலகத்து” வழி அறியலாகிறது. 

“ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும் நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக்கூறுகளும், அந்த இனம் சார்ந்திருக்கும் நிலத்தன்மை, தட்பவெட்பநிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் எனும் நிலவியல் அறிஞர் கூறுகிறார். 

குமரிமுனை மிகப்பெரிய நீண்ட அகன்ற மலையாக இருந்துள்ளது. எனவே, இதன் தென்பகுதி பொதியமலை (பொதி-பெரிய). இங்கு மலையில் தோன்றிய குறிஞ்சி நாகரிகமே குமரி நாகரிகம். குமரி மலையிலிருந்து வந்த குமரியாறும் அதன் சார் நிலங்களும் பிற்காலங்களில் ஆற்றங்கரை நாகரிகத்தையும் வளர்த்தன எனலாம். 

மலையும் மலை சார்ந்த இடமுமாகிய, சிறுசிறு குன்றுகள் நிற்கும் பரந்து கிடக்கும் நிலப்பரப்பாகும் குறிஞ்சி. குறிஞ்சியே, தென்னிந்திய மனிதன் வாழத் தொடங்கிய தொன்மை வாய்ந்த நிலப்பகுதியாம். மூங்கில் ஏராளமாக விளைகிறது. இதில் இருந்து வில் தோன்றியது. அதன் மூலம் வேட்டை தொழில் தொடங்கியது. மூங்கிற்கழிகள் ஒன்றோடொன்று கடுமையாக உராய்த்துக் கொள்ளும் போது, தீப்பொறிகள் எழக்கண்டு நெருப்பை உண்டாக்கலாம் என்பதைக் கண்டு, அவன் முதன்முதலாகப் பயன் படுத்தியது, தான் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை வதக்குவதற்கே. 

குறிஞ்சி ஆடவர் கொடுவிலங்குகளை வேட்டை யாடுதலில், ஈர்ப்புற்று அவற்றைப் பின்தொடர்ந்து செல்லும் பொழுது, பாலை நிலத்தில் தற்காலிக வாழிடத்தை வகுத்துக் கொள்ள வற்புறுத்தப்படுவான். வீரச் செயல் புரியும் ஆர்வத்துடன் பிறந்து விட்டவர் உள்ளத்தில், பாலையின் அழைப்பு, ஓர் எதிரொலியை ஏற்படுத்திற்று.


ஆடவர் பாலைவனத்தில் வேட்டை குறித்து வெளியே சென்றிருக்கும்போது, அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, மகளிரும், குழந்தைகளும், குடும்ப வாழ்வில் என்னென்ன வசதி வாய்ப்புகள் கிடைத்தனவோ அவற்றை அனுபவித்து மகிழக் கலந்து வாழ்ந்து வந்தனராகவே, இந்நிலத்து குடும்பத் தலைமை, மகளிரிடத்தில் அமையும் தாய்வழி ஆட்சி முறையை வற்புறுத்துவதாய் அமைந்துவிட்டது. தந்தைவழி மரபை பின்பற்றும் கள்ளர்களில், இன்றும் கள்ளர்களின் ஒரு பிரிவினரிடம் தாய்வழி மரபு  (சிவகங்கை - கிளை வழி கள்ளர்கள்) எச்சமாக உள்ளது.


ஒரு சிறுகாலமோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ பாலையில் வாழ்ந்த மனிதர், மறம் வாய்ந்த, வீரம் வாய்ந்த, வலிமை வாய்ந்த கள்வர் என்போராவார். (கள்வர், கள் வலிமை அதிலிருந்து விலங்குகளிலெல்லாம் வலிமை வாய்ந்த யானையைக் குறிக்கும் களிறு என்ற சொல்லும், வலிமைதரும் குடிவகைகளாகிய மதுவைக்குறிக்கும் கள் என்ற சொல்லும், போர் நிகழ் இடத்தைக் குறிக்கும் களம் என்ற சொல்லும் பிறக்கும் -பி.டி.சீனிவாசஅய்யங்கார்).


குறிஞ்சி நிலமே வேளாண்மையின் தோற்றுவாயாக இருந்திருக்க முடியும்.

குஞ்சி நிலத்தில் வேளாண்மைக்கு என்று உருவாக்கப்பட்ட பகுதியைப் ‘புரிய புனம்’ என்றழைத்தனர்.  குறிஞ்சி நிலத்தில் வன்புலம் என்பது அடர்ந்த சோலையைக் குறிக்கும். அடர்ந்த இச்சோலைகள் அழிக்கப்பட்டு குறிஞ்சி நில மக்கள் வாழும் நாடாக மாற்றியதற்குச் சான்றுகளாக, “வன்புலக் காட்டுநாட்டதுவே”(நற்:59), “வன்புல நாடன் வயமான் பிட்டன்”(புறம்:172) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

குறிஞ்சி நிலத்தின் சுனைநீரைப் பயன்படுத்தி மலைநெல்லை விளைவித்த செய்தியினைக்; காணமுடிகின்றன. குறிஞ்சி நிலத்தில் ஐவனம் என்னும் மலை நெல்லும், மூங்கில் அரிசியும் விளைவிக்கப்பட்டன.

அகநானூற்றுப் பாடல் 202 இல், “வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்” என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. நெல்லைக் குறிக்க ‘நெல், ஐவன், தோரை, அரி போன்ற சொற்கள் சங்கப் பனுல்களில் பயின்று வந்துள்ளன. சான்றாக, ‘கழைவளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து’ என்ற வரிகள் மலைபடுகடாத்தில் 188 இடம்பெற்றுள்ளது .


கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த ஆட்சி செழுத்திய மலைப்பகுதிகள் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழகத்தின் பாதுகாப்பு அரண்களாக விளங்குவதைக் காணமுடிகிறது.

பெருந்தலைச் சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடல் 205 இல், கோடைப் பொருநன் என்ற குறிஞ்சி நில குறுநில மன்னன் மூவேந்தர்களுக்கு இணையாக வாழ்ந்திருப்பதை உணர்த்துகிறது. கோடை என்னும் பெயர் பிற்காலத்தில் கொடை என்பதாக மருவி இன்று கொடைக்கானல் என்று நிலைத்துவிட்டது. அகநானூற்றுப் பாடல் 13 இல் இக்கோடைக்குத் தலைவனாகத் தென்னவன் பாண்டியன் குறிப்பிடப்படுகின்றான். இந்த கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் கள்ளர் குடியில் பிறந்த C. A. வெள்ளையன் தேவர் ஆவார். 


பழனிமலைக்கு அருகில் உள்ள தாண்டிக்குடியை ஆட்சி செய்த குறுநில வேந்தனைக் குறித்த பதிவினை புறநானூற்றுப்பாடல் 399 இல் அறியமுடிகிறது. பறம்பு மலையை ஆட்சி செய்த குறுநில மன்னன் பாரியைக் குறித்து கபிலரின் பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன. அதியமான், மலையமான் பட்டமுடைய கள்ளர் மரபினர் வாழ்ந்தும் வருகின்றனர்.

பழனிக்குன்றுக்கு, ஆண்டிபட்டி மலை, திருப்பரங்குன்றம் மலை, கீழககுயில்குடி மலை, மேலககுயில்குடி மலை, நாகமலை, திடியன் மலை, புத்தூர் மலை, பெருமாள் மலை பகுதிகளில் இன்றும் கள்ளர்கள் வாழ்விடமாக இருப்பதும், கள்வர் கோமான் புல்லி ஆண்ட வேங்கடமலை என்பதும், இந்த பகுதியில் இருந்து வந்த தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டையை ஆட்சி செய்ததும், பச்சை மலை, கொல்லி மலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, , சித்தேரி மலை, ஜவ்வாது மலை, செஞ்சிமலை பகுதிகளில் கள்ளர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான சான்றுகளாக சில கல்வெட்டில் கள்ளர் நாடும், சில கள்ளர்களின் குலதெய்வ வழிபாடு அந்த பகுதியில் உள்ளது. கள்ளர்கள் நாகர் என்பதற்கு ஏற்ப, நாகர் தமிழில் மலை, சுரபுன்னை (புன்னாசம்) சங்கு, குறிஞ்சிப் பண்வகை, காரீயம் என்னும் பொருள்களைத் தரும்.



குறிஞ்சியில் ஒருபால் மக்கள் தொகை பெருகிவிட, மற்றொருபால் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் வழங்கல், குறையத் தொடங்கிய போது, அம்மக்கள், அடுத்த நிலப் பகுதியாகிய காட்டுநிலமாம் முல்லைக்குக் குடிபெயர்ந்தனர். மலைக்கும் மடுவிற்கும் இடைப்பட்ட காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகிய முல்லை.

குறிஞ்சியில் மக்கள் உழவில்லா வேளாண்மை செய்தும், முல்லையில் கால்நடை வேளாண்மை செய்தும் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். இதனால் தான் முல்லை நிலத்தினை அடிப்படையாக கொண்டு கள்ளர்கள் "காட்டுப்படை" என்று சில ஆய்வாளர்கள் எழுதுவதைக் காணமுடிகிறது.

கிபி 1761 ல் ரிச்சர்ட் ஒவன் எனும் ஆங்கிலேயர் Account of war in India எனும் புத்தகத்தில் கள்ளர்களை பற்றி எழுதிய குறிப்பில், கள்ளர்கள் மிக ஆபத்தான குடியினர். 18 முதல் 20 அடி வரை நீளமுள்ள வேல்கம்புகளை தங்களிடம் எப்போதும் வைத்து இருக்கும் பழக்கம் உடையவர்கள். காடுகள் நிறைந்த அவர்களது பகுதிகளில் கள்ளர்களிடம் போரிடுவது மிகுந்த ஆபத்தானது என்கிறார்.


குறிஞ்சி மற்றும் முல்லையிலேயே எளிய ஆட்சியமைப்பு முதலில் தோன்றிவிட்டது. அதாவது ஒரு சிறு கூட்டத்தை வழிநடத்தும் தலைவர்கள் தோன்றிவிட்டனர். குறிஞ்சி, முல்லை நிலம் என்பது ஆளுமைக் குடிகளின் தோற்றத்தைக் கொண்டது.

முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்ப முறை ஆகியவை உருவாயின.

தலைவனுக்குச் செல்வமாக விளங்கியவை மாடுகளே. அது பற்றியே மாடு என்றால் செல்வம் என்னும் பொருளும் அமைந்தது. "கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடு அல்ல மற்றவை யவை" (திருக்குறள். 400 ),  நாகரிகம் முல்லை நிலத்தில் தோன்றியதை உணரலாம்.

"களவு" மணம் (காதல்) என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு" மணம் (பெற்றோர் நடத்தி வைக்கும்) ஏற்பட்டது.

இங்கு பல்லி சொல்லுக்குப் பயன் தேர்தல், புள் (சகுனம்) பார்த்தல் முதலிய பலவகை நம்பிக்கைகள் இருந்தன.  குறி பார்த்தல் என்பது வாய்ப்புள், உன்னம், புள், விரிச்சி என நால்வகைப்படும். முல்லையில் மனைவியைப் பிரிந்து, பகை வேந்தரோடு போர் செய்யப் போகிறான் தலைவன். "கார்காலத் தொடக்கத்தில் வருவேன், அது வரை நீ ஆற்றி இரு" என்று சொல்லி விட்டுச் செல்கிறான். அவன் சொல்லையே வாழ்வாகக் கொண்டு ஆற்றி இருக்கிறாள். கார் காலம் முடிந்தும் வரவில்லை, இருப்பினும் காத்து இருக்கிறாள். திருமால் கோயிலுக்குச் செல்கிறாள். அங்கே பெருமுது பெண்டிர் குறி சொல்லியும் அவளை ஆற்றுகிறார்கள். 

கள்ளர்களில் "புள்ளவராயர்" என்ற பட்டம் உடைய கள்ளர்கள் போருக்கு போகும்போது புள் சகுனம் பார்ப்பவர்கள் என்று ஐயா. கிருபாகரன் ரசகண்டியர் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். இன்றும் தஞ்சை பகுதி "புள்ளவராய குடிகாடு" என்ற ஊரில் வாழ்கின்றனர்.


குறிஞ்சியில், அகவல் மகள் குறி சொல்லத் தொடங்கும்போது முதலில் முருகளையும், அவன் குடிகொண்டுள்ள மலையையும் வாழ்த்திப் பாடிவிட்டுதான் குறி சொல்லத் தொடங்குவாள். 


கள்ளர்கள் திருட்டுக்காகப் புறப்படுமுன் சகுனம் பார்ப்பதாகவும், தங்கள் குல தெய்வத்திடம் குறி கேட்பதாகவும் திரு முல்லலெ கூறுகின்றார். "சிவப்பும் வெள்ளையுமான நிறமுடைய இரண்டு மலர்கள் கள்ளழகர் வடிவிலான தெய்வத்தின் முன் வைக்கப்படும். வெள்ளை மலரையே எப் போதும் வெற்றிக்குரிய அடையாளமாகக் கருதுவர். வயதில் சிறிய ஒரு குழந்தையிடம் அந்த இரண்டு மலர்களில் ஒன்றிலி ருந்து ஒரு இதழைப் பிய்த்துத் தரும்படி கூறுவர். அவர்கள் திருட்டுத் தொழில் மேல் செல்வதா வேண்டாமா என்பதனை அக்குழந்தையின் செயலே முடிவு செய்யும்." 

இதே போன்று இருவரிடையேயான மண உறவுக்கான உடன்பாடு காணும்முன் மணந்து கொள்ள உள்ள மணமக்களின் பெற்றோர் ஒரு கோயிலுக்குச் சென்று ஒரு சிவப்பு மலரையும் வெள்ளை மலரையும் தனித்தனியே வெற்றிலையில் சுருட்டிக் கட்டித் தெய்வத்தின் முன் இட்டு ஒரு குழந்தையிடம் அவற்றில் ஒன்றினை எடுக்கும் படி கூறுவர். அக்குழந்தை எடுக்கும் இலைக்கட்டில் வெள்ளை மலர் இருக்குமாயின அதனை நல்ல வாக்காகக் கருதி மணம் முடிப்பர். 


இன்றும் கள்ளர்களின் திருவிழாக்களில் பறையர் மக்கள் சாமியாடிக் குறி சொல்லுவது சிலப்பகுதியில் உண்டு. 


திண்டுக்கல்லில் நடைபெறும் சல்லிக்கட்டின்போது கள்ளர்களே பூசாரிகளாகச் செயல்பட்டு அங்குள்ள தெய்வத்திடம் குறி கேட்கும் உரிமை உடையவர்கள். இச் சமயத்தில் அவர்கள் உரோமானிய வேளாண்மைத் தெய்வத்தின் பூசாரிகளைப் போலப் பிராமணர்களைவிட உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதி ஆணவம் கொள்வர்" எனத் திரு வால்ஹவுஸ் குறித்துள்ளார். 


கலித்தொகையில் முல்லைக்கலியி ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல், அந்த நடைமுறை கடந்த நூற்றாண்டு வரை கள்ளர்களிடம் இருந்த பழக்கமாகும்.  இன்றும் இடையர்கள் (கோனார்) ஏறு தழுவுதலில் யாரும் ஈடுபடுவதில்லை, அதற்கு மாற்றாக ஏறு தழுவுதலில் ஈடுபடும் காளைகளை அதிகம் வளர்பவர்களாக உள்ளனர். 15 ஆம் நூற்றாண்டில் சேலத்தில் கள்ளர் நாடு இருந்ததை கல்வெட்டு வழி நாம் அறியமுடிகிறது. ஆனால் இன்று கள்ளர்களோ, கள்ளர் நாடோ அங்கே இல்லாமல் வழக்கொழிந்து விட்டன. ஆனால் இன்றும் சேலத்தில் ஒரு ஊரில் கோனார் மக்களால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. 

"சல்லிக் கட்டு விளையாட்டில் தீரமிக்க சாதியார்கள் சிறப்பாகக் கள்ளர்கள் - மிகுதியான ஆர்வம் காட்டுகின்றனர். பல ஊர்களில் தனியே இதற்காகவென்றே சாதிக் காளைகளை வளர்க்கின்றனர். கள்ளர்கள் வாழும் பகுதியான திருமங்கலத்திலேயே மிகச் சிறந்ததான சல்லிக்கட்டைக் காணலாம். இதற்கு அடுத்தபடியாக மேலூரிலும் மதுரை மாவட்டங்களிலும் நடை பெறும் சல்லிக்கட்டைக் கூறலாம்" என மதுரை மாவட்ட விவரக் குறிப்பில் பதியப்பட்டுள்ளது. 





இன்றும் ஏறுதழுவல் (மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு) தமிழகத்தில் கள்ளர் வாழும் பகுதில் 70  சதவீதத்திற்கு அதிகமா நடைபெறுகிறது. ஆதாரங்கள் : 👉👉👉 கள்ளர் ஜல்லிக்கட்டு



தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான்.

ஆநிரையைச் செல்வமெனப் போற்றும் முல்லை நிலச் சிற்றரசுகளிடையே ஏற்பட்ட சிறுசிறு போர்களே (ஆநிரை கவர்தல்) தொடக்ககாலப் போர்களாக இருந்தன. எனவே, பண்டைத் தமிழகத்தின் முதற்போர் முறையாக, ஆநிரை கவர்தல் அமைந்தது. 

"ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்" - அகநானூறு - 342. குறிஞ்சி - பகைவர் ஆக்களைக் கவர்ந்துகொள்ளும் பழைய ஊரினராய கள்வர்கட்கு தலைவன் பாண்டியன் என்ற குறிஞ்சி பாடல் நமக்கு இதனை உணர்த்தும்.

வெட்சிப்போர் குறிஞ்சி, முல்லை நிலத்தில் தோற்றம் கொண்டது போன்றே முல்லை நிலத்தில் நடுகல் எடுக்கும் வழக்கமும் தோற்றம் பெற்றது. தமிழர் பழக்கமாக இருந்தாலும் அதிகமாக கள்ளர்கள், நடுகல் எடுக்கும் பழக்கம் தஞ்சை, மதுரை உசிலம்பட்டி பகுதியில் நாம் காணமுடியும். குறிஞ்சி மற்றும் முல்லை நிலப்பகுதியான தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வெட்சிப்போர் நடுகல்லில் "கள்ளர் " சொல் அதிகமாக வருவதை காணமுடிகிறது. 

இதில் வரும் கள்வர் சாதியை குறிப்படவில்லை என்று கூறுவது தவறாகும். அருங்கள்வர் என்பது அருமையான திருடர் என்று வராது, "அருங்கள்வர்" என்பது ஒரு குடியை மட்டும் குறிக்கும் சொல்.     


தருமபுரி நடுகல்




தருமபுரி நடுகல்




தஞ்சை கள்ளர் நாடு "தந்திநாடு” – ஆஅம்பலகாரர்


சிவகங்கை, கள்ளர் நாடு, கீழக்கோட்டை குப்பான் அம்பலகாரர்



ஆரியபட்டி மாவீரர் கருத்தனஞ்சித்தேவன்



இதுபோல் பல நடுகல்கள் கள்ளர் நாடுகளில் கள்ளர்களுக்கு உள்ளன.

தமிழகத்தில் சிற்றரசர்களும், வேளிர்களும் உருவானது முல்லை நிலத்தில்தான். அதனால் தான் தமிழ் மொழியில் முல்லைப் பாடல்களின் எண்ணிக்கையே அதிகம்.

புறப்பொருள் வெண்பாமாலை ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி’ என்பதன் உண்மைப் பொருள், ‘கல் என்ற முல்லை/குறிஞ்சி வாழ்வு தோன்றி, மண் என்ற மருத, நெய்தல் வாழ்வு தோன்றாத காலத்தில் தோன்றியது’ என்பதாகும்.  

குறிஞ்சிநிலத்தார் தம் தெய்வத்தை மலையில் தோன்றும் நெருப்பின் கூறாகவும் கொண்டனர், இதனாலேயே, சிவனுக்குத் தீவண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களும்.

முல்லைநிலத்தார் தம் தெய்வத்தை வானத்தினின்று பொழியும் முகிலின் கூறாகவும் கொண்டனர்.; இதனாலேயே, திருமாலுக்குக் கார்வண்ணன், மணிவண்ணன் என்னும் பெயர்களும்; தோன்றின.

முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்) , இவர்கள் தான் ஆதி குடிகளின் இனத் தலைமை.

முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்

குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்

"மால்" = தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர்“ – திரு. வி. கலியாணசுந்தரனார் கூறுகிறார். 

சோழர்களுக்கு "மால்" எனும் பட்டங்கள் வழங்கலாயிற்று. கள்ளர்களின் பட்டங்களில் ஒன்று "மால்"


மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி.

முல்லைக்குரிய தெய்வமாகத் திருமாலைக் குறிப்பிடுகின்றது. “ மாயோன் மேய காடுறை உலகமும் “ என்பது நூற்பா, திருமாலின் பெயர் கள்வன் (கருமை ).

கள் - கள்வன் = கரியவன்.
கள் - காள் - காழ் = கருமை.

காள் - காளி. காளி - வெற்றி தருபவள் என்னும் பொருளில் கொற்றவை (கொற்றவ்வை) என்றும், காளிக்குப் பெயர்கள் வழங்கும். வெற்றித் தெய்வமாகக் கொற்றவையை வழிபடுதலும் குறிஞ்சித்திணையின் புறம் என்று தொல்காப்பியம் கூறுகிறது

கள்ளர்கள் போர்களில் தங்கள்  வெற்றிக்கு வணங்கிய தெய்வம் கொற்றவ்வை (காளி). கள்ளர்களுக்கு "கொற்றவர்" என்று பெயர்.

பெரியாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.



"வெள்ளைவிளிசங்கு வெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் 

உள்ளவிடம் வினவில் உமக்கு இறைவம்மின்சுவடுரைக்கேன் 
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடி தேர்மிசைமுன்புநின்று 
கள்ளப்படைத்துணையாகி பாரதம்கைசெய்யக்கண்டாருளர் "

மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனன்,  கள்ளப்படை கொண்டு அதாவது கிருஷ்ணரின் படை கொண்டு வெற்றி பெறுகிறார். அதாவது கிருஷ்ணர் / திருமால், இங்கு கள்ளர் என்ற திருநாமம் பெறுகிறான். 

"தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்" என்று வள்ளி நாயகியைக் கள்ளச் சிறுமியென்று கூறுகிறார்  - அருணகிரியார்


மறைந்து நிற்பவர்களைக் கள்ளர் என்று சொல்வது ஒரு வழக்கம். திருமாலுக்குப் பெண்ணாகப் பிறந்தவள் வள்ளி. அவள் இப்போது குறவர்களுக்கு  இடையில் மறைவாக இருக்கிருள். திருமாலினுடைய மகளாகிய வள்ளி நாயகி தன்னலே ஆட்கொள்வதற்குரியவள் என்று முருகன் அறிவான். அந்தப் பொருள் மறைவாக வள்ளி மலையில் இருக்கிற தென்பதை நாரத முனிவர் வந்து கூறுகிறார். மேலும் கள்ள சிறுமி என்பதை திருமாலினுடைய மகள் என்பதையும் குறிக்கும்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த பாலை நிலத்தில் கள்ளர்கள் தோன்றியதாக கூறப்பட்டாலும், கள்ளர்கள் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களே. அதனால் தான் முல்லையின் அடர்காட்டின் நிறமான கருமையையும்முல்லையின் தெய்வம் கள்வனான திருமாலின் 
பெயரையையும் உணர்த்தும், இத்திணையின் வலிமையான 💪மக்கள் கள்ளர் என்ற பெயர் பெற்றனர் என்றே உணரலாம். 

கள் + அர் ==> கருமை + மக்கள்.

முல்லை காட்டின் அடர் “கருமை" யை அடிப்படையாக கொண்டு தோன்றிய சொற்களே மாயோன் (திருமால்), கொற்றவை (காளி), கள்வன் (கள்ளன்), யானை (களிறு) ஆகும். 

திருமால் வைணவ கடவுள், ஆனால் கள்ளர்கள் சைவர்களாக குறிக்கப்படுகிறார்கள். கள்ளர்கள் சைவ சமயமாக இருந்தலும், சில கள்ளர் பிரிவுகள் வைணவ சமயத்தை மட்டுமே பின்பற்றி ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிக்கும் திருமண் என்னும் திருநாமம் இட்டுக்கொள்கிறார்கள்.  


இன்றைய நாளில் "கள்ளர்" என்பதை "திருடன்" என்று இழிவாக கூறினாலும், அன்று இறைவன், கரியவன், திருமால், கவர்தல் என்றே பொருள்.

கள்ளர்கள் மன்னர்களாக,  அரையர்களாக, பாளையகாரர்களாக, ஜமீனகளாக, அம்பலக்கார்ர்களாக இருந்தபோதும் மேலும் ஆங்கிலேயரின் ஒடுக்குமுறையான குற்றபரம்பரை சட்டம் கொண்டுவந்த போதும் கள்ளர்கள் தங்கள் குடியின் பெயரை மாற்றங்கள் செய்யவில்லை. தங்கள் குடி பெயர் இழி சொல்லாக இருந்திருந்தால், தங்கள் குல உயர்வுக்காக தங்கள் பெயரை மாற்றம் செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை. மேலும் தமிழக அரசு கள்ளர்களுக்கு "தேவர்" என்று சாதி அரசாணை இயற்றிய போதும் அதை தடுத்து நிறுத்தியவர்கள் கள்ளர்கள்.





("தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடி தாலுக்கா, கள்ளர் மகா சங்கம் பொது கூட்டம், 12-11-1945, திங்கள், மாலை 04 மணிக்கு வடுவூர் சீனிவாசப் பெருமாள் சந்நதிக்கெதிரில் உயர்திரு, ஆர்.கிருஷ்ணசாமி வன்னியர் அவர்கள் தலைமையில் கூடி ஆலோசிக்கப்பட்ட நடவடிக்கைகள்,


கள்ளர்களுக்கு ஆயிரக்கணக்கான அநேக விதமான பட்டப் பெயர்கள் வம்ச பரம்பரையாய் இருந்து வருவதால் இதற்கு மாறாக மூன்று ஜாதியார்களையும் ஒரே ஜாதியாராக மதிக்கவோ பல பட்டங்களிலிருந்து வருவதை மாற்றி "தேவர்" என்ற ஒரே பட்டப் பெயரை வைத்துக் கொள்ளவோ முடியாதென்றதை ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொண்டு மேல்கண்ட யோஜனையை கைவிட்டு விடும்படி சென்னை அரசாங்கத்தாரை இச்சங்கம் கேட்டுக்கொள்வதாய் ஏக மனதாய் தீர்மானிக்கிறது"
)



கள்வன் என்பது உயர் சொல்லாக இருந்ததாலேதான் மன்னர்கள் அதை உயர்வாக தங்கள் பெயர்க்கு முன் சேர்த்துக்கொண்டனர்.

1) கள்வர் கோமான் புல்லி
2) கள்வர் பெருமகன் தென்னன் (பாண்டியன்)
3) ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்
4) ஸ்ரீ கள்ள சோழன்,
5) ஸ்ரீ கள்வன் ராஜராஜன்
6) ஸ்ரீ கள்ள திருமங்கையாழ்வார்
7) நீகார்யம் - உடையார் உடையான் கள்வன் சோழன்
8) ஸ்ரீ கள்வர் கள்வன் வாள்வரி வேங்கை குத்தியது
9) கள்ள பெருமானார்
10) கள்ளன் பாப்பான் சொந்தனான குலோத்துங்க சோழ நாடாள்வான்





முல்லைத் நிலத்தலைவர்கள்: 

குறும்பொறை நாடன், தோன்றல் என அழைக்கப்பட்டனர்; 




தஞ்சையில் ஆவிக்கோட்டை கள்ளர் குடியை சேர்ந்த ஆவிக்கோட்டை நல்லவன் நாடன், கலிக்க நாடன் 



நாடன் என்பது கள்ளர் பட்டங்களில் ஒன்றாக ஆங்கிலேயர் குறிப்பில் உள்ளது.




கள்ளர்களின் பட்டங்களான கோபாலர், மெய்கண்கோபாலர்  தான்தோன்றியார், தோன்றார், காவிரிநாடன், அருமைநாடன், அருவநாடன், ஊமத்தநாடன், ஊரத்திநாடன், காசிநாடன், சிங்கநாடன், சேனைநாடன், சோமநாடன், விசல்நாடன், பாலைநாடன், மழநாடன், மாநாடன், மேல்நாடன், நாகநாடன், தளிநாடன், பூழிநாடன், பழைசைநாடன், பல்லவநாடன் என்பது இதன் தொடர்ச்சியாகவே அமைந்தது. 

முடிவுரை



தொல்காப்பியர் "ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர். ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே" என்று முல்லைத் திணைக்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.


இடையர், இடைச்சியர் என்பது கோனார்களை குறிக்கும். ஆனால் ஆயர், ஆய்ச்சியர் என்பது முல்லை நில மக்களின் பொது பெயரே. 
"அன்பின் மாலையும் உடைத்தோ அன்பில் பாண அவர்சென்ற நாடே" பாணனுக்கும் முல்லைத்திணையில் இடம் உண்டு.  



ஒருதிணைக்கண்ணே நிலத்துவாழும் மக்கட்பெயர் நிலப் பெயரும் தொழிற்பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழ்வாரைக் குறித்து வழங்கும் நிலப்பெயராகும். வேட்டுவரென்பது வேட்டைத் தொழில் செய்வாரைக் குறித்து வழங்குந் தொழிற் பெயராகும். ஆயர் வேட்டுவர் என வரும் இப்பெயர்கள் ஆண்மக்களைப்பற்றி வருந் திணைப் பெயர்களாகும் என்று தன்னுடைய தொல்காப்பியம் வரலாறு என்ற நூலில்  குறிப்பிடுகிறார், அண்ணுமலைப் பல்கலைக்கழகம் தமிழாராய்ச்சித் துறையின் தலைவர், வித்வான் க. வெள்ளைவாரணன்


ஆ < ஆய் < ஆயர் = பொதுவர், ஆ’ என்பது பசு. ‘ஆயம்’ என்பது ‘பசுத்திரளை ஓம்பி வாழ்ந்தவர்’ மற்றும் பசுத்திரளை பற்றி வாழ்ந்தவர்.




குறிச்சி, முல்லை நில மக்கள் கள்ளர்கள் என்பதற்கு ஏற்ப, முல்லை நில மக்களின் பெயரான "ஆய்" என்ற பெயர்களை கள்ளர் இன ஆண்கள், பெண்கள் இன்றும் கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாதராய தொண்டைமான் பத்தினி பெயர் ராணி ரெங்கம்மாஆய், ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பத்தினி பெயர் ராணி ஆயிஅம்மாள் ஆய் ஆகும். கள்ளர் வீட்டு பெண்களை ஆய், நாச்சியார் என்றே வீட்டில் அழைப்பது வழக்கமாகும்.


ஆய் குழி அகுசி ஏற்று, ஆய் அடும்பன், ஆய் நெடுஞ செட் சோழ தகையன், ஆய் கீழ் நன்னனால், ஆய் பேருண் தோன்னொஞ்சி, ஆய்வே நலங்கிள்ளி என்ற பெயருடைய சோழ மன்னர்களும் இருந்தனர்.


ஆய் என்ற மன்னன் பொதிய மலையினிடத்து உள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். அதனால் ஆய் என்னும் பெயர். வேள் ஆய், ஆய் அண்டிரன் என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறான். பொதியமலை வாழ்ந்த கள்ளர்கள் விசங்குநாடு கள்ளர் என்று அழைக்கப்பட்டனர். கள்ளர்களின் பட்டங்களில் ஒன்று பொதியர்.






ஸ்ரீ ஆயர்'------>'சீ ஆயர்'------>சிய்யான்------>சீயான்., என ஸ்ரீ ஆயரின் இருந்து சீயான் என இந்த சொல் திரிந்து வந்துள்ளது. இப்பெயரையே பிரமலைக்கள்ளர்கள் தாத்தாவின் அப்பாவுக்கு சீயான் என பயன்படுத்துகின்றனர். தமிழ் அகராதி சேயோன் மருவி சியான் என்று ஆனது என்கிறது . சீயான் என்ற சொல் கள்ளர் மக்களிடம் மட்டுமே இன்றும் வழக்கத்திலுள்ளது.





குறிஞ்சி நில மக்களான குறவர்களை தங்களுடைய ஏஜெண்டுகளாக விசங்கி நாட்டுக்கள்ளர்கள் பயன்படுத்தியுள்ளனர். மேலும்) கந்தவர்கோட்டை கள்ளர்குல அரையர்களான பண்டாரத்தார் தங்கள் முகவர்களாக குறவர் இனமக்களை நியமித்திருந்தார்.


கோனார்கள் தாய் வழி சமூகமாகவே வாழ்கின்றனர். கள்ள இடையர் என்ற ஒரு பிரிவும் உள்ளனர். கள்ளர் மக்களும் கோனார் மக்களும் ஒரு தாய் மக்களாக இணைந்து வாழ்கின்றனர். 











கள்ளர்கள் பாலைத்திணை சார்ந்த மக்கள் என்பதை விட குறிஞ்சி மற்றும் முல்லை நிலத்தில் வாழ்ந்த வலிமையான  மக்களே கள்ளர்கள் ஆவர். 


கள்ளர் - களிறு - கள் - களம் - களரி 


பாலைத்திணை மக்களாக உரையாசிரியர்கள் கள்ளர்களை குறிப்பிட்டாலும் குறிஞ்சி, முல்லை மற்றும் திரிந்த பாலை நில மக்களாக குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி, கானவர், ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி, விடலை, காளை, மறவர், மறத்தியர் என்று பாடல் அமைகிறது.

ஆனால் மாங்குடி கிழார் பாடிய, மூதின் முல்லை பாடலில் மலை நாட்டுத் தலைவன் ஒருவனது சிறப்பைக் கூறுகின்றது. அதில் துடியன், பாணன், பறையன், கடம்பன் இவரையன்றிச் குடிகள் கிடையாது என்கிறது.

திணைமக்கள் என்று மேலே குறிப்பட்ட மக்களில் பறையர் மக்கள் எந்த திணைமக்களாகவும் குறிப்பிடவில்லை. அதை போல் அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என எவரும் குறிப்பிடவில்லை. இதனால் இவர்கள் அனைவரும் ஐந்திணைமக்கள் இல்லை என்று நாம் கூறிவிட முடியாது.

தமிழ் மண்ணின் வலிமையான , மிகவும் பழமையான DNA உடைய, அதிகாரமிக்க கள்ளர் குடியினர் ஐந்திணையும் ஆட்சி செய்தவர்களாகவே இருந்திருப்பர்.




ஆய் சாம்ராட்சியம் பற்றிய குறிப்பு





சேர நாடான வேநாட்டு பல்லவரால் ஆட்சி செய்யப்பட்டதனால் அவர்கள்  பெயர் கேரள பல்லவரையர் எனப்பட்டது. அவர்கள் வேள நாட்டார் என்றும் , பல்லவரின் ஆண் வாரிசாக வேள நாட்டார் (வேளிர்) இன குழுவிலும், சோழரின் பெண் வாரிசாக ( சூரிய குலம், சந்திர ஆதித்த குலத்திலும் ) வருகிறார்கள். ராஐ ராஐ சோழனின் தகப்பனார் உத்தம சோழன் கொல்லத்தின் மன்னனின் மகள் வேளிர் குல இளவரசியை மணந்தார். இதன் பின் இப்பகுதி ஆய் சாம்ராட்சியம் எனவும் ராஐராஐ தென்னாடு எனவும் ஆனது.



நன்றி : வித்வான், புலவர் கா. கோவிந்தன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்